-
உலகளாவிய பிரச்சினைவிழித்தெழு!—2001 | நவம்பர் 8
-
-
உலகளாவிய பிரச்சினை
“தற்கொலை என்பது சமுதாயத்தின் நலனை கெடுக்கும் மோசமான ஒரு பிரச்சினை.” 1999-ல் ஐ.மா. தலைமை அறுவை மருத்துவர் டேவிட் ஸாச்சர் கூறினார்.
ஐக்கிய மாகாணங்களின் தலைமை அறுவை மருத்துவர் விட்ட இந்த அறிக்கையால் சரித்திரத்திலேயே முதல் தடவையாக தற்கொலை பற்றிய விஷயத்தை உலகம் பேச ஆரம்பித்தது. இப்போது இந்நாட்டில் பிறரால் கொலை செய்யப்படுபவர்களைவிட தங்களைத் தாங்களே கொலை செய்துகொள்பவர்களே அதிகம். ஆகவே, ஐ.மா. சட்டமன்றம் தற்கொலையை தடுப்பதை தேசிய முன்னுரிமையாக அறிவித்ததில் ஆச்சரியமில்லை.
ஆனால், 1997-ல் ஐக்கிய மாகாணங்களில் தற்கொலை வீதம் 1,00,000 பேருக்கு 11.4 என்ற எண்ணிக்கையில் இருந்தது, இது உலக சுகாதார நிறுவனத்தால் 2000-ல் வெளியிடப்பட்ட உலகளாவிய வீதத்திற்கு—1,00,000 பேருக்கு 16 என்ற வீதத்திற்கு—குறைவே. கடந்த 45 வருடங்களில், உலகெங்கிலும் தற்கொலை வீதம் 60 சதவீதத்திற்கு அதிகரித்துவிட்டது. இப்பொழுது, ஒரே ஆண்டில், உலகம் முழுவதிலும் சுமார் பத்து லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். 40 வினாடிக்கு ஒருமுறை கிட்டத்தட்ட ஒரு மரணம்!
ஆனால் புள்ளிவிவரங்கள் முழு விவரத்தையும் துல்லியமாக சொல்லிவிட முடியாது. பல சந்தர்ப்பங்களில், குடும்ப அங்கத்தினர்கள் தற்கொலையை மூடிமறைக்கிறார்கள். மேலும், ஒருவருடைய தற்கொலை முயற்சி வெற்றி பெற்றிருக்கிறதென்றால், 10 முதல் 25 பேருடைய விஷயத்தில் தற்கொலை முயற்சி தோல்வியை தழுவியிருக்கிறது என கணக்கிடப்படுகிறது. ஐக்கிய மாகாணங்களில் மேல்நிலை பள்ளி மாணவர்களில் 27 சதவீதத்தினர் தற்கொலை செய்துகொள்வதைப் பற்றி கடந்த ஆண்டில் தீவிரமாக யோசித்ததாக ஒப்புக்கொண்டார்கள்; 8 சதவீதத்தினர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்கள் என ஒரு சுற்றாய்வு கண்டுபிடித்தது. வயதுவந்தவர்களில் 5 முதல் 15 சதவீதத்தினருக்கு ஏதோவொரு சமயத்தில் தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டிருப்பதை வேறுசில ஆராய்ச்சிகள் கண்டுபிடித்திருக்கின்றன.
கலாச்சார வேற்றுமைகள்
தற்கொலையைப் பற்றிய மக்களின் கருத்தும் பேரளவில் வித்தியாசப்படுகிறது. சிலர் அதை குற்றச்செயலாக கருதுகிறார்கள், வேறுசிலரோ கோழைகளின் ஆயுதம் என்றும், இன்னும் சிலரோ தவறுக்கு வருத்தம் தெரிவிக்கும் கெளரவமான முறை என்றும் கருதுகிறார்கள். ஒரு கொள்கையை முன்னேற்றுவிப்பதற்கு சிறந்த வழி என்றுகூட சிலர் நினைக்கிறார்கள். ஏன் இத்தனை வித்தியாசப்பட்ட கருத்துக்கள்? கலாச்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. சொல்லப்போனால், கலாச்சாரம் “தற்கொலை செய்துகொள்வதை தூண்டலாம்” என தி ஹார்வர்ட் மென்டல் ஹெல்த் லெட்டர் தெரிவிக்கிறது.
மத்திய ஐரோப்பாவிலுள்ள ஹங்கேரி நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கு தற்கொலை வீதம் உயர்ந்த அளவில் இருப்பதை ஹங்கேரியின் “சோகமான ‘பாரம்பரியம்’” என டாக்டர் ஸோல்டான் ரீமர் குறிப்பிடுகிறார். எந்தவொரு காரணத்திற்காகவும், கொஞ்சங்கூட தயக்கமின்றி ஹங்கேரி நாட்டவர் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என ஹங்கேரியின் தேசிய சுகாதார நிறுவன இயக்குநர் பேலா புடா குறிப்பிட்டார். “அவருக்குப் புற்றுநோய் இருக்கிறது—அதற்கு எப்படி முடிவு கட்டுவதென்று அவருக்குத் தெரியும்,” இது பொதுவான ஒரு பிரதிபலிப்பு என புடா கூறினார்.
உடன்கட்டை ஏறுதல் என்ற மதப் பழக்கம் ஒரு காலத்தில் இந்தியாவில் இருந்தது. கணவனுடைய சிதையில் விழுந்து தன்னையும் மாய்த்துக்கொள்ளும் இப்பழக்கம் வெகு காலத்திற்கு முன்பே தடை செய்யப்பட்டபோதிலும், அது முற்றிலும் ஒழிந்துவிடவில்லை. இப்படி ஒரு பெண் தற்கொலை செய்துகொண்டபோது, உள்ளூர் மக்கள் பலர் இந்த அவலத்தை புகழ்ந்து பேசியதாக அறிக்கை செய்யப்படுகிறது. இந்தியாவின் அந்தப் பகுதியில் “25 வருஷத்தில் கிட்டத்தட்ட 25 பெண்கள் தங்கள் கணவனுடைய சிதையில் விழுந்து மாய்த்துக்கொண்டார்கள்” என இந்தியா டுடே அறிவிக்கிறது.
ஜப்பானில் வாகன விபத்துக்களில் இறப்பவர்களைவிட மூன்று மடங்கானோர் தற்கொலை செய்து சாகிறார்கள்! “ஜப்பானின் பாரம்பரிய கலாச்சாரம் தற்கொலை செய்துகொள்வதை ஒருபோதும் கண்டனம் செய்ததில்லை. ஆசார முறைப்படி சுயமாகவே வயிற்றை கிழிக்கும் பழக்கத்திற்கு (செப்புக்கூ அல்லது ஹரா-கிரி) அது பேர்போனது” என்று ஜப்பான்—அன் இல்லஸ்ட்ரேடட் என்ஸைக்ளோப்பீடியா கூறுகிறது.
மரணத்தோடு தொடர்புடைய இந்தக் கலாச்சார கவர்ச்சியைப் பற்றி புஷிடோ—த ஸோல் ஆஃப் ஜப்பான் என்ற நூலில் ஈனாஸோ நிட்டோபே விளக்கினார்; பிற்பாடு சர்வதேச சங்கத்தின் பொது காரியதரிசிக்குக் கீழ் பணிபுரிந்த அவர் இவ்வாறு எழுதினார்: “இடைநிலைக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த [செப்புக்கூ], படைவீரர்கள் தங்களுடைய குற்றச்செயல்களுக்கு பரிகாரம் செய்வதற்கு, செய்த தவறுகளுக்கு வருத்தம் தெரிவிப்பதற்கு, அவமானத்திலிருந்து தப்பிப்பதற்கு, தங்களுடைய நண்பர்களுக்கு ஏற்படுத்திய துன்பத்தை ஈடுகட்டுவதற்கு, அல்லது தங்களுடைய உண்மைத்தன்மையை நிரூபிப்பதற்கு பயன்படுத்திய ஒரு முறை.” பொதுவாக, இந்தத் தற்கொலை ஆசார முறை கடந்தகால பழக்கமாக இருந்தபோதிலும், சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு இன்னும் சிலர் இதை நாடுகிறார்கள்.
