உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சமீபத்தில் வெளியான காவற்கோபுரம் பத்திரிகைகளை நீங்கள் வாசித்து மகிழ்ந்தீர்களா? பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்:
• சங்கீதம் 72:12 முன்னறிவிக்கிறபடி, இயேசு எப்படி ‘ஏழைகளை விடுவிப்பார்’?
அவருடைய ஆட்சியில், எல்லாருக்கும் நீதி கிடைக்கும், ஊழல் இருக்காது. வறுமை தாண்டவமாடுவதற்கு போர்களே காரணம்; ஆனால் கிறிஸ்து பூரண சமாதானத்தைக் கொண்டுவருவார். அவர் மக்களுக்கு இரக்கம் காட்டுவார்; அவர்களை ஒன்று சேர்ப்பார், மனிதகுலத்திற்கு ஏராளமான உணவு கிடைக்கும்படி செய்வார். (சங்கீதம் 72:4-16)—5/1, பக்கம் 7.
• கிறிஸ்தவர்களாக நாம் தயக்கமின்றி தைரியமாகப் பேசும் திறனை எப்படி வெளிக்காட்டலாம்? (1 தீமோத்தேயு 3:13; பிலேமோன் 9; எபிரெயர் 4:16)
தைரியமாக மற்றவர்களுக்கு வைராக்கியத்துடன் பிரசங்கிப்பது ஒரு வழியாகும். சரியான சமயத்தில், திறம்பட்ட விதத்தில் போதிப்பதும் ஆலோசனை கொடுப்பதும் மற்றொரு வழி. கடவுள் கேட்டு பதிலளிப்பார் என்ற நம்பிக்கையுடன் அவரிடம் ஜெபத்தில் நம்முடைய இருதயத்தில் உள்ளதை எல்லாம் கொட்டிவிடுவதன் மூலமும் தயக்கமின்றி தைரியமாக பேசும் திறனை வெளிக்காட்டலாம்.—5/15, பக்கங்கள் 14-16.
• நியாயப்பிரமாண சட்டத்தில், பாலியல் சம்பந்தப்பட்ட இயல்பான சில பழக்கங்கள் ஒருவரை ‘தீட்டுப்படுத்துவதாக’ ஏன் கருதப்பட்டன?
இந்திரியம் கழிதல், மாதவிடாய், பிள்ளைப்பேறு ஆகியவை ஒரு நபரை தீட்டுப்படுத்தியதாக சட்டம் சொல்கிறது. இச்சட்டங்கள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிசெய்தன, மேம்பட்ட ஒழுக்க நெறிகளை ஆதரித்தன, இரத்தத்தின் பரிசுத்தத் தன்மையை வலியுறுத்தின, பாவநிவிர்த்திக்கான அவசியத்தைச் சிறப்பித்துக் காட்டின.—6/1, பக்கம் 31.
• ஒரு நபர் சந்தோஷமாய் இருக்க விரும்பினால், அவர் ஏன் சங்கீதப் புத்தகத்திற்கு கவனம் செலுத்துவது பயனுள்ளதாயிருக்கும்?
சந்தோஷம் என்பது கடவுளுடன் கொண்டிருக்கும் நல்ல உறவின் பலனாக கிடைக்கிறது என்பதை சங்கீத புத்தகத்தை எழுதியவர்கள் அறிந்திருந்தார்கள். (சங்கீதம் 112:1, NW) சொந்தபந்தங்களானாலும் சரி, சொத்துசுகங்களானாலும் சரி, சொந்த சாதனைகளானாலும் சரி, ‘யெகோவாவை தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம்’ அனுபவிக்கிற சந்தோஷத்தைத் தரவே முடியாது என்பதை அவர்கள் வலியுறுத்தினார்கள். (சங்கீதம் 144:15)—6/15, பக்கம் 12.
• பூர்வ இஸ்ரவேலர் யெகோவாவுடன் என்ன விசேஷ உறவைக் கொண்டிருந்தார்கள்?
பொ.ச.மு. 1513-ல் யெகோவா இஸ்ரவேலரை ஒரு புது உறவுக்குள், அதாவது ஒரு உடன்படிக்கைக்குள் கொண்டுவந்தார். (யாத்திராகமம் 19:5, 6; 24:7) அதன் பிறகு பிறந்த இஸ்ரவேலர் அனைவரும் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்த, அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனத்தின் அங்கத்தினர்களாகவே பிறந்தார்கள். இருந்தாலும், ஒவ்வொரு தனிநபரும் கடவுளுக்கு சேவை செய்ய தனிப்பட்ட தீர்மானம் செய்ய வேண்டியிருந்தது.—7/1, பக்கங்கள் 21-2.
• நாம் ஏன் எல்லாவற்றையும் ‘முறுமுறுப்பில்லாமல் . . . செய்ய வேண்டும்’? (பிலிப்பியர் 2:16)
முறுமுறுத்ததால் கடவுளுடைய மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டதை அநேக வேதப்பூர்வ உதாரணங்கள் காட்டுகின்றன. ஆகவே, இன்றும் அதன் அரித்துப்போடும் பாதிப்பைக் குறித்து நாம் கவனமாக யோசிக்க வேண்டியது அவசியம். அபூரண மனிதர்களுக்கு குறைகூறும் இயல்பு இருக்கிறது. குறைகூறும் மனப்போக்கு நமக்குள் எழும்புவதைக் குறித்து நாம் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். அதைத் தவிர்க்கவும் வேண்டும்.—7/15, பக்கங்கள் 16-17.
• நீதிமொழிகள் 8:22-31-ல் விவரிக்கப்பட்டுள்ள ஞானம், ஒரு குணத்தை குறிப்பிடவில்லை என்பதை நாம் எப்படி அறிகிறோம்?
யெகோவா தமது படைப்பின் தொடக்கத்தில் இந்த ஞானத்தைப் ‘படைத்தார்.’ கடவுள் என்றென்றும் இருக்கிறவராகவும் ஞானமுள்ளவராகவும் இருக்கிறார். அவருடைய ஞானம் படைக்கப்படவில்லை. நீதிமொழிகள் 8:22-31-ல் சொல்லப்பட்ட ஞானம் கடவுள் அருகே ‘செல்லப்பிள்ளையாக’ [“கைதேர்ந்த வேலையாளாக,” NW] இருந்தது. படைப்பில் கடவுளுடன் நெருக்கமாய் வேலை செய்து, பிற்பாடு இயேசுவாக மாறிய ஆவி சிருஷ்டிக்கே இந்த விவரிப்பு பொருந்துகிறது. (கொலோசெயர் 1:17; வெளிப்படுத்துதல் 3:14)—8/1, பக்கம் 31.