பாடம் 60
அழியாத ஒரு அரசாங்கம்
ஒருநாள் ராத்திரி, நேபுகாத்நேச்சார் வித்தியாசமான ஒரு கனவைக் கண்டான். அதைப் பார்த்து ரொம்பக் குழம்பிப்போனான். அவனால் தூங்கவே முடியவில்லை. அதனால் தன்னுடைய மந்திரவாதிகளைக் கூப்பிட்டு, ‘என்னுடைய கனவுக்கு அர்த்தம் சொல்லுங்கள்’ என்றான். அதற்கு அவர்கள், ‘ராஜாவே! நீங்கள் பார்த்த கனவைச் சொல்லுங்கள்’ என்று கேட்டார்கள். அதற்கு நேபுகாத்நேச்சார், ‘இல்லை, நான் என்ன கனவு கண்டேன் என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும். இல்லையென்றால் உங்களைக் கொன்றுவிடுவேன்’ என்று மிரட்டினான். அவர்கள் மறுபடியும், ‘என்ன கனவு கண்டீர்கள் என்று எங்களுக்குச் சொல்லுங்கள். அப்போது அதன் அர்த்தத்தை உங்களுக்குச் சொல்கிறோம்’ என்றார்கள். ஆனால் நேபுகாத்நேச்சார், ‘நீங்கள் என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்கள். நான் என்ன கனவு கண்டேன் என்று சொல்லுங்கள்’ என்றான். உடனே அவர்கள் ராஜாவிடம், ‘இது நடக்காத காரியம். எந்த மனிதனாலும் அதைச் சொல்ல முடியாது’ என்று சொன்னார்கள்.
நேபுகாத்நேச்சாருக்குப் பயங்கர கோபம் வந்தது. அதனால் தேசத்தில் இருந்த எல்லா ஞானிகளையும் கொன்றுபோடும்படி கட்டளை போட்டான். அந்த ஞானிகளில் தானியேல், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவும் இருந்தார்கள். தானியேல், ராஜாவிடம் போய் கனவைச் சொல்ல கொஞ்சக் காலம் தரும்படி கேட்டார். பிறகு, அவரும் அவருடைய நண்பர்களும் யெகோவாவிடம் உதவி கேட்டு ஜெபம் செய்தார்கள். யெகோவா என்ன செய்தார்?
நேபுகாத்நேச்சார் கண்ட கனவை யெகோவா ஒரு தரிசனத்தில் தானியேலுக்குக் காட்டி, அதன் அர்த்தத்தையும் சொன்னார். தானியேல் அடுத்த நாளே ராஜாவின் ஊழியரிடம் போய், ‘ஞானிகள் யாரையும் கொன்றுவிடாதீர்கள். ராஜாவின் கனவை என்னால் சொல்ல முடியும்’ என்று சொன்னார். அந்த ஊழியர் தானியேலை நேபுகாத்நேச்சாரிடம் கூட்டிக்கொண்டுப் போனார். தானியேல் ராஜாவிடம், ‘எதிர்காலத்தில் நடக்கப்போவதை கடவுள் உங்களுக்குக் காட்டியிருக்கிறார். இதுதான் உங்களுடைய கனவு: நீங்கள் ஒரு பெரிய சிலையைப் பார்த்தீர்கள். அதன் தலை தங்கம், மார்பும் கைகளும் வெள்ளி, வயிறும் தொடையும் செம்பு, கால்கள் இரும்பு, பாதம் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாக இருந்தது. பிறகு, மலையிலிருந்து உடைக்கப்பட்ட ஒரு கல் அந்தச் சிலையின் பாதத்தில் வந்து மோதியது. அந்தச் சிலை தூள் தூளாகி காற்றோடு போய்விட்டது. பிறகு, அந்தக் கல் பெரிய மலையாகி பூமியை நிரப்பியது’ என்று சொன்னார்.
தானியேல் அவரிடம், ‘உங்கள் கனவின் அர்த்தம் இதுதான். உங்கள் ராஜ்யம்தான் தங்கத்தாலான அந்தத் தலை. உங்களுக்கு அடுத்து வரும் ராஜ்யம்தான் வெள்ளி. அதற்குப் பிறகு செம்பு போன்ற ஒரு ராஜ்யம் வரும் அது முழு பூமியையும் ஆட்சி செய்யும். அடுத்த ராஜ்யம் இரும்பு போல் உறுதியாக இருக்கும். கடைசியில் வரும் ராஜ்யம் பிரிந்து இருக்கும். அதன் சில பகுதிகள் இரும்பு போல உறுதியாகவும் சில பகுதிகள் களிமண் போல உறுதி இல்லாததாகவும் இருக்கும். மலையாக மாறிய அந்தக் கல்தான் கடவுளுடைய அரசாங்கம். அது இந்த ராஜ்யங்களை எல்லாம் நொறுக்கிவிட்டு என்றென்றும் அழியாமல் இருக்கும்’ என்று சொன்னார்.
உடனே, நேபுகாத்நேச்சார் தானியேலுக்கு முன்பாக விழுந்து வணங்கினான். அவன் தானியேலிடம், ‘உங்கள் கடவுள்தான் இந்தக் கனவை உனக்குச் சொல்லியிருக்கிறார். அவரைப் போன்ற கடவுள் யாரும் இல்லை’ என்று சொன்னான். தானியேலைக் கொல்வதற்குப் பதிலாக, அவரை எல்லா ஞானிகளுக்கும் தலைவராக ஆக்கினான். அதோடு பாபிலோனில் அவரை ஒரு அதிபதியாகவும் ஆக்கினான். தானியேலின் ஜெபத்துக்கு யெகோவா எப்படிப் பதில் கொடுத்தார் என்று பார்த்தாயா?
“எபிரெய மொழியில் அர்மகெதோன் என்று அழைக்கப்பட்ட இடத்தில் அவை அவர்களைக் கூட்டிச்சேர்த்தன.”—வெளிப்படுத்துதல் 16:16