மறுபட்சத்தில், கிறிஸ்தவமண்டலத்தில் தற்கொலை என்பது ஒரு குற்றச்செயலாகவே வெகு காலமாக கருதப்பட்டது. ஆறாம் மற்றும் ஏழாம் நூற்றாண்டுகளில், தற்கொலை செய்தவர்களை கத்தோலிக்க சர்ச் சமுதாயத்திலிருந்து விலக்கி வைத்தது, அவர்களுக்கு அடக்க ஆராதனையும் நடத்த மறுத்தது. சில இடங்களில் மதவெறி தற்கொலை சம்பந்தமாக வினோதமான பழக்கங்களை—அவர்களுடைய உடலை தூக்கிலிடுதல், இருதயத்தில் கூர்மையான கம்பங்களை குத்துதல் போன்ற பழக்கங்களை—பிறப்பித்திருக்கிறது.
தற்கொலை செய்ய துணிந்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது முரண்பாடாக இருக்கிறது. குரல்வளையை அறுத்து தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்ததற்காக 19-ம் நூற்றாண்டு ஆங்கிலேயர் ஒருவர் தூக்கிலிடப்பட்டார். இப்படியாக, அந்த மனிதர் சாதிக்கத் தவறியதை இந்த அதிகாரிகள் சாதித்துவிட்டார்கள்! காலங்கள் செல்லச் செல்ல தற்கொலை செய்ய முயன்றவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனைகள் மாறினாலும், தற்கொலையும் தற்கொலை முயற்சியும் இனிமேல் குற்றச்செயலாக கருதப்படாது என 1961-ல்தான் பிரிட்டிஷ் பார்லிமென்ட் அறிவித்தது. அயர்லாந்தில் 1993 வரை இது ஒரு குற்றச்செயலாகவே கருதப்பட்டது.
இன்று, தற்கொலையை ஒரு தெரிவாக நூலாசிரியர்கள் சிலர் உற்சாகப்படுத்துகின்றனர். 1991-ல் வெளியிடப்பட்ட ஒரு புத்தகம், தீராத வியாதியால் துன்பப்படுவோர் சட்டப்பூர்வமாக தற்கொலை செய்துகொள்ள சில வழிமுறைகளைக் கொடுத்து உதவியது. பிற்பாடு, தீராத வியாதி இல்லாத அநேகர் அந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்ட முறைகளைப் பின்பற்ற ஆரம்பித்துவிட்டார்கள்.
ஒருவருடைய பிரச்சினைகளுக்கு உண்மையில் தற்கொலைதான் பரிகாரமா? அல்லது தொடர்ந்து வாழ்வதற்கு நல்ல காரணங்கள் இருக்கின்றனவா? இந்தக் கேள்விகளை சிந்திப்பதற்கு முன்பு, தற்கொலை செய்துகொள்ள எது தூண்டுகிறது என்பதை அலசி ஆராயலாம்.(g01 10/22)
[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]
ஓர் ஆண்டில், உலகெங்கிலும் சுமார் பத்து லட்சம் பேர் தற்கொலை செய்துகொள் கிறார்கள். 40 வினாடிக்கு ஒருமுறை கிட்டத்தட்ட ஒரு மரணம்!
-
-
ஏன் உயிரை துறந்துவிடுகின்றனர்விழித்தெழு!—2001 | நவம்பர் 8
-
-
ஏன் உயிரை துறந்துவிடுகின்றனர்
“மிகவும் தனிப்பட்ட விஷயம், புரிந்துகொள்ளவே முடியாதது, பயங்கர கலக்கம் என தற்கொலை செய்துகொள்கிற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கிறது.” கே ரெட்ஃபீல்டு ஜேமிசன், உளவியல் மருத்துவர்.
“வா ழ்க்கை கடும் வேதனையளிக்கிறது.” தற்கொலை செய்துகொள்வதற்கு சற்று முன்பு இப்படித்தான் எழுதி வைத்திருந்தார் ரியுனோசூகே ஆக்குடாகாவா—20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஜப்பானில் வாழ்ந்த பிரபல எழுத்தாளர். ஆனால் இந்த வார்த்தைகளுக்கு முன்பு அவர் இவ்வாறு எழுதினார்: “உண்மையில் நான் சாக விரும்பவில்லை, ஆனால் . . . ”
ஆக்குடாகாவாவை போல தங்களுடைய உயிரை மாய்த்துக்கொள்ளும் அநேகர் உண்மையில் சாக விரும்புவதில்லை, ஆனால் “நடக்கிற எந்த விஷயத்திற்கும் ஒரு முடிவு கட்டவே” விரும்புகிறார்கள் என உளவியல் பேராசிரியர் ஒருவர் குறிப்பிட்டார். தற்கொலைக்கு முன்பு எழுதி வைக்கப்படும் கடிதங்களில் மிகவும் பொதுவாக காணப்படும் வார்த்தைகள் இதைத்தான் மறைமுகமாக தெரிவிக்கின்றன. ‘இனிமேல் என்னால் இதை தாங்கிக்கொள்ள முடியாது’ அல்லது ‘நான் எதுக்காக இனியும் வாழணும்?’ போன்ற வார்த்தைகள், வாழ்க்கையின் வேதனைமிக்க நிஜங்களை விட்டு ஓடவே அவர்கள் மிகவும் ஆசைப்படுகிறார்கள் என்பதை காட்டுகின்றன. ஆனால் தற்கொலை செய்துகொள்வது, “ஜலதோஷத்திற்கு அணுகுண்டை மருந்தாக பயன்படுத்துவதைப் போல” இருக்கிறது என வல்லுநர் ஒருவர் விவரிக்கிறார்.
மக்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்பதற்கு காரணங்கள் பல இருந்தாலும், வாழ்க்கையில் ஏற்படும் சில சம்பவங்கள் பொதுவாக தற்கொலையைத் தூண்டுகின்றன.
தூண்டும் காரணிகள்
மற்றவர்களுக்கு மிகவும் அற்பமாக தோன்றுகிற விஷயங்களுக்குங்கூட நம்பிக்கை இழந்து தற்கொலை செய்கிற இளைஞர் கூட்டம் இன்று ரொம்ப சர்வசாதாரணம். யாராவது புண்படுத்தி அதற்காக எதுவும் செய்ய முடியாமல் இருக்கும்போது, தங்களை புண்படுத்தியவர்களுக்கு பதிலடி கொடுக்க தங்களுடைய சாவை ஓர் அஸ்திரமாக இளைஞர் கருதலாம். ஜப்பானில் தற்கொலை தூண்டுதல்களுக்கு ஆளாகிறவர்களுக்கு உதவி செய்வதில் ஸ்பெஷலிஸ்டாக இருக்கும் ஹிரோஷி ஈனாமூர இவ்வாறு எழுதினார்: “தங்களை துன்பப்படுத்தியவர்களுக்கு தங்களுடைய சாவின் மூலம் தண்டனை கொடுப்பதற்கான உள் தூண்டுதலில் பிள்ளைகள் ஆனந்தம் அடைகிறார்கள்.”
