உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • be படிப்பு 29 பக். 181-பக். 185 பாரா. 3
  • குரல் நயம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • குரல் நயம்
  • தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • இதே தகவல்
  • குரல் முன்னேற்றமும் ஒலிவாங்கிகளின் உபயோகமும்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • நுரையீரல்கள் ஓர் அதிசய வடிவமைப்பு
    விழித்தெழு!—1992
  • வார்த்தைகளைத் தெளிவாக சொல்லுதல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • ‘அந்நியருடைய சத்தத்திற்கு’ எச்சரிக்கையாக இருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
மேலும் பார்க்க
தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
be படிப்பு 29 பக். 181-பக். 185 பாரா. 3

படிப்பு 29

குரல் நயம்

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

உங்களுடைய குரலை வளப்படுத்துங்கள்; வேறொருவரைப் போல பேச முயலாதீர்கள், ஆனால் தகுந்த விதத்தில் சுவாசித்து, விறைப்பான தசைகளை தளர்த்துங்கள்.

ஏன் முக்கியம்?

மற்றவர்கள் ரிலாக்ஸாக இருந்து உங்களுடைய பேச்சை ரசித்து கேட்பதற்கு நல்ல குரல் நயம் உதவுகிறது. குரல் நயம் நன்றாக இராவிட்டால் அது பேச்சுத் தொடர்பை பாதிக்கிறது; அது பேச்சாளர், சபையார் ஆகிய இருவரையும் உற்சாகமிழக்கச் செய்யலாம்.

என்ன சொல்லப்படுகிறது என்பது மட்டுமல்ல, எப்படி சொல்லப்படுகிறது என்பதும் மக்களை பெரிதும் பாதிக்கிறது. இனிமையான, கனிவான, நட்பான, தயவான குரலில் ஒருவர் பேசுகையில் உடனடியாக செவிகொடுத்துக் கேட்பீர்கள் அல்லவா? அதே நபர் கடுமையான அல்லது முரட்டுத்தனமான குரலில் பேசினால் அந்தளவுக்கு விரும்பிக் கேட்பீர்களா?

இனிய குரல் நயத்தை வளர்ப்பது முழுக்க முழுக்க குரலின் இயக்கம் (voice mechanics) சார்ந்த விஷயமல்ல. அது ஒருவருடைய குணங்களையும் உட்படுத்தலாம். பைபிள் சத்தியத்தைப் பற்றி ஒருவர் அதிகமதிகமாக தெரிந்துகொண்டு அதை வாழ்க்கையில் கடைப்பிடிக்கும்போது அவர் பேசும் விதம் மாறுகிறது. தேவபக்திக்குரிய குணங்களாகிய அன்பு, சந்தோஷம், தயவு ஆகியவை அவருடைய குரலில் ததும்புகிறது. (கலா. 5:22, 23) பிறர்மீது உள்ளப்பூர்வமான அக்கறை காட்டுகையில், அவருடைய குரலே அதை தெரியப்படுத்திவிடுகிறது. சதா குறைகூறிக்கொண்டே இருக்கும் மனப்பான்மை நீங்கி நன்றியுணர்வு ஏற்படுகையில், சொல்லப்படும் வார்த்தைகளிலும் குரல் தொனியிலும் அது வெளிப்படுகிறது. (புல. 3:39-42; 1 தீ. 1:12; யூ. 16) ஒருவர் பேசும் மொழி உங்களுக்கு புரியாவிட்டாலும், அவர் ஆணவமாக, எரிச்சலாக, குறை காண்பவராக, மூர்க்கமாக பேசுகிறாரா அல்லது தாழ்மையாக, பொறுமையாக, தயவாக, அன்பாக பேசுகிறாரா என்பதை உங்களால் எளிதில் கண்டுபிடித்துவிட முடியும்.

