பாடம் 14
கடவுள் எதற்காக அவருடைய ஜனங்களை ஒன்றுசேர்த்திருக்கிறார்?
1. எதற்காக இஸ்ரவேல் ஜனங்களை கடவுள் ஒன்றுசேர்த்தார்?
ஆபிரகாமின் வம்சத்தில் வந்த மக்களுக்கு ‘இஸ்ரவேலர்கள்’ என்று கடவுள் பெயர் வைத்தார். அவர்களை ஒரு தேசமாக ஒன்றுசேர்த்து சட்டங்களை கொடுத்தார். இந்த தேசம் மட்டும்தான் உண்மையான கடவுளை வணங்கியது, அவர் கொடுத்த சட்டங்களைப் பாதுகாத்தது. (சங்கீதம் 147:19, 20) அவர்கள் மூலமாக எல்லா நாட்டு ஜனங்களும் யெகோவாவைப் பற்றி தெரிந்துகொண்டு அவரை வணங்க வேண்டுமென்று அவர் விரும்பினார்.—ஆதியாகமம் 22:18-ஐ வாசியுங்கள்.
யெகோவாவுக்கு சாட்சிகளாக இருப்பதற்காக, அதாவது மற்ற ஜனங்களுக்கு அவரைப் பற்றி சொல்வதற்காக, இஸ்ரவேலர்களை யெகோவா தேர்ந்தெடுத்தார். கடவுள் கொடுத்த சட்டங்களின்படி நடந்தால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்று இவர்களுடைய சரித்திரத்தைப் படித்தாலே புரிந்துகொள்ளலாம். (உபாகமம் 4:6) இஸ்ரவேலர்களைப் பார்த்து மற்றவர்களும் உண்மையான கடவுளைப் பற்றி தெரிந்துகொண்டார்கள்.—ஏசாயா 43:10, 12-ஐ வாசியுங்கள்.
2. எதற்காக உண்மை கிறிஸ்தவர்களை கடவுள் ஒன்றுசேர்த்திருக்கிறார்?
காலப்போக்கில் இஸ்ரவேல் ஜனங்கள் யெகோவாவை விட்டு விலகிப் போனார்கள். அதனால், அவர்களுக்கு பதிலாக கிறிஸ்தவர்களை யெகோவா தேர்ந்தெடுத்தார். (மத்தேயு 21:43; 23:37, 38) இப்படி இஸ்ரவேலர்களுக்குப் பதிலாக கிறிஸ்தவர்கள் யெகோவாவுக்கு சாட்சிகளாக ஆனார்கள்.—அப்போஸ்தலர் 15:14, 17-ஐ வாசியுங்கள்.
ஒரு முக்கியமான வேலைக்காக இயேசு அவருடைய சீடர்களை ஒன்றுசேர்த்தார். எல்லா மக்களுக்கும் கடவுளைப் பற்றி சொல்லிக்கொடுத்து அவர்களையும் சீடர்களாக ஆக்குவதுதான் அந்த வேலை. (மத்தேயு 10:7, 11; 24:14; 28:19, 20) இந்தக் கடைசி காலத்தில் அந்த வேலை உச்சக்கட்டத்திற்கு வந்திருக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு லட்சக்கணக்கான ஜனங்களை எல்லா நாட்டில் இருந்தும் யெகோவா ஒன்றுசேர்த்திருக்கிறார். (வெளிப்படுத்துதல் 7:9, 10) உண்மை கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருக்கிறார்கள், உதவி செய்கிறார்கள். அவர்கள் எல்லாருக்கும் ஒரேவிதமான பைபிள் விஷயங்கள்தான் சபைக்கூட்டங்களில் கிடைக்கிறது.—எபிரெயர் 10:24, 25-ஐ வாசியுங்கள்.
3. யெகோவாவின் சாட்சிகளுடைய வேலை எப்படி ஆரம்பித்தது?