பிள்ளைகள் கடும் சித்திரவதைக்கு ஆளாகும்போது தற்கொலை முயற்சி செய்யும் வாய்ப்பு கிட்டத்தட்ட ஏழு மடங்கு அதிகம் என பிரிட்டனில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆராய்ச்சி சுட்டிக்காட்டியது. இந்தப் பிள்ளைகள் அனுபவிக்கும் உணர்ச்சி ரீதியிலான வேதனை நிஜமானது. தூக்குப்போட்டு செத்த 13 வயது சிறுவன், தன்னை சித்திரவதை செய்து தன்னிடமிருந்து பணத்தையும் பிடுங்கிய ஐந்து பேருடைய பெயர்களை குறிப்பிட்டு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தான். அதில், “தயவுசெய்து மற்ற பிள்ளைகளைக் காப்பாற்றுங்கள்” என எழுதியிருந்தான்.
இன்னும் சிலர் பள்ளியில் ஏதாவது வம்பிலோ அல்லது சட்டத்தின் பிடியிலோ மாட்டிக்கொள்ளும்போது, காதலில் தோல்வியடையும்போது, அல்லது நல்ல மார்க் வாங்காதபோது, பள்ளி பரீட்சையை எண்ணி மனவேதனைப்படும்போது, அல்லது எதிர்காலத்தைப் பற்றிய கவலையால் மனமுடைந்து போகும்போது தங்களுடைய உயிரை போக்கிக்கொள்ள முயற்சி செய்யலாம். எப்போதுமே நூற்றுக்கு நூறு வாங்க துடிக்கிற பருவ வயதினருக்கு வாழ்க்கையில் ஏதாவது பின்னடைவோ தோல்வியோ ஏற்படும்போது—அது நிஜமானதாகவோ கற்பனையானதாகவோ இருந்தாலும்—தற்கொலை முயற்சியில் இறங்கலாம்.
பெரியவர்களை பொறுத்ததில் பண அல்லது வேலை சம்பந்தமான பிரச்சினைகளே பொதுவாக தற்கொலையை தூண்டும் காரணிகளாகும். ஜப்பானில் பல வருட பொருளாதார வீழ்ச்சிக்குப்பின் சமீபத்தில் தற்கொலை எண்ணிக்கை ஆண்டுக்கு 30,000-ஐயும் தாண்டிவிட்டது. மைனிச்சி டெய்லி நியூஸ் கூறுகிறபடி, நடுத்தர வயதுடையவர்களில் சுமார் முக்கால்வாசி பேர் தற்கொலை செய்துகொண்டார்கள். காரணம்? “கடன் தொல்லைகள், வியாபாரத்தில் தோல்விகள், வறுமை, வேலைவாய்ப்பின்மை.” குடும்ப பிரச்சினைகளும் தற்கொலைக்கு வழிநடத்தலாம். “சமீபத்தில் விவாகரத்து செய்துகொண்ட நடுத்தர வயது ஆண்கள்” மிகவும் ஆபத்தில் இருக்கும் தொகுதியினர் என பின்லாந்து நாட்டு செய்தித்தாள் ஒன்று அறிக்கை செய்தது. தற்கொலை செய்துகொள்வதைப் பற்றி யோசிக்கும் பெரும்பாலான பெண் பிள்ளைகள் பிளவுபட்ட குடும்பங்களில் வளர்க்கப்பட்டவர்கள் என ஹங்கேரியில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சி கண்டுபிடித்தது.
வேலையிலிருந்து ஓய்வுபெறுவதும் வியாதியும்கூட, முக்கியமாக வயதானவர்கள் மத்தியில், தற்கொலையை தூண்டுகிற முக்கிய காரணிகளாகும். ஒரு நோயாளி தன்னுடைய வியாதியை சகிக்க முடியாததாக எண்ணும்போது, அது தீரா வியாதியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை, அதிலிருந்து தப்பிக்க தற்கொலையை ஒரு பரிகாரமாக நாடுகிறார்.
என்றாலும், எல்லாருமே இப்படிப்பட்ட காரணிகளால் தூண்டப்பட்டு தற்கொலை செய்துகொள்வதில்லை. வேதனைமிக்க சூழ்நிலைகளை எதிர்ப்படும்போது பெரும்பான்மையோர் தங்களுடைய உயிரை போக்கிக்கொள்வதில்லை. அப்படியானால், பெரும்பாலானோர் அப்படி நினைக்காதபோது ஏன் சிலர் மட்டும் தற்கொலையை பரிகாரமாக நினைக்கிறார்கள்?
அடித்தளத்திலுள்ள முக்கிய காரணிகள்
“காரியங்களை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதில்தான் மரிப்பதற்கு எடுக்கும் தீர்மானமே அடங்கியிருக்கிறது” என சொல்கிறார் கே ரெட்ஃபீல்டு ஜேமிசன், இவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர். அவர் மேலும் சொல்கிறார்: “பெரும்பாலானோருடைய மனம், ஆரோக்கியமாக இருக்கும்போது, எந்தவொரு காரியத்தையும் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மோசமானதாக எடுத்துக்கொள்வதில்லை.” அநேக காரணிகள்—அவற்றில் சில அடித்தளத்திலுள்ள முக்கிய காரணிகள்—தற்கொலை தூண்டுதலுக்கு வழிநடத்த ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என ஐ.மா. தேசிய மனநல நிறுவனத்தைச் சேர்ந்த ஈவ் கே. மாஷ்சிட்ஸ்கி குறிப்பிடுகிறார். அடித்தளத்திலுள்ள இப்படிப்பட்ட முக்கிய காரணிகளில் மனநிலை கோளாறுகள் (mental disorders), கெட்ட பழக்கங்களுக்கு அடிமைப்படும் கோளாறுகள் (addictive disorders), மரபுவழி பண்புகள் (genetic makeup), மூளை இரசாயனம் (brain chemistry) ஆகியவை உட்பட்டுள்ளன. இவற்றில் சிலவற்றை இப்பொழுது கவனிக்கலாம்.
மனச்சோர்வு (depression), பித்துவெறி கோளாறுகள் (bipolar mood disorders), உளச்சிதைவு (schizophrenia) போன்ற மனநல கோளாறுகளும் மதுபானத்திற்கு அல்லது போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் கோளாறுகளும் இந்தக் காரணிகளில் மிகவும் முக்கியமானவை. தற்கொலை செய்துகொண்ட 90 சதவீதத்தினருக்கும் அதிகமானோருக்கு இப்படிப்பட்ட கோளாறுகள் இருந்ததாக ஐரோப்பாவிலும் ஐக்கிய மாகாணங்களிலும் நடத்தப்பட்ட ஆராய்ச்சி காட்டுகிறது. சொல்லப்போனால், இப்படிப்பட்ட எந்தக் கோளாறுகளும் இல்லாத ஆண்களில் தற்கொலை வீதம் 1,00,000-க்கு 8.3, ஆனால் மனச்சோர்வடைந்தவர்களில் தற்கொலை வீதமோ 1,00,000-க்கு 650-ஆக உயர்ந்துவிட்டதை ஸ்வீடன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள்! தற்கொலைக்கு வழிநடத்தும் காரணிகள் கிழக்கத்திய நாடுகளிலும் ஒரே விதமாக இருப்பதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள். இருந்தபோதிலும், மனச்சோர்வும் தற்கொலையைத் தூண்டுகிற மற்ற காரணிகளும் சேர்ந்தாலும்கூட தற்கொலையை தவிர்க்க முடியாததாக ஆக்குவதில்லை.
ஒருசமயம் தற்கொலைக்கு முயற்சி செய்த பேராசிரியர் ஜேமிசனே இவ்வாறு கூறுகிறார்: “நிலைமைகள் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை இருக்கும்வரை மக்கள் மனச்சோர்வை தாங்கிக்கொள்வதாக அல்லது சகித்துக்கொள்வதாக தெரிகிறது.” ஆனால், தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு நம்பிக்கையின்மை படிப்படியாக அதிகரிக்கும்போது, தற்கொலை தூண்டுதல்களை கட்டுப்படுத்தும் சக்தியை மனம் படிப்படியாக இழந்துவிடுகிறது. தொடர்ச்சியான அழுத்தத்தால் ஒரு காரின் பிரேக்குகள் தேய்ந்து மெல்லியதாவதற்கு இதை அவர் ஒப்பிடுகிறார்.