சிலசமயங்களில் வியாதியின் காரணமாகவோ பரம்பரை காரணிகளாலோ ஒருவருடைய தொண்டை (larynx) பாதிக்கப்பட்டு குரல் மோசமாகியிருக்கலாம். இந்த உலகில் முழுமையாக குணப்படுத்த முடியாத அளவுக்கு அது நிரந்தர ஊனமாகவே இருக்கலாம். ஆனால் பொதுவாக, பேச்சு உறுப்புகளை தகுந்த முறையில் பயன்படுத்தக் கற்றுக்கொண்டால் அப்படிப்பட்ட குரலையும் மேம்படுத்த முடியும்.

குரலின் தன்மை ஆளுக்கு ஆள் மாறுபடுவதை முதலில் புரிந்துகொள்வது முக்கியம். வேறொருவருடைய குரலில் பேச கற்றுக்கொள்வது உங்களுடைய இலக்காக இருக்கக் கூடாது. மாறாக, உங்களுடைய குரலுக்கே உரிய தனிச்சிறப்பு பண்புகளோடு அதை வளப்படுத்துங்கள். இதைச் செய்ய எது உதவும்? இரண்டு முக்கிய அம்சங்கள் இருக்கின்றன.

தகுந்த முறையில் சுவாசித்தல். உங்களுடைய குரலை பயன்படுத்துவதில் சிறந்த பலன்களைப் பெற, சுவாசத்தை தகுந்த முறையில் கட்டுப்படுத்துவதோடு, போதுமான அளவு காற்றை உள்ளிழுப்பதும் அவசியம். இப்படி செய்யவில்லையென்றால், உங்களுடைய குரல் பலவீனமாக தொனிக்கலாம், உங்களுடைய பேச்சு சீரற்று இருக்கலாம்.

நுரையீரல்களின் பெரும்பகுதி அமைந்திருப்பது மார்பின் மேற்புறத்தில் அல்ல; இந்தப் பகுதி தோள் பட்டைகளின் காரணமாகவே பெரிதாக தெரிகிறது. ஆனால் உதரவிதானத்திற்கு (diaphragm) மேற்பகுதியில்தான் நுரையீரல்கள் மிகவும் பரந்து காணப்படுகின்றன. கீழ் விலா எலும்புகளோடு இணைக்கப்பட்ட உதரவிதானம் வயிற்றறை மார்பை (abdominal cavity) பிரிக்கிறது.

நீங்கள் சுவாசிக்கும்போது நுரையீரல்களின் மேற்பகுதியை மட்டுமே நிரப்பினால், உங்களுக்கு சீக்கிரத்தில் மூச்சுத் திணறும். உங்களுடைய குரல் வலுவிழந்து தொனிக்கும், நீங்கள் எளிதில் களைப்படைந்து விடுவீர்கள். தகுந்த விதத்தில் சுவாசிப்பதற்கு, நீங்கள் உட்கார்ந்துகொண்டு அல்லது நேராக நின்றுகொண்டு உங்களுடைய தோள்களை பின்புறமாக வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் பேசுவதற்கு மூச்சிழுக்கும்போது உங்களுடைய மார்பின் மேற்பகுதியை மட்டுமே விரிவாக்குவதை தவிருங்கள். முதலில் நுரையீரல்களின் அடிப்பகுதியை நிரப்புங்கள். இந்தப் பாகம் நிரம்பும்போது, உங்களுடைய விலா எலும்புக் கூட்டின் அடிப்பகுதி பக்கவாட்டில் விரிவடையும். அதேசமயத்தில், உதரவிதானம் கீழிறங்கும், இது வயிற்றையும் குடல்களையும் மெதுவாக தள்ளுகிறது. அதனால்தான் உங்களுடைய பெல்ட் அல்லது மற்ற ஆடை உங்கள் அடிவயிற்றை அழுத்துவதை உணருகிறீர்கள். ஆனால் நுரையீரல்கள் உங்களுடைய அடிவயிற்றில் இல்லை; அவை விலா எலும்புக் கூட்டிற்குள்ளேயே இருக்கின்றன. இதை நீங்களே பரிசோதித்துப் பார்ப்பதற்கு, உங்களுடைய விலா எலும்புக் கூட்டின் கீழ்ப்புறத்தில் இருபக்கங்களிலும் உங்களுடைய கைகளை வைத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது நன்கு மூச்செடுங்கள். நீங்கள் தகுந்த விதத்தில் சுவாசித்தால், உங்களுடைய வயிற்றை உள்ளிழுத்து தோள்களை உயர்த்த மாட்டீர்கள். மாறாக, உங்களுடைய விலா எலும்புகள் மேலேயும் வெளியேயும் லேசாக போய்வருவதை உணருவீர்கள்.

