உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • கடவுளுடைய மக்களுக்காகத் துணிந்து செயல்பட்டாள்
    இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
    • எஸ்தர்

      பதினைந்தாம் அதிகாரம்

      கடவுளுடைய மக்களுக்காகத் துணிந்து செயல்பட்டாள்

      1-3. (அ) எஸ்தர் தன் கணவனைப் பார்க்கப் போகையில் ஏன் பயந்திருக்கலாம்? (ஆ) எஸ்தரைப் பற்றிய என்ன கேள்விகளுக்கு நாம் விடை காணப்போகிறோம்?

      சூசான் அரண்மனை முற்றத்தை நோக்கி அடியெடுத்து வைக்க வைக்க... எஸ்தரின் இதயம் படபடக்கிறது. அந்தப் படபடப்பைக் கட்டுப்படுத்த பார்க்கிறாள், ஆனால் முடிவதில்லை. கோட்டையின் அனைத்து அம்சங்களும் பிரமிப்பூட்டும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன: பனிபோர்த்திய ஸாக்ராஸ் மலைத்தொடரின் அருகே... கோயாஸ்பீஸ் நதியின் தூய நீர்ப்பரப்புக்கு எதிரே... அந்தக் கோட்டை வீற்றிருக்கிறது. இறக்கைகள் கொண்ட காளைகள்... வில்வீரர்கள்... சிங்கங்கள்... வண்ண வண்ண புடைப்புச் சித்திரங்களாய்க் காட்சியளிக்கின்றன; செங்கற்களால் செய்யப்பட்டு பளபளப்பூட்டப்பட்டுள்ளன; கலைநயமிக்க கற்தூண்களால்... கம்பீரமான சிலைகளால்... அலங்கரிக்கப்பட்ட அந்தக் கோட்டை மாபெரும் மேடைமீது மிடுக்குடன் நிற்கிறது. எஸ்தர் சந்திக்கப்போகும் அந்த ராஜாவின் மகா அதிகாரத்தை... “மாமன்னர்” என்று அழைத்துக் கொண்டவரின் அதிகாரத்தை... அந்தக் கோட்டைக்குள் நுழைகிற ஒவ்வொருவருக்கும் நினைப்பூட்டும் வண்ணம் அவை அனைத்தும் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவள் சந்திக்கப்போகும் அந்தப் பேரரசன் வேறு யாருமல்ல... அவளுடைய புருஷன்.

      2 எஸ்தருடைய புருஷனா? விசுவாசமுள்ள ஒரு யூதப் பெண் கனவு காணும் கணவருக்கும் அகாஸ்வேருவுக்கும் ரொம்பவே வித்தியாசம்!a முற்காலத்தில் வாழ்ந்த சிறந்த கணவன்மாரைப் பின்பற்ற வேண்டுமென இவர் துளியாவது யோசித்துப் பார்த்திருப்பாரா? கடவுளுடைய அறிவுரைப்படி தன் மனைவி சாராள் சொன்னதைத் தாழ்மையுடன் கேட்ட ஆபிரகாமைப் பின்பற்ற விரும்பியிருப்பாரா? (ஆதி. 21:12) எஸ்தரின் கடவுளான யெகோவாவைப் பற்றியும் அவரது சட்டதிட்டங்களைப் பற்றியும் அந்த அரசருக்கு ஓரளவு தெரிந்திருக்கலாம், ஒன்றுமே தெரியாமலும் இருந்திருக்கலாம். ஆனால் பெர்சிய நாட்டு சட்டதிட்டங்கள் அவருக்கு அத்துப்படி; எஸ்தர் மீறப்போகிற சட்டமும் அதில் அடங்கும். என்ன சட்டம் அது? பெர்சிய மன்னனின் அழைப்பின்றி அவர் முன்னால் வந்து நிற்கும் எவருக்கும் மரண தண்டனைதான். எஸ்தரை அரசர் அழைக்கவில்லை, என்றாலும் அவரைச் சந்திக்கப் போய்க்கொண்டிருக்கிறாள். உள்முற்றத்தை நோக்கி... அரியணையில் அமர்ந்திருக்கிற அரசருடைய பார்வை படுகிற இடத்தை நோக்கி... அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மரண வாசலுக்குச் செல்வது போன்ற உணர்வை அவளுக்கு ஏற்படுத்தியிருக்கலாம்.​—எஸ்தர் 4:​11-ஐயும் 5:​1-ஐயும் வாசியுங்கள்.

      3 எஸ்தர் ஏன் தன்னுடைய உயிரையே பணயம் வைக்கத் துணிகிறாள்? விசுவாசத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் இந்தப் பெண்மணியிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? முதலில், பெர்சிய நாட்டு ராணி என்ற அரியதோர் அந்தஸ்தை எப்படிப் பெற்றாள் எனப் பார்க்கலாம்.

      எஸ்தரின் பின்னணி

      4. எஸ்தரின் பின்னணி என்ன, அவளுடைய உறவினர் மொர்தெகாயினால் ஏன் வளர்க்கப்பட்டாள்?

      4 எஸ்தர் ஓர் அநாதை. அவளுடைய எபிரெய பெயர் அத்சாள்; இது, வெள்ளை நிறத்தில் அழகிய பூக்களைக் கொண்ட ஒருவகை நறுமணச் செடியின் எபிரெய பெயர்; அவளுக்கு இந்தப் பெயரைச் சூட்டிய பெற்றோரைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. எஸ்தருடைய பெற்றோர் இறந்ததும் அவளுடைய உறவினரான மொர்தெகாய் அவள்மீது இரக்கப்பட்டு அவளைத் தத்தெடுத்தார். கருணை உள்ளம் கொண்ட இந்த மனிதர்... எஸ்தரைவிட வயதில் ரொம்ப மூத்தவர். அவளைத் தன் வீட்டுக்கு அழைத்துவந்து சொந்த மகளைப் போல் வளர்த்துவந்தார்.​—எஸ்தர் 2:​5-7, 15.

      மொர்தெகாயின் வீட்டில் அவருக்கு எஸ்தர் உணவு பரிமாறுகிறாள்

      வளர்ப்பு மகளைக் குறித்து மொர்தெகாய் பெருமிதம் அடைந்ததில் ஆச்சரியமே இல்லை

      5, 6. (அ) எஸ்தரை மொர்தெகாய் எப்படி வளர்த்தார்? (ஆ) சூசானில், எஸ்தர் மற்றும் மொர்தெகாயின் வாழ்க்கை எப்படி இருந்தது?

      5 நாடுகடத்தப்பட்டிருந்த யூதர்களான மொர்தெகாயும் எஸ்தரும் பெர்சிய நாட்டு தலைநகர் சூசானில் வசித்து வந்தார்கள். அவர்கள் யூத மதத்தைப் பின்பற்றியதாலும் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்ததாலும் அங்குள்ள மக்களின் வெறுப்புக்கு ஓரளவு ஆளாகியிருக்கலாம். இருந்தாலும், இரக்கமுள்ள கடவுளான யெகோவாவைப் பற்றி எஸ்தருக்கு மொர்தெகாய் சொல்லிக் கொடுத்திருந்தார்; ஆம், தமது மக்களைக் கடந்த காலத்தில் காப்பாற்றியவரைப் பற்றி... எதிர்காலத்திலும் காப்பாற்றப்போகிறவரைப் பற்றி... சொல்லிக் கொடுத்திருந்தார். அதனால், மொர்தெகாய்மீது அவளுக்கு அலாதி பிரியம் உண்டானது. (லேவி. 26:​44, 45) எஸ்தருக்கும் மொர்தெகாய்க்கும் இடையே பந்தபாசம் பலமானது.

      6 வழக்கமாக, அரசரின் மற்ற ஊழியர்களோடு சேர்ந்து சூசான் அரண்மனை வாசலில் மொர்தெகாய் அமர்ந்திருப்பார்; அந்தக் கோட்டையில் ஏதாவதொரு அதிகாரியாக அவர் வேலை பார்த்திருக்கலாம். (எஸ்தர் 2:​19, 21; 3:3) அவரது வளர்ப்பு மகள் எஸ்தர் தனது பருவ வயதில் எப்படியெல்லாம் பொழுதைக் கழித்தாள் என பைபிள் சொல்வதில்லை. என்றாலும், வயதான மொர்தெகாய்க்குத் தேவையான பணிவிடைகளைச் செய்திருப்பாள்... அவருடைய வீட்டைப் பொறுப்பாகக் கவனித்திருப்பாள்... என்று நாம் ஊகிக்கலாம். அந்த வீடு அரண்மனைக்கு எதிரே ஓடிய நதிக்கு அக்கரையில் சாதாரண குடியிருப்பு பகுதியில் இருந்திருக்கலாம். சூசானில் உள்ள சந்தைக்குப் போவதில் எஸ்தர் ஒருவேளை குதூகலம் அடைந்திருப்பாள். அங்கே தங்க ஆசாரிகளும் வெள்ளி ஆசாரிகளும் மற்ற வியாபாரிகளும் பொருள்களைக் கடைவிரித்து வைத்திருப்பதைப் பார்த்திருப்பாள். ஆனால், இவையெல்லாம் சீக்கிரத்தில் தனது காலடியில் கிடக்கும் என்பதைக் கற்பனைகூட செய்திருக்க மாட்டாள். ஆம், தன் வாழ்க்கை முற்றிலும் மாறப்போகிறது என்பதைக் கனவிலும் நினைத்திருக்க மாட்டாள்.

      ‘எழில்மிகு தோற்றமுள்ளவள்’

      7. அரியணையிலிருந்து வஸ்தி அரசி ஏன் தள்ளப்பட்டாள், அதனால் என்ன நடந்தது?

      7 ஒருநாள் அரச குடும்பத்தில் பயங்கர கொந்தளிப்பு ஏற்படுகிறது, அதைப் பற்றிய செய்தி சூசானின் மூலைமுடுக்கெல்லாம் அடிபடுகிறது. நடந்தது இதுதான்... அகாஸ்வேரு தன் அரண்மனையில் முக்கியப் பிரமுகர்களுக்கு அமர்க்களமாய் விருந்து செய்தார். அறுசுவை உணவும் திராட்சமதுவும் பரிமாறப்பட்டது. அப்போது, மற்ற பெண்களோடு தனியே விருந்து கொண்டாடிக் கொண்டிருந்த தன் அழகு மனைவி வஸ்தியை வரச்சொல்லி அரசர் அழைப்பு விடுத்தார். ஆனால் அரசருக்குமுன் வர வஸ்தி மறுத்தாள். அவமானமும் ஆவேசமும் அடைந்த அரசர், வஸ்தி ராணியை எப்படித் தண்டிக்கலாமெனத் தன் ஆலோசகர்களிடம் கேட்டார். விளைவு? அரியணையிலிருந்து அரசி தள்ளப்பட்டாள். அதனால் நாடெங்குமுள்ள அழகிய கன்னிப் பெண்களுக்கான தேடலில் அரசரின் ஊழியர்கள் இறங்கினார்கள். அவர்களில் ஒருத்தியை ராணியாக அரசர் தேர்ந்தெடுப்பார்.​—எஸ்தர் 1:1–2:4.

      8. (அ) எஸ்தர் வளர்ந்து வருவதைப் பார்த்தபோது மொர்தெகாய்க்கு ஏன் ஓரளவு கவலை இருந்திருக்கலாம்? (ஆ) அழகைப் பற்றி பைபிளிலுள்ள சமநிலையான ஆலோசனையை நாம் எப்படிக் கடைப்பிடிக்கலாம்? (நீதிமொழிகள் 31:​30-ஐயும் காண்க.)

