கேள்வி 9
நான் பரிணாமத்தை நம்ப வேண்டுமா?
நீங்கள் என்ன செய்வீர்கள்?
இதைக் கற்பனை செய்து பாருங்கள்: அலெக்சுக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. கடவுள் இருக்கிறார் என்றும் அவர்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்றும் அவன் எப்போதும் நம்பிவந்திருக்கிறான். இன்று, பரிணாமம் ஒரு மறுக்க முடியாத உண்மை என்றும், அதற்கு அறிவியல் ஆதாரங்கள் இருக்கின்றன என்றும் அவனுடைய அறிவியல் ஆசிரியர் உறுதியாகச் சொல்கிறார். தன்னை ஒரு முட்டாளாகக் காட்டிக்கொள்ள அலெக்ஸ் விரும்பவில்லை. ‘பரிணாமம் உண்மைனு விஞ்ஞானிகளே நிரூபிச்சிருக்கிறப்போ அதை பத்தி கேள்வி கேட்க நான் யாரு’ என்று சொல்லிக்கொள்கிறான்.
நீங்கள் அலெக்சுடைய இடத்தில் இருந்தால், பரிணாமம் ஒரு மறுக்க முடியாத உண்மையென்று பாடப் புத்தகம் சொல்வதற்காக, அதை நம்புவீர்களா?
நன்றாக யோசியுங்கள்!
பெரும்பாலும், பரிணாமத்தை நம்புகிறவர்களும் சரி, நம்பாதவர்களும் சரி, அதை ஏன் நம்புகிறார்கள் என்று தெரியாமலேயே அதை நம்புவதாகச் சொல்கிறார்கள்.
சர்ச்சில் சொல்லிக்கொடுத்தார்கள் என்பதற்காகச் சிலர் படைப்பை நம்புகிறார்கள்.
பள்ளியில் சொல்லிக்கொடுத்தார்கள் என்பதற்காகச் சிலர் பரிணாமத்தை நம்புகிறார்கள்.
யோசித்துப் பார்க்க ஆறு கேள்விகள்
“ஒவ்வொரு வீடும் யாரோ ஒருவரால் உண்டாக்கப்படுகிறது, ஆனால் எல்லாவற்றையும் உண்டாக்கியவர் கடவுளே.” (எபிரெயர் 3:4) இதை நம்பலாமா?
யாரும் கட்டாமலேயே இந்த வீடு வந்துவிட்டது என்று சொல்வது நியாயம் இல்லை. அதே போல, படைப்பாளர் இல்லாமலேயே உயிர் வந்துவிட்டது என்று சொல்வதும் நியாயம் இல்லை
மற்றவர்களுடைய கருத்து: ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டதால் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கிற எல்லாமே உண்டானது.
1. அந்த வெடிப்பு ஏற்பட்டதற்கு யார் அல்லது எது காரணம்?
2. எது நியாயமாக இருக்கிறது—எல்லாம் தானாகவே வந்துவிட்டது என்று சொல்வதா அல்லது யார் மூலமாவது வந்திருக்க வேண்டும் என்று சொல்வதா?
மற்றவர்களுடைய கருத்து: மனிதர்கள் விலங்குகளிலிருந்து வந்தார்கள்.
3. மனிதர்கள் விலங்குகளிலிருந்து வந்திருந்தால், உதாரணத்துக்கு, குரங்கிலிருந்து வந்திருந்தால், அறிவுள்ள மனிதர்களுக்கும் குரங்குகளுக்கும் ஏன் இவ்வளவு பெரிய வித்தியாசம் இருக்கிறது?
4. “மிகச் சிறிய” உயிர் வகைகள்கூட ஏன் நம்பமுடியாத அளவுக்கு சிக்கலாக இருக்கின்றன?
மற்றவர்களுடைய கருத்து: பரிணாமம் மறுக்க முடியாத உண்மை என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
5. இதைச் சொல்கிறவர் அதற்கான ஆதாரங்களைப் பார்த்திருக்கிறாரா?
6. அறிவுள்ள எல்லா மக்களும் பரிணாமத்தை நம்புகிறார்கள் என்ற காரணத்துக்காக அதை நம்புகிறவர்கள் எத்தனை பேர்?
