உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சமீபத்தில் வெளியான காவற்கோபுரம் பத்திரிகைகளை நீங்கள் வாசித்து மகிழ்ந்தீர்களா? பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்:
• விடாப்பிடியான மனிதனைப்பற்றி இயேசு சொன்ன உவமையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (லூக்கா 11:5-10)
ஜெபிக்கும்போது நமக்கு எப்படிப்பட்ட மனநிலை தேவை என்பதை இந்த உவமை காட்டுகிறது. முக்கியமாய் கடவுளுடைய பரிசுத்த ஆவிக்காக விடாப்பிடியாய், அல்லது தொடர்ந்து நாம் கேட்க வேண்டும். (லூக்கா 11:11-13)—12/15, பக்கங்கள் 20-2.
• விதவையையும் நியாயாதிபதியையும்பற்றி இயேசு சொன்ன உவமையில் நமக்கு என்ன பாடம் இருக்கிறது? (லூக்கா 18:1-8)
ஜெபிப்பதன் அவசியத்தை இது வலியுறுத்துகிறது. யெகோவா அந்த நியாயாதிபதியைப் போல் இல்லாமல் நீதியுள்ளவராகவும் நமக்கு உதவுகிறவராகவும் இருக்கிறார். மேலும், உவமையில் குறிப்பிடப்பட்ட அந்த விதவையைப் போல நமக்கும் நம்பிக்கை வேண்டும்.—12/15, பக்கங்கள் 26-8.
• ‘இதயக் கதவுகளைத் திறந்து வைக்கும்படி’ கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் ஏன் சொன்னார்? (2 கொரிந்தியர் 6:11-13)
கொரிந்துவிலிருந்த சிலர் சக விசுவாசிகளை மதிக்காதவர்களாக, பெருந்தன்மையற்றவர்களாக, குறுகிய மனப்பான்மை உள்ளவர்களாக இருந்ததாய்த் தெரிகிறது. சக விசுவாசிகளை மனதார மதிப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும், புதிய நண்பர்களைப் பெறுவதற்கும் முயற்சி எடுக்க வேண்டும்.—1/1, பக்கங்கள் 9-11.
• வெளிப்படுத்துதல் 7:3-ல் சொல்லப்பட்டுள்ள முத்திரையிடுதல் எதைக் குறிக்கிறது?
கடவுள் பரிசுத்த ஆவியால் கிறிஸ்தவர்களை அபிஷேகம் செய்கிறபோது அவர்கள் ஆரம்ப முத்திரையைப் பெறுகிறார்கள். இந்த அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் தங்கள் உத்தமத்தன்மையை முழுமையாகக் காட்டியிருப்பதை உறுதிசெய்வதையே, வெளிப்படுத்துதல் 7:3-லுள்ள முடிவான முத்திரையிடுதல் குறிக்கிறது.—1/1, பக்கங்கள் 30-1.
• சாமுவேலைப்பற்றிய பைபிள் பதிவிலிருந்து பெற்றோர் என்ன கற்றுக்கொள்ளலாம்?
ஒரு விஷயம், சாமுவேலின் பெற்றோர் அவருக்குக் கற்பித்தது போல, கடவுளுடைய வார்த்தையைத் தங்கள் பிள்ளைகளுக்குப் பெற்றோர் கற்பிக்க வேண்டும். அதோடு, யெகோவாவுக்குச் சேவை செய்வதை வாழ்க்கைப் பணியாகத் தேர்ந்தெடுக்க பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டும்.—1/15, பக்கம் 16.
• சந்தோஷமாய் யெகோவாவுக்குக் காத்திருப்பதை நாம் எப்படிக் காட்டலாம்?
தேவபக்தியில்லாத எல்லாரையும் அவர் அழிக்கிறபோது கிடைக்கவிருக்கும் நிம்மதிக்காக, நாம் ‘தேவனுடைய நாளுக்கு . . . காத்திருக்கிறோம்.’ (2 பேதுரு 3:7, 12) தீமைக்கு முடிவுகட்ட யெகோவா ஆவலோடு இருந்தாலும், தம் பெயருக்கு மகிமை ஏற்படும் விதத்தில் கிறிஸ்தவர்களுக்கு இரட்சிப்பை அளிப்பதற்காக அவர் இப்போது பொறுமையாய் இருக்கிறார். செயல்படுவதற்கு ஏற்ற சமயத்தை யெகோவா அறிந்திருக்கிறார் என நாம் நம்பிக்கையோடிருக்க வேண்டும்; இதற்கிடையில், ஊக்கந்தளராமல் அவரைத் துதிக்க வேண்டும். (சங்கீதம் 71:14, 15)—3/1, பக்கங்கள் 17-18.
• பேழைக்குள் நோவா சுத்தமான ஒவ்வொன்றிலும் ஏழு மிருகங்களைச் சேர்த்துக்கொண்டாரா, ஏழு ஜோடிகளைச் சேர்த்துக்கொண்டாரா?
சுத்தமான சகல மிருகங்களிலும் ‘எவ்வேழு ஜோடுகளை [“ஏழுகளாக,” NW] . . . சேர்த்துக்கொள்ளும்படி’ நோவாவிடம் யெகோவா சொன்னார். (ஆதியாகமம் 7:1-3) எபிரெய மொழியில் ‘ஏழுகள்’ என்ற வார்த்தை சொல்லர்த்தமாக ‘ஏழு ஏழு’ என அர்த்தப்படுத்துகிறது. அந்த விதத்தில் பேசப்படுவது, பைபிளிலுள்ள மற்ற வசனங்கள் காட்டுகிறபடி, ஏழு ஜோடிகளை அர்த்தப்படுத்துவதில்லை. சொல்லப்போனால், நோவா ஒவ்வொன்றிலும் ஏழு மிருகங்களை அதாவது மூன்று ஜோடிகளையும் பின்னர் பலி செலுத்துவதற்குப் பயன்படுத்திக்கொள்ளும் விதத்தில் கூடுதலாக ஒரு மிருகத்தையும் பேழையில் சேர்த்துக்கொண்டார். (ஆதியாகமம் 8:20)—3/15, பக்கம் 31.
• கிறிஸ்தவர்கள் ஏன் முன்நின்று நடத்தும் மூப்பர்களுடைய விசுவாசத்தின் பலனைக் குறித்து ‘நன்றாய்ச் சிந்திக்க’ வேண்டும்?
மூப்பர்களின் விசுவாசமுள்ள நடத்தையின் பலனைக் குறித்து ‘நன்றாய்ச் சிந்திக்கவும்’ அல்லது உன்னிப்பாய் கவனிக்கவும், அப்படி விசுவாசத்திற்கு முன்மாதிரியாய் இருப்பவர்களைப் பின்பற்றவும் அப்போஸ்தலன் பவுல் நமக்கு அழைப்புவிடுக்கிறார். (எபிரெயர் 13:7) கடவுளுடைய வார்த்தை இவ்வாறு செய்யும்படிச் சொல்வதால் இதை நாம் செய்கிறோம். மேலும், அவர்கள் ராஜ்யம் சம்பந்தப்பட்ட காரியங்களிலும், நம்முடைய நலனிலும் உண்மையான அக்கறை காட்டுகிறார்கள் என்பதை நாம் மனப்பூர்வமாய் ஏற்றுக்கொள்கிறோம்.—4/1, பக்கம் 28.