படிப்பு 46
பழக்கமான சூழ்நிலைகளிலிருந்து உவமைகள்
நீங்கள் பயன்படுத்தும் எந்த உவமைகளும் பேசும் பொருளுக்கு பொருத்தமாக இருப்பது முக்கியம். என்றபோதிலும், அவை திறம்பட்டவையாக இருப்பதற்கு, உங்களுடைய சபையாருக்குப் பொருந்துவதாக இருப்பதும் முக்கியம்.
எத்தகைய கூட்டத்தாரிடம் பேசுகிறீர்கள் என்பது நீங்கள் தேர்ந்தெடுக்கும் உவமைகளை எவ்வாறு பாதிக்கலாம்? இயேசு கிறிஸ்து என்ன செய்தார்? பொது ஜனங்களிடம் பேசினாலும்சரி தமது சீஷர்களிடம் பேசினாலும்சரி, இஸ்ரவேலுக்கு வெளியே இருக்கும் தேசங்களுக்கே உரிய வாழ்க்கை முறைகளிலிருந்து உதாரணங்களை எடுக்கவில்லை. இப்படிப்பட்ட உதாரணங்கள் அவருடைய பேச்சை கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பழக்கமில்லாதவையாக இருந்திருக்கும். உதாரணமாக, எகிப்தின் அரண்மனை வாழ்க்கையைப் பற்றியோ அல்லது இந்தியாவிலுள்ள மதப் பழக்கவழக்கங்களைப் பற்றியோ இயேசு எதுவும் சொல்லவில்லை. என்றாலும், அவருடைய உவமைகள் எல்லா தேசங்களில் வாழும் மக்களுக்கும் பொதுவாக அமைந்திருந்தன. கிழிந்த துணிகளை தைத்தல், வியாபாரம் செய்தல், விலைமதிப்பு வாய்ந்த ஒன்றை இழத்தல், கலியாண விருந்துகளுக்குச் செல்லுதல் ஆகியவற்றைப் பற்றி பேசினார். பல்வேறு சூழ்நிலைகளில் மக்கள் எவ்வாறு பிரதிபலிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு அதை அவர் பயன்படுத்தினார். (மாற். 2:21; லூக். 14:7-11; 15:8, 9; 19:15-23) இயேசு முக்கியமாக இஸ்ரவேலர்களுக்கே பிரசங்கித்ததால், அவர் பயன்படுத்திய உவமைகள் பெரும்பாலும் அவர்களுடைய அன்றாட வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்திருந்த பொருட்களையும் வேலைகளையும் பற்றியதாக இருந்தன. அதனால் விவசாயம், மேய்ப்பனுக்கு செம்மறியாடுகள் பிரதிபலிக்கும் விதம், திராட்ச ரசத்தை தோல் துருத்திகளில் சேமித்து வைப்பது போன்ற விஷயங்களைக் குறிப்பிட்டார். (மாற். 2:22; 4:2-9; யோவா. 10:1-5) பரிச்சயமான வரலாற்று உதாரணங்களையும் சுட்டிக்காட்டினார்—முதல் மானிட ஜோடியின் படைப்பு, நோவாவின் நாளைய ஜலப்பிரளயம், சோதோம் கொமோராவின் அழிவு, லோத்துவுடைய மனைவியின் மரணம் ஆகியவை அவற்றில் சில. (மத். 10:15; 19:4-6; 24:37-39; லூக். 17:32) இது போலவே, உவமைகளைத் தேர்ந்தெடுக்கும்போது நீங்களும் உங்களுடைய சபையாருக்குப் பொதுவாக இருக்கும் வேலைகளையும் அவர்களது கலாச்சார பின்னணியையும் கவனமாக சிந்தித்துப் பார்க்கிறீர்களா?
பெரும் கூட்டத்தாரிடம் அல்ல, ஆனால் ஒரு நபரிடமோ அல்லது சில நபர்களிடமோ நீங்கள் பேசிக்கொண்டிருந்தால் அப்பொழுது என்ன செய்வது? முக்கியமாக அந்தச் சிறிய கூட்டத்தாருக்குப் பொருத்தமான ஓர் உவமையைத் தேர்ந்தெடுக்க முயலுங்கள். சீகாருக்கு அருகிலுள்ள கிணற்றண்டையில் ஒரு சமாரிய பெண்ணிடம் இயேசு சாட்சிகொடுத்தபோது, ‘ஒருக்காலும் தாகமுண்டாகாத’ ‘ஜீவ தண்ணீரைப்’ பற்றியும் ‘நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றை’ பற்றியும் பேசினார்—இவையனைத்தும் அந்தப் பெண்ணுடைய வேலையோடு நேரடியாக சம்பந்தப்பட்ட அணிகள். (யோவா. 4:7-15) மீன் வலைகளை அலசிக் கொண்டிருந்த மனிதர்களிடம் பேசியபோது, அவர் பயன்படுத்திய அணி நடை மீன் பிடிப்பதைப் பற்றியதாக இருந்தது. (லூக். 5:2-11) இரண்டு சந்தர்ப்பத்திலும், வேளாண்மை நடைபெற்ற இடத்தில் வாழ்ந்ததால் அவர் விவசாயத்தைப் பற்றி குறிப்பிட்டிருக்கலாம்; ஆனால் அதைவிட, மனக்கண்ணில் ஒரு காட்சியை உருவாக்குவதற்கு அவர்களுடைய தனிப்பட்ட வேலையை குறிப்பிட்டது எவ்வளவு பலன்தரத்தக்கதாக இருந்தது! இதையே நீங்களும் முயற்சி செய்கிறீர்களா?