அடுத்து, காற்றை வெளிவிடுவதற்கு கவனம் செலுத்துங்கள். அதை வேகமாக வெளிவிட்டு வீணாக்காதீர்கள். மெதுவாக வெளிவிடுங்கள். உங்களுடைய தொண்டையை விறைப்பாக்குவதன் மூலம் அதை கட்டுப்படுத்த முயலாதீர்கள். அப்படி செய்தால் உங்களுடைய குரல் செயற்கையாக அல்லது இயல்புக்கு மாறாக உச்சஸ்தாயியில் தொனிக்கும். அடிவயிற்று தசைகளிலிருந்தும் விலாவிடை தசைகளிலிருந்தும் (intercostal muscles) ஏற்படும் அழுத்தம் காற்றை வெளியேற்றுகிறது; ஆனால் உதரவிதானமோ காற்று வெளியேற்றப்படும் வேகத்தை கட்டுப்படுத்துகிறது.

பக்கம் 183-ன் படங்கள்

ஓட்டப்பந்தயக்காரர் பந்தயத்திற்காக பயிற்சி செய்வது போலவே, ஒரு பேச்சாளரும் பயிற்சியின் வாயிலாக தகுந்த விதத்தில் சுவாசத்தைக் கட்டுப்படுத்த பழகிக்கொள்ளலாம். உங்களுடைய தோள்களை பின்புறமாக வைத்துக்கொண்டு நேராக நில்லுங்கள், உங்களுடைய நுரையீரல்களின் அடிப்பாகம் நிரம்புமாறு சுவாசியுங்கள், பின்பு ஒரே மூச்சில் எத்தனை எண்களை எண்ண முடியுமோ அத்தனை எண்களை எண்ணிக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக காற்றை வெளிவிடுங்கள். பின்பு, இந்த முறையில் சுவாசித்துக்கொண்டே சத்தமாக வாசித்துப் பழகுங்கள்.

விறைப்பான தசைகளை தளர்த்துங்கள். ரிலாக்ஸ்! இதுவே நல்ல குரல் நயத்திற்கு மற்றொரு முக்கிய அம்சம். பேசும்போது ரிலாக்ஸாக இருப்பதற்கு கற்றுக்கொண்டால் உங்களுடைய முன்னேற்றம் மலைக்க வைப்பதாக இருக்கும். உடலோடு மனதையும் ரிலாக்ஸ் செய்ய வேண்டும், ஏனென்றால் மனோ ரீதியில் டென்ஷனாக இருப்பது தசையையும் டென்ஷனாக்குகிறது.

செவிசாய்ப்போரை பற்றிய சரியான மனநிலையை கொண்டிருப்பதன் மூலம் மனோ ரீதியில் உண்டாகும் டென்ஷனை நீக்குங்கள். வெளி ஊழியத்தில் சந்திக்கும் ஆட்களிடம் நீங்கள் பேச வேண்டியதாயிருந்தால், நீங்கள் சில மாதங்களே பைபிள் படித்திருந்தாலும், அவர்களோடு பகிர்ந்துகொள்வதற்கு யெகோவாவின் நோக்கத்தைப் பற்றிய மதிப்புமிக்க விஷயங்களை அறிந்திருக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்திருங்கள். மேலும் அவர்களுக்கு உதவி தேவைப்படுவதாலேயே நீங்கள் அவர்களை சந்திக்கிறீர்கள்​—⁠அவர்கள் அதை உணர்ந்தாலும்சரி உணராவிட்டாலும்சரி. மறுபட்சத்தில், நீங்கள் ராஜ்ய மன்றத்தில் பேசிக்கொண்டிருந்தால், உங்களுடைய சபையாரில் பெரும்பாலானவர்கள் யெகோவாவின் ஜனங்கள் என்பதை நினைவில் வையுங்கள். அவர்கள் உங்களுடைய நண்பர்கள், நீங்கள் வெற்றி பெற வேண்டுமென விரும்புகிறவர்கள். இப்படிப்பட்ட நட்புக்குரிய, அன்புள்ளம் கொண்டவர்களிடம் பேசும் வாய்ப்பு நம்மைப் போல இந்த உலகில் வேறெந்த பேச்சாளருக்கும் கிடைப்பதில்லை.