      8 மொர்தெகாய் தன்னுடைய வளர்ப்பு மகளை அவ்வப்போது பாசத்தோடு பார்ப்பதை நம்மால் கற்பனை செய்ய முடிகிறது, அல்லவா? எஸ்தர் அழகிய மங்கையாக அவருடைய கண்முன்னே கிடுகிடுவென வளர்ந்துவந்தாள்; அப்பாமாருக்கே உரிய பெருமிதம் மொர்தெகாய்க்கு இருந்தாலும், அவருக்குள் கவலையும் அடிக்கடி எட்டிப் பார்த்திருக்கும். ஏனென்றால் அவள் “எழில்மிகு தோற்றமும் வடிவழகும் கொண்ட இளம் பெண்” என்று பைபிள் சொல்கிறது. (எஸ்தர் 2:​7, பொ.மொ.) அழகைப் பற்றிச் சமநிலையான கண்ணோட்டத்தை பைபிள் அளிக்கிறது: அழகு ரசிக்கத்தக்கதுதான், ஆனால் ஞானமும் மனத்தாழ்மையும் சேர்ந்தால்தான் அந்த அழகுக்கே அழகு சேரும். இல்லாவிட்டால் வீண் பெருமை, அகந்தை போன்ற அசிங்கமான குணங்கள்தான் ஒட்டிக்கொள்ளும். (நீதிமொழிகள் 11:​22-ஐ வாசியுங்கள்.) இது உண்மை என்பதை நீங்களே பார்த்திருப்பீர்கள். எஸ்தரைப் பொறுத்தவரை, அழகு அவளுக்கு வரமா, சாபமா? காலம்தான் பதில் சொல்லும்.

      9. (அ) ராஜாவின் ஊழியர்களுடைய கண்களில் எஸ்தர் சிக்கியபோது என்ன செய்தார்கள், மொர்தெகாயைவிட்டுப் பிரிந்தபோது எஸ்தருக்கு எப்படி இருந்திருக்கும்? (ஆ) அவிசுவாசியைக் கல்யாணம் செய்துகொள்ள மொர்தெகாய் ஏன் எஸ்தரை அனுமதித்தார்? (பெட்டியையும் காண்க.)

      9 ராஜாவின் ஊழியர்களுடைய கண்களில் எஸ்தர் சிக்கிக்கொண்டாள். உடனே அவளை மொர்தெகாயிடமிருந்து பிரித்து, நதிக்கு அக்கரையில் இருக்கிற பிரம்மாண்டமான அரண்மனைக்கு மற்ற பெண்களோடுகூட அழைத்துச் சென்றார்கள். (எஸ்தர் 2:8) அப்போது அவர்கள் இருவருமே எவ்வளவு துடித்திருப்பார்கள்! அவர்களுடைய பந்தம் அப்பா-மகள் போன்ற பந்தம், அல்லவா? தனது தத்து மகளை ஓர் அவிசுவாசிக்குக் கல்யாணம் செய்துகொடுக்க மொர்தெகாய் விரும்ப மாட்டார்​—அவன் ஒரு அரசனே ஆனாலும்சரி. இருந்தாலும், இப்போது எல்லாமே அவருடைய கைமீறிப் போய்விட்டது.b அழைத்துச் செல்லப்படும் சமயத்தில் மொர்தெகாய் சொன்ன அறிவுரைகளை எஸ்தர் எவ்வளவு உன்னிப்பாய்க் கேட்டிருப்பாள்! சூசானிலுள்ள அரண்மனைக்குச் செல்லும் பாதையில்... எஸ்தரின் மனதில் கேள்விகள் அலையலையாக எழுகின்றன. இனி அவளுடைய வாழ்க்கை எப்படியிருக்கும்?

      ‘காண்போர் அனைவரின் கண்களிலும் தயவு பெற்றிருந்தாள்’

      10, 11. (அ) எஸ்தருடைய புதிய சூழல் எப்படி அவளை எளிதில் மாற்றியிருக்கலாம்? (ஆ) எஸ்தருடைய நலனில் தனக்கு அக்கறை இருப்பதை மொர்தெகாய் எப்படிக் காட்டினார்?

      10 ஒரு புதுமையான உலகில்... வினோதமான உலகில்... இருப்பதைப் போல் எஸ்தர் உணர்ந்தாள். பெர்சிய சாம்ராஜ்யத்தின் மூலைமுடுக்கிலிருந்து அழைத்து வரப்பட்ட ‘இளம் பெண்கள் பலரில்’ இவளும் ஒருத்தி. இவர்களுடைய சம்பிரதாயங்கள்... மொழிகள்... மனோபாவங்கள்... அனைத்தும் வேறுவேறாக இருந்தன. இவர்கள் அரசவை அதிகாரி யேகாயின் கண்காணிப்பில் விடப்பட்டார்கள்; ஓராண்டு காலத்திற்கு இவர்களுடைய அழகு மெருகூட்டப்பட்டது; நறுமணத் தைலங்கள் தேய்த்து இவர்களுடைய தேகம் அழகூட்டப்பட்டது. (எஸ்தர் 2:​8, 12, பொ.மொ.) இப்படிப்பட்ட சூழலுக்குள் தள்ளப்பட்ட அந்தப் பெண்கள் எளிதில் அழகுக்கு அடிமையாய் ஆகியிருப்பார்கள். அதோடு, போட்டி மனப்பான்மையும் தற்பெருமையும்தான் அவர்களிடம் குடிகொள்ளும். ஆனால் எஸ்தருடைய விஷயத்திலும் இப்படித்தானா?

      11 மொர்தெகாயைவிட யார் இந்த உலகத்தில் எஸ்தர்மீது அதிக அக்கறை காட்டியிருப்பார்கள்? கன்னிமாடத்துக்கு எவ்வளவு அருகில் செல்ல முடியுமோ அவ்வளவு அருகில் சென்று நாள்தோறும் எஸ்தரைப் பற்றி மொர்தெகாய் கேட்டுத் தெரிந்துகொண்டார். (எஸ்தர் 2:11) ஒருவேளை பணியாளர்கள் மூலம் ரகசியமாய்க் கிடைக்கும் துளித்துளி செய்திகளைக் கேட்டு, ஒரு வளர்ப்புத் தந்தையாகப் பெருமிதம் அடைந்திருப்பார். ஏன்?

      12, 13. (அ) சுற்றிலும் இருப்பவர்களுக்கு எஸ்தரிடம் எது பிடித்திருந்தது? (ஆ) தான் ஒரு யூதப் பெண் என்பதை எஸ்தர் யாருக்கும் சொல்லாததை நினைத்து மொர்தெகாய் ஏன் சந்தோஷப்பட்டிருப்பார்?

      12 எஸ்தரின் நடத்தை யேகாயை மிகவும் கவர்ந்தது, அதனால் அவளை மிகவும் தயவுடன் நடத்தினார்... அவளுக்கு ஏழு பணிப்பெண்களைத் தந்தார்... கன்னிமாடத்தில் சிறந்த இடத்தைக் கொடுத்தார். சொல்லப்போனால், ‘காண்போர் அனைவரின் கண்களிலும் எஸ்தர் தயவு பெற்றிருந்தாள்’ என்று பைபிள் கூறுகிறது. (எஸ்தர் 2:​9, 15, பொ.மொ.) அவளுடைய அழகுதான் அனைவரையும் இந்தளவுக்குக் கவர்ந்ததா? இல்லை, அருமையான குணமும் அவளிடம் இருந்தது.

      மற்ற பெண்கள் தங்களை அழகுபடுத்துகிறார்கள். ஆனால், எஸ்தர் இயற்கை காட்சியை ரசித்துக்கொண்டு இருக்கிறாள்

      அழகைவிட மனத்தாழ்மையும் ஞானமும்தான் மிக முக்கியம் என்பதை எஸ்தர் அறிந்திருந்தாள்

      13 உதாரணத்திற்கு, “எஸ்தர் தன்னுடைய இனத்தைப் பற்றியோ சொந்தபந்தத்தைப் பற்றியோ யாரிடமும் சொல்லக்கூடாது என்று மொர்தெகாய் கட்டளை போட்டிருந்தார், அதனால் அவள் அதை யாருக்கும் தெரிவிக்கவில்லை” என்று பதிவு சொல்கிறது. (எஸ்தர் 2:​10, NW) அவள் ஒரு யூதப் பெண் என்பதை யாருக்கும் தெரிவிக்காமல் விவேகமாய் நடந்துகொள்ளச் சொல்லி மொர்தெகாய் அறிவுறுத்தியிருந்தார்; பெர்சிய அரசகுலத்தவருக்கு யூதர்கள்மீது வெறுப்பு இருந்ததால் அப்படிச் சொல்லியிருந்தார். எஸ்தர் தன்னுடைய பார்வையில் இல்லாதபோதிலும், ஞானத்துடன்... கீழ்ப்படிதலுடன்... நடப்பதைக் கேட்டு அவர் எவ்வளவாய் ஆனந்தம் அடைந்திருப்பார்!

      14. எஸ்தரின் உதாரணத்தை இன்று இளைஞர்கள் எப்படிப் பின்பற்றலாம்?

      14 இன்று இளைஞர்களும் இதேபோல் தங்கள் பெற்றோரை அல்லது தங்களை வளர்ப்பவரைச் சந்தோஷப்படுத்த முடியும். பெற்றோருடைய பார்வையில் இல்லாத சமயங்களிலும் அவர்களால் நீதியான நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க முடியும்; பொறுப்பற்றவர்களோ ஒழுக்கங்கெட்டவர்களோ மோசமானவர்களோ தங்களைச் சுற்றியிருந்தாலும் கெட்ட வழியில் போகாமல் இருக்க முடியும். எஸ்தரைப் போலவே, அவர்களும் தங்களுடைய பரம தகப்பனின் இதயத்தைக் குளிர்விக்க முடியும்.​—நீதிமொழிகள் 27:​11-ஐ வாசியுங்கள்.

      15, 16. (அ) அரசரின் அன்பை எஸ்தர் எப்படிச் சம்பாதித்தாள்? (ஆ) எஸ்தரின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஏன் அவளுக்குப் பெரிய சவாலாக இருந்திருக்கலாம்?

      15 அரசர்முன் எஸ்தர் செல்ல வேண்டிய சமயம் வந்தது; அவள் தனக்குத் தேவையான எதையும்... ஒருவேளை தன்னை இன்னும் அழகுபடுத்திக்கொள்ள தேவையான எதையும்... கேட்டு வாங்கிக்கொள்ள அனுமதி தரப்பட்டது. ஆனால் அவள் தன்னடக்கத்துடன் இருந்தாள், யேகாய் சொன்னதைத் தவிர வேறொன்றையும் கூடுதலாகக் கேட்கவில்லை. (எஸ்தர் 2:15) வெறும் அழகால் மட்டுமே அரசரின் இதயத்தைக் கொள்ளைகொள்ள முடியாது... அடக்கமும் மனத்தாழ்மையும்தான் அந்த அரசவையில் அரியதோர் அணிகலனாய் ஜொலிக்கும்... என்பதைப் புரிந்துகொண்டாள். அவளுடைய எண்ணம் சரியா?

