எமது வாசகரிடமிருந்து
சிறுநீரகங்கள் “உங்கள் சிறுநீரகங்கள்—உயிர்காக்கும் ஒரு வடிகட்டி” (ஆகஸ்ட் 8, 1997) என்று தலைப்பிடப்பட்ட கட்டுரை என் இதயத்தையே தொட்டதுபோல் இருந்தது. எனக்கு சிறுநீரக கோளாறு இருப்பதாக மருத்துவர் அறிவித்தார். இந்தக் கட்டுரையின் உதவியால் வேதனைப்படுவது நான் மட்டுமே அல்ல என்பதை உணர்கிறேன்.
வி. எம்., ஐக்கிய மாகாணங்கள்
எனக்கு சிறுநீரகக் கோளாறு இருப்பதால் நான்கு மாதங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றேன். நீங்கள் பிரசுரித்த கட்டுரையைப் படித்தப்பின்தான் நான் என்னுடைய உடலைப்பற்றிய விவரத்தை எந்த அளவிற்கு தெரியாமல் இருந்திருக்கிறேன் என்பது புரிந்தது. என்னுடைய நிலையைப்பற்றி இப்பொழுது என்னால் மற்றவர்களுக்குத் தெளிவாக விளக்க முடியும்.
எஸ். ஹெச்., ஜப்பான்
இந்தக் கட்டுரை என் மனைவிக்கு சிறுநீரகத்தில் புற்றுநோய் இருப்பதாக அறிவிக்கப்பட்ட சமயத்தில் வெளிவந்தது. அந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், எங்கள் அறுவை சிகிச்சை மருத்துவர் சிறுநீரகத்தின் வித்தியாசமான செயல்பாடுகளை விவரித்தபோது அவற்றை தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது. என்னுடைய மனைவிக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது; இப்போது உடல் நலம் தேறி வருகிறாள்.
ஜி. எஸ்., இந்தியா
சிற்பியின் கதை “உலகப் புகழும் இதற்கு நிகராகாது” (ஆகஸ்ட் 22, 1997) என்ற தலைப்பில் வந்த ச்செலோ பெர்ட்டோ என்பவரின் அனுபவம் என் இதயத்தைத் தொட்டது. கிறிஸ்தவனாவதற்கு முன்பாக நான் இசையிலும் நாடகத்திலும் பேரும் புகழும் பெறவேண்டும் என்று முயன்று வந்தேன். என்னுடைய முழுக்காட்டுதலுக்கு முந்திய இரவில் ஒரு பிரபலமான தொலைக்காட்சித் தொடரை எழுதுபவர்களிடமிருந்து எனக்கு ஒரு போன்கால் வந்தது. அவர்களிடம் கலை நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதை விட்டுவிட்டதாக நான் சொன்னபோது, “ஒனக்கென்ன பயித்தியமா புடிச்சிடுச்சு?” என்று கேட்டனர். ச்செலோ பெர்ட்டோவை ஆசீர்வதித்ததைப்போல் யெகோவா என்னை மிகப்பெரிய அளவில் ஆசீர்வதித்திருப்பதை உணருகிறேன்.
ஆர். எப்., ஐக்கிய மாகாணங்கள்
ரஷ்ய இறையியலாளர் “ரஷ்யாவில் யெகோவாவின் சாட்சிகள்” (ஆகஸ்ட் 22, 1997) என்ற கட்டுரையை பிரசுரித்ததற்கு நான் உங்களுக்கு நன்றி செலுத்துகிறேன். யெகோவாவின் சாட்சிகளைப்பற்றிய உண்மைகளை தைரியமாகவும் விருப்பத்துடனும் பிரசுரித்த ஸிர்க்யே இவ்வாயென்கவியைக் கண்டு வியக்கிறேன், பாராட்டுகிறேன்.
