“ஒருபோதும் சோர்ந்துபோகாதே”
பிறந்த போது, வில்மா ரூடால்ஃப் சின்னஞ்சிறியவளாகவும் நோய்வாய்பட்டவளாகவும் இருந்தாள். இவள் நடக்க ஆரம்பிப்பதற்குமுன் நான்கு வயதை அடைந்திருந்தாள். பின்பு இவள் நுரையீரல் வீக்கத்தினாலும் (pneumonia), சிவப்புநிற கொப்புளங்களோடு வரும் காய்ச்சலினாலும் (scarlet fever) மிகவும் அவதிப்பட்டாள். இவள் இவைகளிலிருந்து குணப்பட்ட போதிலும், இவளுடைய இடதுகால் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டது. இவளுடைய தாய், வில்மா எப்படியும் நடந்துவிடுவாள் என்ற தீர்மானத்தோடு இவளுடைய முடமான காலை உருவிக்கொடுத்தாள், மேலும் இதை செய்வதற்கு தன்னுடைய மூன்று பெரிய குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுத்தாள். ஆகவே தினந்தோறும் நான்குமுறை “வில்மாவை தேய்த்துவிடும்” வேலை செய்யப்பட்டது.
வில்மா எட்டு வயதானவளான போது, ஓர் ஊன்று கட்டையைக் கொண்டு நடக்கமுடிந்தது. விரைவில் இவள் ஓடவும், விளையாடவும் ஆரம்பித்தாள். தன்னுடைய குறைபாட்டை மேற்கொள்ளவேண்டும் என்று அசையா உறுதியோடு இவள் இருந்தாள். உடற்பயிற்சியும், “ஒருபோதும் சோர்ந்துபோகாதே” என்ற இவளுடைய அம்மாவின் புத்திமதியும் இவளுக்கு உதவிசெய்தது.
வில்மா சோர்ந்துபோய்விட வில்லை. 1960-ல், இத்தாலியின் ரோமில் நடந்த உலகப்போட்டி (ஒலிம்பிக்ஸ்) விளையாட்டுகளில், இவள் மூன்று தங்கப்பதக்கங்களைப் பெற்றாள். 100-மீட்டர், 200-மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் வெற்றிபெற்றதோடு, 400-மீட்டர் தொடர்ஓட்டப் பந்தயத்தின் இறுதிபாக ஓட்டத்திலும் முதலாவதாக வந்தாள்.
முதலாம் உலக யுத்தம் நடந்த சமயத்தில், ஏழு வயதாக இருந்த கிளன் கன்னிங்ஹாம், அவனுடைய கால்களில் உயிருக்கு-ஆபத்தில் விளைவடையக்கூடிய தீக்கொப்புளங்களால் வேதனைப்பட்டான். அவன் அநேக மாதங்களை படுக்கையில் கழித்தான். அவன் இனி ஒருபோதும் நடக்கப்போவதில்லை எனவும் சொல்லப்பட்டான். அவனுடைய அம்மா அவனின் சிதைவுண்ட தசைகளை தினமும் பிசைந்துவிட்டார்கள். நடக்கும்படியும் பின்பு ஓடும்படியும் அவனை துரிதப்படுத்தினாள். கிளன் சோர்ந்து போகவில்லை. மெய்யாகவே, மேடிஸன் பூங்கா சதுக்கத்தில் கட்டிடத்திற்குள் இருந்த பந்தய தடங்களில் நடந்த மைல் ஓட்டப் பந்தயங்களில் 31-ல் 21 போட்டிகளை இறுதியில் வென்றான். மேலும், 1934-ல் நடந்த, மைல் ஓட்டத்தில் ஓர் உலக சாதனையை ஏற்படுத்தினான்.
வாழ்க்கையில் சில சமயங்களில் நாம் அனைவருமே ஏதேனும் ஒருவகையில் தடைகளை எதிர்ப்படுகிறோம். பெரும்பாலும் இது உடல்நலம் சார்ந்த பிரச்னையாக இருக்கலாம். தோல்வியடைந்ததாக சோர்ந்துபோய்விடுவதைவிட, சோர்ந்துபோகாமல் இருப்பதற்கு தீர்மானமாக இருப்பது எவ்வளவு அருமையானது! ஆவிக்குரிய முயற்சிகளைப் பற்றிச் சொன்னபோது அப்போஸ்தலனாகிய பவுல் “நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை”, என்று எழுதினார். “எங்கள் புறம்பான மனுஷனானது [நம்முடைய மாம்ச உடல்] அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது [அல்லது புதுபலன் அளிக்கப்படுகிறது].”—2 கொரிந்தியர் 4:16. (g91 8⁄22)