-
யெகோவாவின் சாட்சிகள் எப்படிப்பட்ட ஜனங்கள்?இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்?
-
-
பாடம் 1
யெகோவாவின் சாட்சிகள் எப்படிப்பட்ட ஜனங்கள்?
டென்மார்க்
தைவான்
வெனிசுவேலா
இந்தியா
யெகோவாவின் சாட்சிகள் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா? எங்களில் யாராவது உங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் குடியிருக்கலாம், உங்களோடு வேலை செய்யலாம், உங்களோடு பள்ளிக்கூடத்தில் படிக்கலாம். இல்லையென்றால், பைபிளைப் பற்றி உங்களிடம் பேசியிருக்கலாம். நாங்கள் யார், ஏன் பைபிளைப் பற்றி எல்லாருக்கும் சொல்கிறோம்?
நாங்கள் சாதாரண ஜனங்கள்தான். படித்தவர்கள், படிக்காதவர்கள், ஏழைகள், பணக்காரர்கள், என எல்லாரும் எங்கள் சபையில் இருக்கிறார்கள். வித்தியாசமான இனம், மொழி, கலாச்சாரத்திலிருந்து வந்தவர்களும் எங்கள் சபையில் இருக்கிறார்கள். யெகோவாவின் சாட்சியாவதற்கு முன்பு எங்களில் சிலர் மற்ற மதங்களில் இருந்தார்கள், சிலர் கடவுள் நம்பிக்கையே இல்லாமல் இருந்தார்கள். ஆனால் நாங்கள் எல்லாருமே பைபிளை நன்றாகப் படித்தோம். (அப்போஸ்தலர் 17:11) பைபிளிலிருந்து நாங்கள் கற்றுக்கொண்ட விஷயங்கள் எல்லாமே உண்மை என்று புரிந்துகொண்டோம். அதற்குப் பிறகுதான் யெகோவாவின் சாட்சியாக வேண்டும் என்று முடிவு செய்தோம்.
பைபிள் படிப்பது எங்களுக்கு ரொம்ப பிரயோஜனமாக இருக்கிறது. எல்லாரையும் போல் எங்களுக்கும் பிரச்சினைகள் இருக்கின்றன, எங்களிடமும் குறைகள் இருக்கின்றன. ஆனால், பைபிள் சொல்வதுபோல் நடக்க முயற்சி செய்வதால், எங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கிறது. (சங்கீதம் 128:1, 2) மற்றவர்களுடைய வாழ்க்கையும் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அதனால்தான், பைபிளில் இருக்கும் அருமையான விஷயங்களை எல்லாருக்கும் சொல்கிறோம்.
பைபிள் சொல்வதுபோல் நடந்துகொள்ள முயற்சி செய்கிறோம். அதனால் சந்தோஷமாக, ஆரோக்கியமாக இருக்க முடிகிறது. சமுதாயத்திற்குப் பிரயோஜனமாக இருப்பதற்கும் நல்ல குடிமக்களாக இருப்பதற்கும் பைபிள் எங்களுக்கு உதவி செய்திருக்கிறது. அதுமட்டுமல்ல, மரியாதை காட்டுவதற்கு, நேர்மையாக நடந்துகொள்வதற்கு, அன்பாக பழகுவதற்கு பைபிளிலிருந்து கற்றுக்கொண்டோம். குடும்பத்தில் சண்டை சச்சரவு இல்லாமல் ஒற்றுமையாக இருப்பதற்கு பைபிள் உதவி செய்திருக்கிறது. ஒழுக்கமாக வாழ்வதற்குக்கூட கற்றுக்கொடுத்திருக்கிறது. ‘பாரபட்சம் காட்டாத கடவுளை’ வணங்குவதால் நாங்களும் பாரபட்சம் காட்டுவதில்லை. நாடு, இனம் என்று எந்த வித்தியாசமும் பார்க்காமல் ஒருவருக்கொருவர் அன்பாக ஒரே குடும்பம் போல் இருக்கிறோம். நாங்கள் சாதாரண ஜனங்கள்தான், ஆனாலும் மற்றவர்களிலிருந்து நாங்கள் வித்தியாசமான ஜனங்களாக இருக்கிறோம்.—அப்போஸ்தலர் 4:13; 10:34, 35.
எந்த விதத்தில் யெகோவாவின் சாட்சிகள் மற்றவர்களைப் போல் இருக்கிறார்கள்?
பைபிள் சொல்வதுபோல் நடப்பதால் யெகோவாவின் சாட்சிகளுக்கு என்ன நன்மைகள் கிடைத்திருக்கிறது?
-
-
யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயர் ஏன் வந்தது?இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்?
