பக்குவமாகக் கற்பித்தல்
1. கடவுளுடைய வார்த்தையைச் சரியாகப் பயன்படுத்துவதற்கு வேறெதுவும் செய்ய வேண்டும்?
1 ‘சத்திய வார்த்தையைச் சரியாகப் பயன்படுத்துவதற்கு,’ பைபிளிலிருந்து மேற்கோள் காட்டினால் மட்டும் போதாது; இதை, அப்போஸ்தலன் பவுலைப் போலவே மற்ற திறம்பட்ட ஊழியர்களும் அறிந்திருக்கிறார்கள். (2 தீ. 2:15) அப்படியானால், கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்தி நாம் எப்படி “பக்குவமாக” கற்பிக்கவும் வேண்டும்?—அப். 28:23.
2. கடவுளுடைய வார்த்தைமீது மக்களுக்கு இருக்கிற மதித்துணர்வை அதிகரிக்க நாம் எப்படி உதவலாம்?
2 கடவுளுடைய வார்த்தை பேசுவதற்கு அனுமதியுங்கள்: முதலாவதாக, பைபிளிலுள்ள ஞானம் பொதிந்த வார்த்தைகள்மீது வீட்டுக்காரருக்கு மதித்துணர்வை ஏற்படுத்துங்கள். கடவுளுடைய வார்த்தைமீது நமக்குள்ள நம்பிக்கையைப் பார்க்கிற வீட்டுக்காரர் அதற்குக் கூர்ந்த கவனம் செலுத்தத் தூண்டப்படலாம். (எபி. 4:12) நாம் இவ்வாறு சொல்லலாம்: “இந்த விஷயத்தைப் பற்றிக் கடவுள் என்ன நினைக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்வது எனக்கு ரொம்பவே உதவியாய் இருந்திருக்கிறது. அவருடைய வார்த்தை என்ன சொல்கிறது என்பதைக் கவனியுங்கள்.” முடிந்தவரை, பைபிளிலிருந்து வாசித்துக் காட்டுவதன் மூலம் கடவுளுடைய வார்த்தை நேரடியாகப் பேசுவதற்கு அனுமதியுங்கள்.
3. வசனத்தை வாசித்த பிறகு, அதன் அர்த்தத்தை வீட்டுக்காரர் புரிந்துகொள்ள என்ன செய்யலாம்?
3 இரண்டாவதாக, வசனத்தை விளக்கிச் சொல்லுங்கள். ஒரு வசனத்தை முதல் முறையாக வாசிக்கும்போது அநேகருக்கு அது சட்டெனப் புரிவதில்லை. நாம் பேசிக்கொண்டிருக்கிற பொருளுடன் அது எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதைப் பெரும்பாலும் விளக்க வேண்டியிருக்கிறது. (லூக். 24:26, 27) ஆகவே, அதிலுள்ள முக்கிய வார்த்தைகளைச் சுட்டிக்காட்டுங்கள். வசனத்திலுள்ள குறிப்பை வீட்டுக்காரர் தெளிவாகப் புரிந்துகொண்டாரா என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு கேள்வியைக் கேட்பது உதவலாம்.—நீதி. 20:5; அப். 8:30.
4. பக்குவமாகக் கற்பிப்பதற்கு மூன்றாவதாக என்ன செய்ய வேண்டும்?
4 வசனத்தை நியாயங்காட்டி விளக்குங்கள்: மூன்றாவதாக, வீட்டுக்காரரின் மனதையும் இதயத்தையும் எட்ட முயற்சி செய்யுங்கள். ஒரு வசனம் அவருடைய வாழ்க்கைக்கு எப்படிப் பொருந்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள அவருக்கு உதவுங்கள். வசனத்தை நியாயங்காட்டிப் பேசுவது, தன் எண்ணத்தை மாற்றிக்கொள்ள அவரைத் தூண்டலாம். (அப். 17:2-4; 19:8) உதாரணத்திற்கு, சங்கீதம் 83:17-ஐ வாசித்த பிறகு, ஒருவருடைய பெயரை அறிந்துகொள்வது அவரோடு நட்பை வளர்த்துக்கொள்வதற்கு எவ்வளவு முக்கியம் என்பதை நியாயங்காட்டி விளக்கலாம். பின்பு இப்படிக் கேட்கலாம்: “கடவுளுடைய பெயரைத் தெரிந்த பிறகு அவரிடம் ஜெபம் செய்வது உங்களுக்கு அதிக பிரயோஜனமாய் இருப்பதாக நினைக்கிறீர்களா?” இவ்வாறு ஒரு வசனத்தை வீட்டுக்காரர் தனது வாழ்க்கையோடு தொடர்புபடுத்திப் பார்க்க உதவினால், அதன் நடைமுறைப் பயனை அவர் புரிந்துகொள்வார். இப்படி, கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்தி பக்குவமாகக் கற்பிப்பது, மெய்யான, உயிருள்ள கடவுளான யெகோவாவை வழிபட நல்மனமுள்ள ஆட்களை ஈர்க்கும்.—எரே. 10:10.