மனச்சோர்வை குணமாக்க முடியுமாதலால், இப்படிப்பட்ட போக்கை முதலில் கண்டுணர்வது முக்கியம். ஆதரவற்று தவிக்கும் உணர்வை மாற்ற முடியும். அடித்தளத்திலுள்ள முக்கிய காரணிகள் சரிசெய்யப்படுகையில், பெரும்பாலும் தற்கொலையைத் தூண்டும் மனவேதனைகளுக்கும் மன அழுத்தங்களுக்கும் மக்கள் வித்தியாசமாக பிரதிபலிக்கலாம்.
அநேக தற்கொலைகளுக்கு ஒருவருடைய மரபியல் பண்பே அடித்தளத்திலுள்ள முக்கிய காரணியாக இருக்கலாம் என சிலர் நினைக்கின்றனர். ஒருவருடைய மனப்போக்கை தீர்மானிப்பதில் ஜீன்கள் பங்கு வகிக்கலாம், மற்றவர்களைவிட சிலருடைய பரம்பரையில் தற்கொலை சம்பவங்கள் நிறைய நிகழ்ந்திருக்கின்றன என்பதை ஆராய்ச்சிகள் காட்டுவதும் உண்மைதான். என்றாலும், “மரபியல் செல்வாக்கு இருப்பதால் தற்கொலை தவிர்க்க முடியாதது என எந்த விதத்திலும் அர்த்தப்படுத்துகிறதில்லை” என ஜேமிசன் கூறுகிறார்.
மூளை இரசாயனமும் முக்கிய காரணியாக இருக்கலாம். மூளையிலுள்ள கோடிக்கணக்கான நியூரான்கள் மின்-வேதியியல் முறையில் தொடர்பு கொள்கின்றன. நரம்பிழைகளின் கிளைபோன்ற முனைகளில், சினாப்ஸிஸ் என்ற சிறிய இடைவெளிகள் இருக்கின்றன, இவற்றை கடந்து நியூரோ-கடத்திகள் (neurotransmitters) தகவல்களை வேதியியல் முறையில் கொண்டு செல்கின்றன. உயிரியல் ரீதியில் எளிதில் தற்கொலைக்கு பலியாகும் ஒருவருடைய விஷயத்தில், செரோடோனின் என்ற நியூரோ-கடத்தி ஒன்றின் அளவு உட்பட்டிருக்கலாம். மூளைக்கு உள்ளே என்ற ஆங்கில நூல் இவ்வாறு விளக்குகிறது: “செரோடோனின் அளவு குறைவாக இருப்பது . . . வாழ்க்கையில் மகிழ்ச்சியை எடுத்துப்போடலாம், வாழ்வதில் விருப்பத்தை குறைத்துவிடலாம், மனச்சோர்வு மற்றும் தற்கொலையின் ஆபத்தை அதிகரிக்கச் செய்யலாம்.”
இருந்தாலும், யாருமே தற்கொலை செய்துகொள்வதற்கு விதிக்கப்படவில்லை என்பதே உண்மை. லட்சக்கணக்கானோர் கடுந்துயரங்களையும் மன அழுத்தங்களையும் சமாளிக்கிறார்கள். தற்கொலைக்கு வழிநடத்தும் அழுத்தங்களுக்கு சிலருடைய மனதும் இருதயமும் எப்படி பிரதிபலிக்கிறது என்பதே தீர்மானிக்கும் காரணி. உடனடியாக தூண்டுகிற காரணங்கள் அல்ல, ஆனால் அடித்தளத்திலுள்ள முக்கிய காரணிகளையும் சிந்திக்க வேண்டும்.
அப்படியானால், வாழ்க்கைக்கு ஓரளவு மகிழ்ச்சியை ஊட்டும் நம்பிக்கையான நோக்கை உருவாக்க என்ன செய்யலாம்?(g01 10/22)
[பக்கம் 6-ன் பெட்டி]
பாலினமும் தற்கொலையும்
ஆண்களைவிட பெண்களில் இரண்டு முதல் மூன்று மடங்கானோர் தற்கொலை முயற்சி செய்யும் சாத்தியம் இருந்தாலும், வெற்றிபெறும் சாத்தியமோ ஆண்களில் நான்கு மடங்கு அதிகம் என ஐக்கிய மாகாணங்களில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு குறிப்பிடுகிறது. ஆண்களைவிட பெண்களில் குறைந்தபட்சம் இரண்டு மடங்கானோர் மனச்சோர்வினால் பாதிக்கப்படுகின்றனர், இதுவே அதிகளவான பெண்கள் தற்கொலை முயற்சி செய்வதற்குக் காரணமாக இருக்கலாம். இருந்தாலும், அவர்களுடைய மனச்சோர்வு வியாதி அதிக தீவிரமின்றி இருக்கலாம், ஆகவே அவர்கள் அதிக தீவிரமல்லாத முறைகளை நாடலாம். மறுபட்சத்தில் ஆண்களோ தற்கொலை முயற்சியில் வெற்றிபெறுவதை உறுதிப்படுத்த அதிக தீவிரமான, திட்டமான முறைகளை பின்பற்ற மனமுள்ளவர்களாக இருக்கலாம்.
C இருந்தாலும், சீனாவில் ஆண்களைவிட பெண்களே அதிகம் வெற்றி பெறுகின்றனர். சொல்லப்போனால், உலகிலேயே பெண்களில் சுமார் 56 சதவீத தற்கொலைகள் சீனாவில், முக்கியமாக கிராமப்புற பகுதிகளில், நடைபெறுகின்றன என ஓர் ஆய்வு வெளிப்படுத்துகிறது. பெண்களின் தற்கொலை முயற்சிகள் வெற்றிபெறுவதற்குரிய காரணங்களில் ஒன்று பயங்கரமான பூச்சிக்கொல்லி மருந்துகள் எளிதாக கிடைப்பதாகும்.
[பக்கம் 7-ன் பெட்டி/படம்]
தற்கொலையும் தனிமையும்
மனச்சோர்வுக்கும் தற்கொலைக்கும் மக்களை வழிநடத்தும் காரணிகளில் ஒன்று தனிமை. பின்லாந்தில் தற்கொலைகளைப் பற்றிய ஆராய்ச்சிக்கு தலைவராக இருந்த யோயுகோ லூன்குவிஸ்ட் இவ்வாறு கூறினார்: “[தற்கொலை செய்துகொண்ட] பெரும்பாலானோருடைய அன்றாட வாழ்க்கை தனிமையிலேயே கழிந்தது. அவர்களுக்கு நிறைய ஓய்வுநேரம் கிடைத்தது, ஆனால் சமுக கூட்டுறவுகளோ மிக மிகக் குறைவு.” ஜப்பானில் நடுத்தர வயதுடைய ஆண்கள் தற்கொலை செய்துகொள்வது சமீபத்தில் பெருகி வருவதற்கு காரணம் “தனிமை” என கென்ஷிரோ ஓஹாரா கூறினார், இவர் ஹமாமட்ஸு மருத்துவ பல்கலைக்கழகத்தில் உளவியல் மருத்துவராக இருக்கிறார்.
