கடவுளா மனிதனா?
“நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான்.” (யோவான் 8:12) இவை இயேசு கிறிஸ்து கூறிய வார்த்தைகள். முதல் நூற்றாண்டைச் சேர்ந்த கல்விமான் ஒருவர் அவரைப் பற்றி இவ்வாறு எழுதினார்: “அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது.” (கொலோசெயர் 2:3) மேலும், பைபிள் இவ்வாறு கூறுகிறது: “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.” (யோவான் 17:3) நம்முடைய ஆன்மீகத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு இயேசுவைப் பற்றிய திருத்தமான அறிவு தேவை.
இயேசு கிறிஸ்துவைப் பற்றி கேள்விப்படாதவர்கள் யாருமே இல்லை என்று சொல்லலாம். அப்படியானால், மனித சரித்திரத்தின் மீது அவர் மிகுந்த செல்வாக்கு செலுத்தியிருக்கிறார் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. சொல்லப்போனால், உலகில் பெரும்பாலான பகுதிகளில் பயன்படுத்தப்படும் காலண்டர் அவர் பிறந்ததாக கருதப்படும் வருடத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளது. ‘அந்த வருடத்திற்கு முந்தைய தேதிகளை கி.மு., அல்லது கிறிஸ்துவுக்கு முன் என அநேகர் குறிப்பிடுகிறார்கள். அந்த வருடத்திற்குப் பிந்திய தேதிகளை கி.பி. அல்லது கிறிஸ்துவுக்கு பின் என குறிப்பிடுகிறார்கள்’ என்று தி உவர்ல்டு புக் என்ஸைக்ளோப்பீடியா விளக்குகிறது.
இருந்தாலும், இயேசு யார் என்பதைக் குறித்து முரண்பாடான கருத்துகள் நிலவுகின்றன. சிலரைப் பொறுத்தவரை, சரித்திரத்தில் முத்திரை பதித்துச் சென்ற மாமனிதர்களில் ஒருவரே அவர். ஆனால் வேறு சிலரோ சர்வவல்லமையுள்ள கடவுளாக அவரை வழிபடுகிறார்கள். இந்துக்கள் சிலர், கடவுளின் அவதாரமாகக் கருதப்படும் கிருஷ்ணனுடன் இயேசு கிறிஸ்துவை இணைத்துப் பேசியிருக்கிறார்கள். இயேசு வெறுமனே ஒரு மனிதனா, அல்லது வழிபட வேண்டிய ஒருவரா? உண்மையில் அவர் யார்? அவர் எங்கிருந்து வந்தார்? அவர் எப்படிப்பட்டவர்? இப்பொழுது அவர் எங்கே இருக்கிறார்? இயேசுவைப் பற்றி ஏராளமான தகவல்கள் அடங்கிய ஒரு புத்தகத்தில் இந்தக் கேள்விகளுக்குச் சரியான பதில்கள் இருக்கின்றன, அதைத்தான் அடுத்த கட்டுரையில் நாம் பார்க்கப் போகிறோம்.