“நீங்க ஒரு காட்டு வழியா நடந்து போறப்போ, ஒரு அழகான வீட்டைப் பார்க்குறீங்க. ‘இது எவ்ளோ அழகா இருக்கு! மரமெல்லாம் தானா போய் அந்தந்த இடத்தில விழுந்ததுனால இப்படியொரு அழகான வீடு உருவாயிருக்கே’னு சொல்வீங்களா? நிச்சயமா அப்படி சொல்ல மாட்டீங்க. ஏனா, அது நியாயமா இருக்காது! அப்படியிருக்கிறப்போ, பிரபஞ்சத்தில இருக்கிறது மட்டும் எப்படி தானா வந்திருக்கும்?”—ஜூலியா.
“அச்சடிக்கிற இடத்தில திடீர்னு ஒரு வெடிப்பு ஏற்பட்டதாவும், அங்கிருக்கிற சுவர்லயும் உள்கூரையிலயும் மை தெளிச்சதால, டிக்ஷனரியில இருக்கிற எழுத்துகள் எல்லாம் உருவானதாவும் யாராவது உங்ககிட்ட சொன்னா அதை நம்புவீங்களா?”—க்வென்.
கடவுள் இருக்கிறார் என்று ஏன் நம்பலாம்?
‘சிந்திக்கும் திறனைப் பயன்படுத்துங்கள்’ என்று பைபிள் சொல்கிறது. (ரோமர் 12:1) இந்த விஷயங்களை வைத்து மட்டுமே கடவுளை நம்பக் கூடாது:
உணர்ச்சிகளின் அடிப்படையில்... (எல்லாத்துக்கும் மேல ஒரு சக்தி இருக்கணும்னு தோணுது)
மற்றவர்கள் சொல்வதற்காக... (மதப்பற்றுள்ள இடத்தில வாழ்றேன்)
கட்டாயப்படுத்துகிறார்கள் என்பதற்காக... (கடவுளை நம்ப சொல்லி அப்பா அம்மா என்னை வளர்த்தாங்க—எனக்கு வேற வழியில்ல)
நீங்கள் நம்பும் விஷயத்துக்கு சரியான காரணங்கள் இருக்க வேண்டும்.
“நம்ம உடல் உறுப்புகள் எப்படி வேலை செய்யுதுனு டீச்சர் விளக்குனப்போ, கடவுள் இருக்குறது எவ்ளோ உண்மைனு எனக்கு புரிஞ்சது. ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு வேலை செய்யுது, நுணுக்கமான வேலைகளகூட செய்யுது. நிறைய வேலைகள் நமக்கு தெரியாமலயே நடக்குது. மனுஷங்களோட உடலை நினைச்சா பயங்கர ஆச்சரியமா இருக்கு!”—தெரெசா.
“வானத்தை தொடுற கட்டிடத்தை, சுற்றுலா கப்பலை, இல்லன்னா ஒரு காரை பார்க்குறப்போ, ‘இதை யாரு உருவாக்குனா?’னு என்னை கேட்டுக்குவேன். உதாரணத்துக்கு, ஒரு கார் சரியா இயங்கணும்னா அதோட சின்ன சின்ன பாகங்கள் சரியா இயங்கணும். அப்படின்னா, அறிவுள்ளவராலதான் காரை உருவாக்க முடியும். அந்த காரையே யாராவது உருவாக்கி இருக்கணும்னா மனுஷங்களையும் கண்டிப்பா யாராவது உருவாக்கி இருக்கணும்!”—ரிச்சர்ட்.
“அறிவியலை பத்தி படிக்க படிக்க பரிணாமம் உண்மையா இருக்க முடியாதுனு தெரிஞ்சது. . . . என்னை பொறுத்தவரைக்கும், கடவுள் இருக்கிறார்னு நம்புறது கஷ்டமே இல்ல. பரிணாமத்த நம்புறதுதான் கஷ்டம்!”—ஆன்டனி.
நீங்கள் யோசிக்க...
விஞ்ஞானிகள் பல வருடங்களாக ஆராய்ச்சி செய்தும், எல்லா விஞ்ஞானிகளும் பரிணாமத்தை நம்புமளவுக்கு சரியான விளக்கத்தை இதுவரை கொடுக்க முடியவில்லை. திறமையுள்ள விஞ்ஞானிகளாலேயே பரிணாமத்தை நம்ப முடியவில்லை என்றால் நீங்கள் அதைப் பற்றி கேள்வி கேட்பது தவறா?