உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 5 பேச்சுத்தொடர்பு
    விழித்தெழு!—2018 | எண் 2
    • தங்கள் மகளிடம் நெருங்கிப் போவதற்காக ஒரு அப்பா-அம்மா பாலத்தைக் கடக்கிறார்கள்

      உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் இணைக்கும் பாலம்தான் பேச்சுத்தொடர்பு

      பெற்றோர்களுக்கு

      5 பேச்சுத்தொடர்பு

      இதன் அர்த்தம் என்ன?

      நீங்களும் உங்கள் பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் உங்கள் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பகிர்ந்துகொள்வதுதான் உண்மையான பேச்சுத்தொடர்பு.

      இது ஏன் முக்கியம்?

      டீனேஜ் பிள்ளைகளிடம் பேச்சுத்தொடர்பு வைத்துக்கொள்வது ரொம்பவே சவாலாக இருக்கலாம். ஏனென்றால், சிறு வயதில் உங்கள் பிள்ளைகள் மனதில் இருப்பதையெல்லாம் உங்களிடம் சொல்லியிருக்கலாம். ஆனால், டீனேஜ் வயதை எட்டிய பிறகு உங்களிடம் அவ்வளவாகப் பேசாமல் இருக்கலாம். அதனால், என்ன யோசிக்கிறார்கள், எப்படி உணருகிறார்கள் என்பதே உங்களுக்குத் தெரியாமல் போய்விடலாம். அவர்களுக்குப் பேச விருப்பமில்லாததுபோல் தெரிந்தாலும், இந்த டீனேஜ் வயதில்தான் நீங்கள் அவர்களோடு அதிகமாகப் பேச வேண்டும்.

      நீங்கள் என்ன செய்யலாம்?

      உங்கள் பிள்ளை பேச விரும்பும் சமயத்தில் பேசுங்கள். இரவு ரொம்ப நேரம் ஆகிவிட்டாலும் பேசுங்கள்.

      “‘காலைலயிருந்து உன்கூடதான இருந்தேன்! இப்போதான் உனக்கு பேசணுமா?’னு நீங்க உங்க பிள்ளைகிட்ட சொல்ல தோணலாம். ஆனா பிள்ளைங்க, மனசு திறந்து பேச வர்றப்போ அப்படி சொன்னா நல்லாவா இருக்கும்? எல்லா அப்பா அம்மாவும் பிள்ளைங்க பேசணும்னுதான ஏங்குறாங்க?”—லீசா.

      “நான் சீக்கிரமா தூங்கணும்னுதான் நினைப்பேன், ஆனா என் டீனேஜ் பிள்ளைங்ககிட்ட நான் சுவாரஸ்யமா பேசுனதெல்லாம் நடுராத்திரிக்கு அப்புறம்தான்.”—ஹெர்பெர்ட்.

      பைபிள் நியமம்: “ஒவ்வொருவனும் தனக்குப் பிரயோஜனமானதைத் தேடாமல், மற்றவர்களுக்குப் பிரயோஜனமானதையே தேட வேண்டும்.”—1 கொரிந்தியர் 10:24.

      கவனச்சிதறல்களைத் தவிர்த்திடுங்கள். “என்னோட பிள்ளைங்க என்கிட்ட பேசும்போது சிலசமயம் என் மனசுல வேற ஏதேதோ ஓடிகிட்டு இருக்கும். ஆனா, அவங்க அதை கண்டுபிடிச்சிடுவாங்க; அவங்கள ஏமாத்திட முடியாது!”

      உங்கள் விஷயத்திலும் இது உண்மையென்றால், உங்கள் பிள்ளை பேச வரும்போது டிவியை அணைத்துவிடுங்கள், ஃபோனை ஒரு பக்கமாக வைத்துவிடுங்கள். உங்கள் பிள்ளை சொல்வதை நன்றாகக் கவனியுங்கள்; அவன்/ள் உப்புச்சப்பில்லாத விஷயங்களைப் பேசுவதுபோல் தெரிந்தாலும், அவன்/ள் சொல்கிற விஷயம் ரொம்பவே முக்கியம் என்பதுபோல் காதுகொடுத்துக் கேளுங்கள்.

