கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
கடவுளுடைய வார்த்தையை எந்தளவு மதிக்கிறீர்கள்?
யெகோவா தேவனின் வார்த்தைகளும் எண்ணங்களும் பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பரிசுத்தமான இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் அவர்தான். (2பே 1:20, 21) ஆட்சி செய்ய அவருக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது என்பதை அவருடைய அரசாங்கம் நிரூபிக்கும் என்று பைபிள் தெளிவாகச் சொல்கிறது. அதுமட்டுமல்ல, அந்த அரசாங்கத்தின் மூலமாக சீக்கிரத்தில் மனிதர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் தருகிறது. நம்முடைய பரலோகத் தகப்பனான யெகோவாவுக்கு இருக்கிற அருமையான குணங்களையும் பைபிள் நமக்குக் காட்டுகிறது.—சங் 86:15.
யெகோவாவின் வார்த்தை, விலைமதிப்புள்ள ஒரு பொக்கிஷம். நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களுக்காக அதை மதிக்கிறோம். ஆனாலும், அதைத் தினமும் படித்து, அதன்படி நடப்பதன் மூலம் அதை மதிக்கிறோம் என்பதைக் காட்டுகிறோமா? “உங்களுடைய சட்டத்தை எவ்வளவாய் நேசிக்கிறேன்!” என்று சங்கீதப் புத்தகத்தை எழுதிய ஒருவர் சொன்னார். (சங் 119:97) நாமும் அப்படித்தான் நினைக்கிறோம் என்பதை நம்முடைய செயல்கள் காட்ட வேண்டும்.
பைபிளை அவர்கள் மதித்தார்கள்—ஒரு பகுதி (வில்லியம் டின்டேல்) என்ற வீடியோவைப் பார்த்த பிறகு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
வில்லியம் டின்டேல் ஏன் பைபிளின் சில பகுதிகளை மொழிபெயர்த்தார்?
பைபிளை மொழிபெயர்க்க அவர் எடுத்த முயற்சிகளை ஏன் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது?
டின்டேல் பைபிளின் பிரதிகள் எப்படி இங்கிலாந்துக்குக் கடத்தப்பட்டன?
கடவுளுடைய வார்த்தையை மதிக்கிறோம் என்பதை நாம் ஒவ்வொருவரும் எப்படிக் காட்டலாம்?