      16 பதிவு சொல்கிறது: “எல்லாப் பெண்களையும்விட எஸ்தரைத்தான் அரசர் அதிகமாய் நேசித்தார். மற்றெல்லாக் கன்னிப்பெண்களைவிட அவளுக்குத்தான் அரசரின் கண்களில் மிகுந்த தயவும் அன்பும் கிடைத்தது. அவள் தலையில் கிரீடம் சூட்டி, வஸ்திக்குப் பதிலாக அவளைப் பட்டத்து ராணியாக ஆக்கினார்.” (எஸ்தர் 2:​17, NW) இந்தப் பணிவான யூதப் பெண்ணுக்கு வாழ்வில் ஏற்பட்ட இந்த மாபெரும் மாற்றம் சுலபமாக இருந்திருக்காது​—இப்போது அவள்தான் புதிய அரசி, மன்னாதி மன்னனின் மனைவி! அவளுக்குக் கிடைத்த இந்தப் புதிய அந்தஸ்து அவளை அகம்பாவம் கொள்ளச் செய்ததா? இல்லவே இல்லை!

      17. (அ) வளர்ப்புத் தந்தை மொர்தெகாய்க்கு எந்த விதங்களில் எஸ்தர் கீழ்ப்பட்டு நடந்தாள்? (ஆ) எஸ்தரின் உதாரணம் இன்று நமக்கு ஏன் முக்கியம்?

      17 எஸ்தர் தன் வளர்ப்புத் தந்தை மொர்தெகாய்க்கு எப்போதும் கீழ்ப்படிந்தே நடந்தாள். தான் ஒரு யூதப் பெண் என்பதை ரகசியமாகவே வைத்திருந்தாள். அதோடு, அகாஸ்வேருவைத் தீர்த்துக்கட்ட தீட்டப்பட்ட சதியைப் பற்றி எஸ்தரிடம் மொர்தெகாய் தெரிவித்தபோது, அவள் கீழ்ப்படிதலுடன் அரசரின் காதில் இந்தச் செய்தியைப் போட்டாள்; சதிகாரர்களின் சதி முறியடிக்கப்பட்டது. (எஸ்தர் 2:​20-23) மனத்தாழ்மையுடனும் கீழ்ப்படிதலுடனும் நடப்பதன் மூலம் கடவுள்மீது விசுவாசத்தைக் காட்டினாள். இப்படிப்பட்ட சிறந்த முன்னுதாரணமாய்த் திகழும் எஸ்தரைப் பின்பற்றுவது எவ்வளவு முக்கியம்! அதுவும் கீழ்ப்படியாமையும் கலகத்தனமும் நிறைந்திருக்கிற இந்த உலகில்! கீழ்ப்படிதலுக்கு மதிப்பே இல்லாத இந்த உலகில்! ஆனால், எஸ்தரைப் போல் உண்மையான விசுவாசத்தைக் காட்டுகிறவர்கள் கீழ்ப்படிதல் என்ற பண்பைப் பொக்கிஷமாய்க் கருதுகிறார்கள்.

      எஸ்தருக்கு வந்த விசுவாச பரீட்சை

      18. (அ) ஆமானுக்கு முன்னால் தலைவணங்க மொர்தெகாய் ஏன் மறுத்தார்? (அடிக்குறிப்பையும் காண்க.) (ஆ) இன்று விசுவாசமுள்ள ஆண்களும் பெண்களும் மொர்தெகாயின் முன்மாதிரியை எப்படிப் பின்பற்றுகிறார்கள்?

      18 ஆமான் என்பவனுக்கு அகாஸ்வேருவின் அரசவையில் உயர் பதவி அளிக்கப்பட்டது. அரசர் அவனுக்கு அந்தச் சாம்ராஜ்யத்தில் தனக்கடுத்த அந்தஸ்தைக் கொடுத்தார்; அவனைப் பிரதம மந்திரியாக நியமித்து, தனது முக்கிய ஆலோசகராக வைத்துக்கொண்டார். இந்த அதிகாரியின் முன்னால் அனைவரும் தலைவணங்க வேண்டும் என்று ஆணையும் பிறப்பித்தார். (எஸ்தர் 3:​1-4) அந்த அரசாணை மொர்தெகாய்க்கு ஒரு பிரச்சினையாக உருவெடுத்தது. அரசருடைய ஆணைக்குக் கீழ்ப்படிய விரும்பினார், ஆனால் அது கடவுளுடைய ஆணையை மீறாத பட்சத்தில் மட்டுமே! பைபிள் சொல்கிறபடி, ஆமான் ஒரு ஆகாகியன். அப்படியென்றால் அவன் அமலேக்கிய அரசனாகிய ஆகாகின் வம்சத்தில் வந்தவன். இந்த ஆகாகைத்தான் சாமுவேல் தீர்க்கதரிசி வெட்டிப்போட்டிருந்தார். (1 சா. 15:33) அமலேக்கியர் மிகவும் பொல்லாதவர்கள், அதனால் யெகோவாவுக்கும் இஸ்ரவேலருக்கும் எதிரிகள்; அடியோடு அழிக்கப்பட வேண்டுமெனக் கடவுளால் கண்டனம் செய்யப்பட்டவர்கள்.c (உபா. 25:19) அப்படியிருக்கும்போது உண்மையுள்ள யூதன் இந்த அமலேக்கியனுக்கு முன்னால் எப்படித் தலைவணங்க முடியும்? இந்த விஷயத்தில் மொர்தெகாய் உறுதியாய் இருந்தார். இந்நாள்வரை விசுவாசமுள்ள ஆண்களும் பெண்களும் இதேபோன்ற உறுதியுடன் இருக்கிறார்கள்; ஆம், உயிரையே பணயம் வைக்க வேண்டியிருந்தாலும், ‘மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாக, கடவுளுக்கே கீழ்ப்படிய வேண்டும்’ என்ற நியமத்தைப் பின்பற்றுகிறார்கள்.​—அப். 5:29.

      19. ஆமான் என்ன செய்ய நினைத்தான், ராஜாவைச் சம்மதிக்க வைப்பதற்கு என்ன சொன்னான்?

      19 மொர்தெகாய் தலைவணங்காததால் ஆமானுக்குக் கோபம் தலைக்கேறியது. மொர்தெகாயை மட்டுமல்ல, அவருடைய இனத்தையே வேரோடு அழிக்க வேண்டுமென உறுதி பூண்டான். யூதர்களைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி ராஜாவைக் கையில் போட்டுக்கொண்டான். யூதர்கள் என்று குறிப்பிட்டுச் சொல்லாமல், அவர்களால் ராஜாவுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை என மறைமுகமாய்த் தெரிவித்தான்; அவர்கள் எங்கும் ‘சிதறிக் கிடக்கிறார்கள், மற்ற ஜனங்களிடமிருந்து பிரிந்திருக்கிறார்கள்’ என்று சொன்னான். அதைவிட கொடுமை என்னவென்றால், அவர்கள் ராஜாவின் சட்டங்களுக்குக் கீழ்ப்படியாதவர்கள்... படுபயங்கரமானவர்கள்... கலகக்காரர்கள்... என்றெல்லாம் சொன்னான். சாம்ராஜ்யத்திலுள்ள எல்லா யூதர்களையும் படுகொலை செய்வதற்கு ஆகும் செலவை ஈடுகட்ட ராஜாவின் கஜானாவுக்கு ஒரு பெரும் தொகை தருவதாகவும் சொன்னான்.d எந்த ஆணையையும் ஆமான் தன்னுடைய இஷ்டப்படி அமல்படுத்திக்கொள்ளலாம் என்று சொல்லி அகாஸ்வேரு ராஜா தன்னுடைய முத்திரை மோதிரத்தை அவனிடம் கொடுத்தார்.​—எஸ்தர் 3:​5-10, ERV.

      20, 21. (அ) ஆமான் அனுப்பிய செய்தி மொர்தெகாய் உட்பட பெர்சிய பேரரசிலிருந்த யூதர்கள் அனைவரையும் எப்படிப் பாதித்தது? (ஆ) என்ன செய்யச் சொல்லி எஸ்தரிடம் மொர்தெகாய் கெஞ்சினார்?

      20 விரைவில், அந்தச் சாம்ராஜ்யத்தின் மூலைமுடுக்கெல்லாம் தூதுவர்கள் குதிரையில் பாய்ந்து சென்று யூதர்களுக்கு ஒரு செய்தியை அறிவித்தார்கள்; அது ஒரு மரண சாசனம்போல் இருந்தது. தொலைவில் இருக்கிற எருசலேமுக்கும் இந்தச் செய்தி எட்டியது; பாபிலோனிலிருந்து விடுதலை பெற்று வந்த யூதர்கள்... மதில் சுவரின்றி கிடக்கிற நகரத்தை எடுத்துக்கட்ட போராடிய அந்தச் சிறுபான்மையினர்... அதைக் கேட்டு எப்படி ஆடிப்போயிருப்பார்கள் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். இந்தப் பயங்கரமான செய்தியை மொர்தெகாய் கேள்விப்பட்டபோது, இவர்களையும் சூசானில் இருக்கிற தன் நண்பர்களையும் உறவினர்களையும் நினைத்துப் பார்த்திருக்கலாம். மனமுடைந்துபோய், தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு துக்க உடையை அணிந்துகொண்டார்; சாம்பலைத் தலையில் வாரிப்போட்டுக்கொண்டு அந்த நகரத்தின் மையத்திற்குப் போய் ஓலமிட்டு அழுதார். ஆமானோ அரசருடன் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தான்; சூசானிலுள்ள யூதர்களுக்கும் அவர்களுடைய நண்பர்களுக்கும் தன்னால் ஏற்பட்ட கடுந்துயரைப் பற்றி அவன் கடுகளவும் கவலைப்படவில்லை.​—எஸ்தர் 3:12–4:​1-ஐ வாசியுங்கள்.

      21 அப்போது, தன் இனத்தாரைக் காப்பாற்ற ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்பது மொர்தெகாய்க்குப் புரிந்தது. ஆனால், அவரால் என்ன செய்ய முடியும்? மொர்தெகாயின் துயரத்தைக் கேள்விப்பட்டு, எஸ்தர் அவருக்குத் துணிமணிகள் அனுப்பினாள்; ஆனாலும் மொர்தெகாய் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை, ஆறுதலடையவில்லை. ‘என்னுடைய அருமை எஸ்தர் என்னிடமிருந்து பிரிக்கப்பட்டு புறமத அரசருக்கு அரசியாய் ஆக யெகோவா ஏன் அனுமதித்தார்?’ என்று அவர் பல காலமாக யோசித்திருக்கலாம். அதற்குரிய காரணம் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய வந்தது. எஸ்தருக்கு மொர்தெகாய் செய்தி அனுப்பினார்; அரசரைச் சந்தித்து “தன் ஜனங்களுக்காக” பரிந்து பேசச் சொல்லிக் கெஞ்சினார்.​—எஸ்தர் 4:​4-8.

      22. அரசராக இருக்கும் தன் கணவனைச் சந்தித்துப் பேச எஸ்தர் ஏன் பயப்பட்டாள்? (அடிக்குறிப்பையும் காண்க.)