      “பிள்ளைங்களோட உணர்ச்சிகள நீங்க முக்கியமானதா நினைக்குறீங்கனு அவங்க புரிஞ்சுக்கணும். அப்படி புரிஞ்சுக்கலன்னா, அவங்க உங்ககிட்ட எதையும் சொல்ல மாட்டாங்க, எல்லாத்தையும் அவங்க மனசுக்குள்ளயே புதைச்சு வைச்சிருவாங்க. இல்லன்னா, அவங்க மனசுல இருக்குறத வேற யார்கிட்டயாவதுதான் சொல்வாங்க.”—மரான்டா.

      “உங்க பிள்ளை யோசிக்குற விதம் தப்பா இருந்துச்சுனா, ரொம்ப உணர்ச்சிவசப்படாதீங்க.”—ஆன்தனி.

      பைபிள் நியமம்: “நீங்கள் கேட்கிற விதத்துக்குக் கவனம் செலுத்துங்கள்.”—லூக்கா 8:18.

      பேசுவதற்கான சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். சிலசமயங்களில் பிள்ளைகள், பெற்றோர்களுடைய முகத்தைப் பார்த்து உட்கார்ந்திருக்கும்போது, பேசத் தயங்குவார்கள்.

      “நாங்க கார்ல போற சந்தர்ப்பங்கள பயன்படுத்திக்குவோம். கார்ல நேருக்கு நேர் உட்காராம பக்கத்து பக்கத்துல உட்கார்ரதுனால, எங்களால நிறைய பேச முடிஞ்சிருக்கு.”—நிக்கோல்.

      ஒன்றாகச் சேர்ந்து சாப்பிடும் நேரங்களைப் பேசுவதற்கான சந்தர்ப்பங்களாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

      “ராத்திரி சாப்பாட்டு நேரத்துல, அன்னைக்கு நாள் முழுசும் நடந்த நல்லது, கெட்டத பேசுவோம். இப்படி செய்றதுனால, எங்களால ஒற்றுமையா இருக்க முடியுது, பிரச்சனைகள தனியா சமாளிக்க வேண்டியதில்லங்கறத புரிஞ்சுக்கவும் முடியுது.”—ராபின்.

      பைபிள் நியமம்: “நன்றாகக் காதுகொடுத்துக் கேட்கிறவர்களாகவும், யோசித்து நிதானமாகப் பேசுகிறவர்களாகவும் இருக்க வேண்டும்.”—யாக்கோபு 1:19.

  • 6 கண்டிப்பு
    விழித்தெழு!—2018 | எண் 2
    • சுக்கானால் செலுத்தப்படும் படகில் ஒரு குடும்பத்தார் பயணம் செய்கிறார்கள்

      படகு திசைமாறாமல் சரியான வழியில் போக சுக்கான் எப்படி உதவுகிறதோ அப்படியே ஒரு பிள்ளை நல்ல வழியில் போவதற்குக் கண்டிப்பு உதவுகிறது

      பெற்றோர்களுக்கு

      6 கண்டிப்பு

      இதன் அர்த்தம் என்ன?

      கண்டிப்பு என்ற வார்த்தை வழிநடத்துவதை அல்லது சொல்லிக்கொடுப்பதை அர்த்தப்படுத்துகிறது. சில சமயங்களில், தவறு செய்த பிள்ளையைத் திருத்துவதைக்கூட அர்த்தப்படுத்துகிறது. ஆனால் பெரும்பாலும், பிள்ளைக்கு ஒழுக்கநெறிகளைச் சொல்லித்தருவதை இது குறிக்கிறது; இதனால், பிள்ளைகள் ஆரம்பக் கட்டத்திலேயே நல்ல தீர்மானங்களை எடுக்கக் கற்றுக்கொள்வார்கள்.

      இது ஏன் முக்கியம்?

      கடந்த சில வருஷங்களாக, சில குடும்பங்களில் கண்டிப்பு என்ற ஒன்று இல்லாமலேயே போய்விட்டது; கண்டித்தால், பிள்ளைகளுக்குத் தன்மானம் குறைந்துவிடும் என்று பெற்றோர்கள் பயப்படுவதுதான் அதற்குக் காரணம். ஆனால், ஞானமுள்ள பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு நியாயமான சில சட்டங்களைக் கொடுத்து, அவற்றுக்குக் கீழ்ப்படிய பயிற்சியும் கொடுக்கிறார்கள்.

