20 அவுன்ஸின் விலை ரூபாய் 104
கறைப்பட்ட கதவு என்ற தன்னுடைய புத்தகத்தில் ஜான் க்ரூட்ஸன், சட்டபடியும் சட்ட விரோதமாகவும் விசேஷமாக மெக்ஸிக்கோவிலிருந்து வந்து பெரும் எண்ணிக்கையில் அமெரிக்காவினுள் குடியேறும் மக்களைப் பற்றிய விஷயத்தை ஆராய்கிறார். இதில் அமெரிக்க இரத்த வங்கிகளுக்கு செல்லும் இரத்தத்தைப் பற்றியும் கூட விளக்கமளிக்கிறார்.
அமெரிக்க எல்லையில் ரோந்து செய்யும் காவலர் டெக்ஸாஸிலுள்ள எல்பாஸோவில் எவ்விதமாக சட்ட விரோதமாக வந்து குடியேறுபவர்களை அவர்களுடைய இரத்தத்தின் மூலம் பிடித்துவிடுகிறார்கள் என்பதை விளக்குகிறார்: “‘நகர காவலருக்கு’ முதல் நிறுத்திடம் ஒரு இரத்த ப்ளாஸ்மா நிலையமாகும். இது பாலங்களிலிருந்து சிறு தொலைவிலுள்ளது. மெக்ஸிக்கோவின் எல்லையை கடந்து வருபவர்களிடமிருந்து ஜூவாரஸில் (மெக்ஸிக்கோ) ஒரு நாளின் ஊதியத்துக்குச் சமமான 104 ரூபாய்க்கு 20 அவுன்ஸ் இரத்தத்தைப் பெற்றுக் கொண்டு, அதை மருத்துவமனைகளுக்கும் ஆய்வு கூடங்களுக்கும் 260 ரூபாய்க்கு விற்றுவிடுகிறார்கள். வழக்கமாக இரத்த தானம் செய்கிறவர் மாதத்துக்கு 1,053 ரூபாய் சம்பாதிக்கலாம் என்பதாக இந்த நிலையங்கள் அவைகளின் சன்னல்களில் விளம்பரம் செய்கின்றன. இந்த இரத்த வங்கிகளிலிருந்து வரும் பணமே ஜூவரஸிலுள்ள அநேகருக்கு மொத்த வருமானமாக இருக்கிறது.
“தங்கள் இரத்தத்தை விற்பதற்காக பல ஆண்டுகளாக ஜுவாரஸிலிருந்து வாரத்துக்கு இரு முறை வழக்கமாக இந்த நிலையங்களுக்கு வந்துக் கொண்டிருப்பவர்களை வில்லியம்ஸ் (எல்லைப்புற ரோந்து அதிகாரி) அடிக்கடி கவனிக்கிறார்.” ஆகவே இரத்த வங்கிகளுக்குள் செல்லும் இரத்தத்தின் தரம் எப்படிப்பட்டது என்பதை எவரும் ஊகித்துவிடலாம்.
கடவுளுடைய நோக்குநிலையிலிருந்து, இரத்தத்தின் புனிதத்தன்மயை மதிக்கும் கிறிஸ்தவர்களுக்கு இரத்தத்தை வைத்து செய்யப்படும் இந்த வியாபாரம் ஏற்றுக் கொள்ளப்பட முடியாததாகும். பூர்வ கிறிஸ்தவ சபையை நடத்தினவர்கள் எழுதியதாவது: “இரத்தத்திற்கு . . . நீங்கள் விலகியிருக்க வேண்டும் . . . அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள் மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது; இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக் கொள்வது நலமாயிருக்கும். சுகமாயிருப்பீர்களாக.”—அப்போஸ்தலர் 15:28, 29. (g88 1⁄22)