உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • wp19 எண் 2 பக். 10-11
  • தீராத நோயினால் தவிக்கும்போது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தீராத நோயினால் தவிக்கும்போது
  • காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2019
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மற்றவர்களுக்குக் கைகொடுத்த ஆலோசனைகள்
  • தீராத வியாதி ஒரு குடும்ப விஷயம்
    விழித்தெழு!—2000
  • தீராத வியாதி குடும்பங்கள் எப்படி சமாளிக்கின்றன?
    விழித்தெழு!—2000
  • இளைஞர் கேட்கின்றனர்
    விழித்தெழு!—1997
  • குடும்ப அங்கத்தினர் ஒருவர் நோய்ப்பட்டிருக்கையில்
    குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம்
மேலும் பார்க்க
காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2019
wp19 எண் 2 பக். 10-11

தீராத நோயினால் தவிக்கும்போது

“என்னோட நுரையீரல்-லயும் பெருங்குடல்-லயும் புற்றுநோய் இருக்குன்னு டாக்டர் சொன்னப்போ இடி இறங்குன மாதிரி இருந்துச்சு. ஏதோ என்னோட சாவு தேதிய குறிச்சிட்ட மாதிரி தோணுச்சு. வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம், ‘சரி, ஆனது ஆயிடுச்சு, இனி எப்படி சமாளிக்கறதுன்னு பார்க்கலாம்’னு யோசிச்சேன்.”—லிண்டா, வயது 71.

“நரம்புக் கோளாறுனால என் முகத்தோட இடது பக்கத்துல பயங்கரமா வலி எடுக்கும். அதனாலேயே சிலசமயம் எனக்கு மனச்சோர்வு வந்துடும். நிறைய சமயம், எனக்குன்னு யாருமே இல்லாத மாதிரி தோணும். தற்கொலை செஞ்சுக்கலாமான்னுகூட யோசிச்சிருக்கேன்.”—எலிஸ், வயது 49.

சக்கர நாற்காலியில் இருக்கும் வியாதிப்பட்ட ஒருவரைச் சுற்றி அவருடைய அன்பானவர்கள் இருக்கிறார்கள்

உயிருக்கு ஆபத்தான ஏதோவொரு வியாதியால் நீங்களோ உங்களுக்குப் பிரியமான ஒருவரோ தவிக்கிறீர்களா? அப்படியென்றால், அது எவ்வளவு கொடுமையான அனுபவம் என்று உங்களுக்குத் தெரியும். வியாதி ஒருபக்கம் என்றால், மனம் தவிக்கும் தவிப்பு இன்னொரு பக்கம்! டாக்டரைப் பார்க்க வேண்டுமென்று நினைக்கும்போதே உங்களுக்குக் குலைநடுங்கலாம், பொருத்தமான சிகிச்சையைக் கண்டுபிடிப்பதோ அதற்குப் பணம் திரட்டுவதோ பெரும் பாடாக இருக்கலாம், அல்லது மருந்து மாத்திரைகளுடைய பக்கவிளைவுகள் உங்களைப் படுத்தி எடுக்கலாம். உண்மையில், உடம்புக்கு ஏதாவது பெரிய பிரச்சினை வந்துவிட்டால், கவலை நம்மைத் திணறடித்துவிடும்.

இந்தச் சூழ்நிலையை எப்படிச் சமாளிப்பது? கடவுளிடம் ஜெபம் செய்வதும், பைபிளில் இருக்கும் ஆறுதலான வசனங்களைப் படிப்பதும் ரொம்பவே தெம்பு கொடுப்பதாக நிறைய பேர் சொல்கிறார்கள். குடும்பத்தாரும் நண்பர்களும் காட்டுகிற அன்பும் ஆதரவும்கூட உதவியாக இருக்கும்.

மற்றவர்களுக்குக் கைகொடுத்த ஆலோசனைகள்

58 வயது ராபர்ட் தரும் ஆலோசனை இதுதான்: “யெகோவா தேவன்மேல நம்பிக்கை வையுங்க, எல்லாத்தயும் தாங்கிக்க அவரு உங்களுக்கு உதவி செய்வாரு. அவர்கிட்ட ஜெபம் பண்ணுங்க. உங்க மனசுல இருக்கறத எல்லாம் கொட்டிடுங்க. அவருடைய சக்திக்காக கேளுங்க. உங்க குடும்பத்துல இருக்கறவங்களுக்கு முன்னால நம்பிக்கையாவும் தைரியமாவும் இருக்க அவர்கிட்ட உதவி கேளுங்க. பதட்டப்படாம பிரச்சினைய சமாளிக்கிறதுக்கும் பலம் கேளுங்க.

