உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சமீப காவற்கோபுர இதழ்களின் நடைமுறையான மதிப்பை நீங்கள் கண்டிருக்கிறீர்களா? அப்படியானால், பின்வரும் கேள்விகளைக்கொண்டு உங்களுடைய நினைவாற்றலை நீங்கள் ஏன் சோதித்துப் பார்க்கக்கூடாது?
◻ அர்மகெதோன் எதைப்போல் இருக்கும்? (வெளிப்படுத்துதல் 16:14, 16)
அது அணு ஆயுத வெளிப்பாடாகவோ அல்லது மனிதர்களால் தூண்டப்படுகிற வேறொரு பேரழிவாகவோ இருக்காது. இது அனைத்து மனித போர்களையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் இப்படிப்பட்ட போர்களை முன்னேற்றுவிக்கும் அனைவரையும் அழிப்பதற்குமான கடவுளுடைய போர். இது சமாதானத்தை நேசிக்கிறவர்களுக்காக உண்மையான சமாதானத்தைக் கொண்டுவருவதற்கான கடவுளுடைய போர். அது தாமதிக்காது. (ஆபகூக் 2:3)—4/15, பக்கம் 17.
◻ எப்படிப்பட்ட திருமணம் யெகோவாவை கனப்படுத்துகிறது?
உலகப்பிரகாரமான வழிமுறைகளுக்கு மேலாக ஆவிக்குரிய அம்சங்களுக்கு முதலிடம் கொடுக்கும் ஒரு திருமணம் யெகோவாவுக்கு மெய்யாகவே கனத்தைக் கொண்டுவரும். இழிவான உலகியல் சார்ந்த பழக்கங்களையும், குருட்டு நம்பிக்கைகளையும், மிதமீறிய தன்மைகளையும் கிறிஸ்தவர்கள் தவிர்ப்பார்களாகில், வழக்கமான தேவராஜ்ய நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ய அதை அனுமதிக்காமல் இருப்பார்களாகில், பகட்டாரவாரத்திற்குப் பதிலாக அடக்கத்தைக் காட்டுவார்களாகில், அந்த நிகழ்ச்சியை அனுபவித்து மகிழ்வார்கள்.—4/15, பக்கம் 26.
◻ ஒரு மனிதனுடைய உத்தமத்தன்மையை எது தனிப்படுத்திக் காட்டுகிறது?
உத்தமத்தன்மையுள்ள ஒரு மனிதன் வெறுமனே உடன் மானிடரால் மட்டுமல்லாமல், அதிமுக்கியமாக கடவுளால் நம்பப்பட முடியும். அவனுடைய இருதய சுத்தம் அவனுடைய செயல்களில் காணப்படுகிறது; அவன் பாசாங்கு செய்வதிலிருந்து விலகியிருக்கிறான். அவன் தவறான வழியில் செல்பவனாக அல்லது ஒழுக்கமற்றவனாக இல்லை. (2 கொரிந்தியர் 4:2)—5/1, பக்கம் 6.
◻ “தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது” என்று எரேமியா ஏன் சொன்னார்? (புலம்பல் 3:27)
இளைஞராயிருக்கையில் சோதனைகளைச் சமாளிக்க கற்றுக்கொள்வது, பெரியவர்களாக ஆகும்போது கடினமான பிரச்சினைகளைச் சந்திப்பதற்கு ஒருவரை தயார்செய்ய உதவுகிறது. (2 தீமோத்தேயு 3:12) உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருப்பதில் கிடைக்கும் நன்மைகள், ஒத்திணங்கிப்போவதால் கிடைக்கும் எந்தத் தற்காலிகமான நிம்மதியையும் விஞ்சிவிடுகின்றன.—5/1, பக்கம் 32.
◻ மறுரூபக் காட்சியில் மோசேயும் எலியாவும் தோன்றியதன் மூலம் எது முன்நிழலாக காண்பிக்கப்பட்டது?
