இதுவே கொடிய காலம்
‘சமாளிக்க முடியாத கொடிய காலங்களை’ மனிதகுலம் சந்திக்குமென பைபிள் முன்னறிவித்தது. இதை ‘கடைசி நாட்கள்’ என வர்ணிக்கிறது. (2 தீமோத்தேயு 3:1–5; 2 பேதுரு 3:3–7) ‘சகாப்தத்தின் முடிவைக்’ குறித்து தம் சீடர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தபோது இந்தக் கொடிய காலத்தைப் பற்றித்தான் இயேசு கிறிஸ்துவும் பேசினார். (மத்தேயு 24:3, NW) இந்தக் காலக்கட்டத்தில்தான் நாமும் வாழ்கிறோமா? பைபிள் முன்னறிவித்திருப்பதை இங்கே கொடுக்கப்பட்டுள்ள சமீப அறிக்கைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்.
பைபிளின் முன்னறிவிப்பு: உலகளவில் போர்கள்—லூக்கா 21:10; வெளிப்படுத்துதல் 6:4.
சமீப அறிக்கைகள்: “20-ஆம் நூற்றாண்டில் நடந்த போர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை, கடந்த 19 நூற்றாண்டுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கையைவிட மூன்று மடங்குக்கும் அதிகம்.”—உவர்ல்டுவாட்ச் நிறுவனம்.
பைபிளின் முன்னறிவிப்பு: பஞ்சங்களும் நோய்களும்—லூக்கா 21:11; வெளிப்படுத்துதல் 6:5–8.
சமீப அறிக்கைகள்: 2004-ல் சுமார் 86 கோடியே 30 லட்ச மக்களுக்குப் போதுமான உணவு கிடைக்கவில்லை; 2003-ஐவிட 70 லட்சம் பேர் அதிகமாய் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.—ஐக்கிய நாட்டு உணவு மற்றும் வேளான்மை அமைப்பு.
ஏறத்தாழ 100 கோடி மக்கள் சேரிகளில் வாழ்கிறார்கள்; சுமார் 260 கோடி மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் இல்லை; கிட்டத்தட்ட 110 கோடி மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் வசதி இல்லை.—உவர்ல்டுவாட்ச் நிறுவனம்.
மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்கள் 50 கோடி; எச்ஐவி-எய்ட்ஸுடன் போராடுகிறவர்கள் நான்கு கோடி; 2005-ல் காசநோய்க்கு இரையானவர்கள் ஒரு கோடியே அறுபது லட்சம்.—உலக சுகாதார நிறுவனம்.
பைபிளின் முன்னறிவிப்பு: பூமியின் சீரழிவு—வெளிப்படுத்துதல் 11:18.
சமீப அறிக்கைகள்: “மனிதனின் செயல்களால் பூமியில் வாழும் பல்வகை உயிரினங்கள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன.” “மனிதனுக்கு இயற்கை அளித்துவந்த சேவைகளில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பாகம் குறைந்திருப்பது உலகெங்கிலும் வெட்டவெளிச்சமாக இருக்கிறது.”—ஆயிரமாண்டு சூழியல் மதிப்பீடு.
“மனிதனால் உருவாக்கப்பட்ட பசுங்கூட வாயுக்கள் பூமியின் சீதோஷ்ண நிலையை அதிர்ச்சியூட்டும் விதத்தில் பாதித்திருக்கிறது. இதனால் இந்தக் கிரகம் கடுமையான பாதிப்புகளைச் சந்திக்கும்.”—நாஸா, விண்வெளி ஆய்வுக்கான காடர்ட் நிறுவனம்.
பைபிளின் முன்னறிவிப்பு: கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தி உலகெங்கும் அறிவிக்கப்படும்—மத்தேயு 24:14; வெளிப்படுத்துதல் 14:6, 7.
சமீப அறிக்கைகள்: 2007-ல் 69,57,852 யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை 236 நாடுகளில் அறிவிப்பதற்காக 100 கோடியே 40 லட்சத்திற்கும் அதிகமான மணிநேரங்களைச் செலவழித்தார்கள்.—2008 யெகோவாவின் சாட்சிகளின் இயர்புக்.
இந்தச் செய்திகளெல்லாம் திகிலூட்டுவதாக இருந்தாலும் நம்பிக்கையான மனநிலையுடன் இருப்பதற்கான காரணத்தைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பைபிள் அறிவித்தது. உதாரணமாகச் சொன்னால், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய ‘நற்செய்தியைக்’ குறித்து இயேசு பேசினார். கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன? ஒளிமயமான எதிர்கால நம்பிக்கையுடன் அது எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது? கடவுளுடைய அரசாங்கம் உங்களுக்காக என்னவெல்லாம் செய்யப்போகிறது? (w08 8/1)
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
இன்று நம் கண்முன் நடக்கும் சம்பவங்கள், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பைபிள் அறிவித்தவையே