சுவிசேஷங்களின் வாஷிங்டன் கோடெக்ஸ்
டிசம்பர் 1906-ல், செல்வந்தனான அமெரிக்க தொழிலதிபரும் கலைப்பொருட்கள் சேகரிப்பவருமான சார்லஸ் L. ஃபீரிர், எகிப்திலுள்ள, கிஸாவில் அலி என்ற பெயருள்ள அராபிய நாட்டு வியாபாரி ஒருவரிடமிருந்து ஒரு சில பழைய கையெழுத்துப் பிரதிகளை வாங்கினார். அலி, சோஹக்குக்கு அருகிலுள்ள வைட் துறவி மடத்திலிருந்து அவை கிடைத்ததாகச் சொன்னார். ஆனால் நைல் ஆற்றின் கழிமுகத்தில் கிஸாவின் மூன்றாவது பிரமிட் அருகே வைன்டிரெஸ்ஸரின் துறவி மடத்தின் இடிபாடுகளில் இது கண்டெடுக்கப்பட்டிருப்பதே அதிக சாத்தியமாகும்.
ஃப்ரீர், மூன்று கையெழுத்துப் பிரதிகளையும், “பசைப் பொருள் போன்று வெளிப்புறத்தில் அத்தனை கடினமாகவும் எளிதில் உடையத்தக்கதாகவும் இருக்கும் கருமையான, சிதைந்து போன தோலில் எழுதப்பட்ட கையெழுத்தேட்டையும்” கொடுத்தார். இது அளவில் சுமார் 6.5 அங்குலம் நீளமாயும் 4.5 அங்குலம் ஆழமாயும் 1.5 அங்குலம் பருமனாகவும் இருந்தது. அதனுடைய சொந்த மதிப்புக்காக இல்லாமல், அது கையெழுத்துப்பிரதிகளோடு சம்பந்தமுடையதாய் இருந்ததன் காரணமாக இவற்றோடு சேர்ந்து விற்கப்பட்டது. உடைந்த சுவடித்தாள்களின் இறுகிப் போன பிண்டங்களைப் பிரித்தெடுப்பது, மிகக் கவனமாகவும், நுட்பமாகவும் செய்யப்பட வேண்டியதாக இருந்தது. கடைசியில் அவற்றில் 84 வெளிப்படுத்தப்பட்டது, அவை பொ.ச. ஐந்தாவது அல்லது ஆறாவது நூற்றாண்டைச் சேர்ந்த பவுலின் நிருபங்களின் கோடெக்ஸ் ஆகும்.
மீதமிருந்த மூன்று கையெழுத்துப் பிரதிகளில் ஒன்று, உபாகமம் மற்றும் யோசுவா புத்தகங்களாகும். மற்றொன்று கிரேக்க செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பிலிருந்த சங்கீதங்களாகும். என்றபோதிலும் மூன்றாவதும் எல்லாவற்றிலும் அதிமுக்கியமானதுமாக இருப்பது நான்கு சுவிசேஷங்களின் கையெழுத்துப் பிரதியாகும்.
பின்கூறப்பட்ட இந்தக் கையெழுத்துப் பிரதி, அநேகமாக ஆட்டுத் தோலில் எழுதப்பட்ட கையெழுத்தேடு, 187 சுவடித்தாள்களையும் சாய்வு கிரேக்க எழுத்துகளைக் கொண்டதாயுமிருக்கிறது. நிறுத்தக்குறியீடு அபூர்வமாகவே காணப்பட்டாலும் சொற்றொடர்களுக்கிடையே சிறிய இடைவெளிகள் அடிக்கடி காணப்படுகிறது. கையெழுத்துப் பிரதிகளின் ஓரங்கள் மிக மோசமாக சிதைந்து போயிருந்தன, ஆனால் பெரும்பாலான எழுத்துக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. அது பின்னால் வாஷிங்டன் டி.சி.-யில் ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் ஃப்ரீயர் கலைக்கூடத்துக்குப் பரிசாக அளிக்கப்பட்டது, இது சுவிசேஷங்களின் வாஷிங்டன் கோடெக்ஸ் என்று அழைக்கப்பட்டு “W” என்ற அடையாள எழுத்து கொடுக்கப்பட்டது.