      “பிள்ளைங்க பொறுப்புள்ளவங்களா வளரணும்னா இப்பவே அவங்களுக்கு சில கட்டுப்பாடுகள வைக்குறது முக்கியம். கட்டுப்பாடு இல்லாத பிள்ளைங்க சுக்கான் இல்லாத கப்பல் மாதிரி கொஞ்சம் கொஞ்சமா திசைமாறிபோயிடுவாங்க, இல்லன்னா அப்படியே கவிழ்ந்துடுவாங்க.”—பாமலா.

      நீங்கள் என்ன செய்யலாம்?

      சொன்னபடி நடந்துகொள்ளுங்கள். நீங்கள் வைத்திருக்கும் கட்டுப்பாடுகளுக்கு உங்கள் பிள்ளை கீழ்ப்படியவில்லை என்றால், நீங்கள் கொடுப்பதாகச் சொன்ன தண்டனையைக் கொடுக்காமல் இருந்துவிடாதீர்கள். அதேசமயத்தில், கீழ்ப்படியும்போது தாராளமாகப் பாராட்டுங்கள்.

      “கீழ்ப்படிதல்ங்கறது அபூர்வமா இருக்குற இந்த உலகத்துல, என் பிள்ளைங்க கீழ்ப்படியும்போது அவங்கள தாராளமா பாராட்டுவேன். இப்படி பாராட்டுறதுனால, கண்டிப்பு கொடுக்கும்போது அதை அவங்களால ஏத்துக்க முடியுது.”—க்ரிஸ்டீன்.

      பைபிள் நியமம்: “ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்வான்.”—கலாத்தியர் 6:7.

      நியாயமானவர்களாக இருங்கள். கண்டிப்பு கொடுக்கும்போது, பிள்ளையின் வயது, திறன், அவன்/ள் செய்தது சின்ன தவறா, பெரிய தவறா என்பதையெல்லாம் யோசித்து அதற்கேற்ப கண்டியுங்கள். செய்த தப்புக்கு ஏற்ற தண்டனையைக் கொடுப்பது பொதுவாக நல்ல பலன்களைத் தரும். உதாரணத்துக்கு, ஃபோனைப் பயன்படுத்தும் விஷயத்தில் அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்படியவில்லை என்றால், அதை அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ளலாம் அல்லது அதைப் பயன்படுத்துவதில் சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம். ஆனால், உங்களுக்கு எரிச்சலாக இருக்கிறது என்பதற்காக, சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்படாதீர்கள்.

      “என் பையன் வேணும்னே கீழ்ப்படியலயா, இல்லன்னா, தெரியாம தப்பு செஞ்சுட்டானானு கண்டுபிடிக்க முயற்சி செய்வேன். ஏன்னா, வேரோட பிடுங்கி எறிய வேண்டிய ஒரு கெட்ட குணத்துக்கும், வெறுமனே சொல்லித் திருத்த வேண்டிய ஒரு தப்புக்கும் வித்தியாசம் இருக்கு.”—வென்டெல்.

      பைபிள் நியமம்: “உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் உண்டாக்காதீர்கள்; அவர்கள் சோர்ந்துபோவார்கள்.”—கொலோசெயர் 3:21.

      அன்பாக நடந்துகொள்ளுங்கள். பெற்றோர்களுக்குத் தங்கள்மேல் அன்பு இருப்பதால்தான் கண்டிக்கிறார்கள் என்பதைப் பிள்ளைகள் புரிந்துகொள்ளும்போது, கண்டிப்பைச் சுலபமாக ஏற்றுக்கொண்டு தங்களைத் திருத்திக்கொள்வார்கள்.

      “எங்க பையன் ஏதாவது தப்பு செய்யும்போது, இதுக்கு முன்னாடி அவன் எடுத்த நல்ல தீர்மானங்களுக்காக நாங்க எவ்ளோ சந்தோஷப்பட்டோங்கறத அவனுக்கு ஞாபகப்படுத்துவோம். செஞ்ச தப்ப திருத்திக்கிட்டா அவனோட பேர் கெட்டுப்போகாதுங்கறதையும், உதவி செய்றதுக்கு நாங்க தயாரா இருக்கோங்கறதையும் அவனுக்கு புரிய வைப்போம்.”—டேனியல்.

