குரங்கு அறிவு
மேற்கு ஆப்பிரிக்காவின் சியர்ரா லியோனில், “குரங்கு தன் குட்டியிடம் ‘என்னை இறுகப் பற்றிக்கொள்!’ என்று மாத்திரம் சொல்லாமல், ‘கீழே பார்’ என்று சொல்லுகிறாள்,” என்ற முதுமொழியொன்றிருக்கிறது.
உயரத்தில் மரங்களின் மீது தனது தாயின் முதுகில் தொற்றிக் கொண்டிருக்கும் ஒரு குரங்குக் குட்டியின் காட்சியை இது மனதிற்குக் கொண்டுவருகிறது. இந்த முதுமொழியில் மறைந்துள்ள கருத்து என்னவென்றால், தாய்க்குரங்கு, இறுகப் பற்றிக் கொள் என்று மாத்திரம் சொல்லுவாளேயானால், அதன் குட்டி சிறிது நேரம் அவ்வாறு பற்றிக்கொண்டிருந்துவிட்டு, ஆனால் தன்னுடைய தாயின் கட்டளையின் காரணத்தை அறியாததனால், அவன் சீக்கிரத்தில் மறந்து தனது பிடியைத் தளர்த்தி விடலாம்.
ஆயினும், அந்தக் குட்டி கீழே பார்ப்பானேயானால், தரையிலிருந்து தான் எவ்வளவு உயரத்தில் இருக்கிறானென்பதை பார்த்து, தன்னுடைய ஜீவன் உட்பட்டிருக்கிறதென்பதை அதிக வலிமையோடே மனதில் பதியவைத்துக்கொள்வான். ஏன், அவன் ஆபத்துக்குரிய வகையில் காயப்படுத்தப்படலாம், அல்லது கொல்லப்படவும்கூட முடியும்! ஆபத்தை முழுவதுமாக புரிந்துகொண்டதனால், அவன் உறுதியாய்ப் பற்றிக் கொள்ள பலமான உந்துவிப்பைக் கொண்டிருக்கிறான். இப்போது கூடுதலாக வரும் அறிவுரை அல்லது கட்டளை போன்றவை அதிகம் மதிக்கப்படும்.
மற்றவர்களுக்கு, விசேஷமாகக் குழந்தைகளுக்குப் போதிக்க என்னே ஒரு நல்ல நியமம், கதையின் நீதி என்னவென்றால் வெறுமென ஆணைகள் பிறப்பிப்பதைவிட, அதன் புரிந்துகொள்ளுதலையும் தெரிவிக்க வேண்டும்.
சில சந்தர்ப்பங்களில் அதை முதலில் செய்ய சமயமில்லாமல் போகலாம் என்பது உண்மையே. உதாரணமாக, உங்கள் குழந்தை, போக்குவரத்து அதிகம் உள்ள ஒரு தெருவை சரியாகக் கவனிக்காமல் கடக்க ஆரம்பிக்கும்போது, நீங்கள் அவனை உடனடியாக நின்று திரும்பி வரச்சொல்லலாம். இங்கு முதலில் கட்டளையைக் கொடுப்பது மிகமுக்கியமாகும். ஆனால் பிறகு அந்தக் குழந்தை இருந்த ஆபத்தைப்பற்றிய ஒரு விளக்கம் புரிந்துகொள்ளுதலை கொடுக்கக்கூடும்.
இந்த அணுகுமுறையின்—கட்டளை மாத்திரம் கொடுக்காது அதன் புரிந்துகொள்ளுதலையும் தெரிவித்தல்—நன்மை பைபிள் நீதிமொழியில் காணப்படுகிறது: “வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள புத்திரன்.”—நீதிமொழிகள் 28:7. (g91 10/8)