பாடம் 67
எருசலேமின் மதில்சுவர்கள்
எஸ்றாவின் காலத்தில் நெகேமியா என்ற ஒரு இஸ்ரவேலர் இருந்தார். அவர் அர்தசஷ்டா ராஜாவிடம் வேலை செய்தார். பெர்சியாவில் இருந்த சூசான் நகரத்தில் வாழ்ந்தார். ஒருநாள், நெகேமியாவின் சகோதரர் யூதாவிலிருந்து ஒரு கெட்ட செய்தியோடு வந்தார். அவர் நெகேமியாவிடம், ‘எருசலேமுக்குத் திரும்பி வந்த மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை. ஏனென்றால் எருசலேமின் மதில்சுவர்களும் வாசல்களும் இடிந்து கிடக்கின்றன. பாபிலோனியர்கள் அழித்துப்போட்டதை யாரும் திரும்பக் கட்டவே இல்லை’ என்று சொன்னார். அதைக் கேட்டு நெகேமியாவுக்கு ரொம்பக் கவலையாக இருந்தது. எருசலேமுக்குப் போய் அதைத் திரும்பக் கட்ட வேண்டும் என்று நினைத்தார். அங்கே போவதற்கு ராஜா அனுமதி தர வேண்டும் என்று ஜெபம் செய்தார்.
ஒருநாள் நெகேமியா சோகமாக இருந்ததை ராஜா பார்த்தார். அவர் நெகேமியாவிடம், ‘நான் உன்னை இப்படிப் பார்த்ததே இல்லையே? உனக்கு என்ன ஆனது?’ என்று கேட்டார். அதற்கு நெகேமியா, ‘என்னுடைய சொந்த ஊரான எருசலேமின் மதில்சுவர்கள் இடிந்து கிடக்கும்போது நான் எப்படிச் சந்தோஷமாக இருக்க முடியும்?’ என்று சொன்னார். அதற்கு ராஜா, ‘நான் உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமா?’ என்று கேட்டார். உடனே, நெகேமியா மனதுக்குள் ஜெபம் செய்தார். பிறகு ராஜாவிடம், ‘எருசலேமுக்குப் போய் மதில்சுவர்களைக் கட்ட எனக்கு அனுமதி தர வேண்டும்’ என்று கேட்டார். அர்தசஷ்டா ராஜா நெகேமியாவுக்கு அனுமதி கொடுத்தார். அவர் ரொம்பத் தூரம் பயணம் செய்யப் போவதால், பாதுகாப்புக்காக சில ஏற்பாடுகளையும் செய்தார். அதோடு, நெகேமியாவை யூதாவின் ஆளுநராக ஆக்கினார். நகரத்தின் வாசல்களைக் கட்டுவதற்குத் தேவையான மரங்களையும் கொடுத்து அனுப்பினார்.
நெகேமியா எருசலேமுக்கு வந்த பிறகு, மதில்சுவர்கள் எப்படி இருக்கின்றன என்று பார்த்தார். பிறகு குருமார்களையும் அதிகாரிகளையும் கூப்பிட்டு, ‘நிலைமை ரொம்ப மோசமாக இருக்கிறது, நாம் உடனே வேலையை ஆரம்பிக்க வேண்டும்’ என்று சொன்னார். மக்களும் ஒத்துக்கொண்டு, மதில்சுவர்களைக் கட்ட ஆரம்பித்தார்கள்.
ஆனால், இஸ்ரவேலர்களின் எதிரிகள் சிலர் அவர்களிடம், ‘நீங்கள் கட்டும் மதில்சுவரை ஒரு நரிகூட இடித்துவிடும்’ என்று கேலி செய்தார்கள். அதையெல்லாம் மக்கள் கண்டுகொள்ளாமல் கட்டிக்கொண்டே இருந்தார்கள். மதில்சுவர் இன்னும் உயரமாகவும் உறுதியாகவும் ஆனது.
எதிரிகள் எல்லா பக்கத்திலிருந்தும் வந்து எருசலேமைத் திடீரென்று தாக்க திட்டம் போட்டார்கள். யூதர்கள் அதைக் கேள்விப்பட்டு பயந்துபோனார்கள். ஆனால் நெகேமியா, ‘பயப்படாதீர்கள், யெகோவா நம்மோடு இருக்கிறார்’ என்று சொன்னார். அதோடு, வேலை செய்பவர்களைப் பாதுகாக்க காவலர்களை நிற்க வைத்தார். அதனால், எதிரிகளால் தாக்க முடியவில்லை.
வெறும் 52 நாட்களில், மதில்சுவர்களையும் வாசல்களையும் கட்டி முடித்தார்கள். அதைக் கொண்டாடுவதற்காக, எல்லா லேவியர்களையும் நெகேமியா எருசலேமுக்குக் கூட்டிக்கொண்டு வந்தார். அவர்களை இரண்டு பாடகர் குழுக்களாகப் பிரித்தார். அவர்கள் மதில்சுவரின் மேல் ஏறி, எதிர் எதிர் திசையில் நகரத்தைச் சுற்றி நடந்து போனார்கள். எக்காளங்களையும் ஜால்ராக்களையும், யாழ்களையும் வாசித்து யெகோவாவைப் புகழ்ந்து பாடினார்கள். எஸ்றா ஒரு குழுவோடும், நெகேமியா மற்றொரு குழுவோடும் போனார். இரண்டு குழுவினரும் ஆலயத்தில் சந்தித்தார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லா மக்களும் யெகோவாவுக்குப் பலிகளைக் கொடுத்து சந்தோஷமாகக் கொண்டாடினார்கள். அவர்களுடைய சத்தம் ரொம்பத் தூரம்வரை கேட்டது.
“உன்னைத் தாக்குவதற்காக உருவாக்கப்படுகிற எந்த ஆயுதமும் ஒன்றுமில்லாமல் போகும்.”—ஏசாயா 54:17