உங்களுக்குத் தெரியுமா?
பழங்காலத்தில் வாழ்ந்த நிர்வாகிகள் என்ன வேலை செய்தார்கள்?
பழங்காலத்தில் வாழ்ந்த நிர்வாகிகள், இன்னொருவரின் வீட்டை அல்லது அவருடைய சொத்துப்பத்துகளை கவனித்துக்கொண்டார்கள். “நிர்வாகி” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெய வார்த்தையும் கிரேக்க வார்த்தையும், கண்காணியை அல்லது வீட்டு விஷயங்களை பொறுப்போடு கவனித்துக்கொள்பவரைக் குறித்தன.
யாக்கோபின் மகன் யோசேப்பைப் பற்றி யோசித்துப்பாருங்கள். அவர் எகிப்தில் இருந்தபோது, முதலில் அடிமையாக இருந்தார். பிறகு, தன் எஜமானுடைய வீட்டின் நிர்வாகியாக ஆனார். சொல்லப்போனால், அந்த எஜமான், தனக்குச் ‘சொந்தமான எல்லாவற்றையுமே யோசேப்பின் பொறுப்பில் ஒப்படைத்தார்.’ (ஆதி. 39:2-6) கொஞ்சக் காலத்துக்குப் பிறகு யோசேப்பு எகிப்தில் ஒரு அதிகாரியாக ஆனபோது, தன்னுடைய வீட்டை நிர்வகிக்க ஒரு நிர்வாகியை நியமித்திருந்தார்.—ஆதி. 44:4.
இப்போது, இயேசுவின் காலத்துக்கு வரலாம். அவருடைய காலத்தில் வாழ்ந்த பண்ணையார்கள் தங்களுடைய பண்ணையில் குடியிருக்கவில்லை; நகரத்தில்தான் குடியிருந்தார்கள். அதனால், பண்ணையில் வேலை செய்தவர்களை மேற்பார்வை செய்ய நிர்வாகிகளை நியமித்திருந்தார்கள்.
பொதுவாக யாரை நிர்வாகிகளாக நியமிப்பார்கள்? முதல் நூற்றாண்டைச் சேர்ந்த ரோம எழுத்தாளரான கால்யமெலா இதைப் பற்றிச் சொல்கிறார். கண்காணியாக, அதாவது நிர்வாகியாக, நியமிக்கப்பட்ட ஒரு அடிமை, “நன்றாக வேலை செய்வதற்குக் கற்றுக்கொண்டவராக” இருந்தார். அதோடு, “தொழிலாளிகள் சரியாக வேலை செய்கிறார்களா என்பதைக் கண்காணிப்பவராக, அதே சமயத்தில், அவர்களைக் கொடூரமாக நடத்தாதவராக” இருப்பார். “அவரிடம் இன்னொரு முக்கியமான விஷயமும் எதிர்பார்க்கப்பட்டது. அதாவது, தனக்கு எல்லாமே தெரியும் என்று அவர் நினைக்கக் கூடாது. புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் எப்போதும் இருக்க வேண்டும்.”
கிறிஸ்தவ சபையில் நடக்கும் சில வேலைகளைப் பற்றி விளக்குவதற்கு, நிர்வாகியைப் பற்றியும் அவருடைய வேலையைப் பற்றியும் பைபிள் சொல்கிறது. உதாரணத்துக்கு, கிறிஸ்தவர்களை அப்போஸ்தலன் பேதுரு எப்படி உற்சாகப்படுத்தினார் என்று கவனியுங்கள். ‘கடவுளுடைய அளவற்ற கருணையைப் பெற்ற நீங்கள் அதன் சிறந்த நிர்வாகிகளாக இருப்பதால்’ அவரவருக்குக் கடவுள் கொடுத்திருக்கும் திறமைகளைப் பயன்படுத்தி ‘ஒருவருக்கொருவர் சேவை செய்யுங்கள்’ என்று சொன்னார்.—1 பே. 4:10.
நிர்வாகியின் உதாரணத்தை இயேசுவும் பயன்படுத்தினார். லூக்கா 16:1-8-ல் அது பதிவாகி இருக்கிறது. அதுமட்டுமல்ல, தான் ராஜாவாக வரப்போகும் சமயத்தில் நடக்கப்போகிற அடையாளங்களைப் பற்றிச் சொன்ன தீர்க்கதரிசனத்தில், ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை,’ அதாவது ‘உண்மையுள்ள நிர்வாகியை’ நியமிக்கப்போவதாகச் சொன்னார். கடைசி நாட்களில் கிறிஸ்துவின் சீஷர்களுக்கு ஆன்மீக உணவைத் தொடர்ந்து கொடுப்பதுதான் இந்த நிர்வாகியின் முக்கியமான வேலை. (மத். 24:45-47; லூக். 12:42) இந்த வேலையைச் செய்பவர்கள், நம் விசுவாசத்தைப் பலப்படுத்துகிற பிரசுரங்களைத் தயாரித்து, அவை உலகம் முழுவதும் கிடைக்கும்படி செய்கிறார்கள். அந்தப் பிரசுரங்கள் நம் கைகளிலும் கிடைப்பதை நினைக்கும்போது, நம் இதயம் நன்றியால் பொங்குகிறது, இல்லையா?