உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சமீப காவற்கோபுர வெளியீடுகளுக்கு நீங்கள் கவனமான சிந்தனை செலுத்தியிருக்கிறீர்களா? அப்படியானால், பின்வருவதைத் திரும்பவும் நினைவுபடுத்திக்கொள்வது அக்கறையைத் தூண்டுவதாக இருப்பதாய் நீங்கள் காண்பீர்கள்:
◻ ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் விட்டுச்சென்ற மிகச் சிறந்த முன்மாதிரியை இன்று மணமாகிய தம்பதிகள் பலர் எவ்வாறு பின்பற்றியிருக்கின்றனர்?
ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் பல வெவ்வேறு சபைகளில் சேவித்தனர். அவர்களைப்போல், தற்கால கிறிஸ்தவர்கள் பலர், தேவை அதிகமுள்ள இடங்களுக்கு மாறிச் செல்ல தங்களை மனமுவந்து அளித்திருக்கின்றனர். மேலும், ராஜ்ய அக்கறைகள் பெருகுவதைக் காண்பதிலிருந்தும், அருமையான கிறிஸ்தவ நட்புறவுகளை ஏற்படுத்தி வளர்க்கக்கூடியவர்களாக இருந்ததிலிருந்தும் அவர்கள் மகிழ்ச்சியையும் மனத்திருப்தியையும் அனுபவித்திருக்கிறார்கள்.—12/15, பக்கம் 24.
◻ போதைதரும் பானங்களைப் பற்றிய பைபிளின் கருத்து என்ன?
போதைதரும் பானங்களைப் பற்றிய பைபிளின் கருத்து சமநிலைப்பட்டதாக உள்ளது. ஒருபுறத்தில், திராட்ச மதுபானம் கடவுள் அளித்துள்ள பரிசு என்று பைபிள் சொல்லுகிறது. (சங்கீதம் 104:1, 15) மறுபுறத்தில், மிதமீறி குடிப்பதைக் கண்டனம் செய்கின்றன. (லூக்கா 21:34; 1 தீமோத்தேயு 3:8; தீத்து 2:3; 1 பேதுரு 4:3)—12/15, பக்கம் 27.
◻ பைபிள் புத்தகமாகிய ஆகாயில் தனிப்பட கவனிக்கத்தக்க அம்சம் என்ன?
ஆகாய் புத்தகம் 38 வசனங்களே அடங்கியதாக இருக்கிறபோதிலும், கடவுளுடைய பெயர் 35 தடவைகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. யெகோவாவின் பெயர் வரும் இடத்தில் “கர்த்தர்” என்ற பட்டப் பெயரை மாற்றீடு செய்கையில் அத்தகைய தீர்க்கதரிசனம் உயிரற்றதாகத் தொனிக்கிறது.—1/1, பக்கம் 6.
◻ தாவீதின் மற்றும் மனாசேயின் பாவங்களிலிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?
தாவீதையும் மனாசேயையும் யெகோவா மன்னித்தபோதிலும், இவர்கள்—இவர்களோடுகூட இஸ்ரவேலரும்—தங்களுடைய பாவச் செயல்களின் விளைவுகளை அனுபவிப்போராய் வாழவேண்டியிருந்தது. (2 சாமுவேல் 12:11, 12; எரேமியா 15:3-5) இதைப்போலவே, மனந்திரும்பின பாவிகளை யெகோவா இன்று மன்னிக்கையில், அவர்களுடைய செயல்களின் விளைவுகள் தவிர்க்க முடியாதவையாக இருக்கலாம்.—1/1, பக்கம் 27.
◻ கடவுளுடைய ராஜ்யத்தின் ‘நற்செய்தியை அறிவிப்போரின் பாதங்கள்’ எவ்வகையில் “அழகாயிருக்கின்றன”?
(ஏசாயா 52:7) ஒருவர் மற்றவர்களுக்குப் பிரசங்கிக்கச் செல்கையில், பொதுவாகப் பாதங்களே அவருக்கு நடக்க உதவுகின்றன. அத்தகைய பாதங்கள் உண்மையில் அந்த ஆளைக் குறிக்கின்றன. ஆகையால், ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்திக்குச் செவிகொடுத்துக்கேட்டு, சாதகமாகச் செயல்படும் பலருக்கு, அத்தகைய செய்திகொண்டுசெல்வோரின் பாதங்கள் நிச்சயமாகவே அழகாகக் காட்சியளிக்கின்றன.—1/15, பக்கம் 13.
◻ ‘நற்செய்தியை அறிவிப்பதில்’ எந்த இரட்டிப்பான ஊழியம் உட்பட்டிருக்கிறது?
(1 கொரிந்தியர் 9:16, NW) முதலாவதாக, ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை நாம் யாவரறிய அறிவிக்க வேண்டும். இந்த ஊழியத்தின் இரண்டாவது அம்சமானது, ராஜ்ய அறிவிப்புக்குச் சாதகமான மனநிலையைக் காட்டுவோருக்குக் கற்பிப்பதை உட்படுத்துகிறது.—1/15, பக்கம் 23.