மறுரூபக் காட்சியின் சூழமைவில், மோசேயும் எலியாவும் இயேசுவின் அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்களுக்கு பொருத்தமான அடையாளங்களாக இருந்தார்கள். அவர்களும் இயேசுவும் “மகிமையோடே” காணப்பட்டதானது, அபிஷேகஞ்செய்யப்பட்ட உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் பரலோக ராஜ்ய ஏற்பாட்டில் இயேசுவுடன் ‘மகிமைப்படுத்தப்படுவார்கள்’ என்பதை அடையாளப்படுத்தியது. (லூக்கா 9:30, 31; ரோமர் 8:17; 2 தெசலோனிக்கேயர் 1:10)—5/15, பக்கங்கள் 12, 14.
◻ கடவுளுடைய “பரிசுத்த இரகசியம்” என்றால் என்ன?
(1 கொரிந்தியர் 2:7, NW) கடவுளுடைய “பரிசுத்த இரகசியம்” இயேசு கிறிஸ்துவை மையமாக கொண்டிருக்கிறது. (எபேசியர் 1:9, 10, NW) என்றபோதிலும், அது வெறுமனே இயேசுவை வாக்குப்பண்ணப்பட்ட வித்தாக அல்லது மேசியாவாக அடையாளம் காட்டுவது மாத்திரமல்ல. அது கடவுளுடைய மேசியானிய ராஜ்யமாகிய பரலோக அரசாங்கத்தை உட்படுத்துகிறது. கடவுளுடைய நோக்கத்தில் அவர் வகிக்கும்படியாக நியமிக்கப்பட்டிருக்கும் பங்கையும் அது உட்படுத்துகிறது.—6/1, பக்கம் 13.
◻ நோய் அல்லது முதிர்வயதை ஒரு கிறிஸ்தவர் எப்படி நோக்க வேண்டும்?
யெகோவாவுக்குச் செய்யும் தன் சேவையை மட்டுப்படுத்துவதாக இப்படிப்பட்ட துன்பத்தைக் கருதுவதற்குப் பதிலாக, அவரில் வைத்திருக்கும் தன் நம்பிக்கையை அதிகரிப்பதற்கு ஒரு வாய்ப்பாக அவற்றை கருத வேண்டும். ஒரு கிறிஸ்தவனின் மதிப்பானது, ராஜ்ய சேவையில் தான் எவ்வளவு அதிகம் செய்கிறார் என்பதால் அல்ல, தன்னுடைய விசுவாசத்தையும் அன்பின் ஆழத்தையும் கொண்டே அளவிடப்படுகிறது என்பதையும் அவர் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். (மாற்கு 12:41-44.)—6/1, பக்கம் 26.
◻ பைபிளை எழுத தேவதூதர்களைப் பயன்படுத்தாமல் மனிதர்களை யெகோவா பயன்படுத்தியிருப்பது எவ்வாறு அவருடைய மகா ஞானத்தைக் காண்பித்தது?
மனித வாடையே அதில் முழுமையாக இல்லாமல் இருந்திருக்குமேயானால், பைபிளின் செய்தியைக் கிரகித்துக்கொள்வது நமக்கு கடினமாக இருந்திருக்கலாம். அதோடு, மனித வாடை அதற்கு கொடுக்கும் கனிவையும் பல்வகை ரசனையையும் கவர்ச்சியையும் பைபிள் தன்னகத்தே கொண்டிருக்கிறது.—6/15, பக்கம் 8.
◻ குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ன?
குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளிலும் அதன் நியமங்களாகிய தன்னடக்கம், தலைமைவகிப்பை அங்கீகரித்தல், நல்ல பேச்சுத்தொடர்பு, அன்பு ஆகியவற்றைப் பொருத்திப் பயன்படுத்துவதிலுமே இருக்கிறது.—6/15, பக்கங்கள் 23, 24.
