துயரம் தாக்குகிறது
ஓயன் இரண்டரை வயது பையன். ஒருநாள் வீட்டின் குளியலறையில் அவன் விளையாடிக் கொண்டிருந்தான். அங்கு மருந்துகள் வைக்கப்பட்டிருந்த ஷெல்ஃப் அவனுக்கு எட்டாது என்று அவன் பெற்றோர் நினைத்தனர். ஆனால் எப்படியோ மேலே ஏறிவிட்டான், அதிலிருந்த ஒரு பாட்டில் அவன் கண்ணில் பட்டது. அதைத் திறந்து அப்படியே குடித்து விட்டான். துயரம் தாக்கியது.
அந்த பாட்டிலில் இருந்தது ஆசிட்! வருத்தகரமாக, சிறுவன் ஓயன் உயிரிழந்தான். அவனுடைய பெற்றோர் அப்படியே நொறுங்கிப் போய் விட்டனர். அவனுடைய அப்பா பெர்ஸி சர்ச்சில் ஆறுதல் தேடினார். “ஏன் இது நடந்தது?” என்று பாதிரியாரிடம் கேட்டார். “ஆண்டவருக்கு இன்னொரு குட்டி ஏஞ்சல் பரலோகத்தில் வேண்டுமென்று ஆசை” என அந்தப் பாதிரியார் பதிலளித்தார். தாங்க முடியாத மன வேதனையில், இதில் கொஞ்சம்கூட நியாயமில்லை என அவர் நினைத்தார். இப்படிப்பட்ட துயரம் நடைபெற வேண்டுமென்று கடவுள் உண்மையில் விரும்பினாரா? மனமுடைந்து போன பெர்ஸி, இனிமேல் அந்தச் சர்ச்சுக்குப் போகவே கூடாதென்று தீர்மானித்தார்.
நடந்ததை எண்ணிப் பார்த்த பெர்ஸி, ‘என்னுடைய குட்டிப் பையன் இன்னமும் வேதனையில் துடித்துக் கொண்டுதான் இருக்கிறானா? அவனை எப்போதாவது திரும்பப் பார்ப்பேனா?’ என்றெல்லாம் யோசித்தார்.
இறந்து போகிறவர்களுக்கு என்ன நேரிடுகிறது, இறந்துபோன அன்பானவர்களுடன் மறுபடியும் ஒன்று சேர்வது சாத்தியமா என்றெல்லாம் நீங்கள்கூட ஒருவேளை யோசித்திருக்கலாம். இக்கேள்விகளுக்கு கடவுளுடைய வார்த்தையான பைபிள் பதில் அளிக்கிறது. இப்படிப்பட்ட துயரங்களை அனுபவித்த அனைவருக்கும் ஆறுதலளிக்கும் தெளிவான விடைகள் பைபிளில் உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக, கடவுள் வாக்குக் கொடுத்திருக்கும் ஓர் அற்புத எதிர்பார்ப்பைப் பற்றி அது தெரியப்படுத்துகிறது—அதுதான் உயிர்த்தெழுதல்.
இந்த அற்புத எதிர்பார்ப்பைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள தயவுசெய்து அடுத்த கட்டுரையை வாசியுங்கள்.