அதிகரிக்கும் விலைவாசி சமாளிக்க வழி!
தாராளமாகக் கொடுப்பது
‘விலைவாசி அதிகரிப்பதால் இங்கே நமக்கே திண்டாடுது. இதில் மற்றவர்களுக்கு அள்ளிக்கொடுக்க எங்கே போவது?’ என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், உங்களால் சிக்கனமாகவும் இருக்க முடியும், மற்றவர்களுக்கும் கொடுக்க முடியும். உண்மையில், மற்றவர்களுக்குத் தாராளமாகக் கொடுக்கும்போது, உங்கள் பணப் பிரச்சினையை சமாளிக்க முடியும்.
இது ஏன் முக்கியம்
தாராளமாகக் கொடுப்பது நம் சந்தோஷத்தையும் சுயமரியாதையையும் கூட்டும். சின்னச் சின்ன விதங்களில் கொடுத்தால்கூட போதும். மற்றவர்களுக்குத் தாராளமாகக் கொடுப்பது நம் மனநலத்துக்கும் உடல்நலத்துக்கும் நல்லது என்றுகூட சில ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. கவலை, மன அழுத்தம், இரத்த அழுத்தம், வலி, வேதனை எல்லாம்கூட குறைய வாய்ப்பிருக்கிறது. நல்ல தூக்கமும் கிடைக்கலாம்.
பணம் கொடுத்தோ வேறு வழிகளிலோ மற்றவர்களுக்கு உதவும்போது, மற்றவர்களுடைய உதவியை ஏற்றுக்கொள்வது நமக்குச் சுலபமாக இருக்கும். “மற்றவர்களுக்கு எப்படி உதவலாம், எப்படித் தாராளமாகக் கொடுக்கலாம் என்று நானும் என் மனைவியும் யோசிப்போம். நாங்கள் இப்படி உதவிகள் செய்யும்போது, மற்றவர்கள் செய்யும் உதவியை எங்களால் சங்கடப்படாமல் ஏற்றுக்கொள்ள முடிகிறது” என்கிறார் இங்கிலாந்தில் வாழும் ஹோவார்டு. கைமாறு எதிர்பார்த்து யாரும் இன்னொருவருக்கு உதவி செய்வதில்லைதான். ஆனால், தாராளமாகக் கொடுப்பதால், கஷ்ட காலத்தில் கைகொடுத்து உதவும் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.
நீங்கள் என்ன செய்யலாம்
இருப்பதைக் கொடுங்கள். கொஞ்சம் இருந்தால்கூட அதை மற்றவர்களுக்குக் கொடுக்க முடியும். சாதாரண உணவே போதும். உகாண்டாவில் வாழும் டங்க்கனும் அவருடைய குடும்பமும் ஏழைகள்தான். ஆனாலும் மற்றவர்களுக்குத் தாராளமாகக் கொடுப்பது அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும். “ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டுக்கு யாரையாவது சாப்பிடக் கூப்பிடுவோம். நாங்கள் எளிமையான உணவைக் கொடுத்தாலும், மற்றவர்களோடு சேர்ந்து நேரம் செலவு செய்வதில்தான் சந்தோஷமே!” என்கிறார் டங்க்கன்.
மற்றவர்களுக்குத் தாராளமாகக் கொடுக்கும்போது, உங்கள் குடும்பத்துக்கு தேவையில்லாத கஷ்டம் வந்துவிடாதபடி ஞானமாகவும் நடந்துகொள்ளுங்கள்.—யோபு 17:5.
இப்படிச் செய்துபாருங்கள்: எளிமையாக ஏதாவது சாப்பிடுவதற்கோ குடிப்பதற்கோ நீங்கள் மற்றவர்களைக் கூப்பிடலாம். நீங்கள் பயன்படுத்தாத பொருள்களை நண்பர்களுக்கோ பக்கத்து வீட்டுக்காரர்களுக்கோ கொடுக்கலாமே! அவர்களுக்கு அது பிரயோஜனமாக இருக்கலாம்; அதை அவர்கள் சந்தோஷமாக வாங்கிக்கொள்ளலாம்.
வேறு வழிகள். ஒருசில மிகச்சிறந்த பரிசுகளைக் கொடுக்க காசு பணம் தேவையில்லை. உதாரணத்துக்கு, அன்பு காட்டவும் மற்றவர்களுக்கு உதவி செய்யவும் நம் நேரத்தைக் கொடுக்கலாம். அன்பான ஒருசில வார்த்தைகளைச் சொல்வதுகூட மற்றவர்களுக்கு நாம் தரும் அழகான பரிசுதான். அதனால், உங்களுக்கு அவர்களை எவ்வளவு பிடிக்கும் அல்லது அவர்களை எவ்வளவு மதிக்கிறீர்கள் என்பதை மனம்விட்டுச் சொல்லுங்கள்.
இப்படிச் செய்துபாருங்கள்: வீட்டு வேலைகளைச் செய்யவோ, ஏதாவது பழுதுபார்க்கவோ, கடைக்குப் போய்வரவோ மற்றவர்களுக்கு உதவுங்கள். உங்கள் நண்பருக்கு ஏதாவது எழுதிக் கொடுங்கள் அல்லது மெசேஜ் அனுப்புங்கள். அது வெறுமனே அவர் ஞாபகம் உங்களுக்கு வந்ததைச் சொல்வதற்காகக்கூட இருக்கலாம்.
மற்றவர்களுக்குத் தாராளமாகக் கொடுக்க வழி தேடினால், உங்கள் வாழ்க்கை வளமாகும்.