[பக்கம் 5-ன் படம்]
பெரியவர்களுடைய விஷயத்தில், பண மற்றும் வேலை சம்பந்தமான பிரச்சினைகளே தற்கொலையை தூண்டும் பொது காரணிகள்
-
-
உதவிக்கரம் உங்களுக்கு உண்டுவிழித்தெழு!—2001 | நவம்பர் 8
-
-
உதவிக்கரம் உங்களுக்கு உண்டு
‘ஒரே கப்பில் 49 தூக்க மாத்திரைகள். இதை நான் குடிக்கவா வேண்டாமா?’ சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த 28 வயதுடைய ஒரு மனிதன் தன்னையே கேட்டுக்கொண்டான். அவனுடைய மனைவியும் பிள்ளைகளும் அவனை விட்டுப் பிரிந்துவிட்டிருந்தார்கள். அவனுடைய வாழ்க்கை மனச்சோர்வு எனும் ஆழ்கடலில் மூழ்கிவிட்டிருந்தது. ஆனால் அதைக் குடித்தப் பிறகு, ‘இல்லை, நான் சாக விரும்பவில்லை!’ என சொல்லிக்கொண்டான். எதிர்பாராத விதமாக, இந்தக் கதையை சொல்வதற்கு அவன் உயிர் பிழைத்துக்கொண்டான். தற்கொலை தூண்டுதல்கள் எப்பொழுதும் மரணத்திற்கு வழிநடத்துவதில்லை.
பருவவயது தற்கொலை முயற்சிகளைப் பற்றி ஐ.மா. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களைச் சேர்ந்த அலிக்ஸ் க்ராஸ்பி என்பவர் இவ்வாறு கூறினார்: “அவர்களுடைய தற்கொலை முயற்சியை நீங்கள் சில மணிநேரங்களுக்கு கட்டுப்படுத்த முடிந்தாலே போதும், அதை நீங்கள் நிறுத்திவிடலாம். இப்படி தடங்கல் ஏற்படுத்துவதன் மூலம் அநேகர் தற்கொலை செய்துவிடுவதை நீங்கள் தடுத்துவிடலாம். உங்களால் அவர்களுடைய உயிரை காப்பாற்ற முடியும்.”
ஜப்பான் மருத்துவ கல்லூரியில் உயிர்காக்கும் மற்றும் அவசர சிகிச்சை மையத்தில் பணிபுரிகையில், தற்கொலை தூண்டுதல் ஏற்பட்டவர்களுக்கு வாழ வேண்டும் என்ற ஆசையை மீண்டும் ஊட்டி பேராசிரியர் ஹிஸாஷி கியூரோஸாவா நூற்றுக்கணக்கானோருக்கு உதவி செய்தார். ஆம், ஏதோ ஒருவகையான தடங்கலை ஏற்படுத்தி உயிர்களைக் காப்பாற்ற முடியும். என்ன உதவி தேவைப்படுகிறது?
அடித்தள பிரச்சினைகளை எதிர்ப்படுதல்
முந்தைய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தற்கொலை செய்துகொண்ட 90 சதவீதத்தினருக்கு மனநல கோளாறுகள் அல்லது போதைப்பொருள் பழக்கங்கள் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆகவே, ஐ.மா. தேசிய மனநல நிறுவனத்தைச் சேர்ந்த ஈவ் கே. மாஷ்சிட்ஸ்கி இவ்வாறு கூறுகிறார்: “பலதரப்பு வயதினரிலும் தற்கொலையை தடுப்பதற்கு பெரிதும் கைகொடுப்பது மனநல கோளாறுகளையும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தையும் ஒழிப்பதே.”
வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், இப்படிப்பட்ட பிரச்சினை இருப்பவர்கள் உதவியை நாட முன்வருவதில்லை. ஏன்? “ஏனென்றால் சமுதாயத்தில் பலமான தப்பெண்ணம் நிலவுகிறது” என டோக்கியோ மாநகர உளவியல் நிறுவனத்தைச் சேர்ந்த யாஷிடோமோ டாகாஹாஷி கூறுகிறார். அதனால், தங்களுக்கு பிரச்சினை இருக்கிறது என ஓரளவு உணருகிறவர்களும்கூட உடனடி சிகிச்சையை நாட தயங்குகிறார்கள் என்றும் அவர் கூறுகிறார்.
ஆனாலும் சிலர் வெளிப்படையாக சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை. ஹிரோஷி ஓகாவா என்பவர் தனக்கு மனச்சோர்வு இருப்பதையும் தற்கொலை செய்துகொள்ளப்போகும் நிலையில் இருந்ததையும்கூட வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். இவர் பிரபல தொலைக்காட்சி அறிவிப்பாளர், ஜப்பானில் 17 வருடங்களாக அவரே சொந்தமாக நிகழ்ச்சிகளை நடத்தியிருப்பவர். “மனச்சோர்வு என்பது மனதை பாதிக்கும் சாதாரண ஜலதோஷத்திற்கு ஒப்பிடப்படுகிறது” என ஓகாவா கூறினார். இது யாருக்கும் வரலாம், ஆனால் குணமாவது சாத்தியமே என அவர் குறிப்பிட்டார்.
யாரிடமாவது பேசுங்கள்
“பிரச்சினையோடு யாராவது தனியாக இருக்கும்போது அதை அவர் பூதாகரமாக, தீர்க்க முடியாத ஒன்றாக நினைக்கிறார்” என முன்பு மேற்கோள் காட்டப்பட்ட ஹங்கேரி சுகாதார அதிகாரியாகிய பேலா புடா கூறுகிறார். இது பைபிளிலுள்ள பூர்வ நீதிமொழியின் ஞானத்தை வலியுறுத்திக் காட்டுகிறது: “தன்னை தனிமைப்படுத்திக் கொள்கிறவன் தன் சுய இச்சையை தேடுகிறான்; நடைமுறையான ஞானம் அனைத்தையும் புறக்கணிக்கிறான்.”—நீதிமொழிகள் 18:1, NW.
இந்த ஞானமான வார்த்தைகளுக்கு செவிகொடுங்கள். சொந்த பிரச்சினைகள் உங்கள்மீது வெள்ளம்போல் பாய்ந்து உங்களை மூழ்கடிப்பதற்கு அனுமதித்துவிடாதீர்கள். நம்பகமான ஒருவருடைய உதவியை நாடி, அவரிடம் உங்களுடைய மனதில் உள்ளதை கொட்டுங்கள். ‘ஆனால் என்னுடைய மனசுல இருப்பதை கொட்டுவதற்கு எனக்கு யாரும் இல்லையே’ என நீங்கள் ஒருவேளை சொல்லலாம். அநேகர் இப்படி உணருவதாக மனநல மருத்துவர் டாக்டர் நாயோக்கி சாட்டோ கூறினார். தங்களுடைய பலவீனங்களை வெளிப்படுத்த விரும்பாததால் அந்த நோயாளிகள் மற்றவர்களிடம் சொந்த விஷயங்களைச் சொல்வதை தவிர்க்கலாம் என சாட்டோ குறிப்பிட்டார்.
செவிகொடுத்துக் கேட்பவரை எங்கே காணலாம்? பெரும்பாலான இடங்களில் தற்கொலை தடுப்பு மையத்தின் உதவியை நாடலாம் அல்லது அவசர உதவி மையங்களில் அல்லது உணர்ச்சி ரீதியிலான பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பெயர்பெற்ற மருத்துவர் ஒருவரை நாடலாம். ஆனால் உதவிக்கு மற்றொரு ஊற்றுமூலம் இருப்பதை பற்றியும்கூட வல்லுநர்கள் சிலர் உணர்கிறார்கள். அந்த ஊற்றுமூலம்தான் மதம். அது எப்படி உதவி செய்ய முடியும்?
