தயங்காதீர்கள்
1. எதற்கு தைரியம் தேவை, ஏன்?
1 பள்ளியில் சாட்சி கொடுக்க எப்போதாவது தயங்கியிருக்கிறீர்களா? கேலி செய்வார்களோ என்று நினைத்து பயப்பட்டிருக்கிறீர்களா? உண்மைதான், பள்ளியில் சாட்சி கொடுக்க தைரியம் தேவை. அதுவும், நீங்கள் கூச்ச சுபாவம் உள்ளவர் என்றால் சொல்லவே வேண்டாம். அப்படியென்றால், தயங்காமல் சாட்சி கொடுக்க எது உங்களுக்கு உதவும்?
2. பள்ளியில் எந்தெந்த சந்தர்ப்பங்களில் சாட்சி கொடுக்கலாம்?
2 சந்தர்ப்பத்திற்காகக் காத்திருங்கள்: உங்களுக்கென்றே இருக்கிற ஒரு பிராந்தியம்தான் பள்ளி. என்றாலும், வீட்டுக்கு வீடு ஊழியத்தைப் போல ஒவ்வொருவரிடமும் நீங்கள் சாட்சி கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனவே, சரியான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருங்கள். (பிர. 3:1, 7) வகுப்பில் ஆசிரியர் ஏதாவது விஷயத்தைப் பற்றிக் கலந்துபேசும்போதோ, நீங்கள் ஏதாவது ஒரு ‘ப்ராஜெக்ட்டை’ செய்யும்போதோ சாட்சி கொடுக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். அல்லது பள்ளியில் நடக்கும் சில நிகழ்ச்சிகளில் நீங்கள் ஏன் கலந்துகொள்வதில்லை எனக் கூடப்படிக்கும் பிள்ளைகள் கேட்கும்போது சாட்சி கொடுக்கலாம். சில கிறிஸ்தவப் பிள்ளைகள், பள்ளி தொடங்கிய ஆரம்பத்திலேயே தாங்கள் யெகோவாவின் சாட்சிகள் என்பதை ஆசிரியரிடம் சொல்கிறார்கள்; தங்கள் நம்பிக்கையைப் பற்றி விளக்கும் பிரசுரங்களை அவர்களுக்குக் கொடுக்கிறார்கள். சிலர், அவற்றை மற்ற மாணவர்கள் கண்ணில் படும்படி வைக்கிறார்கள்; அதைப் பார்த்துவிட்டு அவர்கள் ஏதாவது கேட்கும்போது சாட்சி கொடுக்கிறார்கள்.
3. பள்ளியில் சாட்சி கொடுக்க எப்படித் தயாராயிருக்கலாம்?
3 தயாராயிருங்கள்: தயார் செய்திருந்தால் தன்னம்பிக்கையுடன் பேச முடியும். (1 பே. 3:15) எனவே, என்னென்ன கேள்விகளைக் கேட்பார்கள், அவற்றிற்கு எப்படிப் பதிலளிக்கலாம் என முன்கூட்டியே யோசித்துப் பாருங்கள். (நீதி. 15:28) முடிந்தால், பைபிளையோ மற்ற பிரசுரங்களையோ எடுத்துச் செல்லுங்கள். உதாரணத்திற்கு, நியாயங்காட்டிப் பேசுதல், இளைஞர் கேட்கும் கேள்விகள், படைப்பைப் பற்றி விளக்கும் பிரசுரம் போன்றவற்றை எடுத்துச் சென்றால் தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளலாம். பள்ளியில் எப்படிச் சாட்சி கொடுப்பதெனக் குடும்ப வழிபாட்டில் நடித்துப் பார்க்கலாமா எனப் பெற்றோரிடம் கேளுங்கள்.
4. பள்ளியில் தொடர்ந்து சாட்சி கொடுப்பது ஏன் முக்கியம்?
4 நம்பிக்கையோடு இருங்கள்: நீங்கள் சாட்சி கொடுக்கும்போது மற்ற பிள்ளைகள் எப்போதுமே உங்களைக் கேலி செய்வார்கள் என நினைக்காதீர்கள். சிலர் உங்கள் தைரியத்தைப் பார்த்து உங்களைப் பாராட்டலாம், நற்செய்தியையும் கேட்கலாம். ஆனால், யாருமே கேட்கவில்லையென்றால் சோர்ந்துவிடாதீர்கள். நீங்கள் எடுத்த முயற்சியைப் பார்த்து யெகோவா சந்தோஷப்படுவார். (எபி. 13:15, 16) “தைரியத்தோடு பேசிக்கொண்டே இருக்க” உதவும்படி தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள். (அப். 4:29; 2 தீ. 1:7, 8) சத்தியத்தைப் பற்றி நீங்கள் சொல்லும்போது யாராவது காதுகொடுத்துக் கேட்டால் உங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும்தானே! யாருக்குத் தெரியும், எதிர்காலத்தில் அவர் ஒரு யெகோவாவின் சாட்சியாகக்கூட ஆகலாமே!!