தத்தளிக்கும் பூமி!
குடிநீர்
தண்ணீர் இல்லாமல் பூமியில் உயிர்வாழவே முடியாது. அதுவும், குடிநீர் ரொம்பத் தேவை. உண்மையில், பூமியில் வாழும் உயிரினங்கள் எல்லாவற்றுக்குள்ளும் முக்கால்வாசி இருப்பது தண்ணீர்தான். மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் தேவையான குடிநீர், ஏரிகளிலிருந்து... ஆறுகளிலிருந்து... ஈரநிலங்களிலிருந்து (சதுப்பு நிலம்)... நிலத்தடியிலிருந்து... கிடைக்கிறது. அதைத்தான் பயிர் செய்யவும் நாம் பயன்படுத்துகிறோம்.
குடிநீர்—ஆபத்தில்!
இந்தப் பூமி முக்கால்வாசி தண்ணீரால்தான் நிரம்பியிருக்கிறது. “பூமியில் இருக்கும் தண்ணீரில் 0.5% மட்டும்தான் நல்ல தண்ணீர், அதை மட்டும்தான் குடிப்பதற்காகப் பயன்படுத்த முடியும்” என்று உலக வானிலை அமைப்பு சொல்கிறது. பூமியில் இருக்கும் உயிரினங்களுக்கு இந்தத் தண்ணீர் போதும்தான். ஆனால், அதில் பெரும்பாலான தண்ணீர் மாசுபட்டிருக்கிறது. அதோடு, தேவை அதிகமாக இருப்பதாலும் வானிலை மாறிக்கொண்டே இருப்பதாலும் மக்களுக்குக் குடிநீர் கிடைப்பதில்லை. இன்னும் 30 வருஷங்களில் 500 கோடி மக்கள் குடிப்பதற்குத் தண்ணீர் இல்லாமல் திண்டாடப்போகிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
பூமிக்கு முடிவே இல்லை
தண்ணீர் பற்றாக்குறை வருவதற்கு வாய்ப்பே இல்லாத மாதிரிதான் பூமி உருவாக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல சூரிய வெளிச்சம், தண்ணீரில் வாழும் உயிரினங்கள், மண் ஆகிய எல்லாமே ஒன்றாகச் சேர்ந்து தண்ணீரைச் சுத்தப்படுத்துகின்றன. பூமி என்றென்றும் இருக்கும் விதத்தில்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு சில ஆதாரங்களை இப்போது பார்க்கலாம்.
தண்ணீரில் இருக்கும் மாசுகளை எடுக்கும் திறன் மண்ணுக்கு இருப்பதாக நிறைய ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. ஈரநிலங்களில் இருக்கும் சில செடிகளுக்கு தண்ணீரில் கலந்திருக்கும் நைட்ரஜன், பாஸ்பரஸ், பூச்சி மருந்துகள் ஆகியவற்றை எடுக்கும் திறன் இருக்கிறது.
தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்ளும் விதத்தில் தண்ணீரில் சில விஷயங்கள் நடப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். தண்ணீர் வேகமாக ஓடுவதால் அதில் இருக்கும் மாசுகள் தண்ணீரோடு தண்ணீராகக் கலந்துவிடும். அதன் பிறகு, நுண்ணுயிர்கள் அவற்றைக் கரைத்துவிடும்.
தண்ணீரில் இருக்கும் ஆபத்தான ரசாயனங்களை சிப்பி மாதிரியான உயிரினங்கள் கொஞ்ச நாட்களிலேயே தண்ணீரிலிருந்து தனியாகப் பிரித்தெடுத்துவிடுகின்றன. நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் நடப்பதைவிட சிப்பிகள் அதை ரொம்ப வேகமாகச் செய்துவிடுகின்றன.