‘காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டார்மீது’ இயேசு கவனம் செலுத்தினார், ஆனால் அப்போஸ்தலன் பவுல் இஸ்ரவேலரிடத்திற்கு மட்டுமல்ல புறஜாதியாரிடத்திற்கும் அனுப்பப்பட்டார். (மத். 15:24; அப். 9:15) பவுல் பேசிய விதத்தில் ஏதாவது மாற்றம் இருந்ததா? ஆம், இருந்தது. கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு எழுதியபோது, ஓட்டப்பந்தயங்களையும் விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதை சாப்பிடும் பழக்கத்தையும் வெற்றி பவனிவரும் ஊர்வலங்களையும் அவர் குறிப்பிட்டார்—இவையெல்லாம் அந்தப் புறஜாதியாருக்கு நன்கு பரிச்சயமான விஷயங்கள்.—1 கொ. 8:1-10; 9:24, 25; 2 கொ. 2:14-16.
இயேசுவையும் பவுலையும் போலவே நீங்களும் போதிக்கும்போது உவமைகளையும் உதாரணங்களையும் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துகிறீர்களா? உங்களுக்கு செவிகொடுப்போருடைய பின்னணியையும் அன்றாட வேலைகளையும் சிந்தித்துப் பார்க்கிறீர்களா? முதல் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை உலகத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. டெலிவிஷன் மூலம் உலக செய்திகளைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு அநேகருக்கு இருக்கிறது. இதனால் அயல் நாடுகளிலுள்ள சூழ்நிலைகள் இவர்களுக்கு பழக்கப்பட்டவையாக இருக்கின்றன. நீங்கள் வசிக்கும் பகுதியிலும் நிலைமை அவ்வாறே இருந்தால், உவமைகளுக்காக இப்படிப்பட்ட செய்தித் துணுக்குகளைப் பயன்படுத்துவதில் தவறில்லை. என்றபோதிலும், பொதுவாக மக்களுடைய சொந்த வாழ்க்கையைப் பற்றிய விஷயங்களே—அவர்கள் வீடு, அவர்கள் குடும்பம், அவர்கள் வேலை, அவர்கள் சாப்பிடும் உணவு, அவர்கள் வாழும் இடத்தில் நிலவும் சீதோஷ்ணம் ஆகியவையே—அவர்களுடைய மனதை மிகவும் ஆழமாக தொடும் விஷயங்கள்.
உங்களுடைய உவமைக்கு அதிக விளக்கம் தேவைப்படுமாகில், சபையாருக்குப் பழக்கமில்லாத ஏதோவொன்றை நீங்கள் பேசிக் கொண்டிருப்பீர்கள். இப்படிப்பட்ட உவமை நீங்கள் சொல்லவரும் குறிப்பை எளிதில் மூடிமறைத்துவிடும். இதனால், உங்களுடைய உவமையை ஒருவேளை சபையார் நினைவில் வைத்திருக்கலாம், ஆனால் நீங்கள் சொல்ல முயன்ற வேதப்பூர்வ சத்தியமோ நினைவில் இருக்காது.
சிக்கலான ஒப்புமைகளைக் கொடுப்பதற்குப் பதிலாக, எளிமையான, அன்றாட விஷயங்களையே இயேசு பயன்படுத்தினார். பெரிய பெரிய விஷயங்களை விளக்குவதற்கு சிறு சிறு காரியங்களையும், புரிந்துகொள்ள கடினமான விஷயங்களை விளக்குவதற்கு சுலபமான காரியங்களையும் பயன்படுத்தினார். அன்றாட சம்பவங்களையும் ஆவிக்குரிய சத்தியங்களையும் தொடர்புபடுத்தி காட்டுவதன் மூலம் இயேசு தாம் போதித்த ஆவிக்குரிய சத்தியங்களை சட்டென்று கிரகித்துக்கொள்ளவும் அவற்றை நினைவில் வைத்துக்கொள்ளவும் மக்களுக்கு உதவினார். பின்பற்றுவதற்கு மிகச் சிறந்த முன்மாதிரி!