      22 அந்தச் செய்தியைக் கேட்டதும் எஸ்தர் மிகவும் துடிதுடித்துப் போயிருக்க வேண்டும். இது அவளுடைய விசுவாசத்திற்கு மாபெரும் பரீட்சை. அவள் தன் மனதிலுள்ள பயத்தை மொர்தெகாய்க்குச் சொல்லி அனுப்பினாள். அரசரின் ஆணையை அவருக்கு நினைப்பூட்டினாள்: அரசருடைய அழைப்பின்றி அவரிடம் சென்றால் மரண தண்டனைதான். அரசர் தனது பொற்செங்கோலை நீட்டினால் மட்டுமே குற்றவாளியின் உயிர் தப்பும். ஆனால், ராஜா தனக்குக் கருணை காட்டுவார் என்று அவள் எதிர்பார்க்க முடியுமா? அதுவும், ராஜா அழைத்தபோது வர மறுத்த வஸ்தியின் கதியைப் பற்றித் தெரிந்த பின்பும் எதிர்பார்க்க முடியுமா? கடந்த 30 நாட்களாக ராஜா தன்னை அழைக்கவில்லை என்பதையும் மொர்தெகாயிடம் சொன்னாள். இதனால், ராஜாவின் மனம் மாறிவிட்டதோ... அவருக்குத் தன்னைப் பிடிக்காமல் போய்விட்டதோ... என்றெல்லாம் நினைத்துக் கவலைப்பட்டாள்.e​—எஸ்தர் 4:​9-11.

      23. (அ) எஸ்தருடைய விசுவாசத்தைப் பலப்படுத்த மொர்தெகாய் என்ன சொன்னார்? (ஆ) நாம் பின்பற்றுவதற்கு மொர்தெகாய் ஏன் தகுதியானவர்?

      23 எஸ்தருடைய விசுவாசத்தைப் பலப்படுத்த அவளுக்கு மொர்தெகாய் உறுதியாய்ப் பதிலளித்தார். அவள் செயல்படத் தவறினால், யூதருக்கு உதவியும் மீட்பும் வேறொரு வழியில் நிச்சயம் வரும் என்றும், யூதருக்கு எதிரான தாக்குதல் தீவிரமடையும்போது அவளால் மட்டும் தப்பிக்க முடியாது என்றும் சொன்னார். இவ்வாறு, யெகோவா தமது மக்கள் பூண்டோடு அழிக்கப்படுவதற்கு... தமது வாக்குறுதிகள் நிறைவேறாமல் போவதற்கு... ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என்பதில் மொர்தெகாய் உறுதியான விசுவாசத்தைக் காட்டினார். (யோசு. 23:14) பின்பு எஸ்தரிடம், “யாருக்குத் தெரியும்? ஒருவேளை நீ இப்படிப்பட்ட காலத்தில் உதவுவதற்காகவே இராணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம்” என்று சொன்னார். (எஸ்தர் 4:​12-14, ERV) நாம் பின்பற்றுவதற்கு மொர்தெகாய் மிகச் சிறந்த முன்மாதிரி, அல்லவா? யெகோவா தேவன்மீது மொர்தெகாய் முழு நம்பிக்கை வைத்தார். நாமும் அப்படிப்பட்ட நம்பிக்கை வைக்கிறோமா?​—நீதி. 3:​5, 6.

      மரண பயத்தை விசுவாசம் வென்றது

      24. எஸ்தர் எப்படி விசுவாசத்தையும் தைரியத்தையும் காட்டினாள்?

      24 எஸ்தர் முடிவெடுக்க வேண்டிய கட்டம் வந்தது. அங்குள்ள யூதர்கள் அனைவரையும் ஒன்றுகூட்டி மூன்று நாட்கள் விரதம் இருக்கச் சொல்ல வேண்டுமென மொர்தெகாயிடம் கேட்டுக்கொண்டாள்; அதேபோல் தானும் விரதம் இருக்கப் போவதாகவும் சொன்னாள். கடைசியாக, “என் உயிர் போனால் போகட்டும்” என்று சொன்னாள். இந்த வார்த்தைகள் அவளது விசுவாசத்தையும் தைரியத்தையும் இந்நாள்வரை எதிரொலிக்கின்றன. (எஸ்தர் 4:​15-17, NW) இதுவரை வாழ்க்கையில் செய்திராத அளவுக்கு மிக ஊக்கமாய் அந்த மூன்று நாட்களும் அவள் ஜெபம் செய்திருக்க வேண்டும். கடைசியில், அந்தத் தருணம் வருகிறது. தன்னிடம் இருப்பதிலேயே மிக அழகான உடையையும் ஆபரணங்களையும் அணிந்துகொள்கிறாள், அரசருடைய இதயத்தைக் கவர தன்னால் இயன்ற அனைத்தையும் செய்கிறாள். பின்பு அரசரைப் பார்க்கப் புறப்பட்டுப் போகிறாள்.

      அகாஸ்வேரு ராஜாவின் அரண்மனைக்குள் ராஜ உடையில் எஸ்தர் நுழைகிறாள்

      கடவுளது மக்களைக் காப்பாற்ற எஸ்தர் தன் உயிரையே பணயம் வைத்தாள்

      25. எஸ்தர் தன் கணவன் முன்பு வந்து நின்றபோது என்ன நடந்தது?

      25 இப்போது, இந்த அதிகாரத்தின் ஆரம்பக் கட்டத்திற்குச் செல்லலாம்... எஸ்தர் அரசவைக்குப் போகிறாள். என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்ற யோசனையில் அவளுடைய நெஞ்சம் எந்தளவு படபடத்திருக்கும்! எந்தளவு ஊக்கமாய் ஜெபம் செய்திருப்பாள்! அரண்மனை முற்றத்திற்குள் அடியெடுத்து வைக்கையில், அகாஸ்வேரு அரசர் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதைக் காண்கிறாள். ஒருவேளை அவரது முகபாவத்தைக் கவனிக்க முயற்சி செய்திருக்கலாம். ராஜாவின் பார்வை தன்மீது படுவதற்காகக் காத்திருக்க வேண்டியிருந்தால், அது அவளுக்கு ஒரு யுகம்போல் தெரிந்திருக்கும்! ஆனால், அந்த நொடியே அவளுடைய கணவன் அவளைப் பார்த்துவிடுகிறார். திடீரென வந்து நிற்கும் அவளைக் கண்டு ஆச்சரியப்படுகிறார், அதேசமயத்தில் அவர் முகத்தில் சாந்தம் படருகிறது. அவர் தனது பொற்செங்கோலை நீட்டுகிறார்! எஸ்தர் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்க அரசர் தயாராக இருக்கிறார்.​—எஸ்தர் 5:​1, 2.

      26. உண்மைக் கிறிஸ்தவர்களுக்கு ஏன் எஸ்தரைப் போன்ற தைரியம் தேவை, அவள் அரசரைப் போய்ப் பார்த்தது வெறும் ஓர் ஆரம்பம்தான் என்று எப்படிச் சொல்லலாம்?

      26 கடவுளுக்கு எஸ்தர் விசுவாசமாய் இருந்ததால், தன்னுடைய மக்களுக்காக உயிரையே பணயம் வைத்து சுயதியாக அன்பைக் காட்டியதால், இன்றுவரை கடவுளுடைய ஊழியர்கள் எல்லோருக்கும் சிறந்த முன்னுதாரணமாய்த் திகழ்கிறாள். உண்மைக் கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்டவர்களை உயர்வாய்ப் போற்றுகிறார்கள். உண்மையான சீடர்களிடம் சுயதியாக அன்பு பளிச்சிடும் என இயேசுவே கூறினார். (யோவான் 13:​34, 35-ஐ வாசியுங்கள்.) இத்தகைய அன்பைக் காண்பிப்பதற்கு எஸ்தரைப் போல் தைரியம் தேவை. ஆனால், அன்று கடவுளுடைய மக்களுக்காக எஸ்தர் செயல்பட்டபோதிலும் அது வெறும் ஓர் ஆரம்பம்தான். அரசனுடைய அன்புக்குரிய ஆலோசகனாக இருக்கிற ஆமான் ஒரு பொல்லாத சதிகாரன் என்பதை எப்படி ராஜாவுக்கு உணர்த்தப்போகிறாள்? தன்னுடைய மக்களைக் காப்பாற்ற என்ன செய்யப்போகிறாள்? இந்தக் கேள்விகளை அடுத்த அதிகாரத்தில் சிந்திப்போம்.

      a கி.மு. ஐந்தாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெர்சிய சாம்ராஜ்யத்தை ஆண்ட முதலாம் சஷ்டாதான் அகாஸ்வேரு என்பது பரவலான கருத்து.

      b “எஸ்தரைப் பற்றிய கேள்விகள்” என்ற பெட்டியை அதிகாரம் 16-ல் காண்க.

      c அமலேக்கியரில் ‘மீதியாயிருந்தவர்கள்’ எசேக்கியா ராஜாவின் நாட்களிலேயே அழிக்கப்பட்டுவிட்டார்கள்; அதிலும் கடைசியாக எஞ்சிய சிலரில் இந்த ஆமான் ஒருவனாக இருந்திருக்கலாம்.​—1 நா. 4:43.

      d ஆமான் 10,000 வெள்ளி தாலந்துகளைக் கொடுக்க முன்வந்தான். இன்றைய மதிப்பின்படி, அது கோடானுகோடி ரூபாய்க்குச் சமம். அகாஸ்வேரு முதலாம் சஷ்டாவாக இருந்திருந்தால், ஆமான் கொடுக்க முன்வந்த பணத்தை உடனே சந்தோஷமாக ஏற்றிருப்பார். ஏனென்றால், கிரேக்க நாட்டுடன் போர் புரிய அவருக்கு எக்கச்சக்கமான பணம் தேவைப்பட்டது. நீண்ட காலமாய்த் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்தப் போர் படுதோல்வியில்தான் முடிவடைந்தது.

      e முதலாம் சஷ்டா சலன புத்தியுள்ளவர், முன்கோபக்காரர் என்பது யாவரறிந்த உண்மை. இதற்கு உதாரணமாக, கிரேக்க சரித்திராசிரியர் ஹிராடட்டஸ் சில சம்பவங்களை எழுதினார். கிரேக்க நாட்டுக்கு எதிராக முதலாம் சஷ்டா போர் புரிந்தபோது, ஹெல்லஸ்பாண்ட் ஜலசந்தியில் கப்பல்களை வரிசையாக நிறுத்தி ஒரு பாலத்தை அமைக்கும்படி கட்டளையிட்டிருந்தார். ஒரு புயல் அந்தப் பாலத்தைச் சின்னாபின்னமாக்கியபோது, பொறியாளர்களின் தலையை வெட்டச் சொல்லிக் கட்டளையிட்டார்; அதோடு, ஹெல்லஸ்பாண்ட் ஜலசந்திக்கும் “தண்டனை” கொடுக்கச் சொன்னார்; அதாவது, அந்த ஜலசந்தியை இழித்தும் பழித்தும் அறிக்கை வாசிக்கையில் அவருடைய ஆட்கள் அதன் தண்ணீரைப் பலமுறை ஓங்கி அடிக்க வேண்டுமெனச் சொன்னார். போர் நடந்த அதே காலத்தில் ஒரு செல்வந்தன் தன் மகனுக்குப் படைச் சேவையிலிருந்து விலக்களிக்கும்படி மன்றாடியபோது, அரசர் அந்த மகனின் உடலை இரண்டு துண்டாக வெட்டச் செய்தார்; அதோடு, மக்களை எச்சரிக்க அந்த உடலைப் பார்வைக்கு வைத்தார்.

      சிந்திக்க . . .

      • மனத்தாழ்மையும் கீழ்ப்படிதலும் உள்ள பெண் என்பதை எஸ்தர் எப்படிக் காட்டினாள்?

      • விசுவாசத்தோடு செயல்பட மொர்தெகாய் எப்படி எஸ்தருக்கு உதவினார்?

      • என்னென்ன செயல்கள் எஸ்தருடைய தைரியத்தை வெளிப்படுத்துகின்றன?

      • எஸ்தருடைய விசுவாசத்தை எந்தெந்த விதங்களில் நீங்கள் பின்பற்ற விரும்புகிறீர்கள்?