தொண்டை தசைகளுக்கு கவனம் செலுத்தி அவற்றின் விறைப்பை தளர்த்துங்கள். உங்களுடைய குரல் நாண்களின் வழியாக காற்று செல்கையில் அவை அதிர்வுறுகின்றன என்பதை நினைவில் வைத்திருங்கள். கிட்டார் அல்லது வயலின் நரம்புகளை ‘டைட்’ செய்யும்போது அல்லது ‘லூஸ்’ பண்ணும்போது அதன் ஒலி மாறுபடுவதைப் போல, தொண்டை தசைகள் விறைப்பாக இருக்கிறதா ரிலாக்ஸாக இருக்கிறதா என்பதைப் பொறுத்து உங்களுடைய குரலின் தன்மையும் மாறுபடுகிறது. உங்களுடைய குரல் நாண்களை தளர்த்தும்போது ஒலி குறைகிறது. தொண்டை தசைகளை தளர்த்துவது மூக்குத் துவாரங்களை திறந்தவாறு வைத்திருப்பதற்கும் உதவுகிறது. இது நிச்சயமாகவே உங்களுடைய குரல் நயத்திற்கு துணைபுரியும்.

உங்களுடைய முழு உடலையும்​—⁠முழங்கால்கள், கைகள், தோள்கள், கழுத்து ஆகியவற்றை​—⁠தளர்த்துங்கள். இது, உங்களுடைய குரலை நன்கு கடத்துவதற்கு தேவைப்படும் ஒலியதிர்வை (resonance) உண்டாக்க உதவுகிறது. முழு உடலும் ‘சவுண்டிங் போர்டு’ போல செயல்படும்போது இந்த ஒலியதிர்வு உண்டாகிறது, ஆனால் நீங்கள் விறைப்பாக இருந்தால் இது தடைப்படுகிறது. தொண்டையில் உருவாகும் ஒலி மூக்குத் துவாரங்களில் மட்டுமல்ல, மார்பு எலும்புகள், பற்கள், அண்ணம், எலும்பு உட்புழைகள் ஆகியவற்றின் மீதும் பட்டு எதிரொலிக்கின்றன. இவையனைத்தும் ஒலியதிர்வுக்கு பங்களிக்கலாம். கிட்டாரின் ‘சவுண்ட் போர்டு’ மீது ஏதாவது கனமான ஒரு பொருளை வைத்தால், சத்தம் நின்றுவிடும்; அது தகுந்த விதத்தில் ஒலியதிர்வை ஏற்படுத்த வேண்டுமாகில், அது அதிர்வுறுவதற்கு எந்த தடையுமின்றி இருக்க வேண்டும். இதுவே நமது உடலின் எலும்பமைப்புகள் விஷயத்திலும் உண்மையாக இருக்கிறது, இவற்றை தசைகள் உறுதியாக பிடித்திருக்கின்றன. ஒலியதிர்வைக் கொண்டு நீங்கள் தகுந்த விதத்தில் ஏற்றத்தாழ்வோடு பேச முடியும், பல்வகை உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த முடியும். உங்களுடைய குரலை வருத்தாமல் பெரும் கூட்டத்தார் கேட்கும் விதத்தில் பேச முடியும்.