தேவையான உதவியை கண்டடைந்தார்கள்
பல்கேரியாவில் வசிக்கும் மாரின் என்ற ஒரு நோயாளி எப்படியாவது தன் உயிரை போக்கிவிட வேண்டும் என்று தீவிரமாக எண்ணிக் கொண்டிருந்தார். யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்படும் காவற்கோபுரம் என்ற மத பத்திரிகையை ஒருநாள் தற்செயலாக பார்த்தார். யெகோவாவின் சாட்சிகள் நேரில் சந்திப்பதற்கு அந்தப் பத்திரிகையில் விடுக்கப்பட்ட அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டார். என்ன நடந்தது என்பதை மாரின் விளக்குகிறார்: “உயிர் நம்முடைய பரலோக பிதா தந்த ஒரு பரிசு, நமக்கு நாமே தீங்கிழைக்கவோ வேண்டுமென்றே நம்முடைய உயிரை முடித்துக்கொள்ளவோ நமக்கு உரிமையில்லை என்பதை நான் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன். ஆகவே, தற்கொலை செய்துகொள்ள வேண்டுமென்ற என்னுடைய முன்னாள் ஆசையை விட்டுவிட்டு உயிரை நேசிக்க ஆரம்பித்தேன்!” கிறிஸ்தவ சபையிலிருந்து அன்பான ஆதரவையும் மாரின் பெற்றார். இப்போதும் ஒரு நோயாளியாகவே இருந்தாலும், அவர் இவ்வாறு கூறுகிறார்: “இப்பொழுது என்னுடைய வாழ்வில் வசந்தமும் அமைதியும் தவழ்கிறது. செய்வதற்கு இனிமையான காரியங்களும் இருக்கின்றன—எனக்கு இருக்கும் நேரம் போதாத அளவுக்கு அவ்வளவு அதிகமாக இருக்கின்றன! இவை அனைத்திற்கும் நான் யெகோவாவிற்கும் அவருடைய சாட்சிகளுக்கும் கடமைப்பட்டிருக்கிறேன்.”
ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த இளம் மனிதனும் யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து உதவியைப் பெற்றான். தங்களுடைய வீட்டிற்குக் கூட்டிச்சென்ற “ஒரு கிறிஸ்தவ குடும்பத்தின் அன்பை” பற்றி இன்று அவன் குறிப்பிடுகிறான். அவன் மேலும் கூறுகிறான்: “பிற்பாடு, [யெகோவாவின் சாட்சிகளுடைய] சபை அங்கத்தினர்கள் மாறிமாறி ஒவ்வொரு நாளும் சாப்பாட்டிற்காக என்னை அவர்களுடைய வீட்டிற்கு அழைத்தார்கள். உபசரிப்பை பெற்றது மட்டுமல்லாமல், யாரிடமாவது மனம்விட்டு பேச முடிந்ததும் எனக்கு உதவியது.”
பைபிளிலிருந்து தான் கற்றுக்கொண்டது, முக்கியமாக மனிதகுலத்தின் மீது உண்மை கடவுளாகிய யெகோவா தேவன் காண்பிக்கும் அன்பைப் பற்றி கற்றுக்கொண்டது இந்த இளம் மனிதனை மிகவும் உற்சாகப்படுத்தியது. (யோவான் 3:16) யெகோவா தேவனின் சமுகத்தில் “உங்கள் இருதயத்தை ஊற்றிவிடு”கையில், அவர் உண்மையிலேயே செவிகொடுத்துக் கேட்கிறார். (சங்கீதம் 62:8) ‘அவருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது,’ மக்களுடைய தவறை பார்ப்பதற்கு அல்ல, ஆனால் “தம்மைப் பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணு”வதற்காக உலாவிக்கொண்டிருக்கிறது. (2 நாளாகமம் 16:9) யெகோவா நமக்கு இவ்வாறு உறுதியளிக்கிறார்: “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.”—ஏசாயா 41:10.
புதிய உலகைப் பற்றிய கடவுளுடைய வாக்குறுதி சம்பந்தமாக சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த அந்த இளம் மனிதன் இவ்வாறு சொன்னான்: “என்னுடைய மன பாரத்தை இறக்குவதற்கு இது ரொம்ப உதவி செய்திருக்கிறது.” ‘ஆத்தும நங்கூரம்’ என வருணிக்கப்படும் இந்த நம்பிக்கை பரதீஸான பூமியில் என்றென்றும் வாழும் வாக்குறுதியை உட்படுத்துகிறது.—எபிரெயர் 6:19; சங்கீதம் 37:10, 11, 29.
உங்கள் உயிர் மற்றவர்களுக்கு முக்கியம்
நீங்கள் யாருடைய உதவியுமின்றி தன்னந்தனிமையில் வாடுவது போன்ற உணர்வை, நீங்கள் செத்தால் யாருக்கு என்ன கவலை போன்ற உணர்வை உண்டாக்கும் சூழ்நிலைமைகள் உங்களுக்கு ஏற்படலாம். ஆனால், தனிமையில் இருப்பதாக உணர்வதற்கும் தனிமையில் இருப்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது என்பதை நினைவில் வையுங்கள். பைபிள் காலங்களில், தீர்க்கதரிசியாகிய எலியா வாழ்க்கையில் மிகவும் சோர்ந்துபோகும் நிலைக்கு வந்துவிட்டார். யெகோவாவிடம் அவர் இவ்வாறு கூறினார்: “உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்று போட்டார்கள், நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன்.” ஆம், எலியா தன்னந்தனிமையில் வாடுவதாக உணர்ந்தார்—இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. சக தீர்க்கதரிசிகளில் அநேகர் கொலை செய்யப்பட்டார்கள். இவருக்கும் கொலை மிரட்டல் வந்திருந்தது, ஆகவே உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தார். ஆனால் உண்மையிலேயே அவர் தனிமையில் இருந்தாரா? இல்லை. அவரைப் போலவே, அந்த இருண்ட காலங்களில் மெய் தேவனை உண்மையோடு சேவிக்க சுமார் 7,000 பேர் முயன்று கொண்டிருந்ததை யெகோவா அவருக்குத் தெரியப்படுத்தினார். (1 இராஜாக்கள் 19:1-18) ஆனால் உங்களைப் பற்றியென்ன? நீங்கள் நினைப்பது போல தனிமையில் இல்லாமலிருக்கும் சாத்தியமிருக்கிறதா?
உங்கள் மீது அக்கறை காட்டும் ஜனங்கள் இருக்கிறார்கள். உங்களுடைய பெற்றோர், உங்களுடைய திருமண துணை, உங்களுடைய பிள்ளைகள், உங்களுடைய நண்பர்கள் ஆகியோரைப் பற்றி நீங்கள் நினைக்கலாம். ஆனால் இன்னும் அநேகர் இருக்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய சபையில், உங்கள் மீது அக்கறை காட்டும் முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவர்களை நீங்கள் காணலாம்; நீங்கள் சொல்வதை அவர்கள் பொறுமையோடு செவிகொடுத்துக் கேட்பார்கள், உங்களுக்காகவும் உங்களோடும் ஜெபிப்பார்கள். (யாக்கோபு 5:14, 15) அபூரண மனிதர் அனைவரும் உங்களைக் கைவிட்டாலும், உங்களை ஒருபோதும் கைவிடாத ஒருவர் இருக்கிறார். பூர்வ காலத்தில் வாழ்ந்த தாவீது இவ்வாறு கூறினார்: “என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் [“யெகோவா,” NW] என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.” (சங்கீதம் 27:10) ஆம், யெகோவா உங்கள் மீது ‘கரிசனை காட்டுகிறார்.’ (1 பேதுரு 5:7, NW) யெகோவாவின் கண்களில் நீங்கள் அருமையானவர்கள் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.