  • ஞானமாய், தைரியமாய், தன்னலமின்றி செயல்பட்டாள்
    இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
    • எஸ்தர் ராணி

      பதினாறாம் அதிகாரம்

      ஞானமாய், தைரியமாய், தன்னலமின்றி செயல்பட்டாள்

      1-3. (அ) தனது கணவருடைய சிம்மாசனத்தை நெருங்கியபோது எஸ்தர் எப்படி உணர்ந்தாள்? (ஆ) எஸ்தரைப் பார்த்தவுடன் அரசர் எப்படிப் பிரதிபலித்தார்?

      அரியணையை நோக்கி எஸ்தர் ஒவ்வொரு அடியாய் அடியெடுத்து வைக்கிறாள்... அவளுடைய இதயம் வேகமாய்த் துடிக்கிறது. இப்போது உங்கள் கற்பனையில் இதைப் பாருங்கள்... சூசான் அரண்மனையில், பெர்சிய அரசரின் கம்பீரமான கொலுமண்டபத்தில், அமைதி நிலவுகிறது. எஸ்தர் தனது பூப்போன்ற பாதங்களின் ஓசையை... தனது ராஜ வஸ்திரத்தின் சரசரப்பை... காதில் கேட்கும் அளவுக்கு அங்கே அப்படியொரு நிசப்தம். ஆடம்பரமிக்க அரசவை... அலங்காரத் தூண்கள்... கலைநயத்துடன் செதுக்கப்பட்ட உட்கூரை... அதுவும் தொலைதூர லெபனானிலிருந்து இறக்குமதி செய்த தேவதாரு மரங்களால் இழைக்கப்பட்ட உட்கூரை. இவையெல்லாம் தனது சிந்தையைச் சிதறடிக்க அவள் அனுமதிப்பதில்லை. சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் அந்த மனிதன் மீதே... தனக்கு வாழ்வா சாவா என்பதைத் தீர்மானிக்கும் அந்த மனிதன் மீதே... தன் கவனத்தை ஊன்றியிருக்கிறாள்.

      2 எஸ்தர் தன்னை நெருங்கி வருவதை ராஜா கூர்ந்து கவனிக்கிறார், பொற்செங்கோலை அவளிடம் நீட்டுகிறார். இது ஏதோ சாதாரண விஷயமாகத் தோன்றலாம்; ஆனால் எஸ்தரைப் பொறுத்தவரை, இது அவளுக்குக் கிடைக்கும் உயிர்ப்பிச்சை! அரசரின் அழைப்பின்றி அவரைச் சந்திக்க வந்த குற்றத்தை அவர் மன்னித்துவிட்டதற்கு அடையாளம். எஸ்தர் அந்தச் சிம்மாசனத்தை நெருங்குகிறாள், அந்தச் செங்கோலின் முனையை நன்றியுடன் தொடுகிறாள்.​—எஸ்தர் 5:​1, 2.

      எஸ்தர் ராணி அகாஸ்வேரு ராஜாவின் சிம்மாசனத்துக்கு பக்கத்தில் போகிறாள். அப்போது ராஜா பொற்செங்கோலை அவளிடம் நீட்டுகிறார்

      அரசர் காட்டிய இரக்கத்தை எஸ்தர் நன்றியோடு ஏற்றுக்கொண்டாள்

      3 அகாஸ்வேரு அரசரின் தோற்றமே அவருடைய மகா செல்வத்தையும் அதிகாரத்தையும் பறைசாற்றுகிறது. அந்தக் காலத்தில் வாழ்ந்த பெர்சிய மன்னர்களின் ராஜ உடை கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடையது. இருந்தாலும், தன் கணவனின் கண்களில் கனிவு சொட்டுவதை எஸ்தரால் காண முடிகிறது. அவருடைய ஒரு பார்வையே ஓராயிரம் அன்பு மொழிகளை அவளுக்குப் பரிமாறுகிறது. “எஸ்தர் ராஜாத்தியே, உனக்கு என்ன வேண்டும்? நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும், உனக்குக் கொடுக்கப்படும்” என்று சொல்கிறார்.​—எஸ்தர் 5:3.

      4. எஸ்தருக்கு முன்னால் இருந்த சவால்கள் என்ன?

      4 எஸ்தர் ஏற்கெனவே தன்னிகரற்ற தைரியத்தையும் விசுவாசத்தையும் காட்டியிருந்தாள். தன் மக்களைப் பூண்டோடு அழிக்கத் தீட்டப்பட்ட சதியை முறியடிக்கவே இப்போது அரசர் முன்னிலையில் நின்றுகொண்டிருக்கிறாள். இதுவரை அவளுக்கு வெற்றிதான், ஆனால் இமாலய சவால்கள் அவளுக்கு முன்னால் நிற்கின்றன. அரசரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஆலோசகன் ஒரு பொல்லாத மனிதன் என்பதையும், எஸ்தருடைய இனத்தாரைப் பூண்டோடு அழிக்க மன்னரையே ஏமாற்றிய கயவன் என்பதையும் கர்வம்பிடித்த இந்தப் பேரரசனுக்கு அவள் புரியவைக்க வேண்டியிருக்கிறது. எப்படி அவனுக்குப் புரியவைப்பாள்? அவளது விசுவாசத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

      ‘பேச வேண்டிய காலத்தை’ ஞானமாய்த் தேர்ந்தெடுக்கிறாள்

      5, 6. (அ) பிரசங்கி 3:​1, 7-ல் காணப்படும் நியமத்தை எஸ்தர் எப்படிப் பொருத்தினாள்? (ஆ) அவள் தன் கணவரைச் சந்தித்துப் பேசிய விதம் ஞானமானது என்று எப்படிச் சொல்லலாம்?

      5 கொலுமண்டபத்திலேயே எல்லாப் பிரச்சினையையும் மன்னரிடம் எஸ்தர் கொட்டிவிடுவாளா? அப்படிச் செய்தால் அவரை அவமானப்படுத்தியதாய் ஆகிவிடுமே. அதோடு, அரசரின் ஆலோசகனாகிய ஆமானுக்கு அவளது குற்றச்சாட்டுகளை எதிர்த்து வாதாட சந்தர்ப்பம் கிடைத்துவிடுமே. ஆகையால், எஸ்தர் என்ன செய்கிறாள்? நூற்றாண்டுகளுக்கு முன்பு, சாலொமோன் ராஜா கடவுளது சக்தியால் இப்படி எழுதினார்: “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; . . . மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு.” (பிர. 3:​1, 7) வளர்ப்புத் தகப்பனும் விசுவாசமுள்ள மனிதருமான மொர்தெகாய் இந்த இளம் பெண்ணுக்கு இப்படிப்பட்ட நியமங்களைச் சிறுவயதுமுதல் கற்றுக்கொடுத்ததை நாம் கற்பனையில் காணலாம். காலநேரம் பார்த்துப் பேசுவதன் முக்கியத்துவத்தை எஸ்தர் புரிந்து வைத்திருந்தாள்.

      6 “மன்னர் விரும்பினால், இன்று நான் வைத்திருக்கும் விருந்திற்குத் தாங்களும் ஆமானும் வருகை தர வேண்டும்” என்று எஸ்தர் சொல்கிறாள். (எஸ்தர் 5:​4, பொ.மொ.) அரசர் ஒப்புதல் அளிக்கிறார், ஆமானை வரவழைக்கிறார். எஸ்தர் எவ்வளவு ஞானமாய்ப் பேசினாள் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? தன்னுடைய கணவரின் கண்ணியத்தைக் காப்பாற்றுகிறாள், அதேசமயத்தில் தன்னுடைய மனதில் தேங்கி நிற்கும் கவலையை அவரிடம் கொட்டுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குகிறாள்.​—நீதிமொழிகள் 10:​19-ஐ வாசியுங்கள்.

      7, 8. எஸ்தருடைய முதல் விருந்து எப்படி இருந்தது, அரசரிடம் பேசுவதை அவள் ஏன் தள்ளிப்போட்டாள்?

      7 அந்த விருந்தை எஸ்தர் பார்த்துப் பார்த்து ஏற்பாடு செய்கிறாள் என்பதில் சந்தேகமே இல்லை. கணவருக்குப் பிடித்தமான எல்லாப் பதார்த்தங்களையும் தயார் செய்கிறாள். அரசர் சந்தோஷமாய் இருப்பதற்காக அந்த விருந்தில் திராட்சமதுவையும் பரிமாறுகிறாள். (சங். 104:15) அகாஸ்வேரு அனுபவித்து மகிழ்கிறார்; எஸ்தரின் வேண்டுகோள் என்ன என மீண்டும் கேட்கத் தூண்டும் அளவுக்கு அந்த விருந்து அருமையாக அமைகிறது. பேசுவதற்கு இது ஏற்ற தருணமாக இருக்குமா?

      8 இருக்காது என எஸ்தர் எண்ணுகிறாள். அடுத்த நாளும் இன்னொரு விருந்துக்கு வரச் சொல்லி அரசரையும் ஆமானையும் அழைக்கிறாள். (எஸ்தர் 5:​7, 8) ஏன் அவள் தள்ளிப்போடுகிறாள்? இதை நினைவில்கொள்ளுங்கள்... அரசரின் ஆணையால் எஸ்தருடைய இனத்தார் எல்லோரும் மரணத்தை சந்திக்கப்போகிறார்கள்! இத்தனை உயிர்கள் ஆபத்தில் இருப்பதால், எஸ்தர் தக்க தருணம் பார்த்துப் பேச வேண்டியிருக்கிறது. அதனால் அவள் காத்திருக்கிறாள், அவரைத் தன் இதய சிம்மாசனத்தில் அமர்த்தியிருப்பதைக் காட்ட இன்னொரு சந்தர்ப்பத்தை உருவாக்குகிறாள்.

      9. பொறுமை எந்தளவு மதிப்புமிக்கது, இந்த விஷயத்தில் நாம் எவ்வாறு எஸ்தரின் முன்மாதிரியைப் பின்பற்றலாம்?

      9 பொறுமை ஓர் அரிய பண்பு, அற்புத பண்பு. அவள் தவித்துக் கொண்டிருந்தாலும்... தன்னுடைய மனதில் இருப்பதைக் கொட்ட துடித்துக் கொண்டிருந்தாலும்... சரியான சமயம் வரும்வரை பொறுமையுடன் காத்திருக்கிறாள். அவளுடைய முன்மாதிரியிலிருந்து நாம் நிறையக் கற்றுக்கொள்ளலாம். உதாரணத்துக்கு, அதிகாரத்தில் இருப்பவர்கள் சில தவறுகளைச் சரிசெய்யாமல் இருப்பதை நாம் எல்லோருமே கவனிக்கலாம்; அவர்களிடம் அதைப் பற்றிச் சொல்ல வேண்டிய சந்தர்ப்பத்தில், எஸ்தரைப் போல் பொறுமையைக் காட்ட வேண்டியிருக்கலாம். நீதிமொழிகள் 25:15 இப்படிச் சொல்கிறது: “நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்கப் பண்ணலாம்; இனிய நாவு எலும்பையும் நொறுக்கும்.” எஸ்தரைப் போல் ஏற்ற சமயம் வரும்வரை பொறுமையுடன் காத்திருந்தால்... சாந்தமாய்ப் பேசினால்... எலும்பை நொறுக்குவதுபோல் எதிர்ப்பை நொறுக்கிவிடலாம். எஸ்தரின் கடவுளான யெகோவா அவளது பொறுமையையும் ஞானத்தையும் ஆசீர்வதித்தாரா?

