அபாயம் ஜாக்கிரதை!
டமார்! குமுறும் எதிரொலியோடு ஜப்பான் பியூஜியன் எரிமலை தகிக்கும் சாம்பல் குழம்பை கக்கியது. எரிமலை ஆக்ரோஷம் வெளிப்பட்ட நாள் ஜூன் 3, 1991. தகிக்கும் சாம்பல் குழம்பு (லாவா) பொங்கி வழிந்தோடியதில் 43 பேர் கருகி சாம்பலோடு சாம்பலானார்கள். உடல் முழுவதும் தீக்காயங்களோடு நிறைய பேருடைய உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தது. “ஐயோ! தண்ணீர்! தண்ணீர்!” என்று சிலர் கதறிய காட்சி நெஞ்சை பிளந்தது. அவர்களுக்கு உதவ தீயணைப்பு படையினரும் போலீஸாரும் விரைந்தோடி வந்தார்கள்.
பியூஜியன் உச்சியில் லாவா படிந்திருந்ததை எரிமலை வெடிப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே பார்த்துவிட்டார்கள். ஆகவே அபாயத்தை அறிவித்து, அங்கிருந்து மக்கள் உடனே வெளியேறும்படி அதிகாரிகள் அவசரப்படுத்தினார்கள். அந்தக் கோர சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கும் முன்பே, எல்லாரும் அங்கிருந்து வெளியேற அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. எரிமலை வெடிப்பதற்கு முந்தைய தினம், தடைவிதிக்கப்பட்ட பகுதிக்குப் போக வேண்டாம் என்று அங்கிருந்த பத்திரிகையாளர்களை போலீசார் எவ்வளவோ கேட்டுக்கொண்டார்கள். என்ன எச்சரித்து என்ன பிரயோஜனம்! எரிமலைக்கு சாம்பலான 43 பேரும் அன்று பிற்பகல் அபாய பகுதியில் இருந்தனர் என்பது வேதனையான விஷயம்!
அபாயம் என்று தெரிந்தும் ஏன் அத்தனை பேர் அங்கே சென்றனர் அல்லது அங்கேயே இருந்தனர்? முதலில் அவ்விடத்தை காலிசெய்த விவசாயிகள், அவர்கள் விட்டுச்சென்ற பொருட்களும் நிலபுலங்களும் பத்திரமாக இருக்கின்றனவா என்று பார்க்க வந்தார்கள். எரிமலை ஆராய்ச்சியாளர்கள் மூவர் தங்கள் அறிவு தாகத்தை தீர்க்க ஆசைப்பட்டு முடிந்தவரை எரிமலை பக்கத்தில் சென்றார்கள். எரிமலையைப் பற்றி சுடச்சுட விஷயங்களை வெளியிட நினைத்த நிறைய பத்திரிகையாளர்களும், அப்படியே குளோசப்பில் படம்பிடிக்க முயன்ற புகைப்பட கலைஞர்களும் அபாய எல்லையை அசட்டையாய் தாண்டினார்கள். சம்பவ இடத்தில் பத்திரிகையாளர்களை ஏற்றிக்கொண்டு வந்த மூன்று டாக்ஸி டிரைவர்கள் இருந்தார்கள். போலீஸாரும், தன்னார்வ தீயணைப்பு வீரர்களும் தங்கள் கடமையை செய்துகொண்டிருந்தார்கள். அபாய பகுதிக்குள் சென்ற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருந்தது—ஆனால் உயிரை பறிகொடுத்ததுதான் மிச்சம்.
அபாய பகுதியில் இருக்கிறீர்களா?
நாம் எல்லாரும் எரிமலைக்கு பக்கத்தில் வசிக்காமல் இருக்கலாம். ஆனால் முழு உலகமே அபாய பகுதியில் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஓர் உலகளாவிய பேரழிவை நெருங்கிக்கொண்டிருக்கிறோம் என்பது தெரியுமா? பின்னால் நடப்பதை முன்கூட்டியே கூறுவதில் புகழ்பெற்ற புத்தகம் ஒன்று, உலகளவில் அழிவு வரவிருப்பதை எச்சரிக்கிறது. அந்த அழிவை இவ்வாறு விவரிக்கிறது: “கதிரவன் இருண்டுவிடும்; நிலா தன் ஒளி கொடாது; விண்மீன்கள் வானத்திலிருந்து விழும்; வான்வெளிக்கோள்கள் அதிரும். . . . மண்ணுலகிலுள்ள எல்லாக் குலத்தவரும் மாரடித்துப் புலம்புவர்.” (மத்தேயு 24:29, 30, பொது மொழிபெயர்ப்பு) “மண்ணுலகிலுள்ள எல்லாக் குலத்தவரும்” பாதிக்கப்படுவார்கள் என்றால், இந்த இயற்கைப் பேரழிவு உலக அளவில் வரும் என்று தெரிகிறது. அப்படியென்றால், அழிவைப் பற்றிய இந்தத் தீர்க்கதரிசனம் நம் ஒவ்வொருவரையும் பாதிக்கும்.
இவ்வாறு அழிவைப் பற்றி முன்னுரைக்கும் அந்தப் புத்தகம் பைபிளே. இதில் வருவதை முன்னுரைக்கும் அனைத்து தீர்க்கதரிசனங்களும் நம்பகமானவை. உலக அழிவைப் பற்றி குறிப்பிட்ட அந்த வசனத்தின் சந்தர்ப்ப சூழலையும், அவ்வசனத்தின் முழு பகுதியையும் படித்தால், அழிவுக்கு முன் என்னென்ன சம்பவங்கள் படிப்படியாக நிகழும் என விலாவாரியாக விவரிக்கப்பட்டிருப்பதை காண முடியும்! எரிமலை உச்சியில் சாம்பல் குழம்பு (லாவா) படிந்திருந்ததையும், மற்ற அடையாளங்களையும் வைத்து ஷிமாபாரா நகர அதிகாரிகள் அபாய பகுதிகளை கோடிட்டு காட்டினார்கள். அதேபோல் நாமும் ஜாக்கிரதையாக இருப்பதற்காக வரவிருக்கும் அபாயங்களையும், அவற்றிலிருந்து தப்பிக்கும் வழியையும் பைபிள் சுட்டிக்காட்டுகிறது. அந்தப் பேரழிவு வருவது நிச்சயம் என உணர்ந்து, அதிலிருந்து தப்பிக்க பியூஜியன் எரிமலை விபத்து நமக்கு ஒரு நல்ல பாடமாக அமையட்டும்!
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
COVER: Yomiuri/Orion Press/Sipa Press
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
Yomiuri/Orion Press/Sipa Press