உயிர்—கடவுள் தந்த ஒரு பரிசு. ஆனால் சிலசமயத்தில் இது ஒரு பரிசாக தோன்றாமல் பெரும் பாரமாக தோன்றுவது உண்மையே. ஆனால், நீங்கள் யாருக்காவது விலைமதிப்புமிக்க ஒரு பரிசைக் கொடுத்து அதை அவர் உண்மையில் பயன்படுத்துவதற்கு முன்பே தூக்கியெறிந்துவிட்டால் நீங்கள் எப்படி உணருவீர்கள் என்பதை உங்களால் கற்பனை செய்துபார்க்க முடிகிறதா? உயிர் என்ற பரிசை அபூரண மானிடர்களாகிய நாம் இன்னும் சரியாக பயன்படுத்த ஆரம்பிக்கவில்லை. சொல்லப்போனால், இப்பொழுது நாம் வாழும் வாழ்க்கை கடவுளுடைய பார்வையில் “மெய் வாழ்க்கை” அல்ல என பைபிள் சுட்டிக்காட்டுகிறது. (1 தீமோத்தேயு 6:19, NW) ஆம், சமீப எதிர்காலத்தில் நம்முடைய வாழ்க்கை மிகவும் திருப்தியாகவும் அதிக அர்த்தமுள்ளதாகவும் மகிழ்ச்சி ததும்புவதாகவும் இருக்கும். எப்படி?
பைபிள் இவ்வாறு கூறுகிறது: “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.” (வெளிப்படுத்துதல் 21:3, 4) இந்த வார்த்தைகள் நிறைவேறும்போது வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை சற்று கற்பனை செய்துபாருங்கள். அவசரமில்லாமல் நிதானமாக கற்பனை செய்துபாருங்கள். அழகிய, முழுமையான காட்சியை மனதில் உருவாக்கிப் பாருங்கள். அந்தக் காட்சி ஏதோ வீண் கற்பனை அல்ல. கடந்த காலத்தில் யெகோவா தம்முடைய ஜனங்களோடு தொடர்புகொண்ட விதத்தை நீங்கள் சிந்தித்துப் பார்க்கும்போது, அவர் மீது உங்களுடைய நம்பிக்கை பெருகும், அந்தக் காட்சியும் அதிக நிஜமான ஒன்றாக தெரியும்.—சங்கீதம் 136:1-26.
வாழ்வதற்கு உங்களுடைய ஆசையை மீண்டும் முழுமையாக புதுப்பிப்பதற்கு சிலகாலம் ஆகலாம். ‘சகல உபத்திரவங்களிலேயும் நமக்கு ஆறுதல் செய்கிற தேவனிடத்தில்’ தொடர்ந்து ஜெபியுங்கள். (2 கொரிந்தியர் 1:3, 4; ரோமர் 12:12; 1 தெசலோனிக்கேயர் 5:17) தேவையான பலத்தை யெகோவா உங்களுக்கு கொடுப்பார். வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை அவர் உங்களுக்கு போதிப்பார்.—ஏசாயா 40:29. (g01 10/22)
[பக்கம் 9-ன் பெட்டி/படம்]
ஒருவர் தற்கொலை செய்ய விரும்புகிறவராக தெரிந்தால் நீங்கள் எப்படி உதவலாம்?
தற்கொலை செய்துகொள்ள விரும்புவதாக ஒருவர் உங்களிடம் சொல்லும்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்? “நன்கு செவிகொடுத்துக் கேட்பவராக இருங்கள்” என ஐ.மா. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (U.S. Centers for Disease Control and Prevention [CDC]) கூறுகிறது. அவருடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்த அனுமதியுங்கள். ஆனால், பலருடைய விஷயத்தில், தற்கொலை செய்ய விரும்புகிறவர் சமுதாயத்தோடு ஒட்டோ உறவோ இல்லாமல் ஒதுங்கியே வாழ்கிறார், எதையும் வாய்விட்டு சொல்வதில்லை. அவருடைய நம்பிக்கையிழந்த உணர்ச்சிகளும் வேதனைகளும் நிஜமானவை என்பதை ஒத்துக்கொள்ளுங்கள். அவருடைய நடத்தையில் நீங்கள் கவனித்த குறிப்பிட்ட மாற்றங்கள் சிலவற்றை சாந்தமாக சொன்னால், அவர் மனம் திறந்து உங்களிடம் பேசுவதற்கு தூண்டப்படலாம்.
செவிகொடுத்துக் கேட்கும்போது அனுதாபம் காட்டுங்கள். “உங்களுக்கும் மற்றவர்களுக்கும் அந்த நபருடைய உயிர் முக்கியமானது என்பதை வலியுறுத்துவது முக்கியம்” என CDC சொல்கிறது. அவருடைய மரணம் உங்களையும் மற்றவர்களையும் உடைந்துபோகப் பண்ணும் என்பதை அவருக்கு தெரியப்படுத்துங்கள். படைப்பாளர் அவர்மீது அக்கறை கொள்கிறார் என்பதை புரிந்துகொள்ள அந்த நபருக்கு உதவுங்கள்.—1 பேதுரு 5:7.
தற்கொலை செய்துகொள்ள அந்த நபர் பயன்படுத்தும் எதையும்—முக்கியமாக துப்பாக்கிகளை—அகற்றிவிடுங்கள் என நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். நிலைமை மிகவும் மோசமாக தோன்றினால், மருத்துவ பரிசோதனை செய்வதற்கு அந்த நபரை உற்சாகப்படுத்துங்கள். உங்களால் வேறெதுவும் செய்ய முடியாதபட்சத்தில், அவசர மருத்துவ சேவையை நாடுங்கள்.
[பக்கம் 11-ன் பெட்டி]
‘இப்படி நினைத்ததால் கடவுள் என்னை மன்னிப்பாரா?’
யெகோவாவின் சாட்சிகளோடு கூட்டுறவு கொள்வது, அநேகர் தங்களுடைய தற்கொலை எண்ணங்களை சமாளிக்க உதவியிருக்கிறது. என்றபோதிலும், இன்று யாருமே வாழ்க்கையின் பெரும் கவலைகளிலிருந்தோ மனச்சோர்விலிருந்தோ தப்ப முடியாது. தங்களுடைய உயிரை துறக்க நினைத்த கிறிஸ்தவர்களை பிற்பாடு ஆழ்ந்த குற்றவுணர்ச்சி அலைக்கழிக்கிறது. குற்றவுணர்வு அவர்களுடைய பாரத்தை அதிகரிக்கவே செய்யலாம். ஆகவே, இப்படிப்பட்ட உணர்ச்சிகளை எப்படி சமாளிக்கலாம்?
பைபிள் காலங்களில் உண்மையுள்ள ஆண்கள் பெண்கள் சிலர் வாழ்க்கையைப் பற்றி எதிர்மறையான ஆழ்ந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்தியது கவனிக்கத்தக்கது. முற்பிதாவாகிய ஈசாக்கின் மனைவி ரெபெக்காள் குடும்ப பிரச்சினைகளால் மிகவும் மனமுடைந்து ஒருசமயம் இவ்வாறு கூறினாள்: “என் உயிர் எனக்கு வெறுப்பாயிருக்கிறது.” (ஆதியாகமம் 27:46) தன்னுடைய பிள்ளைகள், ஆரோக்கியம், சொத்து சுகம், சமுக அந்தஸ்து ஆகிய அனைத்தையும் இழந்த யோபு இவ்வாறு சொன்னார்: “என் ஆத்துமா ஜீவனை அரோசிக்கிறது.” (யோபு 10:1) மோசே ஒருமுறை கடவுளிடம் இவ்வாறு வேண்டிக்கொண்டார்: “இப்பொழுதே என்னைக் கொன்றுபோடும்.” (எண்ணாகமம் 11:15) கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய எலியா ஒருசமயம் இவ்வாறு கூறினார்: “போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்.” (1 இராஜாக்கள் 19:4) “நான் உயிரோடிருக்கிறதைப் பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும்” என தீர்க்கதரிசியாகிய யோனா சதா புலம்பினார்.—யோனா 4:8.