குடும்பத்துல இருக்கறவங்க நமக்கு பக்கபலமா இருந்தா, பாதி பிரச்சினை தீர்ந்த மாதிரிதான். ‘அவங்க நமக்காக இருக்காங்க’னு நினைக்கறப்பவே தெம்பா இருக்கும். தினமும் ஒண்ணு ரெண்டு பேர் எனக்கு ஃபோன் பண்ணி, ‘எப்படி இருக்கீங்க?’னு கேட்பாங்க. வேறவேற இடங்கள்ல இருக்கற ஃப்ரெண்ட்ஸும் என்னை கூப்பிட்டு ஆறுதலா பேசுவாங்க. இவங்க சொல்ற வார்த்தைகள்தான் எனக்கு உற்சாக டானிக். மனச விட்டுடாம இருக்க அதுதான் எனக்கு உதவியா இருக்கு.”

உடம்பு முடியாமல் இருக்கும் ஒரு நண்பரைப் போய்ப் பார்ப்பதாக இருந்தால், லிண்டா சொல்வதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்: “உடம்பு முடியாம இருக்கறவங்க முடிஞ்ச வரைக்கும் இயல்பா வாழணும்னு நினைப்பாங்க. அவங்களோட உடல்நிலைய பத்தியே பேசிட்டு இருக்க அவங்களுக்கு பிடிக்காது. அதனால, எப்பவும்போல வேறவேற விஷயங்கள பத்தி அவங்ககிட்ட பேசுங்க.”

கடவுள் தருகிற பலம்... வசனங்கள் தருகிற ஆறுதல்... பாசமான உறவுகள் தருகிற ஆதரவு... இதெல்லாம் இருந்தால், தீராத வியாதியோடு போராட வேண்டியிருந்தாலும், வாழ்க்கை ஒரு வரப்பிரசாதம் என்று நம்புவோம்!

மனக்காயத்துக்கு மருந்து

கடவுளை நம்பியிருங்கள்.

“நான் யெகோவாவிடம் விசாரித்தேன், அவர் எனக்குப் பதில் சொன்னார். எல்லா பயத்திலிருந்தும் அவர் என்னை விடுவித்தார். இந்த எளியவன் கூப்பிட்டபோது யெகோவா கேட்டார்.”—சங்கீதம் 34:4, 6.

லிண்டா சொல்கிறார்... “‘என்னை சரியாக்கிடுங்க’னு நான் கடவுள்கிட்ட கேட்டதே இல்ல. ‘தைரியமா இருக்க உதவி செய்யுங்க, எல்லாத்தயும் தாங்கிக்கற சக்திய கொடுங்க’ அப்படினுதான் எப்பவும் கேட்பேன்.”

கடவுளுடைய வார்த்தையைப் படித்துப் பலம் பெறுங்கள்.

“‘எனக்கு உடம்பு சரியில்லை’ என்று யாருமே சொல்ல மாட்டார்கள்.”—ஏசாயா 33:24.

சந்தோஷமான எதிர்காலம் வரப்போவதைப் பற்றிக் கடவுள் கொடுத்திருக்கும் வாக்குறுதிகளை யோசித்துப் பாருங்கள். அப்போது உங்களுக்கு நம்பிக்கை பிறக்கும், பிரச்சினையைத் தாங்கிக்கொள்வதற்கான பலமும் கிடைக்கும்.

குடும்பத்தாரிடமும் நண்பர்களிடமும் உதவி கேளுங்கள்.

“உண்மையான நண்பன் எல்லா சமயத்திலும் அன்பு காட்டுகிறான். கஷ்ட காலங்களில் உதவுவதற்காகப் பிறந்த சகோதரனாக இருக்கிறான்.” —நீதிமொழிகள் 17:17.

எலிஸ் சொல்கிறார்... “எப்பவும் ஒதுங்கியே இருக்காதீங்க. நண்பர்களோட உதவிய ஏத்துக்கோங்க. தன்னந்தனியா இருக்கற மாதிரி சிலசமயம் உங்களுக்கு தோணலாம். கடவுள் உங்க ஜெபத்த கேட்கறது இல்லன்னுகூட தோணலாம். ஆனாலும், உங்கள தனிமைப்படுத்திக்காதீங்க.”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்