மனதைக் காத்துக்கொள்ளுங்கள்
1. வட்டார மாநாட்டின் தலைப்பு என்ன, அதன் நோக்கம் என்ன?
1 யெகோவாமீது முழு இருதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் அன்பு காட்டும்படி இயேசு தம் சீடர்களிடம் சொன்னார். (மத். 22:37, 38) நம் மனதை, இருதயத்தை, மனசாட்சியை பக்குவப்படுத்துவதற்கு உதவும் விதமாக இந்த வருட மாநாடுகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. மாவட்ட மாநாட்டின் தலைப்பு “இருதயத்தைக் காத்துக்கொள்ளுங்கள்,” விசேஷ மாநாட்டின் தலைப்பு “மனசாட்சியைக் காத்துக்கொள்ளுங்கள்.” வட்டார மாநாட்டின் தலைப்பு “மனதைக் காத்துக்கொள்ளுங்கள்;” இது மத்தேயு 22:37-ஐ அடிப்படையாகக் கொண்டது. நம் எண்ணங்கள் யெகோவாவைச் சந்தோஷப்படுத்தும் விதமாக இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்க்க இந்த மாநாடு உதவும்.
2. மாநாட்டில் என்ன கேள்விகளுக்குப் பதிலளிக்கப்படும்?
2 மாநாட்டில் பதிலளிக்கப்படும் கேள்விகள்: வட்டார மாநாட்டில் பின்வரும் முக்கியமான கேள்விகளுக்குப் பதில்களைத் தெரிந்துகொள்வீர்கள்:
• நாம் எப்படி ‘மனித சிந்தனைகளை’ தவிர்க்கலாம்?
• விசுவாசிகளாக இல்லாதவர்களுடைய மனக்கண்களைக் குருடாக்கியிருக்கும் திரையை நாம் எப்படி விலக்கலாம்?
• நமக்கு எப்படிப்பட்ட சிந்தை இருக்க வேண்டும்?
• நல்ல விஷயங்களைத் தியானிப்பதால் வரும் நன்மைகள் என்ன?
• யெகோவா நம் சிந்தையைச் செதுக்கிச் சீராக்க எவ்வாறு அனுமதிக்கலாம்?
• குடும்பத்தில் மகிழ்ச்சி காண கணவன், மனைவி, பெற்றோர், பிள்ளைகள் என்ன செய்யலாம்?
• யெகோவாவின் நாளுக்காக நாம் எப்படித் தயாராகலாம்?
• மும்முரமாகச் செயல்படுவதற்கு நம் மனதைத் தயார்படுத்துவது என்றால் என்ன?
• கற்றதைக் கடைப்பிடிப்போருக்குக் கிடைக்கும் நன்மைகள் யாவை?
3. இரண்டு நாட்களும் மாநாட்டில் கலந்துகொள்வது, கூர்ந்து கவனிப்பது, கடைப்பிடிப்பது, ஏன் முக்கியம்?
3 நம் மனதைக் கெடுக்க சாத்தான் வெறிபிடித்து அலைகிறான். (2 கொ. 11:3) அதனால், நம் எண்ணங்களை யெகோவாவுக்குப் பிடித்த விதமாக மாற்றிக்கொள்ள போராட வேண்டும். சீர்கெட்ட உலகத்தின் சிந்தை நம்மைத் தொற்றிவிடாமல் இருக்க எப்போதும் கிறிஸ்துவின் சிந்தையை வெளிக்காட்ட வேண்டும். (1 கொ. 2:16) எனவே, வட்டார மாநாட்டின் இரண்டு நாள் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளத் திட்டமிடுங்கள். கூர்ந்து கவனியுங்கள். கேட்டதைக் கடைப்பிடியுங்கள். கடவுளுடைய அரசாங்கத்திற்காக மும்முரமாக உழைக்க இவை உங்கள் மனதைத் தயார்படுத்தும்.—1 பே. 1:13.