இப்படி உணர்ந்ததற்காக யெகோவா இவர்களை கண்டனம் செய்தாரா? இல்லை. அவர்களுடைய வார்த்தைகளை பைபிளில் பதிவு செய்தும் வைத்திருக்கிறாரே. ஆனால் அப்படிப்பட்ட உணர்ச்சிகளின் காரணமாக தற்கொலை செய்துகொள்ள அந்த உண்மையுள்ள ஆட்கள் தங்களை அனுமதிக்கவில்லை என்பதை கவனிப்பது முக்கியம். யெகோவா அவர்களை உயர்வாக மதித்தார்; அவர்கள் வாழ வேண்டும் என்றே விரும்பினார். உண்மை என்னவென்றால், துன்மார்க்கருடைய உயிரைப் பற்றியும் கடவுள் அக்கறையுள்ளவராக இருக்கிறார். அவர்கள் தங்களுடைய வழிகளை மாற்றிக்கொண்டு, ‘தொடர்ந்து வாழவே’ அவர்களை உந்துவிக்கிறார். (எசேக்கியேல் 33:11, NW) அப்படியென்றால் அவருடைய தயவைப் பெறுவதில் மிகுந்த கவனம் செலுத்துகிறவர்கள் தொடர்ந்து வாழ வேண்டும் என அவர் எந்தளவு விரும்புவார்!
கடவுள் தம்முடைய குமாரனை கிரயபலியாக கொடுத்திருக்கிறார், கிறிஸ்தவ சபையை தந்திருக்கிறார், பைபிளையும் ஜெபிக்கும் சிலாக்கியத்தையும் அளித்திருக்கிறார். கடவுளிடம் பேச்சுத்தொடர்பு கொள்ள உதவும் இந்த ‘லைன்’—ஜெபம்—ஒருபோதும் பிஸியாக இருப்பதில்லை. தாழ்மையோடு உண்மையான இருதயத்தோடு அவரிடம் அண்டி வருகிறவர்கள் அனைவருடைய ஜெபங்களையும் கடவுளால் கேட்க முடியும், கேட்பார். “ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் [“தாராளமாக,” NW] கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.”—எபிரெயர் 4:16.
[பக்கம் 12-ன் பெட்டி]
உங்கள் அன்பானவரை இழந்துவிட்டீர்களா?
யாராவது தற்கொலை செய்துகொள்ளும்போது குடும்ப அங்கத்தினர்களும் நெருங்கிய நண்பர்களும் மனோ ரீதியில் கடுமையாக அலைக்கழிக்கப்படுகிறார்கள். இந்த சோகத்திற்கு அநேகர் தங்களையே குற்றம் சாட்டிக்கொள்கிறார்கள். ‘அன்றைக்கு நான் மட்டும் இன்னும் கொஞ்ச நேரம் அவனோடு இருந்திருந்தால் நல்லா இருந்திருக்குமே,’ ‘நான் மட்டும் கொஞ்சம் வாய் திறக்காம இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காதே,’ ‘நான் மட்டும் அவனுக்கு இன்னும் கொஞ்சம் உதவி செய்திருந்தால் இப்படி ஆகியிருக்காதே’ என இதுபோல அவர்கள் கூறி புலம்பலாம். ‘நான் மட்டும் இப்படி செய்திருந்தால் அல்லது அப்படி செய்திருந்தால் அவன்(ள்) இன்னும் உயிரோடு இருந்திருப்பானே(ளே)’ என்பதைத்தான் அவர்கள் சொல்கின்றனர். ஆனால் மற்றொருவருடைய தற்கொலைக்கு நம்மீது குற்றம் சாட்டிக்கொள்வது நியாயமா?
தற்கொலைக்குரிய அறிகுறிகளை தற்கொலை நடந்த பிறகு புரிந்துகொள்வது ரொம்ப சுலபம் என்பதை மனதிற்கொள்ளுங்கள். ஆனால் அதற்கு முன்பு இப்படிப்பட்ட அறிகுறிகளை கொஞ்சம்கூட நினைத்துப் பார்த்திருக்க முடியாது. பைபிள் கூறுகிறது: “இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்; அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தையாகான்.” (நீதிமொழிகள் 14:10) சிலசமயங்களில் இன்னொருவர் என்ன நினைக்கிறார் அல்லது எப்படி உணருகிறார் என்பதைப் புரிந்துகொள்வது கொஞ்சம்கூட சாத்தியமல்ல. தற்கொலை செய்துகொள்ளும் தூண்டுதலுள்ள அநேகர் தங்களுடைய மனதுக்குள் புதைந்து கிடக்கும் உணர்ச்சிகளை மற்றவர்களிடம், நெருங்கிய குடும்ப அங்கத்தினர்களிடம்கூட நன்கு வெளிப்படுத்த முடியாது.
தற்கொலை செய்துகொள்ளப்போகும் ஒருவருடைய அறிகுறிகளைப் பற்றி சோகத்தை சொல்லுதல் (ஆங்கிலம்) என்ற புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “பொதுவாக, இப்படிப்பட்ட அறிகுறிகளை பகுத்துணருவது சுலபமல்ல என்பதே உண்மை.” சில அறிகுறிகளை நீங்கள் உணர்ந்திருந்தாலும், தற்கொலையை நீங்கள் தடுத்திருக்கலாம் என்பதற்கு அதுதானே எந்த உத்தரவாதமும் அளிப்பதில்லை என்றும் அதே புத்தகம் சொல்கிறது. உங்களையே நீங்கள் நொந்துகொள்வதற்குப் பதிலாக, ஞானியாகிய சாலொமோன் ராஜாவின் இந்த வார்த்தைகளில் ஆறுதல் அடையலாம்: “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்.” (பிரசங்கி 9:5) உங்களுடைய அன்பானவர் எரிநரகத்தில் வதைக்கப்பட்டுக் கொண்டில்லை. அவரை தற்கொலைக்கு வழிநடத்திய மனோ மற்றும் உணர்ச்சி ரீதியிலான வேதனை முடிவுக்கு வந்துவிட்டன. அவர் எந்த வேதனையும் அனுபவித்துக் கொண்டில்லை; அவர் வெறுமனே ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.
இப்பொழுது, உயிரோடிருக்கிறவர்களுடைய, ஏன் உங்களுடைய சுகநலத்தின் மீது கவனத்தை செலுத்துவதே மிகவும் நல்லது. சாலொமோன் தொடர்ந்து கூறினார்: “செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை [உயிரோடிருக்கும்போதே] உன் பெலத்தோடே செய்.” (பிரசங்கி 9:10) தற்கொலை செய்துகொண்டவர்களுடைய எதிர்கால வாழ்க்கை எதிர்பார்ப்புகள் “இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிற” யெகோவாவின் கரங்களில் இருக்கின்றன என்பதில் நீங்கள் நம்பிக்கையோடு இருக்கலாம்.—2 கொரிந்தியர் 1:3.a
[அடிக்குறிப்பு]
a தற்கொலை செய்துகொண்டவர்களுக்கு இருக்கும் எதிர்கால எதிர்பார்ப்புகளைப் பற்றிய சமநிலையான நோக்குநிலையை அறிந்துகொள்வதற்கு செப்டம்பர் 8, 1990 ஆங்கில விழித்தெழு! இதழில் வெளிவந்த “பைபிளின் கருத்து: “தற்கொலைகள்—உயிர்த்தெழுதல் உண்டா?” என்ற கட்டுரையைக் காண்க.
[பக்கம் 8-ன் படங்கள்]
யாரிடமாவது பேசுங்கள்
[பக்கம் 10-ன் படம்]
உங்களுடைய உயிர் மற்றவர்களுக்கு முக்கியமே
-