      பைபிள் நியமம்: “அன்பு பொறுமையும் கருணையும் உள்ளது.”—1 கொரிந்தியர் 13:4.

  • 7 ஒழுக்கநெறிகள்
    விழித்தெழு!—2018 | எண் 2
    • சரியான வழியில் போக அப்பாவும் பையனும் திசைகாட்டியைப் பயன்படுத்துகிறார்கள்

      ஒழுக்கநெறிகள், நம்பகமான திசைகாட்டிபோல் இருக்கின்றன; சரியான வழியைத் தெரிந்துகொள்ள அவை உங்கள் பிள்ளைகளுக்கு உதவும்

      பெற்றோர்களுக்கு

      7 ஒழுக்கநெறிகள்

      இதன் அர்த்தம் என்ன?

      ஒழுக்கநெறிகள் என்பது வாழ்க்கையில் நீங்கள் கடைப்பிடிக்க விரும்புகிற சில தராதரங்களைக் குறிக்கின்றன. உதாரணத்துக்கு, ஒரு பெற்றோராக எல்லா விஷயங்களிலும் நேர்மையாக இருக்க முயற்சி செய்கிறீர்களா? அப்படியென்றால், இதே ஒழுக்கநெறியை உங்கள் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுக்க நினைப்பீர்கள்.

      ஒழுக்கநெறிகள் நல்ல பழக்கங்களையும் குறிக்கிறது. உதாரணத்துக்கு, நல்ல பழக்கங்கள் இருக்கும் ஒருவர் சுறுசுறுப்பானவராக, நியாயமானவராக, மற்றவர்கள்மேல் அக்கறையுள்ளவராக இருப்பார். இந்த நல்ல குணங்களை அவர் சிறு வயதிலிருந்தே வளர்த்திருப்பார்.

      பைபிள் நியமம்: “நடக்க வேண்டிய வழியில் நடக்க பிள்ளையைப் பழக்கு. வயதானாலும் அவன் அதைவிட்டு விலக மாட்டான்.”—நீதிமொழிகள் 22:6.

      இது ஏன் முக்கியம்?

      இந்தத் தொழில்நுட்ப யுகத்தில், ஒழுக்கநெறிகள் ரொம்பவே அவசியம். “எந்த நேரத்துலயும் செல்ஃபோன்ல கெட்ட விஷயங்கள பார்க்க முடியும் . . . நம்ம பிள்ளைங்க நம்ம பக்கத்துலயே உட்கார்ந்துகிட்டுகூட அசிங்கமான படங்கள பார்க்க முடியும்!” என்று அம்மாவாக இருக்கும் கேரன் சொல்கிறார்.

      பைபிள் நியமம்: ‘முதிர்ச்சியுள்ளவர்கள், சரி எது, தவறு எது என்பதைப் பிரித்துப் பார்க்க தங்களுடைய பகுத்தறியும் திறன்களைப் பயிற்றுவிக்கிறார்கள்.’—எபிரெயர் 5:14.

      நல்ல பழக்கங்களும் அவசியம். ‘நன்றி,’ ‘தயவுசெய்து’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதும், மற்றவர்களிடம் கரிசனையாக நடந்துகொள்வதும் இதில் அடங்கும். இன்று, இதுபோன்ற நல்ல பழக்கங்களைப் பார்ப்பதே அபூர்வமாக இருக்கிறது; ஏனென்றால், ஜனங்களை அல்ல, எலக்ட்ரானிக் கருவிகளையே மக்கள் அதிகமாக நேசிக்கிறார்கள்.

      பைபிள் நியமம்: “மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.”—லூக்கா 6:31.

      நீங்கள் என்ன செய்யலாம்?

      உங்கள் ஒழுக்கநெறிகளை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். உதாரணமாக, கல்யாணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்வது தவறு என்று பெற்றோர்களால் கற்பிக்கப்படும் டீனேஜ் பிள்ளைகள் அப்படிப்பட்ட செயலில் ஈடுபடுவதில்லை என்பதை ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.

