உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உலகம் கட்டுக்கடங்காமல் போகிறதா?
    விழித்தெழு!—2017 | எண் 6
    • அழிவுநாள் கடிகாரம்

      அட்டைப்படக் கட்டுரை | உலகம் கட்டுக்கடங்காமல் போகிறதா?

      உலகம் கட்டுக்கடங்காமல் போகிறதா?

      2017-ன் ஆரம்பத்தில், விஞ்ஞான உலகம் ஒரு வருத்தமான அறிவிப்பைச் செய்தது. என்றும் இல்லாத அளவுக்கு இந்த உலகம் பேரழிவை நோக்கி போய்க்கொண்டிருப்பதாக விஞ்ஞானிகளின் குழு ஒன்று ஜனவரி மாதத்தில் அறிவித்தது. அழிவு எவ்வளவு பக்கத்தில் இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக, அழிவுநாள் கடிகாரத்தின் நிமிட முள்ளை, அந்தக் குழு 30 வினாடிகள் முன்னுக்குத் தள்ளி வைத்தது. அதனால், இந்தக் கடிகாரம் இப்போது நள்ளிரவு நேரத்திலிருந்து இரண்டரை நிமிடங்கள் பின்னுக்குத் தள்ளி இருக்கிறது. கடந்த 60 வருஷங்களில், உலகத்தின் அழிவு இவ்வளவு பக்கத்தில் இருந்ததே இல்லை!

      2018-லும் இந்த உலகத்தின் அழிவு எவ்வளவு பக்கத்தில் இருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்க்க விஞ்ஞானிகள் மறுபடியும் திட்டமிட்டிருக்கிறார்கள். அப்படியென்றால், வரலாறு காணாத ஓர் அழிவு வரும் என்பதை இந்தக் கடிகாரத்தால் காட்ட முடியுமா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்த உலகம் கட்டுக்கடங்காமல் போகிறதா? இது ஒரு கஷ்டமான கேள்வி என்று நீங்கள் நினைக்கலாம். இதைப் பற்றி வல்லுனர்களுக்கும் வித்தியாசமான கருத்துக்கள் இருக்கின்றன. சொல்லப்போனால், இந்த உலகம் அழியும் என்று எல்லாரும் நம்புவதில்லை.

      ஒளிமயமான எதிர்காலம் வரும் என்பதை லட்சக்கணக்கானோர் நம்புகிறார்கள். மனிதர்கள் என்றென்றும் வாழ்வார்கள் என்றும்... இந்தப் பூமி என்றென்றும் நிலைத்திருக்கும் என்றும்... நம்முடைய வாழ்க்கை தரம் உயரும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல, அதற்கான ஆதாரம் இருப்பதாகவும் சொல்கிறார்கள். இந்த ஆதாரத்தை நம்பலாமா? இந்த உலகம் கட்டுக்கடங்காமல் போகிறதா?

      “அழிவுநாள் கடிகாரம் (The Doomsday Clock) என்பது பல நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் அடையாளப்பூர்வ கடிகாரம். நாம் உருவாக்கிய ஆபத்தான தொழில்நுட்பங்களாலேயே, மனித இனத்தின் அழிவு எவ்வளவு பக்கத்தில் இருக்கிறது என்பதை இந்தக் கடிகாரம் காட்டுகிறது. இந்தத் தொழில்நுட்பங்களில், அணு ஆயுதங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதோடு, வானிலையை மாற்றும் தொழில்நுட்பங்களும், உயிரியல் தொழில்நுட்பங்களும், இன்டர்நெட் தொழில்நுட்பங்களும் பெரியளவில் ஆபத்துகளை ஏற்படுத்துகின்றன. இவை வேண்டுமென்றோ, தவறுதலாகவோ, தெரியாமலோ நம்முடைய வாழ்க்கையையும் இந்தப் பூமியையும் பாதிக்கின்றன. மனிதர்கள் நினைத்தால்கூட இந்தப் பாதிப்புகளைச் சரி செய்யவே முடியாது!”—புல்லட்டின் ஆஃப் தி அட்டாமிக் சயின்டிஸ்ட்ஸ்.

