உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சமீபத்தில் வெளியான காவற்கோபுரம் பத்திரிகைகளை நீங்கள் வாசித்து மகிழ்ந்தீர்களா? பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்:
• அன்புக்குரியவர் யெகோவாவை விட்டு விலகுகையில் நீங்கள் என்ன செய்யலாம்?
உங்களை நீங்களே பலப்படுத்திக்கொள்ளுங்கள், சத்தியத்திலுள்ள உங்கள் குடும்ப அங்கத்தினர்களையும் பலப்படுத்துங்கள். ஆன்மீகக் காரியங்களில் ஒன்றிப் போய்விடுங்கள். மற்றவர்களுக்கு உதவ தயாராயிருங்கள். அன்பானவர் மனந்திரும்பி வருவார் என்பதில் நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். உங்கள்மீதே பழிசுமத்திக்கொள்ளாதீர்கள். சிட்சை கொடுப்பதற்கான யெகோவாவின் ஏற்பாட்டுக்கு மரியாதை காட்டுங்கள், உங்கள் மனதில் உள்ளதை நண்பர்களிடம் கொட்டிவிடுங்கள்.—9/1, பக்கங்கள் 18-21.
• ‘கடைசி நாட்களை’ அடையாளம் காண என்ன இரண்டு வழிகளில் வசனங்கள் உதவுகின்றன?
“உலகத்தின் முடிவு” காலத்தின்போது நடக்கும் சம்பவங்களை பைபிள் முன்னறிவிக்கிறது. (மத்தேயு 24:3, 7, 8; லூக்கா 21:11) மேலும் “கடைசி நாட்களில்” வாழும் மக்களின் மனநிலையிலும் நடவடிக்கைகளிலும் ஏற்படுகிற மாற்றங்களை விளக்குகிறது. (2 தீமோத்தேயு 3:1-5) மிக முக்கியமாக, இந்தச் சமயத்தில் ராஜ்யத்தின் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும் என்று சொல்கிறது.—9/15, பக்கங்கள் 4-6.
• ஒரு கிறிஸ்தவர் ஓட்டிய வாகனம் விபத்திற்குள்ளாகி அதில் மற்றவர்கள் உயிரிழக்க நேரிட்டால், அவர்மீது சபை என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?
மூப்பர்கள் அந்த விஷயத்தைத் தீர ஆராய வேண்டும். உயிரைப் பறித்த அந்த விபத்திற்குக் காரணமான சம்பவங்கள் அந்த ஓட்டுனருடைய கட்டுப்பாட்டில் சிறிதளவுகூட அல்லது அறவே இல்லையென்பதால் அவர்மீது இரத்தப்பழி இல்லையென்று விசாரணை செய்த மூப்பர்கள் தீர்மானிக்கலாம். ஆனால், ஓட்டுனரின் மீது இரத்தப்பழி உள்ளதென்று உறுதி செய்யப்பட்டு, அவர் மனந்திரும்பினால் வேதப்பூர்வ கண்டனத்தைப் பெறுவார். சபையில் அவருடைய சிலாக்கியங்கள் தடைசெய்யப்படும்.—9/15, பக்கம் 30.
• நித்தியஜீவன் ஏன் அறிவியல் முன்னேற்றங்களைச் சார்ந்தில்லை?
வாழ்நாள் காலத்தை நீடிக்கச்செய்வதற்காக அறிவியல் ரீதியாகப் பல முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று, தங்களைத் தாங்களே புதுப்பித்துக்கொள்ளும் செல்கள் அவற்றின் வேலையை குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நிறுத்திவிடாமல் தொடர்ந்து செய்ய வைப்பதற்கு முயற்சி எடுக்கப்படுகிறது. இரண்டு, குளோனிங் சிகிச்சை மூலம் நோயாளிகளுக்குக் கச்சிதமாகப் பொருந்துகிற புதிய உடலுறுப்புகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், இயேசுவினுடைய மீட்கும் பொருளின் மூலமாக மட்டுமே மனிதர்கள் நித்தியஜீவனைப் பெறமுடியும் என்று பைபிள் கூறுகிறது.—10/1, பக்கங்கள் 3-5.
• யூதர்களின் சடங்குக் குளியல் கிறிஸ்தவ முழுக்காட்டுதலுக்கு முன்னோடியா?
இல்லை. யூதர்கள் சடங்கு முறையிலான சுத்திகரிப்பைத் தாங்களாகவே செய்துகொண்டார்கள். ஆனால், யோவான் கொடுத்த முழுக்காட்டுதல் அப்படியல்ல. மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி, சுத்தப்படுத்துதல் திரும்பத்திரும்பச் செய்யப்பட்டது. ஆனால், கிறிஸ்தவ முழுக்காட்டுதலோ ஒரே முறைதான் செய்யப்படுகிறது.—10/15, பக்கங்கள் 12-13.
• ஊழியப் பயிற்சிப் பள்ளி என்றால் என்ன?
சபையிலுள்ள திருமணமாகாத, பெருமளவு தேவையிருக்கும் இடங்களில் சேவைசெய்ய முடிந்த மூப்பர்களுக்காகவும் உதவி ஊழியர்களுக்காகவும் நடத்தப்படுகிற எட்டு வாரப் பயிற்சி இது. பயிற்சிக்குப் பிறகு அவர்கள் தங்கள் சொந்த சபையிலோ உள்நாட்டிலுள்ள வேறு சபையிலோ பிற நாட்டிலுள்ள சபையிலோ நியமிக்கப்படலாம்.—11/15, பக்கங்கள் 10-11.
• 1 யோவான் 2:18; 4:3-ல் குறிப்பிடப்பட்டுள்ள அந்திக்கிறிஸ்து என்றால் என்ன அல்லது யார்?
விரிவான அர்த்தத்தில், “அந்திக்கிறிஸ்து” என்ற வார்த்தை கிறிஸ்துவை எதிர்ப்பவரை அல்லது பொய்யாகத் தன்னைக் கிறிஸ்து என்று அல்லது அவருடைய பிரதிநிதிகள் என்று உரிமை பாராட்டுகிறவர்களைக் குறிக்கிறது. கடவுளுடைய ராஜ்யத்தைத் தள்ளிவிட்டு, மதப் பொய்களைப் பரப்பும், கிறிஸ்துவை எதிர்க்கும் அநேகரைக் கொண்ட கும்பலைத்தான் அந்திக்கிறிஸ்து என்ற சொல் குறிப்பதாக இயேசுவின் வார்த்தைகளும் யோவானின் வார்த்தைகளும் காட்டுகின்றன.—12/1, பக்கங்கள் 4-6.