பாடம் 12
இறந்த பிறகு என்ன நேரிடுகிறது?
ஜீவனுக்கு எதிர்ப்பதமே மரணம். மரணம் என்பது ஆழ்ந்த நித்திரை போன்றது. (யோவான் 11:11-14) இறந்தவர்களால் கேட்கவோ பார்க்கவோ பேசவோ அல்லது சிந்திக்கவோ முடியாது. (பிரசங்கி 9:5, 10) இறந்தவர்கள் ஆவி உலகத்திற்கு சென்று முன்னோர்களுடன் வாழ்வதாக பொய் மதம் போதிக்கிறது. ஆனால் பைபிள் அப்படி போதிப்பதில்லை.
இறந்தவர்கள் நமக்கு உதவி செய்யவோ தீங்கு செய்யவோ முடியாது. இறந்தவர்களுக்காக சடங்கு செய்வதும் பலி செலுத்துவதும் இன்று சர்வ சாதாரணமாக காணப்படுகிறது. இதெல்லாம் இறந்தவர்களை பிரியப்படுத்தும் என மக்கள் நம்புகிறார்கள். ஆனால் இதில் கடவுள் பிரியப்படுவதில்லை, ஏனெனில் இது சாத்தானுடைய பொய்களின் அடிப்படையிலானது. இறந்தவர்களையும் பிரியப்படுத்த முடியாது. ஏனெனில் அவர்கள் உயிரற்றவர்கள். நாம் இறந்தவர்களுக்கு பயப்படவோ அவர்களை வழிபடவோ கூடாது. கடவுளை மட்டுமே வழிபட வேண்டும்.—மத்தேயு 4:10.
இறந்தவர்கள் மீண்டும் உயிரடைவார்கள். இறந்தவர்களை பரதீஸிய பூமியில் யெகோவா உயிர்த்தெழுப்புவார். அது எதிர்காலத்தில் நடக்கும். (யோவான் 5:28, 29; அப்போஸ்தலர் 24:15) தூங்குகிறவர்களை நீங்கள் நிச்சயம் எழுப்ப முடியும், அது போலவே இறந்தவர்களையும் கடவுளால் நிச்சயம் எழுப்ப முடியும்.—மாற்கு 5:22, 23, 41, 42.
நாம் சாவதில்லை என்ற பொய்யை பரப்பியவன் பிசாசாகிய சாத்தான். இறந்தவர்களுடைய ஆவி உயிர் வாழ்கிறது, வியாதியையும் பிரச்சினைகளையும் உண்டாக்குகிறது என சாத்தானும் அவனுடைய பேய்களும் மக்களை நம்ப வைக்கிறார்கள். சிலசமயங்களில் கனவுகள், தரிசனங்கள் மூலம் மக்களை சாத்தான் ஏமாற்றுகிறான். இறந்தவர்களுடன் பேச முயற்சி செய்பவர்களை யெகோவா கண்டனம் செய்கிறார்.—உபாகமம் 18:10-12.