பேச்சு எவ்வாறு உருவாகிறது

நுரையீரல்களிலிருந்து நீங்கள் வெளிவிடும் காற்றின் அளவே குரல் சம்பந்தப்பட்ட அனைத்து சத்தங்களுக்கும் அடிப்படை. நுரையீரல்கள் துருத்திபோல செயல்படுகின்றன; அவை மூச்சுக்குழாய் (windpipe) வழியாக உங்களுடைய தொண்டையின் மத்தியில் இருக்கிற குரல்வளைக்குள் காற்றை தள்ளுகின்றன. உங்களுடைய தொண்டைக்குள், இருபுறங்களிலும், குரல் நாண்கள் (vocal cords) என்றழைக்கப்படும் இரண்டு மிகச் சிறிய தசை மடிப்புகள் இருக்கின்றன. இவையே சத்தத்தை உருவாக்கும் முக்கிய கருவிகள். தொண்டை வழியாக காற்று செல்கையில் இந்தத் தசை மடிப்புகள் திறந்து மூடுகின்றன; காற்று உட்சென்று வருவதற்கும் தேவையற்றவை நுரையீரல்களுக்குள் செல்வதை தடுக்கவும் இவை உதவுகின்றன. சாதாரணமாக சுவாசிக்கும்போது, குரல் நாண்கள் வழியாக காற்று செல்கையில் எந்த சத்தமும் உண்டாவதில்லை. ஆனால் ஒருவர் பேச விரும்பும்போது தசைகள் குரல் நாண்களை விறைப்பாக்குகின்றன, நுரையீரல்களிலிருந்து வரும் காற்று இவற்றை கடந்து செல்கையில் இவை அதிர்வுறுகின்றன. இதனால் சத்தம் உண்டாகிறது.

குரல் நாண்களை எந்தளவுக்கு விறைப்பாக நீட்சியடைய செய்கிறோமோ அந்தளவுக்கு அவை வேகமாக அதிர்வுறுகின்றன, ஒலி பலமாக இருக்கிறது. மறுபட்சத்தில், அந்த நாண்கள் எந்தளவுக்கு விறைப்பின்றி இயல்பாக இருக்கின்றனவோ அந்தளவுக்கு ஒலியும் மெதுவாக இருக்கிறது. தொண்டையை விட்டு வந்தப்பின், தொண்டையின் மேற்புறத்தில், அதாவது முன்தொண்டையில் (pharynx) ஒலி அலை நுழைகிறது. பின்பு இது வாய் மற்றும் நாசித் துவாரம் வழியாக செல்கிறது. அங்கே மூல ஒலியை மாற்றியமைக்கிற, அதிகரிக்கிற, அதற்கு வலிமையூட்டுகிற நுட்பமான ஒலிகள் சேர்க்கப்படுகின்றன. அதிர்வுறும் ஒலி அலைகளை அண்ணம், நாக்கு, பற்கள், உதடுகள், தாடை ஆகியவை பிரிக்கின்றன, இவையே புரிந்துகொள்ளக்கூடிய பேச்சாக வெளிவருகின்றன.

மனிதனுடைய குரல் ஓர் அற்புதம், மனிதனால் உண்டாக்கப்பட்ட எந்த கருவியும் இதற்கு நிகரற்றது. இது மென்மையான அன்பிலிருந்து கடுமையான, மூர்க்கமான பகைமை வரை பல உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறமை கொண்டது. குரலை தகுந்த விதத்தில் வளர்த்து பயிற்றுவிக்கும்போது, இனிய இசைகளை மட்டுமல்ல, இதயத்தை உந்துவிக்கும் பேச்சுக்களையும் வழங்க முடியும்.

குறிப்பிட்ட பிரச்சினைகளை மேற்கொள்ளுதல்

பலவீனமான குரல். மென்மையான குரலை பலவீனமான குரல் என சொல்ல முடியாது. அது வளமாகவும் இனிமையாகவும் இருந்தால், மற்றவர்கள் ஆசையோடு செவிமடுத்துக் கேட்பார்கள். ஆனால் சிறந்த முறையில் இருப்பதற்கு, குரல் போதுமான சத்தத்துடன் இருக்க வேண்டும்.

