நியாயாசனத்திற்கு முன்பு நீங்கள் எவ்வாறு நிற்பீர்கள்?
“அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார்.”—மத்தேயு 25:31.
1-3. நீதி சம்பந்தமாக நல்நம்பிக்கை கொண்டிருப்பதற்கு நாம் என்ன காரணத்தைக் கொண்டிருக்கிறோம்?
‘குற்றவாளியா அல்லது நிரபராதியா?’ ஏதாவது ஒரு நீதிமன்ற வழக்கைப் பற்றிய அறிக்கைகளை கேள்விப்படுகையில் அநேகர் இதைத் தெரிந்துகொள்ள விரும்புகின்றனர். நீதிபதிகளும் விசாரணைக் குழு அங்கத்தினர்களும் நேர்மையாக இருக்க முயற்சி செய்யலாம், ஆனால் நீதி பொதுவாக வெற்றியடைகிறதா? நீதிமன்ற நடவடிக்கைகளில் அநீதியைப் பற்றியும் நியாயமற்றத் தன்மையைப் பற்றியும் நீங்கள் கேள்விப்பட்டதில்லையா? லூக்கா 18:1-8-ல் உள்ள இயேசுவின் உவமையில் நாம் காண்கிறபடி அப்படிப்பட்ட அநீதி நன்றாக தெரிந்த விஷயமே.
2 மனித நீதி சம்பந்தமாக உங்களுடைய அனுபவம் என்னவாக இருந்தாலும், இயேசு கூறிய முடிவை கவனியுங்கள்: “அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் . . . அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ? சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.”
3 ஆம், யெகோவா தம்முடைய ஊழியர்களுக்கு இறுதியில் நீதி கிடைக்கும்படி பார்த்துக்கொள்வார். விசேஷமாக இயேசுவும்கூட இப்போது இதில் உட்பட்டிருக்கிறார், ஏனென்றால் தற்போதைய பொல்லாத ஒழுங்குமுறையின் “கடைசி நாட்களில்” நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பூமியிலிருந்து துன்மார்க்கத்தை முற்றிலுமாக நீக்குவதற்கு யெகோவா விரைவில் தம்முடைய வல்லமைவாய்ந்த குமாரனை உபயோகிப்பார். (2 தீமோத்தேயு 3:1; 2 தெசலோனிக்கேயர் 1:7, 8; வெளிப்படுத்துதல் 19:11-16) இயேசு கொடுத்த கடைசி உவமைகள் ஒன்றிலிருந்து நாம் அவருடைய பங்கைக் குறித்து உட்பார்வையைப் பெற்றுக்கொள்ளலாம், அது செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகள் பற்றிய உவமை என்று பெரும்பாலும் அழைக்கப்படுகிறது.
4. செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகள் பற்றிய உவமையைக் குறித்த காலத்தை நாம் எவ்வாறு புரிந்துகொண்டு இருந்திருக்கிறோம், ஆனால் இப்போது நாம் ஏன் இந்த உவமைக்கு கவனம் செலுத்துவோம்? (நீதிமொழிகள் 4:18)
4 இயேசு ராஜாவாக 1914-ல் வீற்றிருப்பதையும் அது முதற்கொண்டு நியாயத்தீர்ப்பு செய்வதையும் அந்த உவமை விளக்கிக்காட்டியது என்று நாம் நீண்ட காலமாக புரிந்துகொண்டிருந்தோம்—செம்மறியாடுகளைப் போல் நிரூபிக்கும் ஜனங்களுக்கு நித்திய ஜீவன், வெள்ளாடுகளுக்கு நித்திய மரணம். ஆனால் அந்த உவமையை மறுபடியும் சிந்தித்துப் பார்ப்பது, அதன் காலப்பகுதியையும் அது எதை தெளிவாக விளக்கிக்காட்டுகிறது என்பதையும் குறித்து திருத்தப்பட்ட சரியான புரிந்துகொள்ளுதலை சுட்டிக்காண்பிக்கிறது. இந்த தெளிவான விளக்கம் நம்முடைய பிரசங்க வேலையின் முக்கியத்துவத்தையும் ஜனங்களுடைய பிரதிபலிப்பின் முக்கியத்துவத்தையும் மீண்டும் வலுப்படுத்துகிறது. இந்த உவமையின் ஆழமான தன்மையை புரிந்துகொள்வதற்கான அடிப்படையைக் காண்பதற்கு, யெகோவாவும் இயேசுவும் ராஜாக்களாகவும் நியாயாதிபதிகளாகவும் இருப்பதைக் குறித்து பைபிள் என்ன காண்பிக்கிறது என்பதை நாம் சிந்திப்போம்.
யெகோவா உன்னத நியாயாதிபதியாக
5, 6. யெகோவாவை ராஜாவாகவும் நியாயாதிபதியாகவும் நோக்குவது ஏன் பொருத்தமானது?