நம் பூமியில் தொடர்ந்து நீர்சுழற்சி நடக்கிறது. அதனால், பூமியால் தண்ணீரைச் சேர்த்து வைக்க முடிகிறது. இந்தச் சுழற்சியாலும், இயற்கையில் நடக்கும் மற்ற விஷயங்களாலும் காற்றுமண்டலத்தைவிட்டு தண்ணீர் வெளியே போவதும் இல்லை, பூமியில் தண்ணீர் இல்லாமல் போவதும் இல்லை.
மனிதர்களின் முயற்சி
எண்ணெய்க் கசிவு ஏற்பட்டால் அதைச் சரிசெய்வதன் மூலமாகவும், ஆபத்தான நச்சுப்பொருள்களைச் சரியாக அப்புறப்படுத்துவதன் மூலமாகவும் சுத்தமான தண்ணீரை நம்மால் பாதுகாக்க முடியும்.
தண்ணீரை வீணாக்காமல் அதைச் சேர்த்து வைக்க வேண்டுமென்று நிபுணர்கள் சொல்கிறார்கள். தண்ணீர் மாசுபடுவதைக் குறைக்க, (1) நம் வாகனங்களில் ஏதாவது எண்ணெய்க் கசிவு இருந்தால் அதைச் சரிசெய்யாமல் விட்டுவிடக் கூடாது, (2) பயன்படுத்தாத மருந்து மாத்திரைகளைக் கழிவறைகளில் போட்டுவிடக் கூடாது, (3) ஆபத்தான ரசாயனங்களைச் சாக்கடையில் ஊற்றிவிடக் கூடாது என்றும் சொல்கிறார்கள்.
கடல்நீரிலிருந்து உப்பை நீக்குவதற்கு இன்ஜினியர்கள் புதுப் புது வழிமுறைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். நல்ல தண்ணீர் நிறைய கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் அப்படிச் செய்கிறார்கள்.
ஆனால், இந்த முயற்சிகள் போதாது. ஏனென்றால், கடல்நீரை நல்ல தண்ணீராக மாற்றுவது ரொம்பப் பெரிய வேலை. அதற்கு நிறைய பணமும் சக்தியும் செலவாகும். நல்ல தண்ணீரைப் பாதுகாப்பது பற்றி 2021-ல் ஐக்கிய நாடுகள் வெளியிட்ட ஒரு அறிக்கை இப்படிச் சொன்னது: “இதற்காக உலகம் முழுவதும் நடக்கும் வேலைகள் இப்போது செய்யப்படுவதைவிட இன்னும் இரண்டு மடங்கு அதிகமாகச் செய்யப்பட வேண்டும்.”
பைபிள் என்ன நம்பிக்கை கொடுக்கிறது?
“[கடவுள்] தண்ணீரை ஆவியாக மேலே போக வைக்கிறார். அதை மழையாகவும் பனியாகவும் கீழே வர வைக்கிறார். அது மேகங்களிலிருந்து பொழிகிறது. மனுஷர்கள்மேல் பெய்கிறது.”—யோபு 36:27, 28.
பூமியில் இருக்கும் தண்ணீரைப் பாதுகாப்பதற்காக கடவுள் இயற்கை சுழற்சிகளை உருவாக்கியிருக்கிறார்.—பிரசங்கி 1:7.
இதை யோசித்துப் பாருங்கள்: தண்ணீர் தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்ளும் விதத்தில்தான் கடவுள் அதை வடிவமைத்திருக்கிறார். அப்படியென்றால், தண்ணீரைக் கெடுக்கும் விதத்தில் மனிதர்கள் செய்திருக்கும் எல்லாவற்றையும் கடவுளால் சரிசெய்ய முடியாதா என்ன? அந்த ஆசை அவருக்கு இருக்காதா என்ன? இதைப் பற்றித் தெரிந்துகொள்ள “பூமி உயிர்வாழும் என்று கடவுள் சொல்லியிருக்கிறார்” என்ற கட்டுரையைப் பக்கம் 15-ல் பாருங்கள்.