  • பதில்களைத் தேடி...
    விழித்தெழு!—2017 | எண் 6
    • அட்டைப்படக் கட்டுரை | உலகம் கட்டுக்கடங்காமல் போகிறதா?

      பதில்களைத் தேடி...

      கெட்ட செய்திகளைப் பார்க்கும்போதும் கேட்கும்போதும், உங்களுக்கு கவலையாகவோ பயமாகவோ இருக்கலாம். நீங்கள் மட்டுமல்ல மற்றவர்களும் அப்படித்தான் உணருகிறார்கள். 2014-ல் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமா இப்படிச் சொன்னார்: ‘செய்தியில வர்ற கெட்ட விஷயங்கள பார்த்து, இந்த உலகம் கட்டுக்கடங்காம போகுதுனும், அதை யாராலயும் கட்டுப்படுத்த முடியாதுனும் நிறைய பேர் நினைக்குறாங்க.’

      ஆனால், இதைச் சொல்லி முடித்த பிறகு, உலகத்திலுள்ள நிறைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான திட்டங்களைப் பற்றி அவர் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார். அரசாங்கம் எடுத்திருக்கும் சில முயற்சிகள் “நல்ல செய்தியாக” இருக்கிறது என்று சொன்னார். இதைக் குறித்து, தான் “உறுதியாகவும்,” “நம்பிக்கையாகவும்” இருப்பதாக அவர் சொன்னார். அதாவது, மனிதர்களுடைய முயற்சியால் உலகத்திலிருக்கும் மோசமான விஷயங்களைக் கட்டுப்படுத்த முடியும் என்றும், உலக அழிவைத் தடுக்க முடியும் என்றும் அவர் சொன்னார்.

      இவரைப் போலவே நிறைய பேர் நம்பிக்கையாக இருக்கிறார்கள். உதாரணத்துக்கு, சிலர் அறிவியலை நம்பியிருக்கிறார்கள். தொழில்நுட்பங்களின் வளர்ச்சி உலகத்திலுள்ள பிரச்சினைகளுக்கு முடிவு கொண்டுவரும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். புது கண்டுபிடிப்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் நிபுணராக இருக்கும் ஒருவர் எதிர்காலத்தைப் பற்றி இப்படி உறுதியாகச் சொன்னார்: ‘தொழில்நுட்பம் 2030-க்குள்ள ஆயிரம் மடங்கும், 2045-க்குள்ள பல லட்சம் மடங்கும் பலம்படைச்சதா ஆகும். தொழில்நுட்பம் ரொம்ப நல்லா முன்னேறிட்டு வருது. நாம எதிர்ப்படுற எந்தவொரு பிரச்சினையும் அவ்ளோ பெருசா இருந்ததில்ல, சவால்கள சமாளிக்குறது ஒரு பெரிய விஷயமே இல்ல!’

      இந்த உலக நிலைமைகள் எந்தளவு மோசமாக இருக்கின்றன? நாம் உண்மையிலேயே அழிவின் விளிம்பில் இருக்கிறோமா? விஞ்ஞானிகளும் அரசியல்வாதிகளும் மக்களுக்கு நம்பிக்கையான செய்தியைச் சொன்னாலும், எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்று நிறைய பேர் குழம்பிப்போய் இருக்கிறார்கள். ஏன்?