5 யெகோவா எல்லா சிருஷ்டிப்புகள் மீதும் வல்லமை செலுத்தி இந்த பிரபஞ்சத்தை அரசாளுகிறார். ஆரம்பமும் முடிவும் இல்லாத அவரே ‘நித்தியத்தின் ராஜா.’ (1 தீமோத்தேயு 1:17; சங்கீதம் 90:2, 4; வெளிப்படுத்துதல் 15:3) நியாயங்களை அல்லது சட்டங்களை ஏற்படுத்தி அவற்றை செயல்படுத்துவதற்கு அவர் அதிகாரம் உடையவராயிருக்கிறார். ஆனால் அவருடைய அதிகாரம் நியாயாதிபதியாய் இருப்பதை உட்படுத்துகிறது. ஏசாயா 33:22 சொல்கிறது: “கர்த்தர் நம்முடைய நியாயாதிபதி, கர்த்தர் நம்முடைய நியாயப்பிரமாணிகர், கர்த்தர் நம்முடைய ராஜா, அவர் நம்மை இரட்சிப்பார்.”
6 யெகோவா வழக்குகளையும் பிரச்சினைகளையும் நியாயந்தீர்ப்பவர் என்று நீண்டகாலமாக கடவுளுடைய ஊழியர்கள் மதித்துணர்ந்து இருக்கின்றனர். உதாரணமாக, சோதோம் கொமோரா பட்டணங்களின் துன்மார்க்கத்தைப் பற்றிய அத்தாட்சியை “சர்வலோக நியாயாதிபதி” மதிப்பிட்ட பிறகு, அவர் அதன் குடிமக்கள் அழிவுக்கு தகுதியுள்ளவர்கள் என்று நியாயந்தீர்த்து அந்த நீதியான நியாயத்தீர்ப்பை செயல்படுத்தவும் செய்தார். (ஆதியாகமம் 18:20-33; யோபு 34:10-12) யெகோவா எப்போதும் தம்முடைய நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றக்கூடிய நீதியான நியாயாதிபதி என்பதை அறிந்துகொள்ள அது நிச்சயமாக நமக்கு திரும்பவும் உறுதி செய்ய வேண்டும்!
7. இஸ்ரவேலரைக் கையாண்ட விதத்தில் யெகோவா எவ்வாறு நியாயாதிபதியாக செயல்பட்டார்?
7 பண்டைய இஸ்ரவேலில் யெகோவா சில சமயங்களில் நியாயத்தீர்ப்பை நேரடியாக வழங்கினார். ஒரு பரிபூரண நியாயாதிபதி விஷயங்களை தீர்மானித்துக் கொண்டிருந்தார் என்பதை அப்போது அறிந்து அதனால் நீங்கள் ஆறுதல் அடைந்திருக்க மாட்டீர்களா? (லேவியராகமம் 24:10-16; எண்ணாகமம் 15:32-36; 27:1-11) கடவுள் ‘நியாயங்களையும்’ கூட கொடுத்தார், அவை நியாயத்தீர்ப்பு செய்வதற்கு தராதரங்களாக இருப்பதற்கு முழுமையாக நன்மையானவையாயிருந்தன. (லேவியராகமம் 25:18, 19; நெகேமியா 9:13; சங்கீதம் 19:9, 10; 119:7, 75, 164; 147:19, 20) அவர் ‘சர்வலோக நியாயாதிபதியாய்’ இருக்கிறார், ஆகையால் நாம் அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.—எபிரெயர் 12:23.
8. தானியேல் என்ன பொருத்தமான தரிசனத்தைக் கொண்டிருந்தார்?
8 இந்த விஷயத்தைக் குறித்து நாம் ‘கண்கண்ட’ அத்தாட்சியைக் கொண்டிருக்கிறோம். அரசாங்கங்கள் அல்லது பேரரசுகளைப் பிரதிநிதித்துவம் செய்த மூர்க்க மிருகங்களைப் பற்றி தானியேல் தீர்க்கதரிசிக்கு ஒரு தரிசனம் கொடுக்கப்பட்டது. (தானியேல் 7:1-8, 17) அவர் கூடுதலாக சொன்னார்: “நான் பார்த்துக்கொண்டிருக்கையில், சிங்காசனங்கள் வைக்கப்பட்டது; நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார்; அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப் போல இருந்தது.” (தானியேல் 7:9) தானியேல் சிங்காசனங்களைப் பார்த்தார், ‘நீண்ட ஆயுசுள்ளவர் [யெகோவா] வீற்றிருந்தார்’ என்பதை கவனியுங்கள். ‘கடவுள் ராஜாவாக ஆகிறதை இங்கே தானியேல் பார்த்துக் கொண்டிருந்தாரா?’ என்று நீங்கள் உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.
