பயம் படுத்தும் பாடு
“பயம் என்று சொன்னாலே கேலிக்கூத்தாகிவிட்டது. ஆனால் இது ‘கேலி’ என்று சாதாரணமாக விட்டுவிடும் விஷயமே அல்ல.”—என்று கூறியவர் திகில் கோளாறுகளுக்கு வைத்தியம் பார்க்கும் நிலையத்தின் நிர்வாக இயக்குநர் ஜெர்லின் ராஸ்
ஏதாகிலும் ஒரு பொருளைப் பார்த்து, சூழ்நிலையை நினைத்து, நடுநடுங்குவதே “பயம்” (“phobia”) என்னும் நோய். ஆனால் பயத்திற்கு எவ்வளவுதான் விளக்கம் தந்தாலும், பயம் வரும்போது ஏற்படும் நடுக்கத்தையும் தனிமையையும் விவரிக்கவே முடியாது. பயம் என்ற இந்த நோய்க்கு 20 வருடங்களுக்கு மேல் சிகிச்சை அளித்துவரும் ரேயான் டியூமாட் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “பயம் உள்ள நபர்கள், வீட்டிலேயே முடங்கிக்கிடக்க விரும்புவார்கள். அதனால் வெளியே போகும் வாய்ப்புகளை அவர்கள் நைசாக தவிர்த்துவிடுவார்கள். அல்லது எப்போதும் திகிலோடு வாழ்க்கை நடத்துவார்கள். அல்லது பயத்தை போக்க நிறைய குடிப்பார்கள், பிறகு அதுவே அவர்களுக்கு வினையாக முடிகிறது.”
டென்ஷனோடு தொடர்புடைய வியாதிகளின் வரிசையில் பயமும் சேர்க்கப்பட்டுள்ளது.a அமெரிக்க மக்கள் தொகையில் பெரியவர்களை எடுத்துக்கொண்டால், சுமார் 12 சதவிகிதத்தினர் அவர்களது வாழ்க்கையில் ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் பயம் என்ற நோய்க்கு ஆளாகியுள்ளனர் என தெரியவந்தது. இத்தகைய நோய்க்கு ஆளாகும் பலர் இதை வெளியே சொல்லாமலேயே வருடக்கணக்கில் கஷ்டப்படுவார்கள். “துரதிஷ்டவசமாக, பயம் என்னும் நோயால் அவதிப்படும் முக்கால்வாசி பேர் உதவி ஏதும் நாடுவதில்லை. நிறைய பயந்தாங்கொள்ளிகள் வெட்கப்பட்டுக்கொண்டே, மற்றவர்களின் உதவியை கேட்க தயங்குவார்கள். இன்னும் சிலருக்கு என்ன கோளாறு என்றே புரிவதில்லை அல்லது யாரிடம் உதவி கேட்பது என்று புரிவதில்லை. சிலருக்கு சிகிச்சை பெறவேண்டும் என்றாலே கிலி அடிக்கிறது” என அமெரிக்காவைச் சேர்ந்த திகில் கோளாறு கூட்டமைப்பு அறிக்கை செய்கிறது.
பயம் என்று எடுத்துக்கொண்டால் வகை வகையாக நூற்றுக்கணக்கில் உள்ளன. ஆனால் பொதுவாக அவற்றை நிபுணர்கள் மூன்று வகையாக பிரித்திருக்கிறார்கள். ஏதோ ஒன்றைக் கண்டு, அதாவது பூச்சிகளைப் பார்த்து, மிருகங்களைப் பார்த்து ஏற்படும் பயம் அல்லது சூழ்நிலையை நினைத்து, அதாவது விமானத்தில் பறப்பதை நினைத்து, பூட்டி வைக்கப்படுவதை நினைத்து பயந்து நடுங்குவது ஒருவகை. இது சாதாரண பயம் எனப்படுகிறது. அக்கோரா போபியா (Agoraphobia) என்பது இன்னொருவகை. இது இடத்தை பற்றியோ, சூழ்நிலையைப் பற்றியோ ஏற்படும் அசாதாரண பயம். அதனால் ஏற்கெனவே அத்தகைய பயம் வந்த இடங்களையும் சூழ்நிலைகளையும் முற்றிலுமாக தவிர்த்துவிடுவார்கள். பொது ஜனக்கூட்டத்தில் பேசினால் தர்மசங்கடத்தில் மாட்டிக்கொள்வோமோ என்ற பயங்கர பயம் மூன்றாவது வகை. இது சோஷியல் போபியா என்கிற சமூக பயம்.
இத்தகைய மூன்று வகையான பயங்களில் சமூக பயத்தை மட்டும் ஆராயலாம். த வாஷிங்டன் பத்திரிகை இவ்வாறு கூறுகிறது: “பாம்பு பயம், விமானப் பயண பயம், என்று எத்தனையோ சாதாரண பயங்களை எல்லாம் ஒன்றுசேர்த்தாலும் இந்தச் சமூக பயத்துக்கு நிகராகாது.” இது உண்மையா? இது உண்மையென்றால், ஏன் அப்படி? அதை நாம் பார்த்துவிடலாம்.
[அடிக்குறிப்புகள்]
a பீதி நோய்த்தாக்கம், கட்டுப்பாடற்ற மனக்கோளாறு (obsessive-compulsive disorder), post-traumatic stress disorder, அதாவது முன் நடந்த கோர சம்பவத்தின் திகிலால் உண்டாகும் கோளாறு, பொதுவாக பயத்தோடு தொடர்புடைய கோளாறு என இன்னும் வேறுசில டென்ஷன் நோய்கள் உள்ளன. இதைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள விழித்தெழு! பத்திரிகையில் பிப்ரவரி 8, 1996, இதழில் வெளிவந்த, “கட்டுப்படுத்த இயலா நடத்தை—அது உங்கள் வாழ்வைக் கட்டுப்படுத்துகிறதா?” என்ற கட்டுரையையும், ஜூன் 8, 1996-ல் வந்த, “பீதிக்குள்ளாக்கும் நோய்த்தாக்கங்களைச் சமாளித்தல்” என்ற கட்டுரையையும் காண்க.