சோர்வை சமாளிக்க வழி
நீங்கள் சோர்ந்து போயிருக்கிறீர்களா? நிச்சயமற்ற நிலையும் சண்டை சச்சரவும் நிறைந்த இக்காலத்தில் அநேகர் சோர்ந்துபோய் இருக்கின்றனர். சிலர் வேலை கிடைக்காததால் சோர்ந்து போயிருக்கின்றனர். வேறு சிலரோ விபத்தினால் உண்டான விளைவுகளால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலரோ குடும்ப பிரச்சினைகளுடன், பெரும் வியாதியுடன், அல்லது தனிமை உணர்வுகளுடன் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
நீங்கள் சோர்ந்து போயிருந்தால், உதவிக்காக யாரை நாடலாம்? கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை வாசித்து உலகெங்கும் லட்சோபலட்சம் பேர் ஆறுதல் அடைந்திருக்கிறார்கள். அப்போஸ்தலன் பவுல் சொன்ன வார்த்தைகள் அவர்களுக்கு ஆறுதல் அளித்திருக்கிறது. அவர் சொன்னார்: “நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகல விதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். . . . சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்.” (2 கொரிந்தியர் 1:3, 4) இதையும் மற்ற வசனங்களையும் உங்களுடைய பைபிளிலிருந்தே வாசித்துப் பார்க்கலாமே! அது ‘உங்கள் இருதயங்களைத் தேற்றி உங்களை ஸ்திரப்படுத்தும்.’—2 தெசலோனிக்கேயர் 2:17.
சோர்வை வெற்றிகரமாக சமாளிப்பதற்குத் தேவையான உதவியை யெகோவாவுக்கு சேவை செய்கிறவர்கள் மத்தியிலிருந்தும் பெறலாம். “மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்” என நீதிமொழிகள் 12:25 சொல்கிறது. கிறிஸ்தவ கூட்டங்களுக்கு ஆஜராகும்போது, ‘நல்வார்த்தையை’ நாம் கேட்கிறோம், அது ‘ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாக இருக்கிறது.’ (நீதிமொழிகள் 16:24) யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொண்டு, இத்தகைய கூட்டம் எந்தளவு உங்களை பலப்படுத்துகிறது என்பதை ஏன் நீங்களாகவே தெரிந்துகொள்ளக் கூடாது?
ஜெபத்தின் வல்லமையிலிருந்தும் நீங்கள் பயனடையலாம். வாழ்க்கையின் கவலைகளால் நீங்கள் திக்குமுக்காடியிருந்தால், ‘ஜெபத்தைக் கேட்கிறவரிடம்’ உங்களுடைய அடிமனதின் உணர்ச்சிகளைக் கொட்டுங்கள். (சங்கீதம் 65:2) நம்மைவிட நமது படைப்பாளராகிய யெகோவா தேவன் நம்மை நன்றாக புரிந்துகொள்கிறார். உதவிக்காக நாம் அவரை அண்டியிருக்கலாம். “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்” என அவருடைய வார்த்தை நமக்கு உறுதி அளிக்கிறது. (சங்கீதம் 55:22) ஆம், “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடை”வார்கள்.—ஏசாயா 40:31.
சோர்வை வெற்றிகரமாக சமாளிப்பதற்குத் தேவையான வலிமைமிக்க உதவிகளை யெகோவா தேவன் நமக்கு வழங்கியிருக்கிறார். அவற்றை நீங்கள் பயன்படுத்துகிறீர்களா?