9. சிங்காசனத்தின் மீது ‘வீற்றிருப்பது’ என்பதன் ஒரு அர்த்தமென்ன? உதாரணங்களைக் கொடுங்கள்.
9 யாரோ ஒருவர் சிங்காசனத்தின் மேல் ‘வீற்றிருந்தார்’ என்று நாம் வாசிக்கும்போது, அவர் ராஜாவாக ஆகப்போகிறதைக் குறித்து நாம் ஒருவேளை யோசிக்கலாம், ஏனென்றால் பைபிள் சில சமயங்களில் அப்படிப்பட்ட மொழிநடையை உபயோகிக்கிறது. உதாரணமாக: “ [சிம்ரி] ராஜாவாகி, சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்தபோது, அவன் . . .” (1 இராஜாக்கள் 16:11; 2 இராஜாக்கள் 10:30; 15:12; எரேமியா 33:17) ஒரு மேசியானிய தீர்க்கதரிசனம் சொன்னது: ‘அவர் . . . தம்முடைய சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார்.’ எனவே, ‘சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பது’ என்பது ராஜாவாக ஆகிறதை அர்த்தப்படுத்தக்கூடும். (சகரியா 6:12, 13) யெகோவா ஒரு சிங்காசனத்தின் மீது உட்கார்ந்திருக்கிற ராஜாவாக விவரிக்கப்பட்டிருக்கிறார். (1 இராஜாக்கள் 22:19; ஏசாயா 6:1; வெளிப்படுத்துதல் 4:1-3) அவர் “நித்தியத்தின் ராஜா.” இருப்பினும், உன்னத அரசாதிகாரத்தின் ஒரு புதிய அம்சத்தில் செயலாற்ற ஆரம்பித்தபோது, அவர் ராஜாவாக ஆகியிருக்கிறார் என்று சொல்லக்கூடும், அவருடைய சிங்காசனத்தில் புதிதாக மறுபடியும் வீற்றிருப்பது போல என்று சொல்லப்படலாம்.—1 நாளாகமம் 16:1, 31; ஏசாயா 52:7; வெளிப்படுத்துதல் 11:15-17; 15:3; 19:1, 2, 6.
10. இஸ்ரவேல ராஜாக்களின் ஒரு முக்கியமான வேலை என்னவாக இருந்தது? விளக்குங்கள்.
10 ஆனால் இங்கே ஒரு முக்கியமான குறிப்பு: பண்டையகால ராஜாக்களின் ஒரு முக்கியமான வேலை, வழக்குகளைக் கேட்டு நியாயத்தீர்ப்புகளை வழங்குவதாகும். (நீதிமொழிகள் 29:14) இரண்டு பெண்கள் ஒரே குழந்தையை வைத்துக்கொண்டு தங்களுடையது என உரிமைபாராட்டிக்கொண்டபோது, சாலொமோன் வழங்கிய ஞானமான நியாயத்தீர்ப்பை நினைவுபடுத்திப் பாருங்கள். (1 இராஜாக்கள் 3:16-28; 2 நாளாகமம் 9:8) “அவர் இருந்து நியாயம் தீர்க்கிறதற்கு நியாயாசனம் போட்டிருக்கும்” இடம் அவருடைய அரசாங்க கட்டடங்களில் ஒன்றாக இருந்தது, அது ‘நியாயவிசாரணை மண்டபம்’ என்றும்கூட அழைக்கப்பட்டது. (1 இராஜாக்கள் 7:7) “சிங்காசனங்களாகிய நியாயாசனங்கள்” வைக்கப்பட்டிருந்த இடமாக எருசலேம் விவரிக்கப்பட்டிருந்தது. (சங்கீதம் 122:5) ‘நியாயாசனத்தில் வீற்றிருத்தல்’ என்பது தீர்ப்புக்குரிய அதிகாரத்தை பிரயோகிப்பதையும்கூட அர்த்தப்படுத்தும் என்பது தெளிவாயிருக்கிறது.—யாத்திராகமம் 18:13; நீதிமொழிகள் 20:8.
11, 12. (அ) யெகோவா வீற்றிருக்கிறார் என்று தானியேல் 7-ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதன் உட்பொருள் என்னவாக இருந்தது? (ஆ) யெகோவா நியாயந்தீர்ப்பதற்கு வீற்றிருக்கிறார் என்பதை மற்ற வசனங்கள் எவ்வாறு உறுதிசெய்கின்றன?
