பாடம் 44
யெகோவாவுக்காக ஒரு ஆலயம்
சாலொமோன் இஸ்ரவேலின் ராஜாவான பிறகு, யெகோவா அவரிடம், ‘உனக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டார். அதற்கு சாலொமோன், ‘நான் சின்னப் பையனாக இருக்கிறேன். எனக்கு எதையும் சரியாகச் செய்யத் தெரியவில்லை. அதனால் உங்கள் மக்களை நன்றாகக் கவனித்துக்கொள்ள எனக்கு ஞானத்தைக் கொடுங்கள்’ என்று கேட்டார். அப்போது யெகோவா, ‘நீ ஞானத்தைக் கேட்டதால் இந்தப் பூமியிலேயே உன்னைப் பெரிய ஞானியாக ஆக்குவேன், பெரிய பணக்காரனாகவும் ஆக்குவேன். என் பேச்சைக் கேட்டு நடந்தால், நீ ரொம்ப நாள் வாழலாம்’ என்று சொன்னார்.
சாலொமோன் ஆலயத்தைக் கட்ட ஆரம்பித்தார். சுத்தமான தங்கம், வெள்ளி, மரம் மற்றும் கற்களால் கட்டினார். திறமையுள்ள ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் அதைக் கட்ட உதவினார்கள். ஏழு வருஷங்களுக்குப் பிறகு, அந்த ஆலயம் யெகோவாவுக்காக அர்ப்பணிப்பதற்குத் தயாரானது. அந்த ஆலயத்தில் ஒரு பலிபீடம் இருந்தது, அதன்மேல் பலிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பலிபீடத்துக்கு முன் சாலொமோன் மண்டிபோட்டு ஜெபம் செய்தார். ‘யெகோவாவே, நீங்கள் தங்கும் அளவுக்கு இந்த ஆலயம் பெரிதாகவும் இல்லை, அழகாகவும் இல்லை. ஆனாலும், எங்கள் வணக்கத்தை ஏற்றுக்கொண்டு நாங்கள் செய்யும் ஜெபங்களை தயவுசெய்து கேளுங்கள்’ என்றார். அந்த ஆலயத்தையும் சாலொமோன் செய்த ஜெபத்தையும் பற்றி யெகோவா என்ன நினைத்தார்? சாலொமோன் ஜெபம் செய்து முடித்த உடனே வானத்திலிருந்து நெருப்பை அனுப்பினார். அது பலிபீடத்தில் இருந்த பலிகளை எரித்துப்போட்டது. இதன்மூலம் யெகோவா அந்த ஆலயத்தை ஏற்றுக்கொண்டதைக் காட்டினார். அதைப் பார்த்து இஸ்ரவேலர்கள் ரொம்பச் சந்தோஷப்பட்டார்கள்.
சாலொமோனின் ஞானத்தைப் பற்றி இஸ்ரவேலிலும் தூரமான இடங்களிலும் இருந்த மக்கள் கேள்விப்பட்டார்கள். பிரச்சினைகளைச் சரிசெய்வதற்கு சாலொமோனிடம் மக்கள் வந்தார்கள். சேபா நாட்டு ராணிகூட கஷ்டமான கேள்விகளைக் கேட்டு அவரைச் சோதிக்க வந்தாள். அவர் சொன்ன பதில்களைக் கேட்டு ரொம்ப ஆச்சரியப்பட்டாள். ‘உங்களைப் பற்றி மக்கள் சொன்னதையெல்லாம் நான் நம்பவில்லை. ஆனால் நான் கேள்விப்பட்டதைவிட நீங்கள் பெரிய ஞானியாக இருக்கிறீர்கள். உங்கள் கடவுளான யெகோவா உங்களை ஆசீர்வதித்திருக்கிறார்’ என்று சொன்னாள். அவருடைய ஆட்சியில் இஸ்ரவேல் மக்கள் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்தார்கள். ஆனால், எல்லாமே சீக்கிரத்தில் மாறியது.
“இதோ! சாலொமோனைவிட பெரியவர் ஒருவர் இங்கே இருக்கிறார்.”—மத்தேயு 12:42