◻ சபை கூட்டங்களில் ராஜ்ய பாட்டுகளைப் பாடுவதிலிருந்து என்ன தனிப்பட்ட நன்மைகள் உண்டாகின்றன? பாடுவதானது, நம்முடைய சிருஷ்டிகரின்பேரில் நமக்கு இருக்கும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது. (சங்கீதம் 149:1, 3) சபையில் இருதயப்பூர்வமாக பாடுகையில், பின்தொடரும் நிகழ்ச்சிநிரலுக்கு அது நம்மைச் சரியான மனநிலையிலும் இருதய நிலையிலும் வைக்கலாம். யெகோவாவின் வணக்கத்தில் மேலுமதிகமாய்ப் பங்குகொள்ள அது நமக்குத் தூண்டுதலை அளிக்கலாம்.—2/1, பக்கம் 28.
◻ பிறந்த நாளைப் பார்க்கிலும் இறந்த நாள் மேம்பட்டதாக எப்போது இருக்கிறது?
(பிரசங்கி 7:1) ஒருவன், இறப்பதற்கு முன், யெகோவாவிடம் நற்பெயரை உண்டாக்கி வந்திருந்தால், அவன் பிறந்த நாளைப் பார்க்கிலும் இறந்த நாள் மேம்பட்டதாக இருக்கலாம். உண்மையுள்ளவர்களாக இருந்து இறப்போரை அவர் உயிர்த்தெழுப்ப முடியும். (யோவான் 11:25)—2/15, பக்கம் 12.
◻ பிரசங்கி புத்தகம் நமக்குத் தனிப்பட்ட முறையில் ஏன் உதவிசெய்ய வேண்டும்?
வாழ்க்கையைப் பற்றிய நம்முடைய மனப்பான்மையையும், எதன்பேரில் கவனம் ஒருமுகப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் சீர்ப்படுத்திக்கொள்ள அது நம் ஒவ்வொருவருக்கும் உதவிசெய்ய முடியும். (பிரசங்கி 7:2; 2 தீமோத்தேயு 3:16, 17)—2/15, பக்கம் 16.
◻ யெகோவாவின் சாட்சிகள் அடிப்படைவாதிகளா?
இல்லை. அவர்கள் உறுதியான மத நம்பிக்கைகள் உடையோராக இருக்கிறபோதிலும், அடிப்படைவாதிகள் என்ற பதம் பயன்படுத்தப்படுகிற கருத்தில் அவர்கள் அடிப்படைவாதிகள் அல்லர். தாங்கள் ஒத்துக்கொள்ளாத கருத்து வேறுபாடுடையோருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் செய்வதையோ வன்முறையில் ஈடுபடுவதையோ அவர்கள் நாடுவதில்லை. தங்கள் தலைவராகிய, இயேசு கிறிஸ்துவின் மாதிரியை அவர்கள் பின்பற்றுகிறார்கள்.—3/1, பக்கம் 6.
◻ கடவுளுடைய பழிவாங்குதலை நிறைவேற்றுவதற்கு இயேசுவின் வருகைக்குரிய திட்டமான நேரத்தை அறியாதிருப்பது கிறிஸ்தவர்களை என்ன வகையில் பாதிக்கிறது?
கிறிஸ்தவர்களை இது விழிப்புடன் வைத்து, யெகோவாவைத் தன்னலமற்ற நோக்கங்களுடன் தாங்கள் சேவிக்கிறார்கள் என்று நிரூபிப்பதற்கான வாய்ப்பை அவர்களுக்குத் தினந்தோறும் அளிக்கிறது.—3/1, பக்கம் 13.
◻ நம்மை ஒருவேளை ஏமாற்றிவிட்டிருக்கும் ஒரு சகோதரருக்கு எதிராகச் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக எதை நாம் சிந்திக்க வேண்டும்?
தனிப்பட்டவர்களாய் நம்மீதும், இதில் உட்பட்ட மற்றவர்கள்மீதும், சபையின்மீதும், வெளியிலுள்ளவர்கள்மீதும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். (1 கொரிந்தியர் 6:7)—3/15, பக்கம் 22.
◻ மெய்யான சந்தோஷத்தை எப்படி அடையலாம்?
மெய்யான சந்தோஷம், உண்மையான விசுவாசத்திலும் யெகோவாவுடன் உள்ள நல்ல ஓர் உறவிலும் ஆதாரங்கொண்டதாய், இருதயத்தின் ஒரு நிலையாக உள்ளது. (மத்தேயு 5:3)—3/15, பக்கம் 23.
◻ ஜூரி கடமைக்காக அழைக்கப்படுகையில் ஒரு கிறிஸ்தவர் என்ன செய்ய வேண்டும்?
ஜூரி கடமையை எதிர்ப்படும் ஒவ்வொரு கிறிஸ்தவரும், பைபிளைத் தான் புரிந்துகொண்டதன்பேரிலும் தன் சொந்த மனச்சாட்சியின்பேரிலும் சார்ந்து, என்ன போக்கைப் பின்தொடர வேண்டும் என்பதை அவரவரே தீர்மானிக்க வேண்டும். (கலாத்தியர் 6:5)—4/1, பக்கம் 29.