11 தானியேல் ‘நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருப்பதை’ பார்த்த காட்சிக்கு நாம் இப்போது செல்வோம். தானியேல் 7:10 கூடுதலாக சொல்கிறது: “நியாயசங்கம் உட்கார்ந்தது; புஸ்தகங்கள் திறக்கப்பட்டது.” ஆம், உலக ஆதிக்கத்தைக் குறித்து நியாயத்தீர்ப்பு வழங்குவதற்கும் மனுஷகுமாரன் ஆட்சிசெய்வதற்கு தகுதியுள்ளவர் என்று நியாயந்தீர்ப்பதற்கும் நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார். (தானியேல் 7:13, 14) பின்பு ‘நீண்ட ஆயுசுள்ளவர் வந்தார், நியாயவிசாரிப்பு உன்னதமானவருடைய பரிசுத்தவான்களுக்குக் கொடுக்கப்பட்டது,’ என்று நாம் வாசிக்கிறோம். அந்த பரிசுத்தவான்கள் மனுஷகுமாரனோடு ஆட்சி செய்வதற்கு தகுதியானவர்களாக நியாயந்தீர்க்கப்பட்டவர்கள். (தானியேல் 7:21) இறுதியில் கடைசி உலக வல்லரசின் மீது எதிரிடையான நியாயத்தீர்ப்பு வழங்குவதற்கு ‘நியாயசங்கம் உட்கார்ந்தது.’—தானியேல் 7:26.a
12 அதன் காரணமாக, கடவுள் ‘சிங்காசனத்தில் வீற்றிருப்பதை’ தானியேல் பார்த்தது, நியாயத்தீர்ப்பு வழங்குவதற்காக அவர் வருவதை அர்த்தப்படுத்தியது. அதற்கு முன்பு தாவீது பாடினார்: “[“யெகோவாவாகிய,” NW] நீர் என் நியாயத்தையும் என் வழக்கையும் தீர்த்து, நீதியுள்ள நியாயாதிபதியாய்ச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறீர்.” (சங்கீதம் 9:4, 7) யோவேல் எழுதினார்: “ஜாதிகள் எழும்பி யோசபாத்தின் பள்ளத்தாக்குக்கு வருவார்களாக; சுற்றிலுமுள்ள ஜாதிகளை நியாயந்தீர்க்க அங்கே நான் [யெகோவா] வீற்றிருப்பேன்.” (யோவேல் 3:12; ஒப்பிடுக: ஏசாயா 16:5.) இயேசுவும் பவுலும் நியாயம் விசாரிக்கப்படும் சூழ்நிலையில் இருந்தனர், அதில் ஒரு மனிதன் வழக்கைக் கேட்டு தீர்ப்பை வழங்குவதற்கு உட்கார்ந்தார்.b—யோவான் 19:12-16; அப்போஸ்தலர் 23:3; 25:6.
இயேசுவின் ஸ்தானம்
13, 14. (அ) இயேசு ராஜாவாக ஆவார் என்பதைக் குறித்து கடவுளுடைய ஜனங்களுக்கு என்ன உறுதி இருந்தது? (ஆ) இயேசு எப்போது தம்முடைய சிங்காசனத்தில் வீற்றிருந்தார், பொ.ச. 33-லிருந்து அவர் என்ன கருத்தில் ஆட்சிசெய்து வந்தார்?
13 யெகோவா ராஜாவாகவும் நியாயாதிபதியாகவும் இருக்கிறார். இயேசுவைப் பற்றியென்ன? அவருடைய பிறப்பை அறிவித்த தேவதூதன் சொன்னார்: “கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். . . . அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது.” (லூக்கா 1:32, 33) இயேசு தாவீதிய ராஜரீகத்துவத்திற்கு நிரந்தரமான வாரிசாக இருப்பார். (2 சாமுவேல் 7:12-16) அவர் பரலோகத்திலிருந்து ஆட்சி செய்வார், ஏனென்றால் தாவீது சொன்னார்: “யெகோவா என் ஆண்டவரை [இயேசுவை] நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார். யெகோவா சீயோனிலிருந்து உமது வல்லமையின் செங்கோலை அனுப்புவார்; நீர் உம்முடைய சத்துருக்களின் நடுவே ஆளுகைசெய்யும்.”—சங்கீதம் 110:1-4, NW.
14 அது எப்போது இருக்கும்? இயேசு ஒரு மனிதனாக இருந்தபோது ராஜாவாக ஆட்சி செய்யவில்லை. (யோவான் 18:33-37) பொ.ச. 33-ல் அவர் மரித்தார், உயிர்த்தெழுப்பப்பட்டார், பரலோகத்திற்கு ஏறிச்சென்றார். எபிரெயர் 10:12 சொல்கிறது: “இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார்.” இயேசு என்ன அதிகாரத்தை உடையவராய் இருந்தார்? “எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும் . . . மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக அவரை உன்னதங்களில் [கடவுள்] தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து, . . . சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.” (எபேசியர் 1:20, 21, 23) ஏனென்றால் இயேசு அப்போது கிறிஸ்தவர்கள் மீது ராஜரீக அதிகாரத்தைக் கொண்டிருந்ததால், யெகோவா ‘இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினார்’ என்று பவுலால் எழுத முடிந்தது.—கொலோசெயர் 1:13; 3:1.
