விதவையாக வாடிய இரு பெண்கள்
சன்ட்ரா ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் ஒரு விதவை. சில ஆண்டுகளுக்கு முன் அவள் கணவன் இறந்தபோது, சன்ட்ரா அதிர்ச்சியில் அப்படியே உறைந்துபோனாள். “என் துணைவரை, என் மிகச் சிறந்த நண்பரை திடீரென்று இழந்துவிட்டேன் என்பதை ஒருகணம் நினைத்தபோது அப்படியே உடைந்துபோனேன். மருத்துவமனையிலிருந்து நான் எப்படித்தான் வீடு வந்து சேர்ந்தேன் என்பதோ அந்த நாள் முழுவதும் என்ன செய்தேன் என்பதோ எனக்கு கொஞ்சங்கூட நினைவில்லை. அடுத்து வந்த சில வாரங்களில் எனக்கிருந்த பயத்தின் காரணமாக எனக்கு உடம்பு முழுவதும் ஒரே வேதனை.”
சன்ட்ராவின் ஒரு சிநேகிதி, அவளைவிட வயதில் மூத்தவள். பெயர் இலேன். இவள் விதவையாகி சுமார் ஆறு வருடங்கள் ஆகின்றன. புற்றுநோயினால் அவள் கணவர் டேவிட் இறப்பதற்குமுன் இலேன் ஆறு மாதங்கள் இராப்பகலாக அருகிலிருந்து அவரை கவனித்துக்கொண்டாள். துக்கத்தில் அவள் துவண்டு போனாள். எந்த அளவுக்கு? தற்காலிகமாக பார்வையே இழந்துவிடும் அளவுக்கு. இரண்டு வருடங்களுக்குப்பின் அவள் வெளியே சென்றிருந்தபோது மயங்கி விழுந்துவிட்டாள். உடலில் எந்தக் குறையும் அவளுக்கு இருப்பதாக டாக்டருக்குத் தெரியவில்லை. ஆனால், அவள் துக்கத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் தனக்குள்ளேயே அடைத்து வைத்திருப்பதை அவர் கண்டுபிடித்தார். அவள் வீட்டுக்குப் போய் வாய்விட்டு அழும்படி சிபாரிசும் செய்தார். “என் துக்கத்தை சமாளிக்க நீண்ட நாளானது, தனிமை வாட்டியபோது நான் படுக்கை அறைக்குள் சென்று டேவிட்டின் துணிமணிக்குள் என் முகத்தைப் புதைத்துக்கொள்வேன்” என்று இலேன் கூறுகிறாள்.
அன்பான கணவர் மரிக்கையில் ஒவ்வொரு பெண்ணும் வெவ்வேறு விதமாக பிரதிபலிக்கலாம். ஏனெனில் கணவரின்றி வாழ்வது மட்டுமே விதவையின் பிரச்சினையல்ல. உதாரணமாக, சன்ட்ரா கொஞ்ச காலத்துக்கு தான் தானாக இல்லை என்பதாக உணர்ந்தாள். சமீபத்தில் விதவையான மற்ற அநேக பெண்களைப் போலவே அவள் தெம்பற்றவளாக உணர்ந்தாள், தனக்கு இனிமேல் பாதுகாப்பில்லை என்று நினைத்தாள். சன்ட்ரா நினைவுபடுத்தி இவ்வாறு கூறுகிறாள்: “எந்த விஷயமானாலும் என் கணவரே தீர்மானம் எடுத்து வந்தார்; திடீரென கணவனை பறிகொடுத்துவிட்டதால் தீர்மானம் எடுக்க வேண்டியதை நினைத்து மிகவும் பயந்தேன். தூக்கத்திலிருந்து திடீர் திடீரென்று விழித்துக்கொள்வேன். எனக்கு மிகவும் களைப்பாகவும் சோர்வாகவும் இருந்தது. என்ன செய்வதென்றே புரியவில்லை.”
சன்ட்ராவுக்கும் இலேனுக்கும் ஏற்பட்டதைப் போன்ற அனுபவங்கள் உலகம் முழுவதிலும் அநேகருக்கு ஏற்படுகின்றன. நோயினாலும் விபத்துக்களினாலும் போர்களினாலும் இன ஒழிப்பினாலும் வன்முறையினாலும் இந்த விதவைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.a அநேகர் என்ன செய்வதென்று தெரியாமல் வெளியில் சொல்லாமல் மெளனமாகவே தங்கள் சோகங்களைச் சுமந்துகொண்டு காலம் தள்ளுகின்றனர். தனிமரமாய் வாழும் வாழ்க்கைக்கு தங்களைப் பழக்கப்படுத்திக்கொள்ள முயலும் பெண்களுக்கு நண்பர்களும் உறவினர்களும் எவ்வாறு உதவலாம்? அடுத்துவரும் கட்டுரையிலுள்ள ஆலோசனைகள் பிரயோஜனமாய் இருக்கலாம்.
[அடிக்குறிப்பு]
a கணவன்மார்கள் தங்களைவிட்டு பிரிந்துவாழ்வதால் மற்ற பெண்களும் இதே போன்ற நிலைமையில் இருக்கின்றனர். பிரிந்து வாழ்வது, விவாகரத்து போன்றவற்றால் வேறுசில பிரச்சினைகள் எழுந்தாலும், பின்வரும் கட்டுரையிலுள்ள பல நியமங்கள் இந்தச் சூழ்நிலைமைகளில் வாழும் பெண்களுக்கும் உதவலாம்.