கேள்விப் பெட்டி
◼ யாருக்குப் பிரசுரங்களைக் கொடுக்க வேண்டும்?
அது நம் செய்தியைக் கேட்பவர்களின் ஆர்வத்தைப் பொறுத்தது. உண்மையான ஆர்வத்தைக் காட்டுபவர்களிடம் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளையோ, சிற்றேட்டையோ, ஒரு புத்தகத்தையோ கொடுத்து விட்டு வரலாம். உலகளாவிய வேலைக்காக அவர் கொஞ்சம் நன்கொடை கொடுத்தாலும் அல்லது நன்கொடையே கொடுக்காவிட்டாலும் பிரசுரங்களைக் கொடுக்கலாம். (யோபு 34:19; வெளி. 22:17) ஆனால், மதிப்புமிக்க நம் பிரசுரங்களை அலட்சியம் செய்கிறவர்களிடம் கொடுக்க வேண்டியதில்லை.—மத். 7:6.
வீட்டுக்காரருக்கு ஆர்வம் இருக்கிறதா என்று எப்படிக் கண்டுபிடிக்கலாம்? அவர் நம்மிடம் பேச முன்வருவதே ஒரு நல்ல அறிகுறிதான். அதோடு, நாம் பேசும்போது நன்கு கவனிப்பது, கேள்விகளுக்குப் பதிலளிப்பது, கருத்துகளைத் தெரிவிப்பது ஆகியவையும் அறிகுறிகள்தான். நாம் பைபிளிலிருந்து வாசித்துக் காண்பிக்கும்போது அதைக் கூர்ந்து கேட்டால் பைபிள்மீது அவர் மதிப்பு வைத்திருக்கிறார் என்று அர்த்தம். நாம் கொடுக்கிற பத்திரிகையைப் படிப்பாரா என அவரிடமே கேட்பது இன்னும் சிறந்தது. அந்த நபருக்கு உண்மையிலேயே ஆர்வம் இருக்கிறதா என்பதைப் பிரஸ்தாபிகள்தான் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். உதாரணமாக, தெரு ஊழியம் செய்யும்போது எதிரே வருகிற எல்லாரிடமும் கண்ணை மூடிக்கொண்டு பத்திரிகைகளையோ சிற்றேடுகளையோ புத்தகங்களையோ கொடுப்பது சரியாக இருக்காது. ஒருவருக்கு ஆர்வம் இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் ஒரு துண்டுப்பிரதியைக் கொடுத்துவிட்டு வரலாம்.
ஒரு பிரஸ்தாபி எவ்வளவு நன்கொடை போடுகிறாரோ அதற்குத் தகுந்தாற்போல்தான் பிரசுரங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றில்லை. ஊழியத்தில் கொடுக்க அவருக்கு எவ்வளவு பிரசுரங்கள் தேவையோ அவற்றைச் சபையிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். ஏனென்றால், நாம் கொடுக்கும் நன்கொடை பிரசுரங்களுக்காக மட்டுமல்ல, உலகளாவிய பிரசங்க வேலையோடு சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. நாம் ஏழையாக இருந்தாலும் சரி பணக்காரராக இருந்தாலும் சரி, நமக்கு நன்றியுணர்வு இருந்தால் ராஜ்ய வேலைகளை ஆதரிக்க தாராளமாக நன்கொடை கொடுப்போம்; நம்மிடம் அதிகம் இருந்தால் மட்டுமல்ல, கொஞ்சமாக இருந்தாலும் கொடுப்போம். (மாற். 12:41-44; 2 கொ. 9:7) எனவே, நமக்கு எவ்வளவு பிரசுரங்கள் தேவையோ அதை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால், பிரசுரங்களுக்காக எல்லாரும் கொடுக்கிற நன்கொடை வீணாகாமல் இருக்கும்.
[பக்கம் 2-ன் சிறு குறிப்பு]
அந்த நபருக்கு உண்மையிலேயே ஆர்வம் இருக்கிறதா என்பதைப் பிரஸ்தாபிகள்தான் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்