15, 16. (அ) பொ.ச. 33-ல் இயேசு கடவுளுடைய ராஜ்யத்தின் ராஜாவாக ஆகவில்லை என்று நாம் ஏன் சொல்கிறோம்? (ஆ) கடவுளுடைய ராஜ்யத்தில் இயேசு எப்போதிருந்து ஆட்சிசெய்ய ஆரம்பித்தார்?
15 இருப்பினும், அந்த சமயத்தில் இயேசு தேசங்களின் மீது ராஜாவாகவும் நியாயாதிபதியாகவும் செயல்படவில்லை. அவர் கடவுளுக்கு அடுத்ததாக உட்கார்ந்திருந்தார், கடவுளுடைய ராஜ்யத்தின் ராஜாவாக செயல்படுவதற்கான காலத்துக்காக காத்துக்கொண்டிருந்தார். பவுல் அவரைக் குறித்து எழுதினார்: “நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும் வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் அவர் சொன்னதுண்டா?”—எபிரெயர் 1:13.
16 இயேசு காத்திருந்த காலப்பகுதி 1914-ல், அவர் காணக்கூடாத பரலோகங்களில் கடவுளுடைய ராஜ்யத்தின் ராஜாவாக ஆனபோது முடிவடைந்தது என்பதைப் பற்றி யெகோவாவின் சாட்சிகள் மிகுதியான அத்தாட்சியை பிரசுரித்திருக்கின்றனர். வெளிப்படுத்துதல் 11:15, 18 சொல்கிறது: “உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார்.” “ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் மூண்டது.” ஆம், முதல் உலக யுத்தத்தின்போது தேசங்கள் ஒன்றன் மீது ஒன்று கோபத்தை வெளிக்காட்டின. (லூக்கா 21:24) 1914 முதற்கொண்டு நாம் பார்த்திருக்கும் போர்கள், பூகம்பங்கள், நோய்கள், உணவு பற்றாக்குறைகள், இதைப் போன்ற மற்ற காரியங்கள், இயேசு இப்போது கடவுளுடைய ராஜ்யத்தில் ஆட்சிசெய்து கொண்டிருக்கிறார் என்பதையும் உலகின் கடைசி முடிவு சமீபத்தில் இருக்கிறது என்பதையும் உறுதிப்படுத்துகின்றன.—மத்தேயு 24:3-14, NW.
17. என்ன முக்கியமான குறிப்புகளை நாம் இதுவரை நிலைநாட்டியிருக்கிறோம்?
17 ஒரு சுருக்கமான மறுபார்வை பின்வருமாறு: கடவுள் சிங்காசனத்தில் ராஜாவாய் வீற்றிருப்பதாக சொல்லப்படலாம், ஆனால் மற்றொரு கருத்தில் அவர் தம்முடைய சிங்காசனத்தில் நியாயந்தீர்ப்பதற்கு வீற்றிருப்பதாக சொல்லப்படலாம். பொ.ச. 33-ல், கடவுளுடைய வலதுபாரிசத்தில் இயேசு வீற்றிருந்தார், அவர் இப்போது ராஜ்யத்தின் ராஜாவாக இருக்கிறார். ஆனால் இப்போது ராஜாவாக ஆட்சிசெய்து கொண்டிருக்கும் இயேசு நியாயாதிபதியாகவும்கூட சேவித்துக் கொண்டிருக்கிறாரா? இது ஏன் நமக்கு விசேஷமாய் இந்தக் காலத்தில் அக்கறைக்குரியதாய் இருக்க வேண்டும்?
18. இயேசுவும் ஒரு நியாயாதிபதியாக இருப்பார் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?
18 நியாயாதிபதிகளை நியமிப்பதற்கு உரிமையுடையவராயிருக்கும் யெகோவா, தம்முடைய தராதரங்களை பூர்த்திசெய்த இயேசுவை ஒரு நியாயாதிபதியாக தேர்ந்தெடுத்தார். ஜனங்கள் ஆவிக்குரிய பிரகாரமாய் முழு ஊக்கத்துடன் ஆவதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கையில் இயேசு இதைக் காண்பித்தார்: “பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.” (யோவான் 5:22) இருப்பினும், இயேசுவின் நியாயத்தீர்ப்பு வழங்கும் பங்கு அந்த வகையான நியாயத்தீர்ப்புக்கும் அப்பால் செல்கிறது, ஏனென்றால் அவர் உயிரோடிருப்பவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் நியாயாதிபதியாய் இருக்கிறார். (அப்போஸ்தலர் 10:42; 2 தீமோத்தேயு 4:1) பவுல் ஒரு சமயம் இவ்வாறு அறிவித்தார்: “கடவுள் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு [இயேசு], பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார்.”—அப்போஸ்தலர் 17:31; சங்கீதம் 72:2-7.
