இயேசுவின் வாழ்க்கையும் ஊழியமும்
யோவான் வழியை ஆயத்தப்படுத்துகிறான்
இயேசு 12 வயது பிள்ளையாக இருக்கையில் ஆலயத்திலிருந்த போதகர்களை கேள்வி கேட்ட சமயத்திலிருந்து பதினெழு வருடங்கள் கடந்துவிட்டன. பொ.ச. 29-ன் வசந்த காலம், யோர்தான் நதியை சுற்றி இருந்த தேசமெங்கும் பிரசங்கித்துக்கொண்டிருந்த இயேசுவின் உறவினன் மகனாகிய யோவானைக் குறித்து எல்லோரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
யோவான் தோற்றத்திலும் பேச்சிலும் சிறந்து விளங்கின மனிதனாக இருந்தான். அவனுடைய உடை ஒட்டகமயிராலானது, அரையில் வார்க்கச்சை அணிந்திருக்கிறான், வெட்டுக்கிளியும் காட்டுத் தேனும் அவனுக்கு ஆகாரமாக இருக்கிறது. அவனுடைய பிரசங்கித்த செய்தி என்ன? “மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது.”
இந்த செய்தி கேட்பவர்களுக்கு உற்சாகமூட்டும் செய்தியாக இருக்கிறது. அநேகர் மனந்திரும்ப வேண்டிய அவசியத்தை உணருகின்றனர், அதாவது தங்களுடைய மனநிலையை மாற்றிக்கொண்டு தங்களுடைய பழைய வாழ்க்கை முறையை விரும்பப்படாததாக நிராகரித்துவிட வேண்டிய அவசியத்தை உணருகின்றனர். எனவே யோர்தானை சுற்றியிருக்கும் பிராந்தியங்களிலிருந்தும், எருசலேமிலிருந்தும் ஏராளமான ஜனங்கள் யோவானிடம் வருகிறார்கள். யோர்தான் நதியின் தண்ணீரில் அவன் அவர்களை முழுக்காட்டுகிறான். ஏன்?
கடவுளுடைய நியாயப்பிரமாண உடன்படிக்கைக்கு விரோதமாக செய்த பாவங்கள் சம்பந்தமாக தங்களுடைய இருதயப்பூர்வமான மனந்திரும்புதலுக்கு அடையாளமாக அல்லது அவற்றை ஒப்புக்கொள்வதற்கு அடையாளமாக யோவான் அவர்களை முழுக்காட்டுகிறான். இப்படியாக பரிசேயரிலும் சதுசேயரிலும் சிலர் யோர்தானுக்கு வந்தபோது, யோவான் அவர்களை கண்டனம் செய்கிறான். “விரியன் பாம்புக் குட்டிகளே,” என்று அழைத்து, “மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்” என்கிறான்.
யோவான் எல்லாருடைய கவனத்தையும் பெறுவதினால், பரிசேயர்கள் அவனிடம் ஆசாரியரையும் லேவியரையும் அனுப்புகிறார்கள். “நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் உத்தரவு சொல்லும்படிக்கு, உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர்கள்? என்று கேட்டார்கள்.”
யோவான் பின்வருமாறு விவரிக்கிறான்: “கர்த்தரின் [யெகோவாவின், NW] வழியைச் செவ்வைப் பண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான்.” ஜனங்கள் சரியான இருதய நிலையோடு ராஜாவாக போகும் மேசியாவை ஏற்றுக்கொள்வதற்கு யோவான் வழியை ஆயத்தப்படுத்துகிறான். இவரைக் குறித்து யோவான் இவ்வாறு சொல்லுகிறான்: “அவர் எனக்குப் பின்வந்தும் என்னிலும் மேன்மையுள்ளவர்; அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல.”
இப்படியாக, “பரலோக ராஜ்யம் சமீபித்துவிட்டது” என்ற யோவானின் செய்தி,” யெகோவாவின் நியமிக்கப்பட்ட ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவின் ஊழியம் சீக்கிரத்தில் துவங்கும் என்பதற்கு ஒரு பொது அறிவிப்பாக சேவிக்கிறது. யோவான் 1:6-8, 15-28; மத்தேயு 3:1-12; லூக்கா 3:1-18; அப்போஸ்தலர் 19:4.
◆ யோவான் எப்படிப்பட்ட ஒரு மனிதன்?
◆ யோவான் ஏன் ஜனங்களை தண்ணீரில் முழுக்காட்டுகிறான்?
◆ ராஜ்யம் சமீபித்துவிட்டது என்று யோவான் ஏன் சொல்லக்கூடியவனாக இருந்தான்? (w85 9/1)