      அணுகுண்டு வெடிப்பு

      ஒட்டுமொத்த அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள். அணு ஆயுதங்களைக் குறைப்பதற்கு ஐக்கிய நாட்டு சங்கமும் மற்ற அமைப்புகளும் நிறைய முயற்சிகள் எடுத்திருந்தாலும், அவர்களால் அவற்றைக் குறைக்க முடியவில்லை. சில தலைவர்கள், ஆயுதங்களைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களைப் பார்த்து கேலி செய்கிறார்கள். அணு ஆயுதங்களைக் குவித்து வைத்திருக்கும் நாடுகள் தங்களுடைய பழைய வெடிகுண்டுகளை மாற்றி அவற்றைப் புதிதாக்குகின்றன. அதோடு, பயங்கரமான நாசத்தை ஏற்படுத்தும் புதுப்புது வெடிகுண்டுகளையும் தயாரிக்கின்றன. ஒரு காலத்தில், ஒட்டுமொத்த அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் சில நாடுகளிடம் இருக்கவில்லை. ஆனால் இப்போது, அந்த நாடுகளால் பல லட்சக்கணக்கான மனிதர்களை அழிக்க முடியும்.

      உலக நாடுகள் இதுவரை இல்லாத அளவுக்கு அணு ஆயுத போருக்குத் தயாராக இருக்கின்றன. அதனால், “சமாதானமான” காலத்திலேயே, உலகம் ரொம்ப ஆபத்தான இடமாக மாறியிருக்கிறது. “மனிதனுடைய உதவியோ மேற்பார்வையோ இல்லாமலேயே தானாக இயங்கக்கூடிய படுபயங்கரமான அணு ஆயுதங்களால் பெரியளவில் அழிவை ஏற்படுத்த முடியும். இந்த ஆயுதங்கள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துகின்றன” என்று புல்லட்டின் ஆஃப் தி அட்டாமிக் சயின்டிஸ்ட்ஸ் பத்திரிகை சொல்கிறது.

      ஓர் ஆண் மருத்துவமனையில் படுத்திருக்கிறார்

      மோசமாகிக்கொண்டே வரும் உடல் ஆரோக்கியம். மனிதர்களுக்கு அறிவியலால் நல்ல உடல் ஆரோக்கியத்தைத் தர முடியவில்லை. உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், காற்று தூய்மைக்கேடு, போதைப் பொருள் துஷ்பிரயோகம் போன்றவை அதிகமாகிக்கொண்டே போகின்றன. இவற்றால் நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. புற்று நோய், சர்க்கரை வியாதி, இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் போன்ற தொற்றாத நோய்களால்கூட நிறைய பேர் இறந்துபோகிறார்கள். மன நோய்களாலும் மற்ற நோய்களாலும் நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்கள். சமீப காலமாக, எபோலா மற்றும் ஜிகா வைரஸ் போன்ற பயங்கரமான கொள்ளைநோய்களும் மனிதர்களின் உயிரைப் பறித்திருக்கின்றன. இதிலிருந்து என்ன தெரிகிறது? உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் கட்டுக்கடங்காமல் போகின்றன, நோய்க்கு விடிவுகாலம் வரும் என்ற நம்பிக்கையும் மறைந்துவிட்டது.

      மாசுப்படுத்தப்பட்ட காற்றும் தண்ணீரும்

      மனிதர்களால் நாசமாக்கப்படும் இயற்கை. தொழிற்சாலைகள் பூமியின் காற்று மண்டலத்தை கெடுத்துக்கொண்டே வருகின்றன. அசுத்தமான காற்றைச் சுவாசிப்பதால் ஒவ்வொரு வருஷமும் லட்சக்கணக்கான மக்கள் இறந்துபோகிறார்கள்.

      தனி மனிதர்கள், மக்கள் தொகுதிகள், அரசாங்க அமைப்புகள் என எல்லாரும் கழிவு நீரையும், மருத்துவ மற்றும் விவசாய கழிவுகளையும், பிளாஸ்டிக் பொருள்களையும், மாசுப்படுத்தும் மற்ற பொருள்களையும் கடலில் கலக்குகிறார்கள். “இந்த மாதிரியான நச்சு பொருள்கள் கடலில் வாழும் உயிரினங்களையும் தாவரங்களையும், கடல் உணவைச் சாப்பிடுபவர்களின் உடலையும் கெடுக்கின்றன” என்று என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் மெரைன் சயின்ஸ் சொல்கிறது.