19. இயேசு ஒரு நியாயாதிபதியாக வீற்றிருக்கிறார் என்று சொல்வது ஏன் சரியானது?
19 நியாயாதிபதி என்ற திட்டவட்டமான பங்கில் இயேசு ஒரு மகிமையான சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார் என்று நாம் முடிவுசெய்வது நியாயமானதா? ஆம். இயேசு அப்போஸ்தலரிடம் கூறினார்: “மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் வீற்றிருப்பீர்கள்.” (நேரெழுத்துக்கள் எங்களுடையவை) (மத்தேயு 19:28) இயேசு இப்போது அந்த ராஜ்யத்துக்கு ராஜாவாக இருக்கிறபோதிலும், அவர் செய்யப்போகும் கூடுதலான வேலை மத்தேயு 19:28-ல் குறிப்பிடப்பட்டிருக்கிறது, அது அவர் ஆயிரவருட ஆட்சியின்போது ஒரு சிங்காசனத்தில் வீற்றிருந்து நியாயந்தீர்ப்பதை உட்படுத்தும். அந்த சமயத்தில் அவர் நீதிமான்கள் மற்றும் அநீதிமான்கள் உட்பட எல்லா மனிதவர்க்கத்தையும் நியாயந்தீர்ப்பார். (அப்போஸ்தலர் 24:15) நம்முடைய காலத்துக்கும் நம்முடைய வாழ்க்கைக்கும் சம்பந்தப்பட்ட இயேசுவின் உவமைகளில் ஒன்றுக்கு நாம் நம்முடைய கவனத்தைத் திருப்புகையில் இதை மனதில் வைப்பது உதவியாயிருக்கிறது.
உவமை சொல்வது என்ன?
20, 21. நம்முடைய காலத்துக்கு சம்பந்தப்பட்ட என்ன காரியத்தை இயேசுவின் அப்போஸ்தலர் கேட்டனர், அது என்ன கேள்விக்கு வழிநடத்தியது?
20 இயேசு மரிப்பதற்கு சற்று முன்பு, அவருடைய அப்போஸ்தலர் அவரைக் கேட்டனர்: “இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன?” (மத்தேயு 24:3) ‘முடிவு வருவதற்கு’ முன்பு பூமியின் மீது குறிப்பிடத்தக்க சம்பவங்கள் நடைபெறும் என்று இயேசு முன்னறிவித்தார். அந்த முடிவுக்கு சிறிது காலத்துக்கு முன்பு, “மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை” தேசங்கள் காண்பார்கள்.—மத்தேயு 24:14, 29, 30.
21 மனுஷகுமாரன் தம்முடைய வல்லமையில் வரும்போது அந்த தேசங்களில் இருக்கும் ஜனங்கள் எவ்வாறு இருப்பர்? செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகள் பற்றிய உவமையிலிருந்து நாம் அதைக் கண்டுபிடிக்கலாம், அது பின்வரும் வார்த்தைகளோடு ஆரம்பிக்கிறது: “மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார். அப்பொழுது சகல ஜனங்களும் [“எல்லா தேசத்தாரும்,” NW] அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள்.”—மத்தேயு 25:31, 32.
22, 23. செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகளைப் பற்றிய உவமை அதன் நிறைவேற்றத்தை 1914-ல் ஆரம்பிக்கவில்லை என்பதை என்ன குறிப்புகள் சுட்டிக்காண்பிக்கின்றன?
