சந்தோஷத்துடன் செய்யுங்கள்
1 நோவாவின் காலத்தில் நடந்ததைப் போலவே, தம்முடைய பிரசன்னத்தின்போதும் அநேகர் ‘உணராதிருப்பார்கள்’ என இயேசு சொன்னார். (மத். 24:37-39) எனவே ராஜ்ய நற்செய்திக்கு அநேகர் செவிகொடுக்க மாட்டார்கள் என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இப்படியிருக்க மகிழ்ச்சியை இழந்துவிடாமல் ஊழியத்தைத் தொடர நமக்கு எது உதவும்?—சங். 100:2.
2 நாம் மனதில் கொள்ள வேண்டிய முதல் குறிப்பு, பிரசங்கிப்பதற்கான கட்டளையும், நாம் சொல்லும் செய்தியும் கடவுளிடமிருந்தே வந்திருக்கின்றன. அதனால் நாம் ஊழியத்தில் கடினமாக உழைத்தும் சரியான பலன் கிடைக்கவில்லை என்றால் மக்கள் யெகோவாவை மறுப்பதாகத்தான் அர்த்தம். கடவுளின் வார்த்தையின்படி நடப்போராக நாம் உண்மையுடன் பிரசங்கித்தால் அவருடைய அங்கீகாரம் எப்போதும் நமக்கு இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்வது நம் சந்தோஷத்தையும் ஆனந்தத்தையும் தொடர்ந்து காத்துக்கொள்ள உதவும்.—யாக். 1:25.
3 இரண்டாவது குறிப்பு, இரட்சிப்பிற்குரிய யெகோவாவின் வழியை ஏற்றுக்கொள்வோர் இன்னமும் இருக்கிறார்கள். பெரும்பாலானோர் அசட்டையாக இருந்தாலும், கடைசி நாட்களின் இந்த இறுதிக் கட்டத்தில் இன்னும் கூட்டிச் சேர்க்கப்படுவதற்கு செம்மறியாடு போன்றவர்கள் இருக்கிறார்கள். அதனால், நாம் தொடர்ந்து பிரசங்கிக்க வேண்டும். அவ்வாறு நாம் “எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது” பிரசங்கிக்கும்போது, அங்கே “பாத்திரமானவன் யாரென்று விசாரித்து” அறிய வேண்டும், அதாவது தேட வேண்டும்.—மத். 10:11-13.
4 நம்பிக்கையான மனநிலை கொண்டிருங்கள்: பொய் மதம் ஏற்படுத்தியிருக்கும் மோசமான பதிவு சிலருக்கு ஏமாற்றமளித்திருக்கிறது. மற்ற அநேகர் இன்றைய உலக விவகாரங்களால் “தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய்” இருக்கிறார்கள். (மத். 9:36) மற்ற சிலர் வேலையில்லா திண்டாட்டம், வியாதி, பாதுகாப்பின்மை போன்ற பிரச்சினைகளால் நொந்து போயிருக்கின்றனர். இந்நிலையை புரிந்துகொள்வது நாம் இந்த வேலையில் தொடர்ந்திருக்க நமக்கு உதவும். நம்முடைய பிராந்தியத்திலுள்ள மக்களின் அக்கறைக்குரிய முக்கியமான விஷயங்களைக் குறித்து சம்பாஷணையை துவங்க முயற்சிக்கலாம். இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கெல்லாம் கடவுளுடைய ராஜ்யமே பரிகாரம் என்பதை அவர்கள் அறிந்துகொள்ள உதவுங்கள். நாம் சொல்லும் நற்செய்தி அவர்களுடைய இருதயத்தை சென்றெட்டுவதற்கு, வேதவசனங்களையும் பிரசுரங்களிலுள்ள முக்கிய குறிப்புகளையும் பயன்படுத்துங்கள்.—எபி. 4:12.
5 ‘கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே நம்முடைய பெலன்’ என்பதை சந்தோஷத்துடன் கடவுளுடைய வார்த்தையின்படி நடப்போர் ஒருபோதும் மறப்பதில்லை. (நெ. 8:10) இந்த வேலையில் நம் சந்தோஷத்தை இழப்பதற்கு எந்த காரணமும் இல்லை. “அந்த வீடு பாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; அபாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பக்கடவது.” (மத். 10:13) யெகோவாவின் பரிசுத்த சேவையில் நாம் பொறுமையாக சகித்திருந்தால் அவர் தொடர்ந்து நம்மை பலப்படுத்தி நம் சந்தோஷத்தை கூட்டுவார். நம் உத்தமத் தன்மையையும் ஆசீர்வதிப்பார்.