எமது வாசகரிடமிருந்து
நட்பு “இளைஞர் கேட்கின்றனர் . . . என்னால் ஏன் நண்பர்களை வைத்துக்கொள்ள முடிவதில்லை?” (மே 22, 1996) என்ற கட்டுரைக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தக் கட்டுரை எந்தளவுக்கு எனக்கு உதவியது என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியாது. இடையூறுகளின் மத்தியிலும், நிலைத்திருக்கும் நட்புகளை வைத்திருக்க முடியும் என்று அது காண்பித்தது. சில சமயங்களில், மனஸ்தாபங்களை தீர்த்துக்கொள்வதைத் தள்ளிப்போட்டுக்கொண்டே போவதாலும் நாம் நண்பர்களை இழக்கிறோம். இந்த விஷயத்தில் என் பலவீனங்களை மேற்கொள்ள முயலுவதற்கு இந்தக் கட்டுரை எனக்கு உதவியது.
ஏ. எம். பி., பிரேஸில்
இந்தக் கட்டுரை சரியான சமயத்தில் வந்தது. எனக்கு இன்னொரு பெண்ணுடன் இருந்த அருமையான நட்பு மூன்று மாதங்களுக்கு முன் தேய்வுற ஆரம்பித்தது; நாங்கள் இனியும் ஒருவரோடொருவர் பேசாத நிலைக்கு வந்துவிட்டோம். அந்தக் கட்டுரை வந்ததும், நானும் என் சிநேகிதியும், இரண்டுபேருமே அதை வாசித்தோம்; நாங்கள் முட்டாள்தனமாக நடந்திருக்கிறோம் என்பதை உணர்ந்தோம். நாங்கள் கலந்துபேசி, சேர்த்துவைத்திருந்த அத்தனை மனஸ்தாபங்களை சரிசெய்துகொண்டோம். இப்போது எங்கள் நட்பு புதுப்பிக்கப்பட்ட தெம்புடன் இருக்கிறது.
என். டி., இத்தாலி
எரிமலை பேரழிவு 1991-ல் பினட்டூபோ சிகரத்தின் வெடிப்பைப் பற்றிய செய்தி அறிக்கைகள் எனக்கு நினைவில் இருக்கின்றன. ஆனால், “லாஹார்கள்—பினட்டூபோ சிகரத்தின் பின்விளைவு,” (மே 22, 1996) என்ற கட்டுரையை வாசிக்கும் வரையிலும் அதைக் குறித்து மறந்தே போய்விட்டேன். லாஹார்களைப் பற்றி அதற்குமுன் நான் கேள்விப்பட்டதே இல்லை; அந்தக் கட்டுரை சுவாரஸ்யமானதாக இருந்தது. லாஹார் பாய்ந்துவரும் வழியில் இருந்தபோதும், கார்ஸியா குடும்பத்தினர் காண்பித்த தைரியமும் உதவும்தன்மையும் குறிப்பிடத்தக்கதாய் இருந்தது.
எஸ். எஃப்., கனடா
அந்தக் கட்டுரை என் மனதை ஆழமாகத் தொட்டது. வருத்தகரமான சூழ்நிலைகளில் இருந்தபோதும் ஆவிக்குரிய காரியங்களுக்கான வைராக்கியத்தைக் காத்துக்கொண்ட கிறிஸ்தவ சகோதரர்களின் அனுபவங்களை வாசிப்பது நெகிழ வைப்பதாக இருந்தது. சிறிய பிரச்சினைகளுக்காக, கூட்டங்களுக்குப் போகாமல் அல்லது பிரசங்க வேலையில் பங்கெடுக்காமல் இராதபடி இது என்னை உற்சாகப்படுத்தியிருக்கிறது. அந்தக் கட்டுரைக்கு நன்றி!