22 நாம் வெகுகாலமாக புரிந்துகொண்டிருந்தபடி, 1914-ல் இயேசு ராஜ்ய வல்லமையில் வீற்றிருந்தபோது இந்த உவமை பொருந்துகிறதா? மத்தேயு 25:34 அவரை ராஜாவாக பேசுவது உண்மைதான், ஆகையால் இயேசு 1914 முதற்கொண்டு ராஜாவாக ஆன சமயத்திலிருந்து அந்த உவமை நியாயமாகவே பொருந்துகிறது. ஆனால் அதற்குப் பிறகு விரைவில் அவர் என்ன நியாயத்தீர்ப்பை செய்தார்? அது ‘எல்லா தேசத்தாரையும்’ நியாயந்தீர்ப்பது அல்ல. மாறாக, ‘தேவனுடைய வீட்டை’ உண்டுபண்ணுகிறோம் என்று உரிமைபாராட்டிக் கொண்டவர்கள் மீது அவர் தம் கவனத்தைத் திருப்பினார். (1 பேதுரு 4:17) மல்கியா 3:1-3 வரை உள்ள வசனங்களுக்கு இசைவாக, இயேசு யெகோவாவின் தூதனாக, பூமியில் மீந்திருக்கும் அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களை நியாயத்தீர்ப்பு செய்வதற்கென்று மேற்பார்வை செய்தார். ‘தேவனுடைய வீட்டார்’ என்று பொய்யாக உரிமைபாராட்டிக்கொண்ட கிறிஸ்தவமண்டலத்தின் மீதும்கூட தீர்ப்புக்குரிய தண்டனையை நிறைவேற்றுவதற்கான காலமாக இருந்தது.c (வெளிப்படுத்துதல் 17:1, 2; 18:4-8) இருந்தபோதிலும், அந்த சமயத்திலோ அல்லது 1914 முதற்கொண்டோ எல்லா தேசத்து ஜனங்களையும் இறுதியில் வெள்ளாடுகளாகவோ செம்மறியாடுகளாகவோ இயேசு நியாயந்தீர்க்க வீற்றிருந்தார் என்று எதுவும் குறிப்பிட்டுக் காட்டுவதில்லை.
23 உவமையில் உள்ள இயேசுவின் வேலையை ஆராய்ந்து பார்த்தோமென்றால், எல்லா தேசத்தாரையும் அவர் இறுதியில் நியாயந்தீர்ப்பதை நாம் காண்கிறோம். அப்படிப்பட்ட நியாயத்தீர்ப்பு கடந்த பத்தாண்டுகளின்போது மரித்துக்கொண்டிருந்த ஒவ்வொரு நபரும் நித்திய மரணத்துக்கோ நித்திய ஜீவனுக்கோ தகுதியானவர்களாக நியாயந்தீர்க்கப்பட்டனர் என்பதுபோல, அநேக வருடங்கள் அடங்கிய நீண்ட காலப்பகுதியாக தொடர்ந்து இருக்காது என்பதை அந்த உவமை காண்பிப்பதில்லை. சமீப பத்தாண்டுகளில் மரித்துப்போன பெரும்பாலானவர்கள் மனிதவர்க்கத்தின் பொதுவான பிரேதக்குழிக்கு சென்றிருப்பதாக தோன்றுகிறது. (வெளிப்படுத்துதல் 6:8; 20:13) ஆனால் அந்த உவமை, அப்போது உயிரோடிருந்து கொண்டும் அவருடைய தீர்ப்புக்குரிய தண்டனையின் நிறைவேற்றத்தை எதிர்ப்பட்டுக் கொண்டும் இருக்கும் ‘எல்லா தேசத்தாரை,’ இயேசு நியாயத்தீர்ப்பு செய்யும் சமயத்தை விளக்கிக் காண்பிக்கிறது.
24. செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகளைப் பற்றிய உவமை எப்போது நிறைவேறும்?
24 வேறு வார்த்தைகளில் சொன்னால், மனுஷகுமாரன் தம் மகிமையில் வரும் காலத்தைக் குறித்த எதிர்காலத்தைப் பற்றி அந்த உவமை குறிப்பிட்டுக் காட்டுகிறது. அப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் ஜனங்களை நியாயந்தீர்ப்பதற்கு அவர் வீற்றிருப்பார். அவர்கள் தங்களை என்னவாக வெளிக்காட்டியிருக்கிறார்களோ அதன் அடிப்படையில் அவருடைய நியாயத்தீர்ப்பு இருக்கும். அந்த சமயத்தில் “நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும் இருக்கிற வித்தியாசம்” தெளிவாக நிரூபிக்கப்பட்டிருக்கும். (மல்கியா 3:1, 8) நியாயத்தீர்ப்பு உண்மையில் அறிவிக்கப்படுவதும் அது நிறைவேற்றப்படுவதும் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள்ளாக நிறைவேற்றப்படும். தனிப்பட்ட நபர்களைக் குறித்து என்ன தெளிவாக வெளிப்படையாக ஆகியிருக்கிறதோ, அதன் அடிப்படையில் இயேசு நீதியான தீர்மானங்களை வழங்குவார்.—2 கொரிந்தியர் 5:10-ஐயும் காண்க.
25. மனுஷகுமாரன் மகிமையான சிங்காசனத்தில் வீற்றிருப்பதைப் பற்றி பேசுகையில் மத்தேயு 25:31 எதை விளக்கிக் காட்டுகிறது?