      பொறுமை நீதிக்கு வழிவகுக்கிறது

      10, 11. ஆமான் முதல் விருந்தைவிட்டுச் சென்றதும் எதனால் கோபமடைந்தான், என்ன செய்யச் சொல்லி அவனுடைய மனைவியும் நண்பர்களும் அவனைத் தூண்டினார்கள்?

      10 பல அற்புத சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறுவதற்கு அவளுடைய பொறுமை மேடை அமைத்துக் கொடுக்கிறது. முதல் விருந்து முடிந்ததும் ஆமான் உச்சி குளிர்ந்துபோகிறான்; ராஜாவும் ராணியும் தன்னை விசேஷமாக நடத்துவதை எண்ணி ‘சந்தோஷத்துடனும் மனமகிழ்ச்சியுடனும்’ புறப்பட்டுப் போகிறான். ஆனால், கோட்டை வாசலைக் கடந்து செல்லும்போது, அவனுடைய கண்கள் மொர்தெகாய்மீது விழுகின்றன; இப்போதும் அந்த யூதன் அவனுக்கு விசேஷ மரியாதை செலுத்துவதில்லை. மொர்தெகாய் ஆமானை மதிக்காததால் அல்ல, தன் மனசாட்சியின் காரணமாகவும் யெகோவா தேவனுடன் உள்ள பந்தத்தின் காரணமாகவுமே அவனுக்குத் தலைவணங்க மறுக்கிறார். அதனால் ஆமான் ‘அவன்மேல் உக்கிரம் நிறைந்தவனாகிறான்.’​—எஸ்தர் 5:9.

      11 ஆமான் தனக்கு ஏற்பட்ட இந்த அவமானத்தைப் பற்றித் தன் மனைவியிடமும் நண்பர்களிடமும் சொல்கிறான். அதற்கு அவர்கள்... 72 அடிக்கும் அதிகமான உயரமுள்ள ஒரு தூக்குமரத்தைத் தயார் செய்யும்படியும், மொர்தெகாயை அதில் தொங்கவிட அரசரிடம் அனுமதி பெறும்படியும் சொல்கிறார்கள். அந்த யோசனை ஆமானுக்குப் பிடித்திருக்கிறது, உடனே காரியத்தில் இறங்குகிறான்.​—எஸ்தர் 5:​12-14.

      12. அரசு பதிவுகளைச் சத்தமாய் வாசிக்கச் சொல்லி ஏன் அரசர் கேட்டுக்கொண்டார், அதிலிருந்து எதைத் தெரிந்துகொண்டார்?

      12 இதற்கிடையே, அரசருக்கு அன்றைய ராத்திரி வழக்கத்திற்கு மாறான ராத்திரியாய் இருக்கிறது. ‘ராஜாவுக்கு நித்திரை வரவில்லை.’ அதனால், அரசு பதிவுகளை எடுத்து சத்தமாய் வாசிக்கச் சொல்லிக் கேட்டுக்கொள்கிறார். அகாஸ்வேரு அரசரைத் தீர்த்துக்கட்ட தீட்டப்பட்ட சதியைப் பற்றிய பதிவு வாசிக்கப்படுகிறது. அப்போது, அதைப் பற்றிய எல்லா விவரங்களும்... சதி செய்தவர்கள் பிடிக்கப்பட்டது, அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது என எல்லா விவரங்களும்... அவரது மனத்திரையில் வந்து விழுகின்றன. உடனே, அந்தச் சதியை அம்பலப்படுத்திய மொர்தெகாயைப் பற்றி அரசர் யோசிக்கிறார். அவருக்கு என்ன சன்மானம் வழங்கப்பட்டது எனக் கேட்கிறார். ஒன்றுமே வழங்கப்படவில்லை என்ற பதில் கிடைக்கிறது.​—எஸ்தர் 6:​1-3-ஐ வாசியுங்கள்.

      13, 14. (அ) எல்லாக் காரியங்களும் எப்படி ஆமானுக்கு எதிராக நடக்க ஆரம்பித்தன? (ஆ) ஆமானுடைய மனைவியும் நண்பர்களும் அவனிடம் என்ன சொன்னார்கள்?

      13 கொதிப்படைந்து, தான் கவனக்குறைவாக விட்டுவிட்ட இந்தக் காரியத்தைச் செய்துமுடிக்க எந்த அரசு அதிகாரியாவது இருக்கிறாரா எனக் கேட்கிறார். சரியாக அந்த நேரம் பார்த்து அரசரின் அரண்மனைக்கு ஆமான் வருகிறான், அதுவும் வழக்கத்திற்கு முன்னதாகவே! ஏன்? மொர்தெகாய்க்கு மரண தண்டனை வழங்குவதற்கு அரசரிடம் அனுமதி பெற துடியாய்த் துடிக்கிறான். ஆனால் ஆமான் இதைப் பற்றி அரசரிடம் கேட்பதற்குமுன், அரசர் கௌரவிக்க விரும்புகிற மனிதருக்கு என்ன செய்ய வேண்டும் என்று அவர் அவனிடம் கேட்கிறார். தன்னைக் கௌரவிக்கத்தான் அரசர் இப்படிக் கேட்கிறார் என ஆமான் மனக்கோட்டை கட்டுகிறான். அதனால் அந்த மனிதரை மிகவும் பகட்டாய்க் கௌரவிக்கலாம் என்ற யோசனையை முன்வைக்கிறான்; அதாவது, அவருக்கு ராஜ உடை அணிவிக்க வேண்டும்... ஓர் உயர் அதிகாரி அவரை அரசரின் குதிரையில் அமர்த்தி ராஜ மரியாதையுடன் சூசான் முழுவதையும் பவனிவரச் செய்ய வேண்டும்... அதோடு குதிரைக்கு முன்னால் சென்று எல்லோரும் கேட்க அவருடைய புகழைப் பறைசாற்ற வேண்டும்... என்றெல்லாம் சொல்கிறான். கௌரவிக்கப்பட வேண்டிய அந்த மனிதர் மொர்தெகாய்தான் என்று அரசர் சொன்னதும் ஆமானின் முகம் எப்படி அஷ்டகோணலாக மாறியிருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். மொர்தெகாயின் புகழைப் பறைசாற்ற அரசர் யாரை நியமிக்கிறார்? ஆமானைத்தான்!​—எஸ்தர் 6:​4-10.

      14 அரசர் ஆணையிட்ட வேலையை ஆமான் வேறு வழியில்லாமல் வெறுப்புடன் செய்கிறான், பின்பு நொந்துபோய் வேகமாக வீட்டுக்குப் போகிறான். இவையெல்லாம் கெட்ட சகுனம்... யூதனாகிய மொர்தெகாய்க்கு எதிராக அவன் நடத்துகிற போராட்டத்தில் தோல்வி அடையப்போவது உறுதி... என்றெல்லாம் அவனுடைய மனைவியும் நண்பர்களும் சொல்கிறார்கள்.​—எஸ்தர் 6:​12, 13.

      15. (அ) எஸ்தருடைய பொறுமையால் உண்டான நன்மை என்ன? (ஆ) ‘காத்திருப்பது’ ஏன் ஞானமானது?

      15 எஸ்தர் பொறுமையாக இருப்பதால், அரசரிடம் தன் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க அடுத்த நாள்வரை காத்திருப்பதால், ஆமான் தனக்குத்தானே குழிதோண்ட சந்தர்ப்பம் கிடைக்கிறது. அரசர் உறங்காமல் இருப்பதற்கு யெகோவா காரணமாக இருந்திருக்கலாம், அல்லவா? (நீதி. 21:1) ‘காத்திருக்க’ வேண்டுமெனக் கடவுளுடைய வார்த்தை நம்மை உற்சாகப்படுத்துவதில் ஆச்சரியமே இல்லை. (மீகா 7:​7-ஐ வாசியுங்கள்.) நாம் கடவுளுக்காகக் காத்திருக்கும்போது, நம் பிரச்சினைகளுக்கு அவர் தரும் தீர்வுகள் நாம் கண்டுபிடிக்கும் தீர்வுகளைவிட மிக மிக அருமையாக இருப்பதைக் காணலாம்.

      தைரியமாய்ப் பேசுகிறாள்

      16, 17. (அ) எஸ்தர் ‘பேச வேண்டிய காலம்’ எப்போது வந்தது? (ஆ) மன்னரின் முன்னாள் மனைவி வஸ்திக்கும் எஸ்தருக்கும் என்ன வேறுபாடு?

      16 அரசரின் பொறுமையை இதற்கு மேலும் சோதிக்க எஸ்தர் துணிவதில்லை; இரண்டாம் விருந்தில், எல்லாவற்றையும் அவரிடம் தெரிவிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் எப்படி? அரசரே அவளுக்கு வாய்ப்பு அளிக்கிறார், அவளுடைய வேண்டுகோள் என்ன என்று மீண்டும் கேட்கிறார். (எஸ்தர் 7:2) எஸ்தர் ‘பேச வேண்டிய காலம்’ வந்துவிட்டது.

      17 அரசரிடம் பேசுவதற்கு முன்னால் எஸ்தர் தன் கடவுளிடம் மௌனமாய் ஜெபம் செய்வதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். அதன்பின், ‘உம் கண்களில் எனக்குத் தயவு கிடைத்தால், அரசே! உமக்கு நலமெனப்பட்டால், எனது விண்ணப்பத்திற்கு இணங்க எனக்கும் என் வேண்டுகோளின்படி என் மக்களுக்கும் உயிர்ப்பிச்சை அருள்வீராக!’ என்று சொல்கிறாள். (எஸ்தர் 7:​3, பொ.மொ.) ராஜாவுக்கு நலமெனப் படுகிற எந்தத் தீர்மானத்திற்கும் தான் தலைவணங்குவதாகச் சொல்லி அவருக்கு அவள் உறுதியளிப்பதைக் கவனியுங்கள். வேண்டுமென்றே தன் கணவனை அவமானப்படுத்திய வஸ்திக்கும், அதாவது மன்னரின் முன்னாள் மனைவிக்கும், எஸ்தருக்கும் எவ்வளவு வேறுபாடு! (எஸ்தர் 1:​10-12) அதோடு, ஆமான்மீது அரசர் நம்பிக்கை வைப்பது எவ்வளவு பெரிய மடத்தனம் என்று சொல்லி அவரை எஸ்தர் பரிகாசம் செய்யவில்லை. மாறாக, தன் உயிருக்கு வரும் ஆபத்திலிருந்து பாதுகாக்கச் சொல்லித்தான் மன்றாடுகிறாள்.

      18. பிரச்சினையை அரசருக்கு எப்படி எஸ்தர் அம்பலப்படுத்தினாள்?

      18 அதைக் கேட்டு அரசர் பதறிப்போகிறார், திகைத்துப்போகிறார். அரசியைக் கொல்ல யாருக்குத் துணிச்சல் வரும்? மேலும் எஸ்தர் அவரிடம், “என் மக்களும் நானும் கொலையுண்டு அழிந்து ஒழிந்து போகும்படி விலை பேசப்பட்டிருக்கிறோம்; ஆண்களும் பெண்களுமாக நாங்கள் அடிமைகளாய் விற்கப்பட்டிருந்தால்கூட நான் மௌனமாய் இருந்திருப்பேன். ஆனால் மன்னருக்கு உண்டாகும் இழப்பிற்கு எதிரியால் ஈடுசெய்ய முடியாது” என்று சொல்கிறாள். (எஸ்தர் 7:​4, பொ.மொ.) பிரச்சினையை எஸ்தர் அம்பலப்படுத்தியபோதிலும், தானும் தன் இனத்தாரும் அடிமைகளாய் விற்கப்பட்டிருந்தால்கூட அமைதியாய் இருந்திருப்பதாகச் சொல்கிறாள். ஆனால், இப்படிப்பட்ட இனப் படுகொலையால் அரசருக்கே பேரிழப்பு ஏற்படும்போது எப்படி அவளால் பேசாமல் இருக்க முடியும்!

