பாடம் 37
யெகோவா சாமுவேலிடம் பேசுகிறார்
தலைமைக் குரு ஏலிக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். அவர்களுடைய பெயர் ஓப்னி, பினெகாஸ். அவர்கள் இரண்டு பேரும் வழிபாட்டுக் கூடாரத்தில் குருமார்களாகச் சேவை செய்தார்கள். அவர்கள் யெகோவாவின் சட்டங்களுக்குக் கீழ்ப்படியவில்லை. மக்களிடம் ரொம்ப மோசமாக நடந்துகொண்டார்கள். இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்காகப் பலிகளைக் கொண்டுவரும்போது, நல்ல இறைச்சியை ஓப்னியும் பினெகாசும் எடுத்துக்கொள்வார்கள். அவர்கள் செய்ததை எல்லாம் ஏலி கேள்விப்பட்டார். ஆனால், அவர்களைத் தண்டிக்கவில்லை. யெகோவா இதையெல்லாம் இப்படியே விட்டுவிடுவாரா?
ஓப்னியையும் பினெகாசையும்விட சாமுவேல் ரொம்பச் சின்னப் பையன். ஆனால், அவர்களைப் போல சாமுவேல் நடந்துகொள்ளவில்லை. அதனால், சாமுவேலை யெகோவாவுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ஒருநாள், அவன் தூங்கிக்கொண்டிருந்தபோது, யாரோ அவனைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவது போல் இருந்தது. அவன் எழுந்து, ஏலியிடம் போய், ‘என்னைக் கூப்பிட்டீர்களா?’ என்று கேட்டான். அப்போது ஏலி, ‘நான் உன்னைக் கூப்பிடவில்லை. நீ போய்ப் படுத்துக்கொள்’ என்று சொன்னார். சாமுவேல் போய்ப் படுத்துக்கொண்டான். இன்னொரு தடவையும் இதேபோல் நடந்தது. மூன்றாவது தடவையும் இப்படி நடந்தபோது, யெகோவாதான் அவனைக் கூப்பிடுகிறார் என்று ஏலி புரிந்துகொண்டார். அதனால், அடுத்த தடவை அந்தக் குரல் கேட்டால், ‘யெகோவாவே, சொல்லுங்கள். உங்கள் ஊழியன் கேட்கிறேன்’ என்று சொல்லச் சொன்னார்.
சாமுவேல் போய்ப் படுத்துக்கொண்டான். அப்போது, ‘சாமுவேல், சாமுவேல்!’ என்று குரல் கேட்டது. அதற்கு அவன், ‘சொல்லுங்கள், உங்கள் ஊழியன் கேட்கிறேன்’ என்றான். அப்போது யெகோவா, ‘ஏலியின் மகன்கள் வழிபாட்டுக் கூடாரத்தில் கெட்டக் காரியங்களைச் செய்வது ஏலிக்குத் தெரியும். ஆனாலும், அவன் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கிறான். அதனால், ஏலிக்கும் அவனுடைய குடும்பத்துக்கும் தண்டனை கொடுக்கப்போகிறேன். இதை அவனிடம் சொல்’ என்றார். அடுத்தநாள், வழிபாட்டுக் கூடாரத்தின் கதவுகளை எப்போதும் போல சாமுவேல் திறந்தான். யெகோவா சொன்னதைத் தலைமைக் குருவான ஏலியிடம் சொல்ல சாமுவேலுக்குப் பயமாக இருந்தது. ஆனால், ஏலி அவனைக் கூப்பிட்டு, ‘மகனே, யெகோவா உன்னிடம் என்ன சொன்னார்? எதையும் மறைக்காமல் என்னிடம் சொல்’ என்றார். அதனால், ஏலியிடம் எல்லா விஷயங்களையும் சாமுவேல் சொன்னான்.
சாமுவேல் பெரியவராக வளர்த்தார். யெகோவா எப்போதும் அவர்கூடவே இருந்தார். சாமுவேலைத் தீர்க்கதரிசியாகவும் நியாயாதிபதியாகவும் யெகோவா தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பது இஸ்ரவேல் தேசத்திலிருந்த எல்லா மக்களுக்கும் தெரிந்தது.
“உன்னுடைய மகத்தான படைப்பாளரை இளமைப் பருவத்திலேயே நினை.”—பிரசங்கி 12:1