எஸ். டி., இத்தாலி
என் கணவரும் நானும் லாஹார்களைக் குறித்து கேள்விப்பட்டதே இல்லை; ஆனால் அவை எவ்வளவு கடுமையும் ஆபத்துமானவை என்று இப்போது அறிந்துகொண்டோம். பிலிப்பீன்ஸிலுள்ள எங்கள் சகோதரர்களுக்காகவும் அவர்களுக்கு உதவ முடிந்தவர்களுக்காகவும் நாங்கள் ஜெபிக்கிறோம் என்று அவர்களுக்கு நாங்கள் தெரியப்படுத்த விரும்புகிறோம்.
சி. ஏ. பி., குவாதமாலா
பச்சை ஒளிச்சிதறல் “பச்சை ஒளிச்சிதறல் ஒன்றை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?” (மே 22, 1996) என்ற கட்டுரையை இப்போதுதான் வாசித்தேன். ஒருசில வருடங்களுக்குமுன், அலாஸ்காவின் புதர் பகுதியில் விமானப் பயணம் செய்கையில், ஓர் இமைப்பொழுதுகூட நீடிக்காத அளவு நேரத்திற்குள் நீல-பச்சை ஒளிச்சிதறல் ஒன்றை காண்பதில் ஆச்சரியப்பட்டேன். இன்றுவரை அந்த நிகழ்வைக் குறித்து விவரித்த ஒரு கட்டுரையை நான் ஒருபோதும் காணவில்லை. நானாகவே கற்பனை செய்த ஏதோவொன்றாக அது இருந்திருக்கும் என்று சிலவேளைகளில் நான் நினைத்தேன்!
ஜி. சி. அலாஸ்கா
பீதிக்குள்ளாக்கும் நோய்த்தாக்கங்கள் “பீதிக்குள்ளாக்கும் நோய்த்தாக்கங்களைச் சமாளித்தல்,” (ஜூன் 8, 1996) என்ற கட்டுரைக்காக என் நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். நான் ஆறு வருடங்களாக அப்படிப்பட்ட நோய்த்தாக்கங்களால் கஷ்டப்பட்டிருக்கிறேன். ஒரு வருடத்திற்கு பயனியராக (முழுநேர ஊழியர்) சேவை செய்த பிறகு, என்னால் அந்தத் தாக்கங்களை சமாளிக்க சக்தியில்லாததால் நிறுத்த வேண்டியதாயிற்று. நான் உடல் நலமுள்ளவளாக தோற்றமளித்ததால், நெருங்கிய நண்பர்கள் என் பிரச்சினையைப் புரிந்துகொள்ளாதது எவ்வளவு வேதனையாக இருந்தது. இந்தக் கட்டுரையைப் படிக்க எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது என்று என்னால் விவரிக்கவே முடியாது.
ஓ. எஸ்., உக்ரேன்
நான் எட்டு வருடங்களாக ஒரு முழுநேர ஊழியராக சேவை செய்திருக்கிறேன். ஆனால் பல வருடங்களாக, நான் லாயக்கற்றவள் என்ற உணர்வை உடையவளாய் அதிக கவலையை அனுபவித்திருக்கிறேன். என்னுடையதை ஒத்த நோய் அறிகுறிகளை விவரிக்கும் இந்தக் கட்டுரையை வாசித்தபோது, அதன் அறிவுரைகளை உடனடியாக பின்பற்ற ஆரம்பித்தேன். என்னுடைய உணர்ச்சிகளில் முன்னேற்றம் காணப்படுகிறது; என் மனதும் முன்பைவிட அமைதி அடைந்திருக்கிறது.
கே. எம்., தாய்லாந்து
பீதிக்குள்ளாக்கும் நோய்த்தாக்கங்களுக்காக நான் மருத்துவ சிகிச்சை பெற்றிருக்கிறேன்; அது எனக்கு உதவியிருக்கிறது. இருந்தாலும், உள்ளுக்குள், ‘நான் ஆவிக்குரியவிதத்தில் பலவீனமாக இருக்கிறேனா அல்லது சோம்பேறியாக இருக்கிறேனா?’ என்ற கேள்வி என்னை வதைத்துக்கொண்டே இருந்திருக்கிறது. இந்தக் கட்டுரையை வாசித்தது, என் தோள்களிலிருந்து ஒரு பெரிய பாரத்தை இறக்கியது.
பி. பி., பின்லாந்து