-
-
பாடம் 2
யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயர் ஏன் வந்தது?
நோவா
ஆபிரகாம், சாராள்
மோசே
இயேசு கிறிஸ்து
யெகோவாவின் சாட்சிகள்—இந்தப் பெயரை கேட்டதும், ஏதோ ஒரு புது மதம் என்று நிறையப் பேர் நினைக்கிறார்கள். ஆனால், 2,700 வருடங்களுக்கு முன்பே யெகோவாவுக்கு சாட்சிகள் இருந்திருக்கிறார்கள். யெகோவாவை வணங்கிய ஜனங்களை அவருடைய ‘சாட்சிகள்’ என்று பைபிள் சொல்கிறது. (ஏசாயா 43:10-12) எங்களுக்கு 1931 வரை பைபிள் மாணாக்கர்கள் என்ற பெயர் இருந்தது. அதற்குப் பிறகு, யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயர் வந்தது. ஏன் தெரியுமா?
இந்தப் பெயரிலிருந்து எங்களுடைய கடவுள் யார் என்று தெரிந்துகொள்ளலாம். பழங்காலத்து பைபிள் சுருள்களில் யெகோவா என்ற பெயர் ஆயிரக்கணக்கான தடவை இருக்கிறது. ஆனால், பைபிளை மொழிபெயர்த்தவர்கள் அந்தப் பெயரை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக கர்த்தர், ஆண்டவர் என்று போட்டுவிட்டார்கள். மோசேயிடம் கடவுள் பேசியபோது யெகோவா என்ற அவருடைய பெயரைச் சொன்னார். அதோடு, “என்றென்றும் இதுதான் என்னுடைய பெயர்” என்றும் சொன்னார். (யாத்திராகமம் 3:15) இப்படி, அவருக்கும் பொய் தெய்வங்களுக்கும் வித்தியாசம் இருப்பதைக் காண்பித்தார். யெகோவாவின் சாட்சிகள் என்று சொல்லிக்கொள்வதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.
இந்தப் பெயரிலிருந்து எங்களுடைய முக்கியமான வேலையைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். அந்தக் காலத்தில் இருந்தே நிறையப் பேர் யெகோவாவுக்கு சாட்சிகளாக இருந்திருக்கிறார்கள். ஆபேல்தான் யெகோவாவுக்கு முதல் சாட்சியாக இருந்தார். அதற்குப் பிறகு வந்த நோவா, ஆபிரகாம், சாராள், மோசே, தாவீது என நிறையப் பேர் யெகோவாவுக்கு சாட்சிகளாக இருந்தார்கள். இவர்கள் எல்லாரும் யெகோவாமீது நம்பிக்கை வைத்திருந்தார்கள். அதனால்தான், “திரண்ட மேகம் போன்ற இத்தனை சாட்சிகள்” யெகோவாவுக்கு இருந்திருக்கிறார்கள் என்று பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 11:4–12:1) ஒரு நிரபராதிக்கு ஆதரவாக கோர்ட்டில் சாட்சி சொல்வது போல் நாங்களும் கடவுளுக்கு ஆதரவாக சாட்சி சொல்கிறோம். அதாவது, அவரைப் பற்றிய உண்மைகளை எல்லாருக்கும் சொல்கிறோம்.
இயேசுவைப் போல் நடந்துகொள்கிறோம். இயேசுவை, “நம்பகமான, உண்மையான சாட்சி” என்று பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 3:14) ‘கடவுளுடைய பெயரை தெரியப்படுத்தினேன்’ என்று இயேசு பூமியில் இருந்தபோது சொன்னார். அதோடு, “சத்தியத்தைப் பற்றிச் சாட்சி” கொடுத்தார். அதாவது, கடவுளைப் பற்றி எல்லாருக்கும் சொன்னார். (யோவான் 17:26; 18:37) இயேசுவைப் போல் நடந்துகொள்ள ஆசைப்படுகிற எல்லாரும் கடவுளுடைய பெயரை மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும். அதைத்தான் யெகோவாவின் சாட்சிகள் செய்கிறார்கள்.
பைபிள் மாணாக்கர்களுக்கு ஏன் யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயர் வந்தது?
எவ்வளவு காலமாக யெகோவாவுக்கு சாட்சிகள் இருந்திருக்கிறார்கள்?
யெகோவாவுக்கு முக்கியமான சாட்சி யார்?
-
-
பைபிளில் இருக்கும் உண்மைகளை மறுபடியும் எப்படி கண்டுபிடித்தோம்?இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்?
-
-
பாடம் 3
பைபிளில் இருக்கும் உண்மைகளை மறுபடியும் எப்படி கண்டுபிடித்தோம்?