எஸ். எம்., ஐக்கிய மாகாணங்கள்
வெறுப்பு “ஏன் இவ்வளவு வெறுப்பு? ஏன் இவ்வளவே அன்பு?” (செப்டம்பர் 8, 1997) என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட கட்டுரைகள்தான் அந்தப் பொருளில் இதுவரை நீங்கள் பிரசுரித்த கட்டுரைகளில் மிகச்சிறந்தவை. இந்தக் கட்டுரைகள் ஜனங்கள் ஏன் அன்னியர்களையும் மற்ற கலாச்சாரத்தை சேர்ந்தவர்களையும் நம்ப மறுக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள உதவியது.
ஜெ. எம்., ஐக்கிய மாகாணங்கள்
ஆர்எஸ்டி—வலிமிகுந்த ஒரு நோய் “ஆர்எஸ்டி—குழப்பமூட்டும் வலிமிகுந்த ஒரு நோய்” (செப்டம்பர் 8, 1997) என்ற கட்டுரையைப் படித்தவுடன் உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுவது எனது கடமை என்றே உணருகிறேன். ஜனவரியில் எனக்கு ஆர்எஸ்டி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதைக் குறித்து ஏதாவது தகவல் சேகரிக்க முயற்சி செய்தேன். ஆகவே அந்தச் சமயத்தில் இந்தக் கட்டுரையைக் கண்டவுடன் என் கண்கள் குளமாகிவிட்டன. அது மிகவும் நடைமுறையாகவும் என்னுடைய அநேக கேள்விகளுக்கு பதிலளிப்பதாகவும் இருக்கிறது.
டபிள்யூ. பி., இங்கிலாந்து
நான் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆர்எஸ்டியால் அவதிப்படுகிறேன். இந்த நோயைப்பற்றி இப்படிப்பட்ட முழுமையான ஆய்வினை மேற்கொண்டதற்காக நன்றி. இது நிச்சயமாகவே அயலாரிடத்தில் உங்களுக்கு இருக்கும் அன்பை வெளிக்காட்டுகிறது.
ஜி. எஸ்., ஜெர்மனி
என்னுடைய கணவர் ஆர்எஸ்டியால் அவஸ்தைப்படுகிறார்; மற்றவர்களிடம் இந்த நோயைப்பற்றி விளக்குவது எங்களுக்கு கடினமாக இருந்தது. இந்தக் கட்டுரையில் இவ்வளவு தெளிவாக விளக்கப்பட்டதால் இப்போது சுலபமாக இருக்கின்றது. இந்தத் தகவலை நாங்கள் மருத்துவர்களுக்கும் மறுவாழ்வு அலுவலகங்களுக்கும் அனுப்பியிருக்கிறோம். ஆர்எஸ்டியுடன் கேரன் ஆர்ஃப்பின் போராட்டத்தைப் படிக்கும்போது அது என் கணவனுடைய வாழ்க்கை அனுபவத்தைப்போலவே இருந்தது! கேரனைப்போல் வேதனையே இல்லாத புதிய உலகத்தை நாங்களும் எதிர்நோக்கி இருக்கிறோம்.
கே. பி., ஆஸ்திரேலியா
கேரனுடைய அனுபவத்திற்காக நான் அவருக்கு நன்றி சொல்கிறேன். அவருக்காக ஜெபம் செய்கிறேன், அவர் தொடர்ந்து முன்னேறி வருவார் என்று நம்புகிறேன். ஆர்எஸ்டி என்னுடைய முதுகிலும் கால்களிலும் பாதம் வரை தாக்கியிருக்கிறது. கூட்டங்களில் உட்கார்ந்திருப்பது, வெளி ஊழியத்திற்காக நடப்பது போன்றவை எனக்கு கஷ்டத்தையும் வலியையும் ஏற்படுத்துகின்றன. இருந்தபோதிலும் யெகோவாவின் ஆதரவு இருப்பதால் பின்னடையவில்லை.
சி. கே., இங்கிலாந்து