1870-க்கு பிறகு, சிலர் ஒன்றாக சேர்ந்து பைபிளை ஆராய்ச்சி செய்தார்கள். பல காலங்களாக தெரியாமல் இருந்த உண்மைகளை கண்டுபிடித்தார்கள். இயேசு அவருடைய சீடர்களுக்கு கொடுத்த வேலையை புரிந்துகொண்டார்கள். அதனால், உலகம் முழுவதும் கடவுளுடைய ஆட்சியைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்கள். 1931-ல் யெகோவாவின் சாட்சிகள் என்று பெயர் வைத்துக்கொண்டார்கள்.—அப்போஸ்தலர் 1:8; 2:1, 4; 5:42-ஐ வாசியுங்கள்.
4. யெகோவாவின் சாட்சிகள் எப்படி ஒன்றுசேர்ந்து வேலை செய்கிறார்கள்?
முதல் நூற்றாண்டில், எருசலேம் நகரத்தில் அனுபவமுள்ள சகோதரர்கள் ஒரு குழுவாக செயல்பட்டார்கள். இயேசுதான் சபைக்கு தலைவர் என்று அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். மற்ற நாடுகளில் இருந்த சபைகளை கவனித்துக்கொண்டார்கள். (அப்போஸ்தலர் 16:4, 5) அதேபோல் இன்றும் அனுபவமுள்ள சகோதரர்கள் ஒரு குழுவாக செயல்படுகிறார்கள். அவர்களை ஆளும் குழு என்று சொல்கிறோம். உலகம் முழுவதும் இருக்கிற யெகோவாவின் சாட்சிகளின் வேலைகளை இவர்கள் கவனித்துக்கொள்கிறார்கள். மற்ற நாடுகளில் இருக்கிற கிளை அலுவலகங்களை மேற்பார்வை செய்கிறார்கள். இங்குதான், 700-க்கும் அதிகமான மொழிகளில் புத்தகங்களை மொழிபெயர்த்து, அச்சடித்து, எல்லா சபைகளுக்கும் அனுப்புகிற வேலை நடக்கிறது. உலகம் முழுவதும் இருக்கிற 1,10,000-க்கும் அதிகமான சபைகளுக்கு தேவையான அறிவுரைகளையும் உற்சாகத்தையும் ஆளும் குழுவில் இருப்பவர்கள் கொடுக்கிறார்கள். ஒவ்வொரு சபையிலும் பொறுப்புள்ள சகோதரர்கள், அதாவது மூப்பர்கள், சபையின் வேலைகளை கவனித்துக்கொள்கிறார்கள். சபையில் இருக்கும் ஒவ்வொருவரையும் அன்பாக நடத்துகிறார்கள்.—1 பேதுரு 5:2, 3-ஐ வாசியுங்கள்.
பைபிளில் இருக்கிற சந்தோஷமான செய்தியை எல்லாருக்கும் சொல்வதற்காக யெகோவாவின் சாட்சிகளை கடவுள் ஒன்றுசேர்த்திருக்கிறார். இயேசுவின் சீடர்களைப் போல நாங்களும் வீடு வீடாக போய் இந்த செய்தியை சொல்கிறோம். (அப்போஸ்தலர் 20:20) ஆர்வம் காட்டுபவர்களுக்கு பைபிளைப் பற்றி அதிகமாக தெரிந்துகொள்ள உதவி செய்கிறோம். இந்த உலகத்தில் இருக்கும் மற்ற மத அமைப்புகளைப் போல் நாங்கள் இல்லை. நாங்கள் எல்லாரும் ஒரே குடும்பம் போல், அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை போல் பழகுகிறோம். யெகோவா எங்களுக்கு அன்பான அப்பாவாக இருக்கிறார். (2 தெசலோனிக்கேயர் 1:3) கடவுளுக்கு பிடித்த மாதிரி வாழ்கிறோம், மற்றவர்களுக்கு உதவி செய்கிறோம். அதனால், இந்த உலகத்திலேயே ரொம்ப சந்தோஷமான குடும்பமாக இருக்கிறோம்.—சங்கீதம் 33:12-ஐயும் அப்போஸ்தலர் 20:35-ஐயும் வாசியுங்கள்.