தோலில் எழுதப்பட்ட கையெழுத்தேடு பொ.ச. நான்காவது நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது ஐந்தாவது நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கிறது, ஆகவே சைனாய்டிகஸ், வத்திக்கன் மற்றும் அலெக்ஸாண்ட்ரீன் ஆகிய மூன்று முக்கிய கையெழுத்துச் சுவடிகளைவிட அதிக பின்னால் வரிசைப்படுத்தப்பட்டில்லை. (காணாமற்போன இரண்டு சுவடித் தாள்களை தவிர முழுமையாக இருக்கும்) சுவிசேஷங்கள் மத்தேயு, யோவான், லூக்கா, மாற்கு என்பதாக மேற்கத்திய வரிசை என்றழைக்கப்படும் வரிசையில் காணப்படுகிறது.
கையெழுத்துப் பிரதியை வாசிப்பது, அசாதாரணமான வாசக எழுத்துருவின் கலவையை வெளிப்படுத்துகிறது, ஒவ்வொன்றும் பெரிதான, தொடர்ச்சியான பகுதிகளால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்றது. ஒவ்வொன்றும் வித்தியாசமான வாசக உருக்கொண்ட, பல்வேறு கையெழுத்துப் பிரதிகளின் எஞ்சிய முறிந்த துண்டுகளிலிருந்து நகல் எடுத்திருப்பதாக தோன்றுகிறது. பொ.ச. 303-ம் ஆண்டில் பேரரசன் டையோக்லீஷன் உத்தரவுப்படி திடீரென்று கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டு வேதாகமத்தின் எல்லா நகல்களும் வெளிப்படையாக எரிக்கப்பட்ட அந்தக் காலத்தைச் சேர்ந்ததாக இது இருக்க வேண்டும் என்று பேராசிரியர் H. A. சான்டர்ஸ் குறிப்பிட்டார். ஒருசில கையெழுத்துப் பிரதிகள் அந்தச் சமயத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைச் சரித்திர பதிவுகளிலிருந்து நாம் அறிவோம். பல பத்தாண்டுகளுக்குப் பின்னர், அறியப்படாத ஒருவர் எஞ்சியிருந்த பல்வேறு கையெழுத்துப் பிரதிகளின் நகல்களை எடுத்து வாஷிங்டன் கோடெக்ஸ் வாசகத்தை உருவாக்கினார். பின்னால், யோவானின் (யோவான் 1:1 முதல் 5:11 வரை) முதலாம் தொகுதி ஏதோ ஒரு சமயம் காணாமற்போக, அது ஏழாம் நூற்றாண்டில் மீண்டும் எழுதப்பட வேண்டியதாயிற்று.
வாசகத்தில் ஒருசில அக்கறையூட்டும் வித்தியாசங்கள் உள்ளன, மேலும் மாற்கு 16-ம் அதிகாரத்தில் ஒருவேளை ஓரக்குறிப்புகளிலிருந்து பெறப்பட்ட அசாதாரணமான, ஆனால் தள்ளுபடிசெய்யப்பட்ட சேர்ப்பு காணப்படுகிறது. பழைய லத்தீன் மற்றும் சிரியா நாட்டு மொழிபெயர்ப்போடு அதன் கருத்துத்தொடர்பில் தானே அதன் விசேஷித்த மதிப்பு இருக்கிறது. தோலில் எழுதப்பட்ட கையெழுத்து ஏட்டின் மீது மெழுகுவர்த்தி ஒழுகி கீழே விழுந்திருப்பதால் ஏற்பட்டுள்ள கறை, அது நன்கு பயன்படுத்தப்பட்டதைக் குறிப்பாக காண்பிக்கிறது.
துன்புறுத்தல், எதிர்ப்பு மற்றும் காலத்தின் அழிவிளைவுகள் மத்தியிலும் பைபிள் வியப்பூட்டும் வகையில் நமக்காக அநேக கையெழுத்துப் பிரதிகளின் உருவில் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. உண்மையாகவே, “யெகோவாவுடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.”—1 பேதுரு 1:25; ஏசாயா 40:8, NW.
(w90 5/1)