25 அப்படியானால், மத்தேயு 25:31-ல் குறிப்பிடப்பட்டிருப்பது, இயேசு நியாயந்தீர்ப்பதற்காக ‘மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பது’ எதிர்காலத்தில் நடக்கப்போகிறவற்றிற்கு பொருத்தமாய் இருப்பதை இது குறிக்கிறது, அப்போது இந்த வல்லமைவாய்ந்த ராஜா தேசங்களின் மீது நியாயத்தீர்ப்பை அறிவிப்பதற்கும் அதை நிறைவேற்றுவதற்கும் வீற்றிருப்பார். ஆம், மத்தேயு 25:31-33, 46-ல் இயேசுவை உட்படுத்துகிற நியாயத்தீர்ப்புக் காட்சி தானியேல் 7-ம் அதிகாரத்தில் இருக்கும் காட்சிக்கு ஒப்பாயிருக்கிறது, அங்கு ஆட்சிசெய்து கொண்டிருக்கும் ராஜா, நீண்ட ஆயுசுள்ளவர், நியாயாதிபதியாக தம் பங்கை நிறைவேற்றி முடிப்பதற்கு வீற்றிருந்தார்.
26. உவமையைக் குறித்து என்ன புதிய விளக்கம் தெளிவாகிறது?
26 வெள்ளாடுகள் மீதும் செம்மறியாடுகள் மீதும் நியாயத்தீர்ப்பை இந்தவிதத்தில் வழங்குவதைப் பற்றிய உவமையைப் புரிந்துகொள்வது வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் மீது கொண்டுவரப் போகும் நியாயத்தீர்ப்பு எதிர்காலத்தில் நடக்கப்போகிறதைக் குறிக்கிறது. மத்தேயு 24:29, 30-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் “உபத்திரவம்” ஆரம்பித்தவுடனேயும் மனுஷகுமாரன் ‘மகிமையோடு வரும்போதும்’ அது நடைபெறும். (மாற்கு 13:24-26-ஐ ஒப்பிடுக.) பின்பு, முழு பொல்லாத ஒழுங்குமுறையும் அதன் முடிவுக்கு வருகையில், இயேசு நீதிவிசாரணை நடத்தி, நியாயத்தீர்ப்பை வழங்கி, அதை நிறைவேற்றுவார்.—யோவான் 5:30; 2 தெசலோனிக்கேயர் 1:7-10.
27. இயேசுவின் கடைசி உவமையைப் பற்றி எதை அறிந்துகொள்வதில் நாம் அக்கறையுடையவர்களாய் இருக்க வேண்டும்?
27 இயேசு கொடுத்த உவமையின் காலத்தைப் பற்றி நம்முடைய புரிந்துகொள்ளுதலை இது தெளிவாக்குகிறது, அது எப்போது செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் நியாயந்தீர்க்கப்படுவர் என்பதைக் காண்பிக்கிறது. ஆனால் ராஜ்ய நற்செய்தியை வைராக்கியத்தோடு பிரசங்கித்துக்கொண்டிருக்கும் நம்மை அது எவ்வாறு பாதிக்கிறது? (மத்தேயு 24:14) அது நம்முடைய வேலையை குறைந்த முக்கியத்துவமுடையதாய் ஆக்குகிறதா, அல்லது அதிக கனத்த உத்தரவாதத்தை அது கொண்டுவருகிறதா? நாம் எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அடுத்த கட்டுரையில் காணலாம்.
[அடிக்குறிப்புகள்]
a தானியேல் 7:10, 26-ல் “நியாயசங்கம்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் சொல் எஸ்றா 7:26-லும் தானியேல் 4:37; 7:21-லும்கூட காணப்படுகிறது.
b கிறிஸ்தவர்கள் ஒருவரையொருவர் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்வதைக் குறித்து பவுல் கேட்டார்: “தீர்ப்புச்செய்கிறதற்கு, சபையில் அற்பமாய் எண்ணப்பட்டவர்களை நியமித்துக்கொள்ளுங்கள் [சொல்லர்த்தமாக சொன்னால், ‘நீங்கள் அமர்த்துகிறீர்களா?’].”—1 கொரிந்தியர் 6:4.
c உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி பிரசுரித்திருக்கும் வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! என்ற புத்தகத்தில், 56, 73, 235-45, 260 பக்கங்களைக் காண்க.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ யெகோவா எவ்வாறு ராஜாவாகவும் நியாயாதிபதியாகவும் சேவிக்கிறார்?
◻ ‘சிங்காசனத்தில் வீற்றிருப்பது’ என்பதற்கு என்ன இரண்டு அர்த்தங்கள் இருக்கலாம்?
◻ மத்தேயு 25:31-ன் காலத்தைக் குறித்து நாம் முன்பு என்ன சொல்லிக் கொண்டிருந்தோம், ஆனால் திருத்தப்பட்ட கருத்துக்கு என்ன அடிப்படை இருக்கிறது?
◻ மத்தேயு 25:31-ல் குறிப்பிட்டிருக்கிறபடி, எப்போது மனுஷகுமாரன் தம் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார்?