      டிப்ஸ்: சமீப செய்தி ஒன்றைச் சொல்லி, ஒழுக்கநெறிகளைப் பற்றிப் பேச ஆரம்பியுங்கள். உதாரணத்துக்கு, ஒரு படுகொலையைப் பற்றிய செய்தி வெளிவந்திருந்தால், நீங்கள் இப்படிப் பேச ஆரம்பிக்கலாம்: “சிலர் இந்த மாதிரி கோபத்த காட்டுறது குலைநடுங்க வைக்குதில்ல? அவங்க இவ்ளோ கோபக்காரங்களா ஆகுறதுக்கு என்ன காரணம்னு நினைக்குற?”

      “நல்லது எது கெட்டது எதுன்னு பிள்ளைங்களுக்கு தெரியலன்னா, நல்லத செய்யறதா, கெட்டத செய்யறதான்னு அவங்களால தீர்மானிக்க முடியாம போயிடும்.”—ப்ரான்டன்.

      நல்ல பழக்கங்களைச் சொல்லிக்கொடுங்கள். “தயவுசெய்து,” “நன்றி” போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்கும், மற்றவர்களை மதிப்பதற்கும் சின்னப் பிள்ளைகளால்கூட கற்றுக்கொள்ள முடியும். “பிள்ளைகள் தங்களைத் தனி நபர்களாகப் பார்க்காமல், ஒரு குடும்பத்தின் பாகமாக, ஒரு பள்ளியின் பாகமாக அல்லது ஒரு சமுதாயத்தின் பாகமாகப் பார்க்கக் கற்றுக்கொள்ளும்போது, அவர்கள் மற்றவர்களிடம் கரிசனையோடு நடந்துகொள்வார்கள்; தங்களுக்குப் பிரயோஜனமான விஷயங்களை மட்டுமே செய்யாமல் மற்றவர்களுக்குப் பிரயோஜனமான விஷயங்களைச் செய்யப் பழகிக்கொள்வார்கள்” என்று பேரென்டிங் வித்தவுட் பார்டர்ஸ் என்ற புத்தகம் சொல்கிறது.

      டிப்ஸ்: வீட்டு வேலைகளைச் செய்யச் சொல்லி பிள்ளைகளிடம் சொல்லுங்கள்; இதன் மூலம், மற்றவர்களுக்கு உதவி செய்ய அவர்கள் பழகிக்கொள்வார்கள்.

      “பிள்ளைங்க வீட்டு வேலைகள செய்ய இப்போவே கத்துக்கிட்டா, சொந்தக் கால்ல நிக்க ஆரம்பிக்கும்போது அதயெல்லாம் செய்றதுக்கு கஷ்டப்பட மாட்டாங்க. பொறுப்புகள நிறைவேத்துறதுக்கு பழகியிருப்பாங்க.”—டேரா.

  • 8 முன்மாதிரி
    விழித்தெழு!—2018 | எண் 2
    • பனியில் பதிந்துள்ள தன் அப்பாவின் அடிச்சுவடுகளில் ஒரு சிறுமி கால் வைத்து நடக்கிறாள்

      உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் எந்த மாதிரியான அடிச்சுவடுகளை விட்டுச்செல்கிறீர்கள்?

      பெற்றோர்களுக்கு

      8 முன்மாதிரி

      இதன் அர்த்தம் என்ன?

      முன்மாதிரியான பெற்றோர்கள், தாங்கள் என்ன சொல்லிக்கொடுக்கிறார்களோ அதற்கேற்றபடி வாழ்வார்கள். உதாரணமாக, உங்களைப் பார்க்க வருகிற ஒருவரோடு உங்களுக்குப் பேசப் பிடிக்காதபோது, “நான் வீட்டுல இல்லன்னு சொல்லு” என்று நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் சொல்வதை உங்கள் பிள்ளைகள் பார்க்கிறார்கள் என்றால், அவர்கள் நேர்மையானவர்களாக வளருவார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது.

      “‘நான் சொல்றத செய், நான் செய்றத செய்யாத’னு சில பேர் சொல்றத நாம கேட்டிருப்போம். ஆனா, பிள்ளைங்க விஷயத்துல இது சரிபட்டு வராது. பிள்ளைங்க ஸ்பாஞ்சு மாதிரி; நாம செய்றது... சொல்றது... எல்லாத்தையும் டக்குனு பிடிச்சுக்குவாங்க. நாம சொன்னத செய்யலன்னா, என்னைக்காவது ஒருநாள் அதை அவங்க குத்திக் காட்டுவாங்க.”—டேவிட்.