1870-களில் பைபிள் மாணாக்கர்கள்
முதல் காவற்கோபுரம், 1879
இன்று காவற்கோபுரம்
இயேசு இறந்த பிறகு சபையில் இருந்த சிலர் பைபிளில் இருக்கும் உண்மைகளை மாற்றி சொல்வார்கள் என்று பைபிள் முன்பே சொல்லியிருந்தது. (அப்போஸ்தலர் 20:29, 30) பைபிள் சொன்னது போலவே நடந்தது. இயேசு கற்றுக்கொடுத்த விஷயங்களோடு பொய் மதத்தில் இருக்கிற விஷயங்களை சிலர் கலப்படம் செய்தார்கள். இப்படித்தான் பொய்யான கிறிஸ்தவ மதம் ஆரம்பமானது. (2 தீமோத்தேயு 4:3, 4) ஆனால், பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது என்று நாம் எப்படித் தெரிந்துகொள்ள முடியும்?
யெகோவா சரியான நேரத்தில் உண்மைகளைத் தெரியப்படுத்தினார். ‘முடிவு காலத்தில் உண்மையான அறிவு பெருகும்’ என்று யெகோவா ஏற்கெனவே சொல்லியிருந்தார். (தானியேல் 12:4) பைபிளில் ஆர்வம் இருக்கும் சிலர் சர்ச் சொல்லிக்கொடுக்கிற நிறைய விஷயங்கள் தவறு என்று 1870-ல் தெரிந்துகொண்டார்கள். அதனால் பைபிளை ஆராய்ச்சி செய்து படிக்க ஆரம்பித்தார்கள். பைபிளில் இருக்கும் உண்மைகளை புரிந்துகொள்ள யெகோவா அவர்களுக்கு உதவி செய்தார்.
பைபிள் மாணாக்கர்கள் பைபிளை நன்றாக படிக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் எல்லாரும் ஒன்றுசேர்ந்து பைபிளில் இருக்கிற ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ச்சி செய்தார்கள். கடவுளுடைய பெயர், கடவுளுடைய அரசாங்கம், பூமியை அவர் எதற்காக படைத்தார், மனிதனை எதற்காக படைத்தார், இறந்தவர்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது, இறந்தவர்களை கடவுள் உயிரோடு எழுப்புவாரா... இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் பைபிளில் ஆராய்ச்சி செய்தார்கள். அப்படி ஆராய்ச்சி செய்யும்போது ஒரு வசனம் புரியவில்லை என்றால், அதற்கான பதிலை பைபிளிலேயே தேடினார்கள். அதாவது, அது சம்பந்தமான மற்ற வசனங்களை எடுத்து பார்த்தார்கள். அந்த வசனங்களோடு ஒத்துப்போகிற பதிலை ஏற்றுக்கொண்டார்கள். பிறகு அதை எழுதி வைத்தார்கள். எதற்குமே அவர்கள் சொந்தமாக விளக்கம் கொடுக்கவில்லை, பைபிள் கொடுக்கிற விளக்கத்தைதான் ஏற்றுக்கொண்டார்கள். இப்படி படித்ததால், பொய் போதனையில் இருந்தும் சடங்கு சம்பிரதாயத்தில் இருந்தும் ஒரு பெரிய விடுதலை கிடைத்தது. அவர்கள் படித்ததைப் போலவே இன்று நாங்களும் பைபிளை ஆராய்ச்சி செய்து படிக்கிறோம்.—யோவான் 8:31, 32.
பைபிளில் இருக்கும் உண்மைகளை எல்லாருக்கும் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பைபிள் மாணாக்கர்கள் புரிந்துகொண்டார்கள். அதனால், 1879-ல், காவற்கோபுரம் என்ற பத்திரிகையை வெளியிட ஆரம்பித்தார்கள். அந்த பத்திரிகையை இன்றுவரை நாங்கள் வெளியிடுகிறோம். இன்று 240 நாடுகளில்... 750-க்கும் அதிகமான மொழிகளில்... பைபிளில் இருக்கும் உண்மைகளை எல்லாருக்கும் சொல்கிறோம். இதுவரை இல்லாத அளவுக்கு இன்று பைபிள் அறிவு அதிகமாகியிருக்கிறது!
கிறிஸ்து இறந்த பிறகு பைபிளில் இருக்கும் உண்மைகளுக்கு என்ன ஆனது?
பைபிளில் இருக்கும் உண்மைகள் எங்களுக்கு எப்படித் தெரிந்தது?
-
-
புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை ஏன் தயாரித்தோம்?இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்?
-
-
பாடம் 4
புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை ஏன் தயாரித்தோம்?
