எமது வாசகரிடமிருந்து
படைப்பை நேசிக்க பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்தல் யெகோவா மிக கனிவோடு அளித்திருக்கிற இயற்கை அழகிற்கு போற்றுதலை பிள்ளைகள் வளர்க்க நாங்கள் முயற்சி செய்கிறோம். எங்கள் பிள்ளைகளுடைய பயிற்சியின் பாகமாக இதைத் தொடருகிறோம். விழித்தெழு! பத்திரிகையில் இதுபோல் தொடர்ச்சியாக வெளிவரும் “ஜென்னி ரேன்—கத்திப் பாடும் சின்னப் பறவை” (செப்டம்பர் 8, 1998) போன்ற கட்டுரைகளை இதற்காகவே நாங்கள் பயன்படுத்த விரும்புகிறோம். எங்களுடைய பிள்ளைகள் ஆர்வமாக கேட்கின்றனர்! இந்தத் தகவலை அவர்களோடு பகிர்ந்துகொள்வதே அலாதி இன்பம்.
கே. ஏ., ஐக்கிய மாகாணங்கள்
இராக்கனவுகள் “உலகை கவனித்தல்” பகுதியில் வெளிவந்த “நண்டுசிண்டுகளின் பூச்சாண்டிக் கனவுகள்” (செப்டம்பர் 8, 1998) என்ற தலைப்பின்கீழ் கொடுக்கப்பட்டிருந்த ஆலோசனைகளை நான் உயர்வாக மதிக்கிறேன். என்னுடைய பிள்ளைகளும் ராத்திரியில் கனவு காண்கின்றனர். ஆனால், நானோ அவற்றைப் பற்றி பேசாமல், சட்டென்று தூங்குங்கள் என்றே சொல்லி இருக்கிறேன். இப்பொழுது உங்களுடைய ஆலோசனைகளை படித்த பிறகு, இந்தப் பிரச்சினையை என்னால் திறமையாக சமாளிக்க முடியும். இப்படிப்பட்ட பயன்தரும் தகவல்களை தயவுசெய்து தொடர்ந்து பிரசுரியுங்கள்.
ஆர். என்., ஜிம்பாப்வே
கொலைகார சிங்கங்கள் “கிழக்கு ஆப்பிரிக்காவின் ‘பைத்தியக்கார எக்ஸ்பிரஸ்’ ” (செப்டம்பர் 22, 1998) என்ற கட்டுரையை வாசித்து மகிழ்ந்தேன். ஆனால், அதில் சொல்லப்பட்ட ஆட்கொல்லி சிங்கங்கள் ஆண், பெண் என்று குறிப்பிட்டிருப்பது தவறு. அவை இரண்டுமே ஆண்கள்தான்.
கே. பி., ஐக்கிய மாகாணங்கள்
“விழித்தெழு!” பத்திரிகையில் வந்த இந்தக் குறிப்பு தவறு. குறிப்பைத் தெளிவாக்கியதை பாராட்டுகிறோம்.—ED.
அல்ஸைமர் நோய் அல்ஸைமர் நோய் பற்றி ஒரு பெரிய மருந்து கம்பெனி நடத்தும் ஆராய்ச்சிக் குழுவை நான் தலைமை தாங்கி நடத்துகிறேன். எனவே, “அல்ஸைமர் நோய்—துன்பத்தைக் குறைத்தல்” (செப்டம்பர் 22, 1998) தொடர் கட்டுரைகளை மிக ஆர்வத்தோடு வாசித்தேன். ஊடுருவிப் பரவும் இந்த பொதுநலப் பிரச்சினையை நீங்கள் மிகவும் விலாவாரியாக விளக்கியிருந்தது என்னை வெகுவாக கவர்ந்தது. இந்தக் கட்டுரைகளில் வந்த நடைமுறை ஆலோசனைகள் அனைத்தும் அருமையிலும் அருமை என்பதை சபை மூப்பராகிய நான் தெரிந்துகொண்டேன்.
எஸ். எஸ்., ஐக்கிய மாகாணங்கள்
பத்து வருடங்களுக்கும் மேலாக என்னுடைய அம்மா அல்ஸைமர் நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆகையால், இந்தக் கட்டுரைகள் என் இருதயத்தை தொட்டன. இந்த பிரச்சினையை சாதுரியமாகவும், இந்த வியாதியால் அவதிப்படுகிறவர்களை மரியாதையோடும் நீங்கள் கையாண்டிருக்கும் விதத்திற்கு என் உளங்கனிந்த நன்றி.
இ. எம்., இத்தாலி
என்னோடு வேலை செய்பவர் ஒருவர் விழித்தெழு! பத்திரிகையின் சந்தாதாரர். என்னுடைய அப்பாவுக்கு அல்ஸைமர் வியாதி இருப்பதால், இந்தப் பிரதியை என்னிடம் படிக்கக் கொடுத்தார். “நோயாளியின் மதிப்பைக் காத்தல்” என்ற கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது. இந்தக் குறிப்பை எவரும் இந்தளவுக்கு தெளிவாக கூறமுடியும் என்று எனக்கு தோணவில்லை. காலத்திற்கேற்ற, நம்பகமான தகவல்களுக்கு நன்றி. இந்தக் கட்டுரை இன்னும் அநேக ஜனங்களுக்கு நிச்சயம் உதவியிருக்கும் என நம்புகிறேன்.
எம். பி., கனடா
இந்தக் கட்டுரைகளுக்காக என் இருதயத்தின் ஆழத்தில் இருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 1986-ல், என்னுடைய அம்மாவுக்கு அல்ஸைமர் நோய் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்து இந்த நோயைப் பற்றி நிறைய புத்தகங்களை நாங்கள் வாசித்திருக்கிறோம். இருப்பினும், அன்பு, பரிவு, மற்றவர்களுடைய துன்பத்தை உணருதல் போன்றவற்றை விளக்குவதில் உங்களுடைய கட்டுரைகள் நாங்கள் படித்த எல்லாவற்றையும் விஞ்சிவிட்டன. இறுதிக்கட்டம் வரை, அல்ஸைமர் நோயால் அவதிப்படுபவர்களுக்கு அன்பும் கரிசனையும் தேவை என்று சரியாக சொன்னீர்கள். என்னுடைய அம்மாவால் பேசவோ சாப்பிடவோ முடியாது. ஆனால், அவருக்கு இன்னும் அதிகமான அன்பும் பாசமும் காண்பிக்க, இந்தக் கட்டுரைகள் எங்களுக்கு தெம்பு அளிக்கின்றன.
ஹெச். இ., ஆஸ்திரியா
பிரேஸிலிய அல்ஸைமர் சங்கத்தின் தலைவராக, உங்கள் கட்டுரைகளுக்கு பாராட்டு தெரிவிக்க விரும்புகிறேன். அல்ஸைமர் நோயைப் பற்றியும் அது குடும்பங்களை எப்படி பாதிக்கிறது என்பதைப் பற்றியும் தெளிவாக விளக்கியிருந்தீர்கள். இப்படிப்பட்ட நோயாளியையும் ஒரு பொருட்டாக மதித்து, மரியாதையோடு எழுதியிருந்தீர்கள். அன்பே பிரதான சிகிச்சை எனக் காண்பிக்கும் உண்மைச் சம்பவங்களை அளித்திருந்தீர்கள்.
வி. கே., பிரேஸில்