      சுத்தமான தண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. தண்ணீர் தட்டுப்பாடு உலகத்தின் எல்லா பகுதிகளையும் பாதிக்கப்போவதாக பிரிட்டிஷ் அறிவியல் எழுத்தாளரான ராபின் மெக்கீ சொல்கிறார். இதற்கு மனிதர்கள்தான் காரணம் என்றும், இது ஒரு பயங்கரமான பாதிப்பை ஏற்படுத்தப்போகிறது என்றும் அரசியல்வாதிகள் சொல்கிறார்கள்.

      சூறாவளி

      மனிதர்களைத் தாக்கும் இயற்கை. புயல், சூறாவளி, பூமி அதிர்ச்சி போன்றவை பயங்கரமான வெள்ளத்தையும், நிலச் சரிவுகளையும், மற்ற விதமான நாசங்களையும் ஏற்படுத்துகின்றன. நிறைய பேர் இதில் உயிர் இழந்திருக்கிறார்கள் அல்லது மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நாஸா (NASA) நடத்திய ஆய்வு இதைப் பற்றி இப்படிச் சொல்கிறது: “இன்னும் பலமான புயல்களும், படு மோசமான நாசத்தை ஏற்படுத்தக்கூடிய வெப்ப அலைகளும் ஏற்படும். அதோடு, மிகக் கடுமையான வெள்ளமும் வறட்சியும் மாறிமாறி வரும்.” இப்படியே போய்க்கொண்டிருந்தால், இயற்கையால் மனிதர்கள் அழிந்துவிடுவார்களா?

      நம் உயிரைப் பறிக்கக்கூடிய மற்ற பயங்கரமான ஆபத்துகளும் உங்கள் ஞாபகத்துக்கு வரலாம். ஆனால், இன்று நடக்கும் எல்லா கெட்ட விஷயங்களையும் ஆராய்வதன் மூலம், எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகளுக்கான திருப்தியான பதில்களை உங்களால் தெரிந்துகொள்ளவே முடியாது. அரசியல்வாதிகளும் விஞ்ஞானிகளும் சொல்கிற விஷயங்களைக் கேட்டுக்கொண்டிருக்கிற சிலரும் இதைத்தான் சொல்வார்கள். முந்தின கட்டுரையில் பார்த்தபடி, உலக நிலைமைகளைப் பற்றிய கேள்விகளுக்கும், எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகளுக்கும் நிறைய பேர் திருப்தியான பதில்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால், அந்தப் பதில்கள் எங்கே இருக்கின்றன?

  • பைபிள் என்ன சொல்கிறது?
    விழித்தெழு!—2017 | எண் 6
    • ஒரு மனிதர் கடவுள் வாக்குக் கொடுத்த புதிய உலகத்தில் இருக்கிறார்

      அழிவுநாள் கடிகாரத்தை வைத்து எதிர்காலத்தைப் பற்றி மனிதர்கள் சொல்லும் விஷயங்கள் நடக்கவே நடக்காது. ஏனென்றால், மனிதர்களுக்கு ஓர் ஒளிமயமான எதிர்காலத்தைத் தரப்போவதாக கடவுள் வாக்குக் கொடுத்திருக்கிறார்

      அட்டைப்படக் கட்டுரை | உலகம் கட்டுக்கடங்காமல் போகிறதா?

      பைபிள் என்ன சொல்கிறது?

      இந்த மோசமான உலக நிலைமைகளைப் பற்றி பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, மனிதர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்துக்கொண்டிருப்பதாகவும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது. பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற விஷயங்களை நாம் ஒதுக்கிவிட முடியாது. ஏனென்றால், பைபிளில் சொல்லப்பட்ட நிறைய விஷயங்கள் அப்படியே நிறைவேறி இருக்கின்றன.