◻ இயேசு செய்த சுகப்படுத்துதல், இன்று சுகப்படுத்தும் வல்லமைகளைப் பெற்றிருப்பதாக உரிமைபாராட்டுகிறவர்கள் பொதுவாக செய்கிறவற்றிலிருந்து எவ்வாறு மிகவும் வித்தியாசமாக இருந்தது?
பலமான உணர்ச்சிவசப்பட்ட செயல்கள் ஜனக்கூட்டத்திடமும் இல்லை, இயேசுவின் பங்கில் நாடகபாணியிலான ஆவேசமும் இல்லை. மேலுமாக, அவர்களுடைய காணிக்கை போதுமான அளவு தாராளமாக இல்லை என்றோ அவர்கள் விசுவாசத்தில் குறைவுபட்டார்கள் என்றோ காரணங்காட்டி, பலவீனமாயிருந்தவர்களை இயேசு ஒருபோதும் குணப்படுத்தாமல் விட்டுவிடவில்லை.—7/1, பக்கம் 5.
◻ தம்முடைய பெயர் மற்றும் ராஜ்யம் சம்பந்தமாக, தம்முடைய தெய்வீக நோக்கத்தில் ஓர் இடத்தை வகிப்பதற்கு யெகோவா எவ்வாறு தம்முடைய மக்களுக்கு உதவி செய்திருக்கிறார்?
முதலாவதாக, யெகோவா தம்முடைய மக்களுக்கு சத்தியத்தை ஒப்புவித்தார். இரண்டாவதாக, அவருடைய பரிசுத்த ஆவியைக் கொடுத்தார். மூன்றாவதாக, உலகளாவிய சகோதரத்துவமும் வணங்குவதற்காக யெகோவாவின் அமைப்புக்குரிய ஏற்பாடும் நம்மிடம் உள்ளது.—7/1, பக்கங்கள் 19, 20.
◻ நல்லொழுக்கம் என்றால் என்ன?
நல்லொழுக்கம் என்பது சீரிய ஒழுக்கமாக, நற்குணமாக, சரியான செயலாகவும் சிந்தனையாகவும் உள்ளது. அது செயல்புரியாத தன்மையாக இல்லாமல் செயல்புரியும், உடன்பாடான ஒன்றாக உள்ளது. நல்லொழுக்கம் என்பது பாவத்தைத் தவிர்ப்பதைக் காட்டிலும் அதிகத்தை உட்படுத்துகிறது; அது நன்மையானதை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதை அர்த்தப்படுத்துகிறது. (1 தீமோத்தேயு 6:11)—7/15, பக்கம் 14.
◻ பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு கொடுக்கக்கூடிய அதிக மதிப்புவாய்ந்த சுதந்தரம் என்ன?
அதிக மதிப்புவாய்ந்த சுதந்தரமானது, அன்பு காட்டுவதில் அவர்களுடைய சொந்த முன்மாதிரியே ஆகும். முக்கியமாக, பிள்ளைகள் தங்களுடைய பெற்றோர் எல்லா காரியத்திலும் கடவுளிடம் உண்மையான அன்பை செயலில் காட்டுவதைப் பார்ப்பதும் கேட்பதும் அவசியமாகும்.—7/15, பக்கம் 21.
◻ பலன்தரத்தக்க குடும்ப படிப்புக்கான சில முக்கிய அம்சங்கள் யாவை?
குடும்ப படிப்பு ஒழுங்காக நடத்தப்பட வேண்டும். படிப்புக்காக நீங்கள் ‘நேரத்தை வாங்கவேண்டும்.’ (எபேசியர் 5:15-17, NW) பைபிளை உயிர் பெற்றுவரும்படி செய்வதன்மூலம் படிக்கும் நேரங்களைப் பிள்ளைகளுக்கு உற்சாகமான ஒன்றாக ஆக்குங்கள். பிள்ளைகள் அதை அனுபவித்துக் களிப்பதற்கு, அவர்கள் அதில் உட்படுகிறவர்களாய் உணர வேண்டும்.—8/1, பக்கங்கள் 26, 28.