உலகளாவிய தீர்வு—அது சாத்தியமா?
காசநோய் உலகளாவிய தீர்வைத் தேவைப்படுத்தும் பூகோளப் பிரச்சினை என்பதை நிபுணர்கள் ஒத்துக்கொள்கின்றனர். ஒவ்வொரு வாரமும் கோடிக்கணக்கான மக்கள் சர்வதேச எல்லைகளைக் கடப்பதால் எந்த நாடும் பிற நாடுகளுடன் சேர்ந்து ஒத்துழைக்காமல் காசநோயைக் கட்டுப்படுத்த முடியாது.
சர்வதேச ஒத்துழைப்பு, அநேகர் நம்புவதைப் போன்றே, காசநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை நாடுகளுக்கு பணக்கார நாடுகளின் உதவியைத் தேவைப்படுத்துகிறது. டாக்டர் அராட்டா கோச்சி சொல்கிறபடி, “தங்கள் நாடுகள் கொலைக்களங்களாக மாறுவதற்கு முன்பாக, காசநோயை எதிர்ப்பதற்கு வளரும் நாடுகளுக்குத் தேவையான உதவியைக் கொடுப்பது பணக்கார நாடுகளின் கையில்தான் உள்ளது.”
ஆனால் பணக்கார நாடுகள், முன்னுரிமைகளும், பிரச்சினைகளும் தங்களை நெருக்குவதைக் காணும்போது, உதவ முன்வருவதில்லை. சில ஏழை நாடுகள்தாமே அடிக்கடி உடல்நலப் பராமரிப்பை அசட்டை செய்துவிட்டு, யுத்தக்கருவிகளில் பணத்தை விரயமாக்குகின்றன. 1996-ன் மத்திபத்தில், உலகிலுள்ள காசநோயாளிகளில் வெறும் 10 சதவீதத்தினரே டாட்ஸ் திட்டத்தின்மூலம் சிகிச்சையளிக்கப்பட்டனர்; இக்கொள்ளைநோய் மோசமடைவதைத் தடுப்பதற்கு இது மிகக் குறைவான அளவே.
WHO இவ்வாறு குறிப்பிடுகிறது: “காசநோயை குணப்படுத்துவதற்கு தேவையான மருத்துவ அறிவும் மலிவான மருந்துகளும் பத்தாண்டுகளாக கிடைப்பவையாய் இருக்கின்றன. இப்பொழுது உலகிற்கு தேவைப்படுவதெல்லாம் இத்தகைய மருந்துகள் உலகமுழுவதும் பலன்தரத்தக்க விதத்தில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை நிச்சயப்படுத்தும் அதிகாரம், செல்வாக்கு, இரக்கம் படைத்த மக்களின் மும்முரமான பிரயாசம்தான்.”
வரவிருக்கும் வெற்றி
இப்பிரச்சினையின் தீர்வுக்காக அதிகாரமும் செல்வாக்குமுள்ள மனிதர்களை நாம் நம்பிக்கையோடு நோக்கலாமா? ஏவப்பட்ட பைபிள் சங்கீதக்காரன் இவ்வாறு எழுதினார்: “பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள்.” அப்படியென்றால், நாம் யாரை நம்பலாம்? வேதவசனம் கூடுதலாக இவ்வாறு சொல்கிறது: “யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான். அவர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவையும் உண்டாக்கினவர்; அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர்.”—சங்கீதம் 146:3, 5, 6.
இந்தப் பூமியின் வடிவமைப்பாளரும் படைப்பாளருமாகிய யெகோவா தேவனுக்கு, நோயை ஒழிப்பதற்கான வல்லமையும் ஞானமும் இருக்கிறது. அவர் இரக்கமுள்ளவரா? யெகோவா தம்மால் ஏவப்பட்ட தீர்க்கதரிசியின் மூலமாக இவ்வாறு வாக்குறுதியளிக்கிறார்: “என் வேலையைச் செய்யும்நாளிலே அவர்கள் எனக்குச் சொந்தமாவார்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; ஒரு மனிதன் தனக்கு வேலைசெய்கிற தன்னுடைய குமாரனுக்கு இரக்கங்காட்டுகிறதுபோல நான் அவர்களுக்கு இரக்கங்காட்டுவேன்.”—மலாகி 3:17, திருத்திய மொழிபெயர்ப்பு.
பைபிளின் கடைசி அதிகாரம், அப்போஸ்தலனாகிய யோவானுக்கு கொடுக்கப்பட்ட ஒரு தரிசனத்தை விவரிக்கிறது. “பன்னிரண்டுவிதமான கனிகளை, ஒவ்வொரு மாதமும் தந்த ஜீவவிருட்சங்களை” அவர் கண்டார். இந்த அடையாளப்பூர்வமான ஜீவவிருட்சங்களும் அவை தருகிற கனிகளும் கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கம் பூமியில் என்றென்றும் வாழ்வதற்கு உதவும் தெய்வீக ஏற்பாட்டைச் சித்தரிக்கின்றன.—வெளிப்படுத்துதல் 22:2, NW.
யோவான் தொடர்ந்து இவ்வாறு எழுதினார்: “அந்த விருட்சங்களின் இலைகள் தேசங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவையாய் இருந்தன.” இந்த அடையாளக் குறிப்பான இலைகள் மனிதவர்க்கத்தை ஆவிக்குரிய பிரகாரமாகவும் சரீரப்பிரகாரமாகவும் சுகப்படுத்த கடவுளிடமிருந்து வரும் ஆசீர்வாதங்களை சித்தரிக்கின்றன. எனவே, கடவுளுடைய ஆட்சியின் கீழ் நீதியுள்ள புதிய உலகில் காசநோய் முற்றிலுமாகவும் நித்தியமாகவும் வெல்லப்பட்டிருக்கும் என்பதில் நாம் உறுதியுடன் இருக்கலாம்.—வெளிப்படுத்துதல் 21:3, 4.
[பக்கம் 8-ன் படம்]
மனிதவர்க்கத்துக்கு நிரந்தர சுகப்படுத்துதலை கடவுள் வாக்குறுதியளிக்கிறார்