      19. பக்குவமாய்ப் பேசும் கலையைப் பற்றி எஸ்தரிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

      19 பக்குவமாய்ப் பேசும் கலையைப் பற்றி எஸ்தருடைய முன்மாதிரி நமக்கு நிறையக் கற்பிக்கிறது. முக்கியமான ஒரு பிரச்சினையை அன்பானவரிடமோ அதிகாரத்தில் இருப்பவரிடமோ சுட்டிக்காட்டும்போது, பொறுமையாகவும் மரியாதையாகவும் எதார்த்தமாகவும் பேசுவது மிகவும் கைகொடுக்கும்.​—நீதி. 16:​21, 23, NW.

      20, 21. (அ) ஆமானுடைய சதியை எப்படி எஸ்தர் அம்பலப்படுத்தினாள், அப்போது அரசர் எப்படிப் பிரதிபலித்தார்? (ஆ) ஆமான் ஒரு சதிகாரன், கோழை என்பது அம்பலமானபோது என்ன செய்தான்?

      20 “இப்படிச் செய்யத் துணிகரங்கொண்டவன் யார்? அவன் எங்கே?” என்று அகாஸ்வேரு கேட்கிறார். இதைக் கற்பனை செய்து பாருங்கள்: எஸ்தர் தன் விரலால் சுட்டிக்காட்டி, “சத்துருவும் பகைஞனுமாகிய அந்த மனிதன் இந்தத் துஷ்ட ஆமான்தான்” என்று சொல்கிறாள். அடுத்து என்ன நடக்கும்? ஆமான் அப்படியே கதிகலங்கிப்போகிறான். மன்னரின் முகம் கோபத்தில் சிவக்கிறது. நம்பிக்கைக்குரியவனே தன் அன்பு மனைவியின் உயிருக்கு உலைவைக்கத் துணிந்துவிட்டானே... தன்னையே ஆணை பிறப்பிக்க வைத்து ஏமாற்றிவிட்டானே... என்றெல்லாம் யோசிக்க யோசிக்க அவரது உள்ளம் கொதிக்கிறது. ஒரு நிதானத்திற்கு வருவதற்காக, ராஜா விருட்டென எழுந்து தோட்டத்திற்குள் சென்றுவிடுகிறார்!​—எஸ்தர் 7:​5-7.

      இரண்டாவது நாள் விருந்தின்போது, ஆமானுக்கு முன்பாகவே அவனை பற்றிய எல்லா விஷயங்களையும் அகாஸ்வேரு ராஜாவிடம் எஸ்தர் ராணி தைரியமாக சொல்கிறாள்

      ஆமானின் பொல்லாத செயலை எஸ்தர் தைரியமாய்ச் சுட்டிக்காட்டினாள்

      21 ஆமான் ஒரு சதிகாரன், கோழை என்பது அம்பலமானதால் அரசியின் கால்களில் விழுந்து கெஞ்சிக் கூத்தாடுகிறான். ராஜா திரும்பி வரும்போது, ஆமான் எஸ்தருடைய மஞ்சத்தில் விழுந்து அவளிடம் மன்றாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறார்; அரசருடைய மாளிகைக்குள்ளேயே அரசியைக் கற்பழிக்க முயன்றதாகக் கோபாவேசத்தோடு அவன்மீது குற்றம் சாட்டுகிறார். ஆமானுக்குச் சாவு மணி அடிக்கப்படுகிறது! காவலர் அவனுடைய முகத்தை மூடி வெளியே கொண்டு செல்கிறார்கள். அப்போது, மொர்தெகாய்க்காக ஆமான் செய்துவைத்திருக்கிற மாபெரும் தூக்குமரத்தைப் பற்றி அரசவை அதிகாரிகளில் ஒருவர் சொல்கிறார். ஆமானை உடனே அதில் தொங்கவிடச் சொல்லி அகாஸ்வேரு ஆணை பிறப்பிக்கிறார்.​—எஸ்தர் 7:​8-10.

      22. ஒருபோதும் மனமுறிந்து போகாமலிருக்கவும் நம்பிக்கையிழந்து விடாதிருக்கவும் விசுவாசத்தை இழந்துவிடாதிருக்கவும் எஸ்தருடைய உதாரணம் எப்படி நமக்கு உதவுகிறது?

      22 அநீதி நிறைந்த இந்த உலகில் ஒருபோதும் நீதி கிடைக்காது என நினைப்பது சுலபம். நீங்கள் எப்போதாவது அப்படி நினைத்திருக்கிறீர்களா? எஸ்தர் ஒருபோதும் மனமுறிந்து போய்விடவில்லை, நம்பிக்கையற்றவளாய் ஆகிவிடவில்லை, விசுவாசத்தை இழந்துவிடவுமில்லை. காலம் வந்தபோது, நீதிநியாயத்துக்காகத் தைரியமாய்ப் பேசினாள், பின்பு மற்றெல்லாவற்றையும் யெகோவாவின் கையில் விட்டுவிட்டு நம்பிக்கையுடன் காத்திருந்தாள். நாமும் அதையே செய்வோமாக! எஸ்தரின் காலத்திலும் சரி நம் காலத்திலும் சரி, யெகோவா மாறவில்லை. ஆமானுக்குச் செய்ததுபோல், பொல்லாத மனிதர்களை... வஞ்சகம் நிறைந்தவர்களை... தாங்கள் வெட்டிய குழியிலேயே விழவைக்க இன்றும் அவரால் முடியும்.​—சங்கீதம் 7:​11-16-ஐ வாசியுங்கள்.

      தன்னலமற்ற செயல் ​—யெகோவாவுக்காக... அவரது மக்களுக்காக...

      23. (அ) மொர்தெகாய்க்கும் எஸ்தருக்கும் அரசர் எவ்வாறு பலனளித்தார்? (ஆ) பென்யமீனைக் குறித்து மரணப்படுக்கையிலிருந்த யாக்கோபு சொன்ன தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியது? (“தீர்க்கதரிசனம் நிறைவேறியது” என்ற பெட்டியைக் காண்க.)

      23 கடைசியில், மொர்தெகாய் யாரென அரசர் அறிந்துகொள்கிறார். ஆம், தன்னைக் கொலை செய்ய சதிகாரர்கள் போட்ட திட்டத்திலிருந்து காப்பாற்றியவர் மட்டுமல்ல, எஸ்தருடைய வளர்ப்புத் தகப்பன் என்பதையும் அறிந்துகொள்கிறார். ஆமானின் பதவியை மொர்தெகாய்க்குக் கொடுத்து அவரைப் பிரதம மந்திரி ஆக்குகிறார். ஆமானின் வீட்டையும் அவன் குவித்து வைத்திருந்த செல்வத்தையும் எஸ்தருக்குக் கொடுக்கிறார், அவள் மொர்தெகாயை அதற்குப் பொறுப்பாளராய் நியமிக்கிறாள்.​—எஸ்தர் 8:​1, 2.

      24, 25. (அ) ஆமானின் சதி அம்பலமான பின்பும் ஏன் எஸ்தரால் கவலையின்றி இருக்க முடியவில்லை? (ஆ) எஸ்தர் எப்படி மீண்டும் ஒருமுறை தன்னுடைய உயிரைப் பணயம் வைத்தாள்?

      24 இப்போது, எஸ்தருக்கும் மொர்தெகாய்க்கும் ஆபத்து நீங்கிவிட்டதால் அரசி இனி எந்தக் கவலையுமில்லாமல் இருந்துவிட முடியுமா? அவள் தன்னலமாய் இருந்தால் மட்டுமே கவலையில்லாமல் இருக்க முடியும். அந்தச் சமயத்தில், யூதர்கள் அனைவரையும் கொலை செய்ய ஆமான் போட்ட ஆணை சாம்ராஜ்யத்தின் மூலைமுடுக்கெல்லாம் எட்டுகிறது. ஆமான் இந்தக் கொலைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நாளைத் தீர்மானிப்பதற்காக பூர் என்றழைக்கப்படும் சீட்டுப்போட்டுப் பார்த்திருந்தான். அது ஒருவகை மாயமந்திரமாக இருக்கலாம். (எஸ்தர் 9:​24-26) அந்த நாள் வர இன்னும் மாதங்கள் இருக்கின்றன, ஆனால் அது மிக வேகமாய் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது. இப்போதும் இந்த இனப்படுகொலையைத் தடுத்துநிறுத்த முடியுமா?

      25 எஸ்தர் மீண்டும் தன்னலமின்றி தன் உயிரைப் பணயம் வைக்கிறாள், அரசரின் அழைப்பு இல்லாமலேயே மறுபடியும் அவர் முன்னால் செல்கிறாள். இந்த முறை தனது இனத்தாருக்காகக் கதறி அழுகிறாள்; இந்தப் படுபயங்கரமான ஆணையை ரத்து செய்யச் சொல்லி கணவரிடம் மன்றாடுகிறாள். ஆனால், பெர்சிய மன்னருடைய பெயரில் இயற்றப்பட்ட சட்டங்களை அவரால்கூட ரத்து செய்ய முடியாது. (தானி. 6:​12, 15) ஆகையால், ஒரு புதிய சட்டத்தை இயற்ற எஸ்தருக்கும் மொர்தெகாய்க்கும் அரசர் அதிகாரம் அளிக்கிறார். இப்போது, இரண்டாம் அறிவிப்பு செல்கிறது; தாக்குபவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் உரிமை யூதர்களுக்கு வழங்கப்படுகிறது. சாம்ராஜ்யத்தின் சந்துபொந்தெல்லாம் தூதுவர்கள் குதிரையில் பாய்ந்துசென்று யூதர்களுக்கு இந்தச் சந்தோஷமான செய்தியை அறிவிக்கிறார்கள். பலரது இதயத்தில் புது நம்பிக்கை பிறக்கிறது. (எஸ்தர் 8:​3-16) பரந்துவிரிந்த அந்தச் சாம்ராஜ்யத்தில் பரவிக்கிடக்கும் யூதர்கள் ஆயுதம் ஏந்திக்கொண்டு போருக்குத் தயாராகிறார்கள்; இந்தப் புதிய ஆணை மட்டும் பிறப்பிக்கப்படாமல் இருந்தால் இப்படி அவர்களால் ஒருபோதும் செய்ய முடியாது. இப்போது கேள்வி என்னவென்றால், ‘சேனைகளுடைய யெகோவா’ தமது மக்களுடன் இருக்கிறாரா?​—1 சா. 17:45.

      எஸ்தரும் மொர்தெகாயும் இரண்டாவது ஆணையை சொல்லச் சொல்ல ஒரு வாலிபன் அதை எழுதிகிறான்

      பெர்சிய சாம்ராஜ்யத்திலிருந்த யூதர்களுக்கு எஸ்தரும் மொர்தெகாயும் ஆணை அனுப்பினார்கள்

      26, 27. (அ) யெகோவா தமது மக்களுக்கு எப்பேர்ப்பட்ட வெற்றியைக் கொடுத்தார்? (ஆ) ஆமானின் மகன்கள் அழிக்கப்பட்டபோது எந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறியது?