      பைபிள் நியமம்: “‘திருடாதே’ என்று பிரசங்கிக்கிற நீங்களே திருடலாமா?”—ரோமர் 2:21.

      இது ஏன் முக்கியம்?

      பிள்ளைகள், முக்கியமாக டீனேஜர்கள், நண்பர்களையும் மற்றவர்களையும் முன்மாதிரிகளாகப் பார்ப்பதைவிட பெற்றோர்களைத்தான் முன்மாதிரிகளாகப் பார்க்கிறார்கள். அப்படியென்றால், உங்கள் பிள்ளைகளுக்குச் சரியான வழியைக் காட்டுகிற பெரிய பொறுப்பு உங்களுக்குத்தான் இருக்கிறது; ஆனால் அதற்கு, நீங்கள் சொன்னதைச் செய்கிறவர்களாக இருக்க வேண்டும்.

      “ஒரு விஷயத்த நூறு தடவை சொல்லியும் உங்க பிள்ளை அத காதுல வாங்காத மாதிரி தெரியலாம்; ஆனா, அந்த விஷயத்த நாம ஒரு தடவை செய்யாம போயிட்டாகூட அத அவங்க குத்திக் காட்டுவாங்க. நாம செய்ற எல்லா விஷயங்களையும் பிள்ளைங்க கவனிக்குறது இல்லன்னு நாம நினைக்கலாம்; ஆனா, அவங்க எல்லாத்தையும் கவனிக்குறாங்க.”—நிக்கோல்.

      பைபிள் நியமம்: “பரலோகத்திலிருந்து வருகிற ஞானமோ . . . வெளிவேஷம் போடாததாக இருக்கிறது.”—யாக்கோபு 3:17.

      நீங்கள் என்ன செய்யலாம்?

      உங்கள் தராதரங்களைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். எப்படிப்பட்ட டிவி நிகழ்ச்சிகளையும் சினிமா படங்களையும் நீங்கள் பார்க்கிறீர்கள்? உங்கள் துணையையும் உங்கள் பிள்ளைகளையும் எப்படி நடத்துகிறீர்கள்? எப்படிப்பட்டவர்களோடு நீங்கள் நட்பு வைத்திருக்கிறீர்கள்? மற்றவர்களை மனதில்வைத்து செயல்படுகிறீர்களா? சுருக்கமாகச் சொன்னால், உங்கள் பிள்ளைகள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படிப்பட்டவர்களாக நீங்கள் இருக்கிறீர்களா?

      “நாங்க கடைப்பிடிக்காத ஒண்ண கடைப்பிடிக்கச் சொல்லி நானும் என் கணவரும் எங்க பிள்ளைங்கள வற்புறுத்த மாட்டோம்.”—க்ரிஸ்டீன்.

      தவறு செய்தால் மன்னிப்பு கேளுங்கள். நீங்களும் தவறு செய்கிற இயல்புள்ளவர்கள்தான் என்பது உங்கள் பிள்ளைகளுக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் ஏதாவது தவறு செய்யும்போது, ‘ஸாரி, என்னை மன்னிச்சிடு’ என்று உங்கள் மணத்துணையிடமும் உங்கள் பிள்ளைகளிடமும் சொன்னீர்கள் என்றால், நேர்மையாகவும் மனத்தாழ்மையாகவும் நடப்பதில் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரிகளாக இருப்பீர்கள்.

      “நாம ஏதாவது தப்பு செய்யும்போது, பிள்ளைங்ககிட்ட அதை ஒத்துக்கணும், அவங்ககிட்ட மன்னிப்பு கேக்கணும். இல்லன்னா, அவங்க செய்ற தப்ப நம்மகிட்ட சொல்லாம மறச்சிடுவாங்க.”—ராபின்.

      “எல்லா விஷயத்துலயும் நம்ம பிள்ளைங்க நம்மளத்தான் முன்மாதிரியா பார்ப்பாங்க, நம்மள பார்த்துத்தான் அவங்க கத்துக்குவாங்க. நாம செய்யறது... பேசறது... நடந்துக்குறது... எல்லாத்தையுமே அவங்க பார்க்குறதுனால, நாம வாழ்ற விதம் அவங்களுக்கு நிறைய பாடங்கள சொல்லித்தரும்.”—வென்டெல்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்