அதிகாரம் 10
இயேசுவின் குடும்பத்தார் எருசலேமுக்குப் போகிறார்கள்
12 வயது இயேசு, போதகர்களிடம் கேள்வி கேட்கிறார்
யெகோவாவை ‘என் தகப்பன்’ என்று இயேசு சொல்கிறார்
யோசேப்பின் குடும்பத்தார் தங்களுடைய சொந்தக்காரர்களோடும் நண்பர்களோடும் சேர்ந்து எருசலேமுக்குப் போவதற்குத் தயாராகிறார்கள். திருச்சட்டம் சொல்கிறபடி, பஸ்கா பண்டிகையைக் கொண்டாடுவதற்காக ஒவ்வொரு வருஷமும் அங்கே போவார்கள். (உபாகமம் 16:16) நாசரேத்திலிருந்து எருசலேமுக்குப் போக, கிட்டத்தட்ட 120 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டும். இந்தச் சந்தோஷமான சமயத்துக்காக எல்லாரும் ஆசையாகக் காத்திருக்கிறார்கள்; அதற்குத் தயாராவதற்காக, எல்லாரும் பரபரப்பாக வேலை செய்கிறார்கள். இயேசுவுக்கு இப்போது 12 வயது. பண்டிகைக்காக அவரும் ஆசை ஆசையாகக் காத்திருக்கிறார். ஆலயத்துக்குப் போவது என்றாலே அவருக்குத் தனி சந்தோஷம்தான்!
இயேசுவுக்கும் அவருடைய குடும்பத்துக்கும் பஸ்கா என்பது வெறும் ஒருநாள் பண்டிகை அல்ல. ஏனென்றால், பஸ்காவுக்கு அடுத்த நாள், புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகை ஆரம்பிக்கும். இது ஏழு நாட்களுக்கு நடக்கும். (மாற்கு 14:1) பஸ்கா பண்டிகையின் ஒரு பாகமாக இது கருதப்பட்டது. நாசரேத்திலிருந்து எருசலேமுக்குப் போய் அங்கே தங்கிவிட்டு, மறுபடியும் ஊர் திரும்புவதற்குள் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஓடிவிடும். ஆனால், இந்த வருஷம் இரண்டு வாரத்துக்கும் மேல் ஆகிறது. அதற்குக் காரணம் இயேசுதான்! அவர் அப்படி என்ன செய்தார்?
யோசேப்பும் மரியாளும் ஊருக்குத் திரும்பிப் போய்க்கொண்டிருக்கும்போது, தங்களோடு வந்த சொந்தக்காரர்களோடும் நண்பர்களோடும் இயேசு இருப்பார் என்று நினைக்கிறார்கள். ஆனால், ராத்திரி ஓரிடத்தில் தங்கும்போதுதான், அவர் அங்கே இல்லை என்பது தெரிகிறது. உடனே பதறியடித்துக்கொண்டு, தங்களுக்குத் தெரிந்தவர்கள் யாருடனாவது இருக்கிறாரா என்று தேடுகிறார்கள். ஆனால், இயேசுவைக் காணவில்லை! யோசேப்பும் மரியாளும் அவரைத் தேடிக்கொண்டு மறுபடியும் எருசலேமுக்கே போகிறார்கள்.
ஒரு நாள் முழுவதும் தேடியும் இயேசுவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்த நாளும் அதே கதைதான். கடைசியாக, மூன்றாவது நாள் அவரைக் கண்டுபிடிக்கிறார்கள்! அவர் ஆலயத்தில் இருக்கிற ஒரு மண்டபத்தில் யூத போதகர்களுக்கு நடுவே உட்கார்ந்திருக்கிறார். அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டும், அவர்களிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டும் இருக்கிறார். அவருடைய அறிவைப் பார்த்து அவர்கள் எல்லாரும் அசந்துபோகிறார்கள்.
மரியாள் அவரைப் பார்த்து, “மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? உன் அப்பாவும் நானும் எவ்வளவு பதற்றத்தோடு உன்னைத் தேடிக்கொண்டிருந்தோம், தெரியுமா?” என்று கேட்கிறாள்.—லூக்கா 2:48.
தான் இருக்கிற இடம் தன்னுடைய அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தெரியாததைப் பார்த்து இயேசு ஆச்சரியப்படுகிறார். அதனால், “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தகப்பனுடைய வீட்டில் இருப்பேன் என்று உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்கிறார்.—லூக்கா 2:49.
பிறகு, இயேசு அவர்களோடு நாசரேத்துக்குத் திரும்பிப் போகிறார். அவர்களுக்குத் தொடர்ந்து கீழ்ப்படிந்து நடக்கிறார். இயேசு வளர வளர, அவருக்கு இருந்த ஞானமும் அதிகமாகிறது. இளம் வயதிலேயே, கடவுளுடைய தயவையும் மனிதர்களுடைய தயவையும் பெறுகிறார். சின்ன வயதிலிருந்தே, ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் காட்டுவது மட்டுமல்லாமல், அப்பா-அம்மாவுக்குக் கீழ்ப்படிவதிலும் இயேசு ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்கிறார்.