      உதாரணத்துக்கு, சில பைபிள் தீர்க்கதரிசனங்களைக் கவனியுங்கள்:

      • “ஜனத்துக்கு எதிராக ஜனமும் நாட்டுக்கு எதிராக நாடும் சண்டை போடும், அடுத்தடுத்து பல இடங்களில் பஞ்சங்களும் நிலநடுக்கங்களும் ஏற்படும்.”—மத்தேயு 24:7.

      • ‘கடைசி நாட்களில், சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள். ஏனென்றால், மனிதர்கள் சுயநலக்காரர்களாக, பண ஆசைபிடித்தவர்களாக, ஆணவமுள்ளவர்களாக, கர்வமுள்ளவர்களாக, கடவுளை நிந்திக்கிறவர்களாக, அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படியாதவர்களாக, நன்றிகெட்டவர்களாக, உண்மையில்லாதவர்களாக, பந்தபாசம் இல்லாதவர்களாக, எதற்குமே ஒத்துப்போகாதவர்களாக, மற்றவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவர்களாக, சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களாக, கொடூரமானவர்களாக, நல்ல காரியங்களை விரும்பாதவர்களாக, நம்பிக்கைத் துரோகிகளாக, அடங்காதவர்களாக, தலைக்கனம் பிடித்தவர்களாக, கடவுளை நேசிக்காமல் சுகபோக வாழ்க்கையை நேசிக்கிறவர்களாக இருப்பார்கள்.’—2 தீமோத்தேயு 3:1-4.

      இதுவரை இல்லாத அளவுக்கு இந்த உலகம் மோசமாகிக்கொண்டே போவதாக இந்த பைபிள் தீர்க்கதரிசனங்கள் காட்டுகின்றன. சொல்லப்போனால், இந்த உலகம் கட்டுக்கடங்காமல் போகிறது, மனிதர்களின் கட்டுப்பாட்டைமீறி போகிறது. பைபிளின்படி, பிரச்சினைகளை நிரந்தரமாகத் தீர்ப்பதற்கான ஞானமும் சக்தியும் மனிதர்களுக்கு இல்லை. இது எவ்வளவு உண்மை என்பதை இந்த பைபிள் வசனங்கள் காட்டுகின்றன:

      • “மனுஷனுக்குச் சரியென்று தோன்றுகிற வழி உண்டு. ஆனால், அது கடைசியில் மரணத்தில்தான் கொண்டுபோய்விடும்.”—நீதிமொழிகள் 14:12.

      • “மனுஷனை மனுஷன் அடக்கி ஆண்டிருப்பதால் அவனுக்குக் கேடுதான் வந்திருக்கிறது.”—பிரசங்கி 8:9.

      • “மனுஷனுக்கு . . . தன் காலடிகளை நடத்தும் அதிகாரம் இல்லை.”—எரேமியா 10:23.

      மனிதர்கள் தங்கள் இஷ்டப்படி செய்துகொண்டிருந்தால், இந்த உலகம் ஒருவேளை அழிந்துவிடலாம். ஆனால், அது நடக்கவே நடக்காது! ஏன்? அதைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது:

      • கடவுள் “இந்தப் பூமிக்குப் பலமான அஸ்திவாரம் போட்டிருக்கிறார். அது ஒருபோதும் அசைக்கப்படாது.”—சங்கீதம் 104:5.

      • “ஒரு தலைமுறை போகிறது, இன்னொரு தலைமுறை வருகிறது. ஆனால், பூமி என்றென்றும் நிலைத்திருக்கிறது.”—பிரசங்கி 1:4.

      • “நீதிமான்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் என்றென்றும் அதில் வாழ்வார்கள்.”—சங்கீதம் 37:29.

      • “பூமியில் ஏராளமாகத் தானியம் விளையும். மலைகளின் உச்சியில்கூட அது நிரம்பி வழியும்.”—சங்கீதம் 72:16.