காங்கோ (கின்ஷாசா)
ருவாண்டா
சங்கீதம் 69:31-ல் யெகோவாவுடைய பெயர் இருந்ததை சிம்மாக்கஸ் துண்டில் பார்க்கலாம். இது மூன்றாம் அல்லது நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்டது
நாங்கள் பல வருஷங்களாக மற்றவர்கள் மொழிபெயர்த்த பைபிள்களை பயன்படுத்தினோம். அதோடு, அந்த பைபிள்களை நாங்களே அச்சடித்து எல்லா ஜனங்களுக்கும் கொடுத்தோம். எல்லாரும் ‘திருத்தமான அறிவை பெற வேண்டும்’ என்று கடவுள் விரும்புகிறார். அதனால், ஜனங்கள் சுலபமாகப் புரிந்துகொள்கிற விதத்தில் ஒரு பைபிளைத் தயாரிக்க வேண்டும் என்று நினைத்தோம். (1 தீமோத்தேயு 2:3, 4) அதற்காக, சாதாரண மொழிநடையில் பைபிளை மொழிபெயர்த்தோம். 1950-லிருந்து அதை ஒவ்வொரு பாகமாக வெளியிட ஆரம்பித்தோம். அதுதான் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள். இந்த பைபிள் திருத்தமானது, 130-க்கும் அதிகமான மொழிகளில் கிடைக்கிறது.
புரிந்துகொள்ள சுலபமாக இருக்கிற பைபிள் தேவைப்பட்டது. காலம் மாற மாற மொழியும் மாறிக்கொண்டே வருகிறது. இன்று இருக்கிற நிறைய பைபிளில், ஜனங்களுக்குப் புரியாத வார்த்தைகளும் அவர்கள் பயன்படுத்தாத வார்த்தைகளும்தான் இருக்கின்றன. அதனால்தான், புரிந்துகொள்வதற்கு சுலபமாக இருக்கிற பைபிள் தேவைப்பட்டது. அதோடு, ரொம்ப ரொம்ப பழைய பைபிள் சுருள்கள் (அசலை பார்த்து எழுதப்பட்ட நகல்கள்) இப்போது கிடைத்திருக்கின்றன. அதையெல்லாம் படித்த பிறகு, பைபிள் எழுதப்பட்ட காலத்தில் இருந்த எபிரெயு, அரமேயிக், கிரேக்கு மொழிகளை நன்றாகப் புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. பைபிளை நன்றாக மொழிபெயர்க்க இது உதவியாக இருந்திருக்கிறது.
அர்த்தம் மாறாமல் இருக்கிற பைபிள் மொழிபெயர்ப்பு தேவைப்பட்டது. கடவுளுடைய வார்த்தையை மொழிபெயர்க்கிறவர்கள் அவர்களுடைய இஷ்டத்துக்கு மொழிபெயர்க்கக் கூடாது. பைபிளில் உள்ளதை உள்ளபடி மொழிபெயர்க்க வேண்டும். ஆனால், பைபிளை மொழிபெயர்த்த நிறையப் பேர் கடவுளுடைய பெயரையே எடுத்துவிட்டார்கள். அதனால், யெகோவா என்ற பெயரே நிறைய பைபிளில் இல்லை.
கடவுளுக்குப் புகழ் சேர்க்கிற ஒரு பைபிள் தேவைப்பட்டது. கடவுளுடைய உதவியோடுதான் மனிதர்கள் பைபிளை எழுதினார்கள். (2 சாமுவேல் 23:2) பழங்காலத்து பைபிள் சுருள்களில் 7,000 தடவைக்குமேல் யெகோவா என்ற கடவுளுடைய பெயர் இருக்கிறது. அதற்கு ஒரு உதாரணத்தை கீழே இருக்கிற படத்தில் பார்க்கலாம். (சங்கீதம் 83:18) புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் 7,000 தடவைக்குமேல் யெகோவாவுடைய பெயர் இருக்கிறது. ரொம்ப வருஷம் ஆராய்ச்சி செய்து இந்த பைபிளைத் தயாரித்திருக்கிறோம். இந்த பைபிளைப் படிக்கும்போது கடவுள் சொன்னதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது, படிப்பதற்கும் நன்றாக இருக்கிறது. ஒருவேளை, இந்த பைபிள் உங்கள் மொழியில் இல்லை என்றாலும், உங்களிடம் இருக்கிற பைபிளை தினமும் வாசியுங்கள்.—யோசுவா 1:8; சங்கீதம் 1:2, 3.
நாங்கள் ஏன் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளைத் தயாரித்தோம்?
கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறவர்கள் தினமும் என்ன செய்ய வேண்டும்?
-