‘விசுவாசத்தில் பலப்பட’ உதவுங்கள்
ஒவ்வொரு வருடமும் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமானோர் ஞானஸ்நானம் பெறுகிறார்கள். கூட்டிச் சேர்க்கும் வேலையை யெகோவா எந்தளவு ஆசீர்வதிக்கிறார் என்பதைப் பார்க்கும்போது நம் உள்ளம் பூரிக்கிறது. (உபா. 28:2) பொதுவாக ஒரு பிரஸ்தாபி, பைபிள் மாணாக்கர் ஞானஸ்நானம் பெற்றதுமே, அவருக்குப் படிப்பை நிறுத்திவிட்டு மற்றவர்களுக்குப் படிப்பு நடத்துவதில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுவார். அந்த மாணாக்கரும் தன் படிப்பை நிறுத்திவிட்டு ஊழியத்திற்கு அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுகிறார். ஆனால், பைபிள் மாணாக்கர்கள் சத்தியத்தில் நன்கு உறுதிப்பட்டவர்களாக இருப்பது அவசியம். கிறிஸ்துவில் “வேரூன்றியவர்களாகவும் . . . விசுவாசத்தில் பலப்படுகிறவர்களாகவும்” இருப்பது அவசியம். (கொலோ. 2:6, 7; 2 தீ. 3:12) எனவே, ஒரு மாணாக்கர் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தையும், ‘கடவுளது அன்பு’ புத்தகத்தையும் முடிப்பதற்கு முன்னரே ஞானஸ்நானம் பெற்றுவிட்டால், அவ்விரண்டு புத்தகங்களையுமே முடிக்கும்வரை படிப்பைத் தொடர வேண்டும்.—ஏப்ரல் 2011 நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 2-ஐப் பாருங்கள்.