உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சமீபத்தில் வெளியான காவற்கோபுர பத்திரிகைகளை நீங்கள் வாசித்து மகிழ்ந்தீர்களா? பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்:
• சோதிடர்கள் இயேசுவைப் பார்க்க வந்தது எப்போது?
“இயேசு பிறந்த இரவன்று அவரை மாட்டுத் தொழுவத்தில் வந்து பார்த்தவர்கள் மேய்ப்பர்களே தவிர சோதிடர்கள் அல்ல. சில மாதங்களுக்குப் பிறகுதான் அவர்கள் வந்தார்கள்” என்கிறது ஒரு பைபிள் வெளியீடு. அச்சமயத்தில் இயேசு ‘சிறு பிள்ளையாக’ இருந்தார்; அவர் ஒரு ‘வீட்டில்’ இருந்தார். (மத்தேயு 2:7-11) இயேசு பிறந்த இரவன்று இந்த சோதிடர்கள் வந்து அவருக்கு பொன்னையும் விலையுயர்ந்த பிற பரிசுகளையும் அளித்திருந்தால், நாற்பது நாட்கள் கழித்து, ஆலயத்தில் வெறும் இரண்டு பறவைகளை மட்டுமே மரியாள் காணிக்கையாகக் கொடுத்திருப்பாரா?—1/1, பக்கம் 31.
• தங்களுடைய வாழ்க்கையை வளமாக்க பலர் என்ன செய்கிறார்கள்?
‘என்னுடைய சூழ்நிலையில் சில மாற்றங்கள் செய்து வாழ்க்கையை எளிமையாக்க முடியுமா?’ என்று ஒருவர் கேட்கலாம். ஏமி அதைத்தான் செய்தார். அவரிடம் நிறைய பணம் இருந்தது; ஆனால், சந்தோஷம் இல்லை. உலகப்பிரகாரமான வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்தபோது தான் விசுவாசத்தைவிட்டு கிட்டத்தட்ட வழுவியேவிட்டதை உணர்ந்தார். எனவே, ராஜ்யம் சம்பந்தமான காரியங்களுக்கு முதலிடம் கொடுக்கத் தீர்மானித்தார். அதன்மூலம் அவரால் சில காலத்திற்கு பயனியராகச் சேவை செய்ய முடிந்தது. “இப்போது எனக்குத் திருப்தி கிடைத்திருக்கிறது. இந்த உலகத்திற்காக ஓடாய் உழைத்தபோது கிடைக்காத இந்த உணர்வு இப்போது எனக்குக் கிடைக்கிறது” என்று ஏமி சொல்கிறார்.—1/15, பக்கம் 19.
• சில தாய்மார்கள் திருப்தி காண எது உதவியிருக்கிறது?
நிறைய தாய்மார்கள் வெளியில் சென்று வேலை பார்க்கிறார்கள். வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சிலர் வேலைக்குப் போகிறார்கள், மற்றவர்கள் தங்கள் இஷ்டப்படி செலவு செய்வதற்கோ சொகுசாக வாழ்வதற்கோ வேலைக்குப் போகிறார்கள். இன்னும் சிலர் வேலையில் இன்பம் காண்பதால் அவ்வாறு செல்கிறார்கள். கிறிஸ்தவ தாய்மார்களுக்கு வீட்டில் முக்கியமான பங்கு இருக்கிறது, விசேஷமாக பிள்ளை குழந்தைப் பருவத்தில் இருக்கும்போது. குடும்பத்தை நன்றாகக் கவனித்துக் கொள்வதற்காக சிலர் பகுதிநேர வேலையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் அல்லது வேலையை விட்டிருக்கிறார்கள். அதனால் அவர்கள் அதிக திருப்தியடைகிறார்கள்.—4/1, பக்கங்கள் 28-31.
• மத்தேயு 24:34-ல், “சந்ததி” என்று இயேசு யாரைக் குறித்துப் பேசினார்?
தம்முடைய காலத்தில் வாழ்ந்த பொல்லாத மக்களைப்பற்றி பேசுகையில் அல்லது பொல்லாத மக்களிடம் பேசிக்கொண்டிருக்கையில் “சந்ததி” என்ற வார்த்தையை இயேசு எதிர்மறையான அர்த்தத்தில் பயன்படுத்தியது என்னவோ உண்மைதான். ஆனால், இந்த விஷயத்தில் அப்படியல்ல; ஏனென்றால் சீக்கிரத்தில் பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்படவிருந்த தம்முடைய சீஷர்களிடம் அப்போது அவர் பேசிக்கொண்டிருந்தார். மத்தேயு 24:32, 33-ல் பதிவாகியுள்ளதை மிகச் சிறந்த விதத்தில் புரிந்துகொள்ளும் நிலையில் இருந்தவர்கள் அவர்கள்தான். இதிலிருந்து, முதல் நூற்றாண்டிலும் நவீன நாட்களிலும் உள்ள அபிஷேகம் செய்யப்பட்ட தம்முடைய சீஷர்களையே இயேசு குறிப்பிட்டார் என்ற முடிவுக்கு நாம் வரலாம்.—2/15, பக்கங்கள் 23-4.
• யாக்கோபு 3:17 சொல்லுகிறபடி நாம் என்ன குணங்களை வெளிக்காட்ட வேண்டும்?
கற்புடன் இருப்பதற்கு, அசுத்தமான காரியங்களை உடனடியாக ஒதுக்கித்தள்ளுவது அவசியம். (ஆதி. 39:7-9) நாம் சமாதானமுள்ளவர்களாயும் இருக்க வேண்டும். தொட்டதற்கெல்லாம் சண்டை போடுகிறவர்களாக அல்லது சமாதானத்தைக் குலைத்துப்போடும் காரியங்களைச் செய்கிறவர்களாக இருக்கக்கூடாது. நாம் ஒவ்வொருவரும் பின்வரும் கேள்விகளைக் கேட்டுக்கொள்வது நல்லது: சபையில் சமாதானத்தைக் காத்துக்கொள்கிறவர் என்று பேரெடுத்திருக்கிறேனா அல்லது சமாதானத்தைக் குலைத்துப்போடுகிறவர் என்று பேரெடுத்திருக்கிறேனா? மற்றவர்களுக்கும் எனக்கும் இடையே அடிக்கடி மனஸ்தாபங்கள் ஏற்படுகின்றனவா? நான் எளிதில் புண்பட்டுவிடுகிறேனா அல்லது மற்றவர்களைப் புண்படுத்துகிறேனா? ‘இதுதான் என் குணம், இதைப் புரிந்துகொண்டு மற்றவர்கள் என்னிடம் நடந்துகொள்ளட்டும்’ என்று நினைக்காமல் மன்னிக்கத் தயாராக இருக்கிறேனா?—3/15, பக்கங்கள் 24-5.