உங்களுடைய குரல் நன்கு கேட்கத்தக்கதாக இருப்பதற்கு, அதன் ஒலியதிர்வை முன்னேற்றுவிக்க வேண்டும். அதற்காக, இந்தப் பாடத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி, உங்களுடைய முழு உடலையும் தளர்த்துவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். உங்களுடைய உடலை தளர்த்துவதும் ‘ஹம்மிங் எக்ஸர்ஸைஸ்’ செய்வதும் பலன்தரும். உதடுகள் லேசாக ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும், இறுக்கமாக மூடக் கூடாது. நீங்கள் ‘ஹம்’ செய்கையில், உங்களுடைய தலையிலும் மார்பிலும் உண்டாகும் அதிர்வுகளை உணர்வீர்கள்.

சிலசமயங்களில், சுகமில்லாததால் அல்லது சரியாக தூங்காததால் குரல் பலவீனமாகவோ மாறுபட்டோ இருக்கலாம். இந்தச் சூழ்நிலை சரியாகிவிட்டால், குரலும் சரியாகிவிடும்.

உச்சஸ்தாயி குரல். குரல் நாண்களை விறைப்பாக்குவது குரலொலியை உயர்த்துகிறது. டென்ஷனான குரல், செவிகொடுப்போரை டென்ஷனாக்குகிறது. குரல் நாண்களின் விறைப்பை குறைப்பதற்கு தொண்டை தசைகளை தளர்த்துவதன் மூலம் சத்தத்தைக் குறைக்கலாம். தொடர்ந்து கவனம் செலுத்தி, அன்றாட உரையாடலிலும் இதை கடைப்பிடியுங்கள். இழுத்து மூச்சுவாங்குவதும் உதவி செய்யும்.

மூக்கில் பேசுவது போன்ற குரல். சிலசமயங்களில் மூக்கு அடைத்துக்கொள்வதே இந்தப் பிரச்சினைக்குக் காரணம், ஆனால் எல்லா சமயங்களிலும் அதுவே காரணமல்ல. சிலசமயங்களில் தொண்டை மற்றும் வாய் தசைகளை விறைப்பாக்குவதன் மூலம் ஒருவர் நாசித் துவாரங்களை மூடிவிடுகிறார், அதனால் காற்று தாராளமாக உட்செல்ல முடிவதில்லை. இதனால் நாசியில் அதிர்வு ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்கு, ரிலாக்ஸ் செய்வது அவசியம்.

கரகரப்பான குரல். இதனால் கருத்துக்களை சிநேகப்பான்மையான முறையில் பரிமாறிக்கொள்ள முடியாமல் போகிறது. பயமுறுத்துவதுபோல் மற்றவர்களுக்கு தொனிக்கலாம்.

சிலருடைய விஷயத்தில், ஆள்தன்மையை மாற்றுவதற்கு தொடர்ந்து முயற்சி செய்வது அவசியமாக இருக்கலாம். (கொலோ. 3:8, 12) இதை செய்துவிட்டால், குரலின் இயக்கம் சார்ந்த விதிகளைப் பின்பற்றுவது உதவியாக இருக்கலாம். தொண்டையையும் தாடையையும் தளர்த்துங்கள். இது குரலை அதிக இனிமையாக்கும், வாயை திறக்காமல் பேசுவதன் மூலம் குரல் திரிவதை தடுக்கும்.

முன்னேற்றுவிப்பது எப்படி

  • கிறிஸ்தவ குணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்.

  • உங்களுடைய நுரையீரல்களின் அடிப்பகுதியை நிரப்பி, தகுந்த முறையில் சுவாசிக்க பழகிக்கொள்ளுங்கள்.

  • பேசும்போது உங்களுடைய தசைகளை​—⁠தொண்டை, கழுத்து, தோள்கள், முழு உடலையும்⁠—⁠தளர்த்துங்கள்.

பயிற்சிகள்: (1) நாளொன்றுக்கு சில நிமிடங்கள் வீதம் ஒரு வாரத்திற்கு, உங்களுடைய நுரையீரலின் கீழ்ப்பகுதியை நிரப்பும் விதத்தில் சுவாசித்துப் பழகுங்கள். (2) குறைந்தபட்சம் ஒரு நாளுக்கு ஒரு தடவை வீதம் ஒரு வாரத்திற்கு, நீங்கள் பேசும்போது தொண்டை தசைகளை தளர்த்துங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்