      உலகம் அழியுமா என்ற கேள்விக்கு இந்த பைபிள் வசனங்கள் தெளிவான பதிலைத் தருகின்றன. தூய்மைக்கேடோ, உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையோ, உயிர்கொல்லி நோய்களோ மனித இனத்தை அழித்துவிட முடியாது. அணு ஆயுத போர்களாலும் இந்த உலகத்தை அழித்துவிட முடியாது. ஏனென்றால், இந்தப் பூமியின் எதிர்காலம் கடவுளுடைய கையில்தான் இருக்கிறது. சுயமாகத் தீர்மானிக்கும் உரிமையைக் கடவுள் மனிதர்களுக்குக் கொடுத்திருக்கிறார். மனிதர்கள் தாங்கள் எடுக்கும் தீர்மானங்களுக்கான விளைவுகளை சந்திப்பார்கள். (கலாத்தியர் 6:7) இந்த உலகம், கட்டுப்பாட்டை இழந்து ஓடும் ஒரு ரயிலைப் போல இல்லை. அது, கட்டுக்கடங்காமல் அழிவை நோக்கி போய்க்கொண்டில்லை. மனிதர்களால் இந்தப் பூமியை ஓரளவுதான் நாசப்படுத்த முடியும்; கடவுள் அதற்கு ஓர் எல்லையை வைத்திருக்கிறார்.—சங்கீதம் 83:18; எபிரெயர் 4:13.

      கடவுள் இன்னும் என்னவெல்லாம் செய்வார்? “அளவில்லாத சமாதானத்தை” கொண்டுவருவார். (சங்கீதம் 37:11) ஒளிமயமான ஓர் எதிர்காலத்தைப் பற்றி லட்சக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் பைபிளைப் படித்து தெரிந்துகொண்டிருக்கிறார்கள். அந்த எதிர்காலத்தைப் பற்றி இந்தக் கட்டுரையில் சில விஷயங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

      யெகோவாவின் சாட்சிகள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். இவர்கள் வித்தியாசமான பின்னணியிலிருந்து வந்தவர்கள். இவர்களில் ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், சிறியவர்கள் என எல்லா வயதிலுள்ள மக்களும் இருக்கிறார்கள். ஒரே உண்மையான கடவுளை இவர்கள் வணங்குகிறார்கள். பைபிளில் அவருடைய பெயர் யெகோவா என்று சொல்லப்பட்டிருக்கிறது. இவர்கள் எதிர்காலத்தை நினைத்து பயப்படுவதில்லை. ஏனென்றால், பைபிள் இப்படிச் சொல்கிறது: “யெகோவாதான் உண்மையான கடவுள்; அவரே வானத்தைப் படைத்தார். அவரே பூமியை உருவாக்கி, அதை உறுதியாக நிலைநிறுத்தினார். அவர் அதைக் காரணம் இல்லாமல் படைக்கவில்லை; ஜனங்கள் குடியிருப்பதற்காகவே படைத்தார். அவர் சொல்வது இதுதான்: ‘நான் யெகோவா, என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை.’”—ஏசாயா 45:18. ◼

      பூமிக்கும் மனிதர்களுக்கும் எதிர்காலத்தில் என்ன ஆகும் என்பதைப் பற்றிய சில பைபிள் விஷயங்களை இந்தக் கட்டுரை விளக்கியது. இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள, யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்டிருக்கிற கடவுள் சொல்லும் சந்தோஷமான செய்தி! என்ற சிற்றேட்டில் பாடம் 5-ஐ பாருங்கள். இது, www.jw.org என்ற வெப்சைட்டிலும் கிடைக்கும்

      www.jw.org வெப்சைட்டில் இருக்கும் கடவுள் ஏன் பூமியைப் படைத்தார்? என்ற வீடியோவையும் பாருங்கள். (வெளியீடுகள் > வீடியோக்கள் என்ற தலைப்பில் பாருங்கள்)

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்