      26 குறிக்கப்பட்ட அந்த நாள் வரும்போது கடவுளுடைய மக்கள் தயாராய் இருக்கிறார்கள். பெர்சிய அதிகாரிகள் பலரும்கூட அவர்களுடைய பக்கம் நிற்கிறார்கள்; ஏனென்றால், யூதரான மொர்தெகாய் புதிய பிரதம மந்திரியாகப் பதவியேற்ற செய்தி எட்டுத் திக்கும் பரவியிருக்கிறது. யெகோவா தமது மக்களுக்கு மாபெரும் வெற்றியைத் தருகிறார். எதிரிகள் திரும்ப பழிவாங்காமல் இருப்பதற்காக அவர்களை அடியோடு ஒழித்துக்கட்ட யெகோவா தமது மக்களுக்குத் துணைபுரிகிறார்.a​—எஸ்தர் 9:​1-6.

      27 அந்தப் பொல்லாத ஆமானின் பத்து மகன்களும் உயிருடன் இருக்கும்வரை அவனுடைய வீட்டை மொர்தெகாய் பத்திரமாய் நிர்வகிக்க முடியாது. அதனால் அவர்களும் கொலை செய்யப்படுகிறார்கள். (எஸ்தர் 9:​7-10) அப்போது, ஒரு பைபிள் தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது; அதாவது, அமலேக்கியர் தமது மக்களுக்குப் பயங்கர எதிரிகளாய் இருந்ததால் அவர்கள் பூண்டோடு அழிக்கப்படுவார்கள் என்று கடவுள் சொன்ன தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது. (உபா. 25:​17-19) கண்டனம் செய்யப்பட்ட அந்த அமலேக்கியரில் கடைசி கடைசியாக எஞ்சியிருந்தவர்கள் இந்த ஆமானின் மகன்களாய் இருந்திருக்கலாம்.

      28, 29. (அ) எஸ்தரும் அவரது மக்களும் போரில் ஈடுபடுவது ஏன் யெகோவாவின் சித்தமாய் இருந்தது? (ஆ) எஸ்தரின் முன்னுதாரணம் இன்று நமக்கு ஏன் ஆசீர்வாதமாய் இருக்கிறது?

      28 எஸ்தர் தன்னுடைய இளம் தோள்களில் பெரும் பாரங்களைச் சுமக்க வேண்டியிருந்தது, அதாவது போர் மற்றும் மரண தண்டனை சம்பந்தமான அரசாணைகளைப் பிறப்பிக்க வேண்டியிருந்தது. அது அவ்வளவு எளிதாக இருந்திருக்காது. ஆனால், யெகோவாவின் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்பது அவரது சித்தமாய் இருந்தது; வாக்குப்பண்ணப்பட்ட மேசியா... ஆம், முழு மனிதகுலத்துக்கும் நம்பிக்கை நட்சத்திரமாய் விளங்கப்போகும் மனிதர்... இஸ்ரவேலருடைய வம்சாவளியில் வர வேண்டியிருந்தது! (ஆதி. 22:18) மேசியாவாகிய இயேசு பூமிக்கு வந்தபோது, தம் சீடர்கள் போரில் ஈடுபடக் கூடாதென்ற கட்டளையைக் கொடுத்தார்; இது கடவுளுடைய ஊழியர்களுக்கு இன்று ஆனந்தம் அளிக்கிறது.​—மத். 26:52.

      29 என்றாலும், கிறிஸ்தவர்களாகிய நாம் ஆன்மீகப் போரில் ஈடுபடுகிறோம்; ஏனென்றால், யெகோவா தேவன்மீது நாம் வைத்திருக்கிற விசுவாசத்தைக் குலைத்துப்போட சாத்தான் எப்போதையும்விட இன்று அதிக வெறியாய் இருக்கிறான். (2 கொரிந்தியர் 10:​3, 4-ஐ வாசியுங்கள்.) எஸ்தரின் முன்னுதாரணம் நமக்கு எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதம்! அவளைப் போல, ஞானமாகவும் பொறுமையாகவும் பக்குவமாகவும் பேசுவதன் மூலம்... தைரியமாய்ச் செயல்படுவதன் மூலம்... கடவுளுடைய மக்களுக்குத் தன்னலமற்ற ஆதரவு தருவதன் மூலம்... நம் விசுவாசத்தைக் காட்டுவோமாக!

      எஸ்தரைப் பற்றிய கேள்விகள்

      யெகோவாவை வழிபடாத ஒருவரை எஸ்தர் திருமணம் செய்ய ஏன் மொர்தெகாய் சம்மதித்தார்?

      மொர்தெகாய் ஒரு சந்தர்ப்பவாதி... சுயகௌரவத்துக்காகத்தான் ராஜாவுக்கு எஸ்தரை மணமுடிக்க விரும்பினார்... என அறிஞர்கள் சிலர் சொல்கிறார்கள். ஆனால், இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மொர்தெகாய் விசுவாசமுள்ள யூதராக இருந்ததால், யெகோவாவை வழிபடாத ஒருவரை எஸ்தர் திருமணம் செய்ய சம்மதித்திருக்கவே மாட்டார். (உபா. 7:3) அந்தத் திருமணத்தை அவர் தடுத்த நிறுத்த முயன்றதாகவும்கூட பூர்வ யூதப் பாரம்பரியம் சொல்கிறது. பெர்சிய நாட்டில் ராஜா தெய்வமாய் மதிக்கப்பட்டார், முழு அதிகாரமும் அவர் கையில்தான் இருந்தது. அப்படியிருக்க, மொர்தெகாயும் எஸ்தரும் என்ன செய்ய முடிந்திருக்கும்? அதுவும், இவர்கள் அந்த நாட்டில் அந்நியர்களாக வாழ்ந்துவந்தார்கள். எஸ்தர் ராணியாக முடிசூட்டப்பட்டதைப் பயன்படுத்தி யெகோவா தம் மக்களைப் பாதுகாத்தார் என்பது பிற்பாடு தெளிவானது.​—எஸ்தர் 4:14.

      எஸ்தர் புத்தகத்தில் ஏன் கடவுளுடைய பெயர் இல்லை?

      கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் இந்தப் புத்தகத்தை மொர்தெகாயே எழுதியதாகத் தெரிகிறது. இந்தப் புத்தகம் எருசலேமுக்குக் கொண்டு செல்லப்படுவதற்குமுன் பெர்சிய அரசு பதிவுகளோடு வைக்கப்பட்டிருக்கலாம். யெகோவாவின் பெயரை மொர்தெகாய் பயன்படுத்தியிருந்தால், பெர்சிய தெய்வங்களை வழிபட்டவர்கள் இந்தப் புத்தகத்தை அழித்துப்போட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. எப்படியிருந்தாலும் சரி, எஸ்தருடைய விஷயத்தில் யெகோவா தலையிட்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது. மூல எபிரெய பதிவில் நான்கெழுத்து வடிவிலுள்ள கடவுளுடைய பெயர் ‘அக்ராஸ்டிக்’ முறையில் எழுதப்பட்டிருக்கிறது; அதாவது, அடுத்தடுத்த நான்கு வார்த்தைகளின் முதல் எழுத்துகளை அல்லது கடைசி எழுத்துகளை ஒன்றாகக் கூட்டினால் கடவுளுடைய பெயர் வரும்.

      எஸ்தர் புத்தகத்திலுள்ள தகவல்கள் சரித்திரப்பூர்வமற்றவையா?

      விமர்சகர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். ஆனாலும், பெர்சியர்களின் அரச குடும்பத்தையும், கட்டடக் கலையையும், பழக்கவழக்கங்களையும் பற்றி எழுத்தாளர் விலாவாரியாகக் கூறியிருக்கிறார் என அறிஞர்கள் சிலர் குறிப்பிட்டிருக்கிறார்கள். தற்போதுள்ள பொது ஆவணங்களில் எஸ்தர் ராணியைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை என்பது உண்மைதான்; ஆனால், அரச குடும்பத்தைச் சேர்ந்த இன்னும் எத்தனையோ பேரைப் பற்றி சரித்திரப் பதிவுகள் சொல்வதில்லையே. அதுமட்டுமல்ல, மார்டுக்கா என்பவர் சூசான் அரண்மனையில் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்... அதுவும் எஸ்தர் புத்தகம் குறிப்பிடுகிற அதே காலப்பகுதியில் பணியாற்றி வந்தார்... எனச் சரித்திரப் பதிவுகள் காட்டுகின்றன. மொர்தெகாய் என்பதன் பெர்சிய பெயர்தான் மார்டுக்கா.

      தீர்க்கதரிசனம் நிறைவேறியது

      எஸ்தரும் மொர்தெகாயும் கடவுளுடைய மக்களுக்காகப் போராடியபோது பைபிள் தீர்க்கதரிசனம் ஒன்று நிறைவேறியது. 1,200-க்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரவேலின் மூதாதை யாக்கோபு தன் மகன்களில் ஒருவரைப் பற்றி இவ்வாறு முன்னுரைத்தார்: “பென்யமீன் பீறுகிற ஓநாய்; காலையில் தன் இரையைப் பட்சிப்பான், மாலையில் தான் கொள்ளையிட்டதைப் பங்கிடுவான்.” (ஆதி. 49:27) “காலையில்,” அதாவது இஸ்ரவேலுடைய அரச வரலாறு உதயமான சமயத்தில், சவுல் ராஜா உட்பட பென்யமீன் வம்சத்தைச் சேர்ந்த மற்ற வீரர்கள் யெகோவாவின் மக்களுக்காகப் போராடினார்கள். “மாலையில்,” அதாவது இஸ்ரவேலின் அரச பரம்பரை அஸ்தமித்த பின்பு, பென்யமீன் வம்சத்தைச் சேர்ந்த எஸ்தரும் மொர்தெகாயும் யெகோவாவின் எதிரிகளோடு போராடி ஜெயித்தார்கள். ஒரு கருத்தில் பார்த்தால், தாங்கள் கொள்ளையிட்டதைப் பங்கிட்டார்கள்; ஏனென்றால், ஆமானுக்கு இருந்த ஏகபோக சொத்து முழுவதும் இவர்கள் கைக்கு வந்தது.

      a யூதர்கள் தங்களுடைய எதிரிகளை அடியோடு ஒழித்துக்கட்டுவதற்காக அடுத்த நாளும் போரிட அரசர் அனுமதி தருகிறார். (எஸ்தர் 9:​12-14) இன்றும்கூட, ஆண்டுதோறும் ஆதார் மாதத்தில் யூதர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடி வருகிறார்கள்; நம் காலண்டர்படி, இந்த நாள் பிப்ரவரி கடைசியில் அல்லது மார்ச் ஆரம்பத்தில் வருகிறது. இந்தப் பண்டிகை பூரிம் என அழைக்கப்படுகிறது; இஸ்ரவேலரை ஒழித்துக்கட்ட வேண்டுமென்ற வெறியுடன் ஆமான் போட்ட சீட்டின் பெயரில் இப்படி அழைக்கப்படுகிறது.

      சிந்திக்க . . .

      • “பேச ஒரு காலமுண்டு” என்பதை எஸ்தர் எப்படி ஞானமாய்க் காட்டினாள்?

      • எஸ்தருடைய பொறுமையால் விளைந்த ஆசீர்வாதங்கள் யாவை?

      • தனது மக்களைப் பாதுகாப்பதில் எஸ்தர் எப்படித் தைரியத்தையும் தன்னலமற்ற குணத்தையும் காட்டினாள்?

      • எஸ்தருடைய விசுவாசத்தை என்னென்ன விதங்களில் பின்பற்ற நீங்கள் திடத்தீர்மானமாய் இருக்கிறீர்கள்?

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்