உங்களுக்குத் தெரியுமா?
முதல் நூற்றாண்டில், பலி செலுத்தப்பட்ட மிருகங்களின் ரத்தத்தை ஆலய குருமார்கள் எப்படி அப்புறப்படுத்தினார்கள்?
பூர்வகால இஸ்ரவேலில் இருந்த குருமார்கள், வருஷா வருஷம், ஆயிரக்கணக்கான மிருகங்களை ஆலய பலிபீடத்தில் பலி செலுத்தினார்கள். பஸ்கா சமயத்தில், 2,50,000-க்கும் அதிகமான ஆட்டுக்குட்டிகள் பலி செலுத்தப்பட்டன என்று யூத சரித்திராசிரியர் ஜொசிஃபஸ் சொல்கிறார். அப்படியென்றால், நிறைய ரத்தம் வழிந்தோடியிருக்கும். (லேவி. 1:10, 11; எண். 28:16, 19) அத்தனை ரத்தமும் எங்கே போனது?
ஏரோது கட்டிய ஆலயத்தில், நல்ல வடிகால் அமைப்பு இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். கி.பி. 70-ல் ஆலயம் அழிக்கப்பட்ட சமயம்வரை அது பயன்பாட்டில் இருந்திருக்கிறது. ஆலயத்திலிருந்து ரத்தத்தை வெளியேற்றத்தான் இந்த வடிகால் அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அந்த வடிகால் அமைப்பின் இரண்டு சிறப்பம்சங்களைப் பார்க்கலாம்:
பலிபீடத்தின் கீழே இருந்த ஓட்டைகள்: பலிபீடத்தில் இருந்த வடிகால் அமைப்பைப் பற்றி மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொகுக்கப்பட்ட மிஷ்னாவில் இருக்கிறது. (யூதர்களின் வாய்மொழி சட்டங்களையும் பாரம்பரியங்களை விவரிக்கும் புத்தகம்) அது இப்படிச் சொல்கிறது: “[பலிபீடத்தின்] தென்மேற்கு மூலையில் இரண்டு ஓட்டைகள் இருந்தன. . . . மேற்குப் பகுதியில் இருந்தும் தெற்குப் பகுதியில் இருந்தும் வழிந்து வந்த ரத்தம் அந்த ஓட்டைகள் வழியாகப் போய், நிலத்தின் கீழே தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த கால்வாயில் கலந்து கீதரோன் பள்ளத்தாக்குக்குப் போனது.”
பலிபீடத்தில் “ஓட்டைகள்” இருந்தது உண்மை என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். ஆலயத்துக்குப் பக்கத்தில், “நன்றாக வடிவமைக்கப்பட்டிருந்த ஒரு வடிகால் அமைப்பு” கண்டுபிடிக்கப்பட்டதாக தி கேம்ப்ரிட்ஜ் ஹிஸ்ட்ரி ஆஃப் ஜூடையிஸம் என்ற புத்தகம் சொல்கிறது. “ஆலயக் குன்றில் பலிசெலுத்தப்பட்ட மிருகங்களின் ரத்தத்தோடு கலந்து வந்த தண்ணீர் வெளியேற [இந்த வடிகால் அமைப்பு] பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்” என்று அந்தப் புத்தகம் சொல்கிறது.
தண்ணீர் வசதி: பலிபீடத்தின் தரையையும் ரத்தம் வழிந்து ஓடிய ஓட்டைகளையும் சுத்தப்படுத்த குருமார்களுக்கு ஏகப்பட்ட தண்ணீர் தேவைப்பட்டிருக்கும். சுத்தப்படுத்தும் முக்கியமான வேலையைச் செய்வதற்கு உதவியாக, அவர்களுக்கு நகரத்திலிருந்து தொடர்ந்து நல்ல தண்ணீர் கிடைத்துக்கொண்டே இருந்தது. வாய்க்கால்கள், நீர்க்குழாய்கள், கிணறுகள் மற்றும் குளங்களில் இருந்து தொடர்ந்து தண்ணீர் கிடைக்கும் வசதி செய்யப்பட்டிருந்தது. “இந்தளவு தண்ணீர் வசதியோ அழுக்குத் தண்ணீரை அப்புறப்படுத்தும் வசதியோ அந்தக் காலத்தில் இருந்த வேறெந்த கோயில்களிலும் இருந்ததாகத் தெரியவில்லை” என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஜோசஃப் பேட்ரிக் சொல்கிறார்.